CLOSE

Wednesday, 7 March 2018

கண்ணாமூச்சி ரே ரே - பகுதி - 28


வட்டமாக குவிந்த டார்ச் வெளிச்சத்தில்.. குகைக்குள் படுத்திருந்த சிபி பார்வைக்கு வந்தான்..!! மகிழம்பூக்களால் ஆன மலர்ப்படுக்கையில் மகாராஜாவை போல அவனை கிடத்தியிருந்தாள் தாமிரா.. நீண்டதொரு மயக்கத்தில் அவனை ஆழ்த்தியிருந்தாள் என்று தோன்றியது..!! கணவனின் முகத்தை பார்த்ததும் ஆதிராவின் மனதுக்குள் அப்படியொரு உன்னதமான சிலிர்ப்பு.. கண்களில் நீர் முட்டியது.. உடலும், உதடுகளும் படபடத்தன.. பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துவிட்டது என்ற திருப்தி பரவ, அப்படியே 'ஓ'வென்று அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு..!!

"அத்தான்ன்ன்..!!!" - ஆதிரா அலறிக்கொண்டே சிபியை நோக்கி ஓட,

"விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!!" என்று எங்கிருந்தோ வந்து அவளை இடைமறித்தாள் தாமிரா.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!" என்று கோரமாக ஒரு சிரிப்பு சிரித்தாள்.

"தாமிராஆஆ..!!" தவிப்பாக சொன்னாள் ஆதிரா.

"அவ்வளவு ஈசியா அவரை எடுத்துட்டு போக விட்டுடுவனா..?? ஹாஹா..!!"

தாமிரா அகங்காரமாக சிரித்தாள்..!! கழுத்தை முறுக்கி நெளித்து, கண்களை விரித்து செவ்விழிகளை உருட்டி காட்டினாள்.. வாயை அகலமாக திறந்து, கூர்பற்களை கடித்து நெரித்து காட்டினாள்.. 'ஆஆஹ்.. ஆஆஹ்..' என்று ஆதிராவை கடித்துவிடுவது போல பாய்ந்தாள்.. அக்காவை பயமுறுத்தி பதறவைக்க முயன்றாள்..!!



ஆதிராவோ முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அசையாமல் நின்றிருந்தாள்..!! முன்பு இதே தாமிரா உயிரோடு இருந்தபோது.. தனது போர்வைக்குள் நுழைந்து முகத்தில் டார்ச் அடித்து தன்னை பயமுறுத்தியதெல்லாம்.. ஆதிராவுக்கு இப்போது ஞாபகம் வந்தது.. உடனே அவளது உதட்டில் ஒரு வறண்ட புன்னகை..!! அப்போதெல்லாம் 'பேய்.. பிசாசு..' என்று பதறித்துடித்த ஆதிரா.. இப்போதோ கொஞ்சம்கூட பயமில்லாமல் விறைப்பாக நின்றிருந்தாள்..!!

"போதுண்டி.. நிறுத்து.. உன்னை பார்த்து எனக்கு பயமில்ல..!!" என்று துணிச்சலாக சொன்னாள்.

"பயப்பட மாட்டியா..?? பயப்பட மாட்ட..?? ம்ம்..??" தாமிரா தலையை அப்படியும் இப்படியும் விகாரமாய் அசைத்தவாறு கேட்டாள்.

"பயப்படமாட்டேன்..!! உன்னை பார்த்து நான் ஏன் பயப்படனும்..?? நீ என் தங்கச்சி.. என்மேல உயிரையே வச்சிருந்த என் குட்டித்தங்கச்சி..!!"

ஆதிரா கண்களில் நீர்பனிக்க சொன்னாள்.. அதைக்கேட்டு தாமிராவும் அப்படியே அடங்கிப்போனாள்.. அவளது சீற்றம் வெகுவாக குறைந்து போனது.. 'உஷ்ஷ்ஷ்.. உஷ்ஷ்ஷ்..' என்ற பெருமூச்சு மட்டும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது..!!

