CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 36


இப்பொழுது!
சோஃபாவில், கலங்கியபடி அமர்ந்திருந்த மதனும், அவன் அக்காவும், வெளியில் சத்தம் கேட்டு நிமிர்ந்தனர். ஹரீஸ்ஸுடன் நுழைந்த அந்த நபர், மதனின் அக்காவைப் பார்த்த பார்வையில் எந்தளவு அன்பு இருந்ததோ, அதே அளவிற்கு கோபமும் இருந்தது. அந்தக் கோபத்தில், அந்த நபரின் கண்கள் கலங்கியிருந்தது!
அந்த கோபத்தின் பின்னாலிருந்த நியாயத்தை உணர்ந்த மதனின் அக்கா, அந்த நபரை நெருங்கி, கண்ணீர் மல்க, எ.. என்னை மன்னிச்… 
அவளால் பேச முடியாத அளவிற்கு கண்ணீரும், உணர்ச்சியும் பெருக்கெடுத்தது.
ஏறக்குறைய அதே மனநிலையில்தான் அந்த இன்னொரு நபரும் இருந்தார். அந்த நபருடைய கண்களும் கலங்கியிருந்தாலும், மதனின் அக்காவின் உணர்ச்சியைப் பார்த்து, அந்த நபரும் உணர்ச்சி வயப்பட்டிருந்தாலும், முழுக் கோபம் தீராததால், முகம் கல்லைப் போல் இறுகியிறுந்தது. கோபமும், வருத்தமும், ஒன்று சேர பிரதிபலித்தது.
கண்ணைத் துடைத்த, மதனின் அக்கா, இப்பொழுது கொஞ்சம் நிதானமடைந்திருந்தாள். தனக்காக மட்டுமல்ல, மதனுக்காகவும், ஏன், எதிரிலிருக்கும் அந்த நபருக்காகவும், தான் நிதானமாக, இந்தச் சிக்கலை கையாளுவது அவசியம், அதற்கான பொறுப்பு தனக்கிருக்கிறது என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்! ஆகையால், கண்ணீரைத் துடைத்த படி கேட்டாள்.
என் கூட பேச மாட்டியா? என்று கேட்டவாறே, நடுங்கும் கையால், எதிரிலிருக்கும் நபரின் கன்னத்தை வருடினாள். எ… என்னை மன்னிக்க மாட்டியா?
எவ்வளவு கோபம் இருந்தாலும், மதனின் அக்காவின் அன்பு, எப்பொழுதும் பரிசுத்தமானது என்று தெரிந்திருந்த அந்த நபரால், அந்த உணர்வைத் தாங்க முடியவில்லை.
உணர்ச்சி வயப்பட்டு, நடுங்கும் உதடுகளால், வரவழைக்கப்பட்ட கோவத்துடன், அந்த நபர் பேசினார்.
நீ…. நீ பேசாத! நா… நான் உனக்கு ஃபோன் பண்ணியிருந்தேன்ல. நீ கூட ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டீல்ல? என்னை டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்ற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்? நா… நான் சாகலாம்னு கூட நினைச்சேன் தெரியுமா.
மதன், அவன் அக்கா, ஹரீஸ் எல்லாருக்கும், அது பெரிய அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தாலும், அவனுடைய அக்காவோ, இன்னும் நிதானமாகவும், தெளிவாகவும், பிரச்சினையை அணுக வேண்டிய அவசியத்தை உணர்ந்து, சொன்னாள்!
நீ சாகனும்னு நினைச்ச! ஆனா, நான் சாகறதுக்கு அட்டெம்ட்டே பண்ணேன். மதன் மட்டும் சரியான நேரத்துக்கு வந்திருக்காட்டி, இன்னிக்கு நான் இங்க நின்னு பேசிட்டிருக்கவே மாட்டேன். இதுல கூட நமக்கு எவ்ளோ ஒத்துமை பாத்தியா என்று கண்ணீருடன் கூடிய புன்னகையுடன் சிரித்தாள்!
மதனின் அக்கா காட்டும் பரிசுத்தமான அன்பிற்கு, சற்றும் குறையாமல் அதே சுத்தமான அன்பைக் கொடுக்கக் கூடிய அந்த நபருக்கும், இந்த பேச்சு கடும் அதிர்ச்சியை அளித்தது. இருந்த கோபம், பிரச்சினை, வருத்தங்களை எல்லாம் பின் தள்ளி விட்டு, மதனின் அக்காவின் கையைப் பிடித்த படி, புதிய கோபத்துடன் சொன்னார்!
ஏய்… அறைஞ்சுருவேன், இனிமே இப்படி பேசுனா! நாந்தான் லூசு மாதிரி பேசுனேன்னா, நீயும் அப்படியே பேசுவியா? இனி இப்டி பேசுன… படபடப்புடன் வந்த வார்த்தைகளில் தெறிந்த அன்பு அங்கு இருந்த அனைவருக்கும் நிறைவைத் தந்தது.
பதிலுக்கு புன்னகைத்தவள், உன் கூட கொஞ்ச நேரம் பேசனும். நான் பேசுனதுக்கப்புறம், நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன். சரியா? ப்ளீஸ் வா என்று அந்த நபர் கையைப் பிடித்த படி, தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். 
அவர்களிடையே, தனிமையான உரையாடல் அவசியம் என்பதை உணர்ந்த மதனும், ஹரீசும், பெருமூச்சு விட்ட படி அமர்ந்தனர். இனி, தன் மனைவி பார்த்துக் கொள்ளுவாள் என்ற நம்பிக்கை ஹரீசுக்கு வந்திருந்தது. 
அந்த புதிய நபரிடம், ஹரீசுக்கு அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே தன் மனைவியின் மூலம் முழுக்க கேள்விப் பட்டிருந்ததும், ஆரம்பத்தில் தான் போய் கூப்பிட்ட சமயத்தில் கூட நாசுக்காக வர மறுத்தாலும், தன் மனைவி மிகவும் மன வருத்தத்தில் இருப்பதாகச் சொன்ன அடுத்த நொடி கிளம்பிய நபர், இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து வெளிப்படுத்திய அன்பு, அவனுக்கும் பெருத்த ஆச்சரியத்தைத் தந்திருந்தது. அவர்களுக்கிடையே இருக்கும் அந்த ஆத்மார்த்தமான அன்பு அவனுக்கும் நிறைவைத் தந்திருந்தது. இந்தப் புரிதல் மிகச் சாதாரணமானதல்ல!
மதன் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும், வந்த நபர் உள்ளே வந்ததில் இருந்து, தன்னைப் பார்க்கவோ, தன்னிடம் பேசவோ எந்த முயற்சியும் செய்யாததில், கொஞ்சம் வருத்தமாய் இருந்தாலும், உள்ளுக்குள், அவனும் நிறைவாய்தான் உணர்ந்தான்.
அந்த நபர் இன்னமும் அப்படியேதான் இருக்கிறார். 
அதே அள்ளிக் கொட்டும் அன்பு, முகத்தைப் போலவே, மாசு மருவற்ற மனம், நல்லதையே நினைக்கும் குணம், தனக்கு நெருக்கமானர்வகளிடம் மட்டும் செலுத்தும் அதிகாரம், அதே பட பட பேச்சு என்று அப்பொழுது போலே இப்பொழுதும் என்பதால் அவனுக்கும் மகிழ்ச்சியே! 
பழைய மதனாக இருந்திருந்தால், கொஞ்சம் சலனம், ஒன்று கூட முடியுமா என்ற சந்தேகம், இதெல்லாம் வந்திருக்குமோ என்னவோ! ஆனால், இந்த புதிய மதன், மிகத் தெளிவாகவும், எதையும் சந்திக்கும் தைரியத்துடனும் இருந்தான்! ஆகையால் அவன் அமைதியாகவே இருந்தான்.
ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கும் மேல் கழித்து, கையைக் கோர்த்தவாறு வெளி வந்த அந்த இருவரது முகத்தில் பழைய கோபம், வருத்தம், கண்ணீர் எதுவும் இல்லை. அவர்கள் சமாதானமாகிக் கொண்டார்கள், புரிந்து கோண்டார்கள் என்பது தெளிவாக இருந்தாலும், இருவர் முகத்திலும் ஏதோ ஒரு யோசனை இருந்தது. 
வெளியே வந்த நபர், சரி நான் கிளம்புறேன். நான் எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். நான் போகனும் என்றார்.
ஏய்.. சாப்ட்டு போலாம் இரு! நான் உன் கூட நிறைய பேசனும்னு நினைச்சேன்.
பேசலாம், நாளைக்கு நான் வரேன். நானும் நிறைய பேசனும். ஆனா, இப்ப கிளம்புறேன். 