"வெளையாண்டது போதும் தாமிரா.. அவரை எங்கிட்ட ஒப்படைச்சிடு..!!" ஆதிரா கேட்க,

"முடியாது..!!" தாமிரா மறுத்தாள்.

சற்றே எரிச்சலான ஆதிரா தங்கையின் உருவத்தை மீறி குகைக்குள் செல்ல முயன்றாள்.. அவளால் முடியவில்லை.. பாறையில் மோதியதுபோல பின்புறமாக உந்தித்தள்ளப் பட்டாள்..!! தாமிரா ஒருவித ஆவேசத்துடன் முன்னோக்கி நகர.. ஆதிரா பின்னோக்கி அடியெடுத்து வைத்தாள்.. இருவரும் இப்போது குகையை விட்டு வெளியே வந்திருந்தனர்..!!

"ப்ச்.. எங்கிட்ட இருந்து இன்னும் என்னதான் எதிர்பாக்குற..?? நீ வச்ச கேம்லயும் நான் ஜெயிச்சுட்டேன்.. ப்ளீஸ்.. அவரை விட்ரு..!!"

"கேம் வச்சது அவரை கண்டுபிடிக்கிறதுக்குத்தான்.. கொண்டுபோறதுக்கு இல்ல..!!"

"எ..என்னது..??"

"கொண்டுபோறதுக்கு இன்னொரு கேம்..!!"

"இன்னொரு கேமா..??" தங்கை சொன்னதை கேட்டு ஆதிரா சற்றே கலங்கினாலும்,

"சரி சொல்லு.. என்ன கேம்..??" என்று உடனடியாய் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டுகேட்டாள்.

"அதை நீதான் கண்டுபிடிக்கணும்..!!"

"எ..என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!"

"என்ன கேம்ன்றதையே நீதான் கண்டுபிடிக்கணும்..!!" சொல்லிவிட்டு தாமிரா விகாரமாக சிரித்தாள்.

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!"

'என்னடா இது புது குழப்பம்?' என்று ஆதிரா திகைத்துப்போய் நிற்க.. அவளைப்பார்த்து கைகொட்டி கேலியாக சிரித்தாள் தாமிரா..!! கழுத்தை வளைத்து தலையை ஆட்டி.. கையை விரித்து விரல்களை அசைத்து.. பாட்டு பாடினாள்..!!

"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!" - பாடலுடன் சிரிப்பையும் சேர்த்துக்கொண்டாள்.

ஆதிராவுக்கு சிலவினாடிகள் எதுவும் புரியவில்லை.. அவஸ்தையாய் அங்குமிங்கும் பார்வையை அலைபாய விட்டாள்..!! அப்போதுதான்.. பாறையிடுக்கில் நீட்டியிருந்த அந்த சிவப்புநிற மலர் அவளுடைய பார்வையில் பட்டது.. உடனே அவளது மூளைக்குள் பளீரென்று ஒரு மின்னல்.. தங்கை என்ன எதிர்பார்க்கிறாள் என்று இப்போது அவளுக்கு புரிந்து போயிருந்தது..!! சிரித்துகொண்டிருந்த தாமிராவை பார்த்து பட்டென கேட்டாள்.. இருகைகளையும் முகத்திற்கு முன்பாக விரித்து வைத்தவாறு..!!

"Game or Shame..??"

தனது மேனரிசத்தை அக்காவிடம் பார்த்த தாமிராவுக்கு.. ரத்த விளாறுகளாய் வெடித்திருந்த அவளது உதட்டில் மெலிதாக ஒரு கேலிப்புன்னகை கசிந்தது..!!

"என்ன கேம்..??" என்று உறுமினாள்.

"அந்தப் பூ.. அந்தப் பூவை நான் பறிக்கிறேன்.. அப்படி பறிச்சுட்டா.. அவரை நீ விட்டுறணும்..!! சொல்லு.. Game or Shame..??"

ஆதிரா கேட்டுவிட்டு காத்திருக்க.. தாமிரா இப்போது அக்காவை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தாள்.. புன்னகையும் கரகர குரலுமாக சொன்னாள்..!!

"GGGame..!!!!"