ம்ம்ம்.. ஓகே! மதன், போயி விட்டுட்டு வந்திடு!
கொஞ்ச நேரம் கூட அதைக் கேட்டு மதனால் மகிழ்ச்சியடைய முடிய வில்லை. ஏனெனில், பட்டென்று பதில் வந்தது அந்த நபரிடமிருந்து.
இல்லை தேவையில்லை. நான் பாத்துக்குறேன்.
ஏய், எதுக்கு ஆட்டோல போற? அதான் சொல்றேன்ல?
நான் எதுக்கு ஆட்டோல போகனும்?
பின்ன? மதனையும் வேணம்னு சொல்லிட்ட!
பதிலுக்கு, ஹரீசை நெருங்கிய அந்த நபரோ, நீங்கதானே அண்ணா என்னைக் கூட்டிட்டு வந்தீங்க? இப்ப என்னை கொண்டு போய் விட மாட்டீங்களா என்று உரிமையாய், கொஞ்சம் அன்பு கலந்த அதிகாரத்தில் கேட்க, ஹரீஸ் புன்னகையுடன் எழுந்தான். மதனைப் பார்த்து, என்கிட்ட கோவிச்சுக்காத என்று கையைத் தூக்கியவன், டிராப் செய்ய கிளம்பினான்.
சிரிப்புடன் அதனைப் பார்த்துக் கொடிருந்த மதனின் அக்காவைப் பார்த்து முறைத்த அந்த நபரின் பார்வையில், உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா? என்ற கேள்வி இருந்தது. 
பின் திரும்ப, மதனை சட்டையே செய்யாமல், சிறிது தூரம் சென்ற அந்த நபர், தாங்க முடியாமல், திரும்ப மதனிடம் வேகமாக வந்து கோபமாகப் பேசினார்!
உன் கூட பேசக் கூடாது, உன் முகத்துலியே இனி முழிக்கக் கூடாதுன்னுதான் நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா, அவ கூட பேசிட்டு, என்னால சும்மா போக முடியலை. 
அவ பிரச்சினையை சால்வ் பண்ணிட்டா, நீ என்ன பெரிய இவனா?
நீ ஒழுங்கா இருந்திருந்தா, இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. அவ, த… தற்கொலை வரைக்கும் யோசிச்சிருக்க மாட்டா. எல்லாத்துக்கும் நீதான் காரணம். என்னிக்குதான் நீ மாறப்போற? இப்பிடியே அடுத்தவிங்க உணர்ச்சியைப் புரிஞ்சுக்காமியே இரு! ச்சே! என்று கோவமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த நபர்.
இவ்வளவு நேரம் வரை கொஞ்சம் குழப்பத்துடனும், சந்தேகத்துடனும், வருத்தத்துடனும் இருந்த மதனின் முகம், அந்த நபர் திட்டிவிட்டு சென்றவுடன், மிகவும் தெளிவும் மகிழ்ச்சியும் அடைந்தது. மதன் வாய் விட்டே சிரிக்கத் தொடங்கினான்.
ஹா ஹா ஹா!
ஏறக்குறைய அதே மனநிலையில் இருந்த, மதனின் அக்காவும் மகிழ்ச்சியாகக் கேட்டாள்.
என்னடா, திட்டுனதுக்கு இவ்ளோ சந்தோஷமா? அப்ப நானும் உன்னைத் திட்டுறேன்!
ஹா ஹா ஹா! இது திட்டுனதுக்கு இல்லக்கா! அந்த லூசு, என்னை லவ் பண்றேன்னு, சொல்லாம சொல்லிட்டு போதுல்ல, அதுக்குதான் சிரிச்சேன்!
ஏய், என் முன்னாடியே, என் ஃபிரண்டை, அதுவும் உன்னை விட ரெண்டு வயசு பெரியவளை லூசுன்னு சொல்ற? என்ற அவன் அக்காவின் குரலில் இருந்தது வெறும் சீண்டல் மட்டுமே! 
உன் ஃபிரண்டுன்னா, அது உன்னோட! எனக்கு, அவ என் லவ்வர்! ஃபியூச்சர்ல என் ஒய்ஃப்! அவளை நான் எப்டி வேணா கூப்பிடுவேன். அதெல்லாம் உனக்கு தேவையில்லை! 
என்னடா லவ்வர்ங்கிற! ஒய்ஃப்ங்கிற! அவ்ளோ கான்ஃபிடண்ட்டா? கொஞ்ச நேரம் முன்னாடி, ஒரு மான்ஸ்தன் ஓவரா ஃபீல் பன்ணிட்டிருந்தானே? இப்ப எங்க போனான் அவன்? 
ஆமா, கான்ஃபிடண்ட்டுதான். நான் குழம்புனது, நான், என்ன நினைக்கிறேன்னு தெரியாம இல்லை. அவ எப்டி எடுத்துக்குவான்னு தெரியாமத்தான். ஆனா, இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சி! 
பாரேன் அவளை! அவளுக்காகன்னா கூட, என்கிட்ட பேச மாட்டாளாம். ஆனா, உன் விஷயம்னா, என்னைத் திட்டுவாளாம். நான் செஞ்சதையெல்லாம் விட்டுட்டு, செய்யாத ஒண்ணுக்காக, ஏன் செய்யலைன்னு கேப்பாளாம். திட்டுனாலும், என்கிட்ட பேசாம போக முடியலைல்ல?!
டேய்… போதுண்டா! திட்டுனதுக்கு இவ்ளோ விளக்கமா? என்று கிண்டல் பண்ணியவள், கொஞ்சம் சீரியசாகவே கேட்டாள். 
டேய், அவளோட கோபம் என்னான்னு உனக்கு தெரியுமா?
வேணாங்க்கா! எதுன்னாலும், அவளே என்கிட்ட சொல்லட்டும். நான் தெரிஞ்சு எந்தத் தப்பும் பண்ணலை. அப்படியே பண்ணியிருந்தாலும், அதை எப்டி சரி பண்ணனும்னு நான் பாத்துக்கறேன். என்ன பிரச்சினன்னா, அவ பக்கத்துல வரவே விட மாட்டேங்குறா. அதான் யோசிக்கிறேன். லெட்ஸ் சீ! மதனின் வார்த்தைகளில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், அளவுக்கு மீறிய நம்பிக்கையும், காதலும் இருந்தது.
அப்படி, இவர்கள் இருவருடைய அன்புக்கும், உணர்வுக்கும், பேச்சுக்கும் காரணமான, அந்த நபர்!
மதனுடைய அக்காவின் உயிர்த் தோழி!
மதனின் காதலி!
மதனை விட இரண்டு வயது மூத்தவள்!
அந்தக் காரணத்திற்காகவே, மதன் சின்ன வயதில் தன் காதலைச் சொன்ன போது மறுத்தவள்.
அதன் பின் காதல் வந்தாலும், பல்வேறு குழப்பங்களில் அதை வெளிப்படுத்தாதவள்.
ஆனாலும், இந்த இருவர் மீதும் ஆழமான அன்பினை உடையவள்.
அவள் பெயர் லாவண்யா!
கடைசியாக கதாநாயகி, கதைக்குள் வந்தாச்சு! – அப்படி அவர்களுக்குள் என்னதான் நடந்தது?)
மதனின் பார்வையில்!
ஆரம்பத்தில், மதனின் ஃப்ளாஸ்பேக்கில், மதன், அவன் அக்கா, அவன் தாத்தா ஆகியோரிடையேயான சம்பவங்களைச் சொல்லியிருந்ததில், முதன் முதலில் மதனின் அக்கா, தேடி வந்து தாத்தாவின் முன்னிலையில், அதிக மதிப்பெண் எடுத்ததற்கு, என்னிடம் கிஃப்ட் கொடுத்த காட்சியைத் தவிர்த்து, மீதி எல்லாக் காட்சிகளிலும் நம் கதாநாயகி லாவண்யாவையும் உள்ளே சேர்த்துக் கொள்ளுங்கள்)
என் அக்கா, கிஃப்ட் கொடுத்த பின், தாத்தாவிடம் பழக்கம் ஏற்பட்ட பின், அவள் தனக்காக கேட்டது ஒன்றே ஒன்றுதான். அது, தன்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியை, அந்த வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்றுதான். சிறு வயதிலிருந்தே அவர்கள் மிக நெருக்கம். 
லாவண்யா ஆரம்பத்தில் வரும் போது, ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், கடும் மன உளைச்சலில் இருந்த எனக்கு, புதியவர்களைக் கண்டாலே பிடிக்காமல் இருந்தது. இந்நிலையில், பெரும்பாலும் தன் வீட்டில் இன்னொரு புதிய ஆள், அதுவும் ஒரு பெண் என்பது எனக்கு மிகவும் கடுப்பேற்றியது. 