அடுத்த நிமிடம் ஆதிரா அந்த மலைச்சரிவில் மேலேறிக் கொண்டிருந்தாள்.. நிலவொளியின் மசமசப்பான வெளிச்சம்.. உத்தேசமாக ஆங்காங்கே பிடித்தவாறு மெல்ல மேலே நகர்ந்தாள்.. பிடிமானம் நழுவினால் கீழே சரிந்து உயிரை இழக்க நேரிடும்..!! பாசி படர்ந்திருந்த வழுக்குப் பாறைகள்.. மழைநீரில் வேறு நனைந்து அப்படியே வழவழத்தன.. கையையோ காலையோ உறுதியாக வைக்கமுடியவில்லை.. விழுக் விழுக்கென்று நழுவி ஓடியது..!!

"ஆஆஆஆஆ..!!"

கால் அப்படி நழுவும்போதேல்லாம் ஏதாவது பிடிமானத்தை பிடித்துக்கொண்டு ஆதிரா கத்தினாள்..!! அவளது காலின் வெட்டுக்காயம் வேறு பாறையில் உரசி திகுதிகுவென எரிந்தது.. உயிரே போவது மாதிரி வின்வின்னென வலித்தது..!! வேதனையை பொறுத்துக்கொண்டு.. உடலை நகர்த்தி நகர்த்தி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல மேலேறிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! கணவனை மீட்டு செல்வது மட்டுமே அவளது ஒற்றை நோக்கமாக இருந்து.. அவளை மேல்நோக்கி உந்தித் தள்ளியது..!!

ஆதிரா தனது இலக்கை அடைய அத்தனை எளிதாக அனுமதிக்கவில்லை தாமிரா.. அவளும் அக்காவுடன் சேர்ந்தே மலைச்சரிவில் ஏறினாள்.. அக்காவின் காலுக்கடியில் ஊர்ந்து ஊர்ந்து சென்றாள்.. 'ஊஊ.. ஊஊ..' என்று ஊளையிட்டவாறு அவளை மிரட்ட முயன்றாள்..!!

"பார்த்து பார்த்து... கீழ விழுந்துடப்போற..!!" என்று கெக்கலித்தவாறே, ஆதிராவின் காலை பிடித்து படக்கென கீழே இழுத்தாள்.

"ஆஆஆஆஆ..!!!!"

பிடிமானம் நழுவிய ஆதிரா, அலறிக்கொண்டே கீழே சரிந்தாள்.. சரசரவென நழுவி வந்தவள், பாறையிடுக்கில் முளைத்திருந்த ஒரு குற்றுச்செடியை பற்றிக்கொண்டாள்.. கால்கள் ரெண்டும் ஆதாரம் சிக்காமல் அலைபாய, அப்படியே அந்தரத்தில் ஊசலாடினாள்..!!

இப்போது தாமிரா மெல்ல நகர்ந்து அக்காவின் அருகே சென்றாள்.. அவளது முகத்தை பார்த்து கோரமாக கனைத்தாள்..!!

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

"தாமிராஆஆ.. தாமிராஆஆ ப்ளீஸ்டி..!!" ஆதிரா பதறிப்போய் கெஞ்சினாள்.

"விழப்போற.. விழப்போற.. பார்த்து பார்த்து..!! ஹாஹாஹாஹா..!!"

"ஆஆஆஆஆஆ...!!"

"விழுந்தா அவ்வளவுதான்.. என்னை மாதிரியே தலை உடைஞ்சு செத்து போயிருவ..!!"

"ஆஆஆஆஆஆ...!! முடியலடி..!!"

"அப்போ விழுந்துடு.. ஹாஹா..!! ரெண்டு பேரும் சேர்ந்து விழலாமா.. செத்து செத்து வெளையாடலாமா..?? ஹாஹாஹாஹா..!!"

"தாமிராஆஆஆஆஆ...!!!!!!!!" வேதனையோடு அலறினாள் ஆதிரா.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" விடாமல் சிரித்துக் கொண்டிருந்தாள் தாமிரா.