அதனாலேயே, தன் தாத்தாவிடம், அவள் ஏன் அடிக்கடி வருகிறாள் என்று கோபப்பட்டேன்.
இல்லடா ராஜா, உன் அக்கா காசு வேணும், காரு வேணும்னு கேட்டிருந்தா நான் முடியாதுன்னு சொல்லலாம். ஆனா, தன்னோட ஃபிரண்டுக்குதானே பெர்மிஷன் கேக்குறா. தவிர, அந்த லாவண்யா பொண்ணு கதையைக் கேட்டா எனக்கே கஷ்டமா இருக்கு!
அப்படி என்ன கஷ்டம். அவிங்க காசு வேணும்னு சும்மா ஏதாச்சும் பொய் சொல்லியிருப்பாங்க…
தப்பு ராஜா! புடிக்கலைங்கிறதுக்காக, என்னான்னு தெரியாமியே பேசக் கூடாது. ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து க்ளோஸ். ஒரே ஸ்கூல், இப்பியும் ஒரே காலேஜ், ஒரே க்ளாஸ். தவிர, ரெண்டு பேருக்குமே அப்பா அம்மா இருந்தும் அனாதை மாதிரி!
அந்த கடைசி வாக்கியம் என்னை மிகவும் பாதித்தது!
ஏன் தாத்தா அப்படிச் சொல்றீங்க?
உன் அக்காவுக்கு, தன்னோட அப்பா, அம்மா நடந்துக்குற முறை பிடிக்கலை. அதுனால, தள்ளி நிக்குறா. 
அந்த லாவண்யா பொண்ணுக்கு, அம்மா சின்ன வயசுலியே செத்துடுச்சு. செத்த ஒரு மாசத்துல இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாரம், அவிங்க அப்பா. கேட்டா, புடிக்காத பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்களாம். புடிக்காத பொண்டாட்டி கொடுத்த குழந்தை மேலயும், அவருக்கு பாசம் வரலை.
பெத்த அப்பாவே, பாசமா இல்லாட்டி, புதுசா வந்த ரெண்டாவது மனைவி என்ன பாசம் காட்டிடப் போறா? சினிமால வர்ற மாதிரி சித்தி கொடுமை இல்லாட்டியும், ஒரு மாதிரி, அன்பே இல்லாத வீடு. வேலைக்காரி மாதிரி நடத்துறது மட்டும்தான் கொடுமைன்னு இல்லை. சொந்த வீட்டுல, தன்னோட எதுவுமே பேசாம, தன்னை கண்டுக்காம, வார்த்தைகளால் துன்புறுத்துறதும் கூட ஒரு கொடுமைதான்.
இத்தனைக்கும் ஓரளவு வசதில்லாம் இருக்கு. இருந்தாலும், இப்படிப்பட்ட அப்பா காசை எதிர்பார்க்கக் கூடாதுன்னு, உன் அக்கா கூட சேர்ந்து பார்ட் டைம் ஜாப்க்கு போறா! சொந்த காசுல படிக்கிறா! என்று பெருமூச்சு விட்டார். அப்படிப் பட்ட பொண்ணை எப்படிப்பா நான் வராதன்னு சொல்லுவேன்? 
அப்புறம் எப்படி தாத்தா இந்தளவு படிச்சி, முன்னேறியிருக்காங்க?
அவிங்க பாட்டியோட சப்போர்ட்லதான் இவ்வளவும். அப்பா சரியில்லைன்னாலும், அப்பாவோட அம்மா சப்போர்ட்டா இருந்திருக்காங்க. உன் அக்காவும் சின்ன வயசுல இருந்து ஃப்ரண்டு. உங்க அம்மா இறந்த சமயத்துலதான் அவிங்க பாட்டியும் இறந்திருக்காங்க. அதான் மனசு கேக்காம, உன் அக்கா அந்தப் பொண்ணை இங்க டெய்லி வரச்சொல்லி கேக்குது. அப்பன்னாச்சும், அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்குமில்ல?!
குற்ற உணர்ச்சியில் நான் தலை குனிந்திருந்தேன். பின் மெதுவாகச் சொன்னேன். சாரி தாத்தா. நான் தெரியாம, அந்தப் பொண்ணைப் பத்தி தப்பா சொல்லிட்டேன். ப்ச்… பாட்டி, அம்மா, சித்தி, இவங்களையெல்லாம் பாத்துட்டு, எந்த உறவு மேலியோ, பொண்ணு மேலியோ ஒரு நல்லெண்ணம் வர்றதில்லை! 
சரி விடுங்க! அந்தப் பொண்ணு, அவ இஷ்டப்படி வரட்டும் போகட்டும். என்று சொல்லி திரும்பிய நான் அதிர்ந்தேன். ஏனெனில், அந்த உரையாடலை என் அக்காவும், லாவண்யாவும் கேட்ட படி நின்றிருந்தார்கள். லாவண்யாவின் முகம் கலங்கியிருந்தது.
ஏனோ எனக்கு, அது மிகவும் வருத்தத்தை அளித்தது. அந்த உணர்வு எனக்கு மிகப் புதிது!
அதன் பின், லாவண்யாவின் வருகை மிக இயல்பாக இருந்தது. அக்காவைப் போல், அவளும், தாத்தாவிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பாள். ஆனால், அவள் என்னிடம் மட்டுமே பேசவே மாட்டாள். அக்கா கூட என்னிடம் அதிகம் பேசாவிட்டாலும், அவ்வப்போது பேசுவாள். தாத்தாவின் மூலம் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவாள். ஆனால் லாவண்யா மட்டும் என்னிடம் பேசியதேயில்லை. 
அவள் என்னிடம் முதலில் பேசியது ஏறக்குறைய 10 மாதங்கள் கழித்துதான். 
அன்று என் அம்மாவின் முதல் வருட நினைவு தினம். என் தாத்தா, ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தாலும், வேண்டுமென்றே, அன்று காலையிலே வெளியே சென்று விட்டு, மதியம் 3 மணிக்கு, பூஜை எல்லாம் முடிந்த பின் தான் வீடு திரும்பினேன். தாத்தா, என் அக்கா, லாவண்யா மூவரும் சாப்பிடாமல் காத்திருந்தார்கள். என்னை சாப்பிடச் சொல்லிவிட்டு, சாப்பிடும் சமயத்தில் கேட்டார்.
ஏன் ராஜா இப்டி பண்ண?
என்ன பண்ணேன்?
இன்னிக்கு பூஜை இருக்குன்னு உனக்கு தெரியுமில்ல? என்ன கோபம் இருந்தாலும், பூஜையைக் கூடவா செய்ய மாட்ட?
உயிரோட இருக்கிறப்ப செய்ய வேண்டிய கடமையை அவிங்க செஞ்சிருந்தா, செத்ததுக்கப்புறம் செய்ய வேண்டிய கடமையை நான் ஏன் செய்யாம இருக்கப் போறேன்? வாழ்ந்ததும் எனக்காக இல்லை. குறைந்த பட்சம் செத்ததும் கூட எனக்காக இல்லை. அப்புறம் என்ன அம்மா? எனக்கு பூஜை புடிக்காதுன்னு சொன்னேன். நீங்க கேக்கலை. அதான் இப்படி செஞ்சேன்.
நான் சொன்னதில் இருந்த உண்மையும், என் மனதில் இருந்த வலியும், என் தாத்தவை மிகவும் உலுக்கியது. மெல்லிய கண்ணீருடன் சாப்பிடாமல் எழுந்து விட்டார். எந்தளவு என் அம்மாவை வெறுத்தாலும், என் மேல் அன்பு காட்டும் அந்த ஜீவன் பட்டினி கிடக்கும் போது என்னால் சாப்பிட முடியவில்லை. அதனால் நானும் எழுந்தேன். கூடவே, என் அக்கா, லாவண்யாவும் சாப்பிடாமல் எழுந்தார்கள். அது மாலை வரை நீண்டது.
மாலையும் சாப்பாடு வேண்டாம் என்று நான் முரண்டு பண்ணி அறையிலேயே இருந்தேன். வந்து கூப்பிட்ட அக்காவிடமும் கோபமாக கத்தினேன். அப்பொழுதுதான் லாவண்யா என் ரூமுக்கு தனியாக வந்து சாப்பிடக் கூப்பிட்டாள். அவளிடமும் கோபமாக, உன் வேலையைப் பாரு என்று கத்தினேன். ஆனால், என் கோபத்தை, அவள் சட்டையே செய்யவில்லை. 