ஒருவழியாக உடலை எக்கி.. கால்களை இன்னொரு பாறையில் அழுத்தமாக பதித்து.. ஆதிரா மீண்டும் மேல்நோக்கி முன்னேறினாள்..!! தாமிரா அவளை சீண்டிக்கொண்டே வந்தாள்.. அவளது கை,கால்களை இடறி விட்டாள்.. கூந்தல் மயிர்களை பற்றி இழுத்தாள்.. விகாரமாக இளித்து அவளை பயமுறுத்த முயன்றாள்..!!

"ஆஆஆஆஆஆ...!!"

அவளது சீண்டலை பொறுத்துக்கொண்டே ஆதிரா அந்த மலரை நெருங்கினாள்.. கையெட்டும் தூரத்திற்கு அந்த மலர் வந்திருந்தது..!! ஒருகையால் பாறையை பற்றிக்கொண்டு.. இன்னொரு கையை நீட்டினாள்.. கைவிரல்களை விரித்தாள்.. அந்த மலரை பற்றினாள்..!! அதேநேரத்தில் அவளது கால் ஒன்று விழுக்கென்று வழுக்கிக்கொள்ள.. பிடிமானம் இழந்துபோய், அப்படியே கடகடவென கீழே உருண்டாள்.. அவளது தலை எதிலோ சென்று நச்சென்று மோத..

"ஆஆஆஆஆஆ...!!" வென்று அலறிக்கொண்டே சுயநினைவை இழந்தாள்.

அத்தியாயம் 26

"ஆதிரா.. ஆதிரா..!!" யாரோ கன்னத்தில் பட்பட்டென்று தட்ட,

"ஹ்ஹ்ஹ்ஹா...!!" ஆதிரா படக்கென கண்விழித்தாள்.

கண்விழித்ததுமே.. கன்னத்தை தட்டியது யாரென்றுகூட கவனியாமல்.. விருட்டென எழுந்து அமர்ந்து.. இறுகிப்போயிருந்த தனது கைவிரல்களைத்தான் முதலில் பார்த்தாள்..!! அவளது கைக்குள் அந்த சிவப்பு மலரை பார்த்ததும்தான் அவளிடம் ஒரு அமைதி.. கண்ணிமைகள் மூடி மெலிதாக ஒரு நிம்மதி மூச்சை வெளிப்படுத்தினாள்..!!

உடனே தன் முகத்தை திருப்பி பக்கவாட்டில் பார்த்தாள்.. நிலவொளியில் தெரிந்த கணவனின் முகத்தை பார்த்ததும் அவளது மனதுக்குள் அப்படியொரு ஆனந்தம்.. கன்னத்தில் குழிவிழ சிரித்த சிபியை பார்த்து, கண்களில் கண்ணீர் முட்ட புன்னகைத்தாள்..!!

"அத்தான்ன்னன்..!!" என்று அவனை ஆரத்தழுவிக் கொண்டாள்.

"ஆதிராஆஆ..!!" அவனும் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

"உ..உங்களுக்கு.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே..??" அவனது உடம்பை அன்பாக, கவலையாக தடவிப் பார்த்தாள் ஆதிரா.

"எனக்கு ஒன்னுல்ல ஆதிரா.. ஐ'ம் ஆல்ரைட்..!!"

"தா..தாமிரா.. தாமிரா உங்களை.." பேச்சு வராமல் தடுமாறினாள் ஆதிரா.

"தெரியும் ஆதிரா..!!"

"நான் ரொம்ப பயந்துட்டேன் அத்தான்.. அப்படியே துடிச்சுப் போயிட்டேன்..!!"

"ஹ்ம்ம்.. புரியுது..!! அவ உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டாளா..??"

"இ..இல்லத்தான்.. அப்படிலாம் இல்ல..!!"