அவள் ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான். என் அக்கா கூட, என் கோபத்துக்கு சில சமயம் பயப்படுவாள். ஆனால், இவளோ ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டாள். 
கத்தி பேசுனா நீ சொல்றது சரின்னு ஆகிடாது. உனக்கு அட்வைஸ்லாம் நான் பண்ண விரும்பலை. உனக்காக இல்லாட்டியும், உன் தாத்தாக்காக வந்து சாப்டு!
என் வீட்டுக்கே வந்து, என் தாத்தாக்காக நீ சப்போர்ட் பேசுறியா? உன் வேலை என்னமோ அதை மட்டும் பாரு! இனி என் விஷயத்துல தலையிட்ட, இந்த வீட்டுக்கே வர விடாம பண்ணிடுவேன்.
உன் வீடா, இது உன் தாத்தா வீடு! அவரு சொல்லட்டும், வர்றதா வேணாமான்னு. இவ்ளோ பேசுறியே, அந்த தாத்தா, பூஜைக்காக காலையில இருந்து சாப்பிடலை. மதியம் உன்னால சாப்பிடலை. இப்ப நைட்டும், நீ சாப்பிடாம, சாப்பிட மாட்டேன்னு இருக்காரு. உங்க அம்மா, கடமையைச் செய்யலைன்னு சத்தம் போட்டியே. உனக்காக வாழ்ந்துட்டிருக்கிற, உன் தாத்தாக்கு, நீ உன் கடமையைச் செஞ்சுட்டியா? 
அவளுடைய கேள்வியில் இருந்த நியாயம் என்னை யோசிக்க வைத்தது. இருந்தாலும், முதன் முறை என்னுடன் பேசுபவள், என் வீட்டுக்கே வந்து என்னிடம் அதிகாரம் பண்ணுபவளிடம், தணிந்து போக ஈகோ இடம் கொடுக்க வில்லை.
என்ன இருந்தாலும், அவருக்கு, அவரு பொண்ணு மேலதானே பாசம் அதிகம். அவரு பொண்ணைப் பத்தி சொன்னவுடனே சாப்பிடாமக் கூட எந்திரிச்சு போயிட்டாருல்ல… என் வாதம் எனக்கே மொக்கையாக இருந்தது. அதனாலேயே, நான் கொஞ்சம் மெல்லிய குரலிலேயே சொன்னேன். 
என்னையே லாவண்யா பார்த்தாள். 
நீ எப்பவுமே லூசா? இல்ல, கோபம் வந்தா மட்டும் லூசுத்தனமா பேசுவியா? உன் தாத்தா, தன் பொண்ணுக்காக சாப்பிடாம எந்திரிச்சு போகலை. தன் பொண்ணு, தன் பேரனுக்கு செய்ய வேண்டியதை செய்யலியேங்கிற வருத்தத்துலியும், அதை விட முக்கியம், இந்தச் சின்ன வயசுல, அது உனக்கு ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பையும் நினைச்சு ஃபீல் பண்ணிதான் சாப்பிடாம போனாரு. 
நான் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு உன் தாத்தாகிட்ட பேசுனப்ப, எந்த பொண்ணு, உறவு மேலியும் நம்பிக்கை வர்லைன்னு சொன்னியே, அந்த கஷ்டத்தை நீ அனுபவிக்கிறியேன்னு ஃபீல் பண்ணி, அதுக்காக எந்திரிச்சு போறாரு!
உன் தாத்தா என்னான்னா, உன்னை ரொம்பதான் பொத்தி பொத்தி பாக்குறாரு. தப்பு செஞ்சா கூட திட்ட மாட்டேங்குறாரு. அதான் நீயும் ஓவரா ஆடுற! வா… வந்து சாப்டு. உன் தாத்தாவுக்கான கடமையைச் செய்யு முதல்ல. அப்புறம் சொல்லு, என்னை வீட்டுக்கு வர வேண்டாம்னு. என்று சொல்லிவிட்டு சென்றாள்.
நான் வாய் பிளந்து, அமைதியாகப் போய் சாப்பிட்டேன். யார் சொல்லியும் கேட்காதவன், முதன் முறை லாவண்யா பேசி, சாப்பிட வந்ததைப் பார்த்து, என் அக்காவே வாய் பிளந்து நின்றாள்!

No comments:

Post a Comment