தடுமாற்றமாக சொன்ன ஆதிரா.. இப்போது அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்தாள்..!! அத்தனை நேரம் நடந்த அமளி துமளிக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல்.. அமைதியாக உறைந்திருந்தது சிங்கமலை சிகரம்..!! மிருகங்களையோ பறவைகளையோ காணவில்லை.. தாமிராவின் ஆவியுருவும் பார்வைக்கு தென்படவில்லை..!! குழலாற்றின் சப்தம் மட்டும் சன்னமாக 'ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்' என்று கேட்டுக்கொண்டிருந்தது..!! ஆதிரா இப்போது சிபியிடம் திரும்பினாள்.. அவனது முகத்தை ஏறிட்டு பரிதாபமான குரலில் சொன்னாள்..!!

"எ..என் தங்கச்சி.. என் தங்கச்சியை.. நா..நான்.. நான்தான் கொன்னுருக்கேன் அத்தான்.."

"ப்ச் ப்ச்.. ஆதிரா.. என்ன பேச்சு இது..??"

"ஆ..ஆமாம் அத்தான்.. அது தெரியாம.."

"அதுலாம் ஒன்னுல்ல.. இப்படிலாம் எப்போவும் பேசாத..!! தாமிரா இறந்தது ஒரு ஆக்சிடன்ட்.. அதுல உன் தப்பு எதுவும் இல்ல..!!"

"இல்லத்தான்.. நான்தான் அவளை.."

"சொல்றேன்ல.. இனிமே அந்தப்பேச்சு வேணாம்.. புரியுதா..??"

ஆதிராவை இழுத்து அணைத்து.. அவளது நெற்றியில் இதமாக முத்தமிட்டான் சிபி..!! அவளும் இப்போது கணவனை அப்படியே இறுக்கிக் கொண்டாள்.. அவனது அணைப்பு தந்த கதகதப்புக்குள் சுகமாக அடங்கிப்போனாள்..!! ஒரு சில வினாடிகளுக்கு அப்புறம்.. தயங்கி தயங்கி அவனை அழைத்தாள்..!!

"அ..அத்தான்..!!"

"ம்ம்..??"

"நான் ஒன்னு கேக்கட்டுமா..??"

"கேளுடா..!!"

"நெ..நெஜமாவே.. நெஜமாவே என்னை நீங்க லவ் பண்றீங்களா..?? என் மேல உங்களுக்கு கோவமே இல்லையா..??" ஆதிரா பரிதாபமாக கேட்க, அவளது முகத்தை கூர்மையாக பார்த்தான் சிபி.

"லூசு.. என்ன கேள்வி இது..?? உன்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. அப்படிலாம் இருந்திருந்தா உன்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதிச்சிருப்பனா..?? உன்னை நான் ரொம்ப ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் ஆதிரா.. என் லைஃப்ல இனிமே எனக்கு எல்லாமே நீதான்.. போதுமா..??"

"ம்ம்ம்ம்..!!!!!!!!" ஆதிராவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, கணவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

"நீ ரொம்ப நல்ல பொண்ணுடி.. நீ பொண்டாட்டியா கெடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்..!! இனிமே இந்தமாதிரிலாம் உனக்கு எப்போவும் சந்தேகம் வரக்கூடாது.. சரியா..??"

"ம்ம்ம்.. சரித்தான்..!!" ஆதிரா அழுகையுடனே சொல்ல,

"லூசு..!!" என்றவாறு மீண்டும் அவளது நெற்றியில் முத்தம் பதித்தான் சிபி.

அடுத்தநாள் அதிகாலை..

ஆதிரா தங்கள் வீட்டின் மாடியறை ஜன்னலுக்கு முன்பாக நின்றிருந்தாள்.. தூரத்தில் தெரிந்த எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு பின்புறமாக வந்த சிபி.. மனைவியின் தோள்மீது கைபோட்டு அவளை அன்பாக அணைத்துக்கொண்டான்..!! கவனம் சிதறிய ஆதிரா.. தன்னை அணுகியது கணவன்தான் என்று புரிந்ததும்.. மெலிதாக புன்னகைத்தாள்.. அவனது அணைப்புக்குள் வசதியாக அடங்கிப்போனாள்..!! சிபி இப்போது அவளது கன்னத்தில் முத்தமிட்டவாறே கேட்டான்..!!

"ஹ்ம்ம்.. அப்படி என்னத்த இவ்வளவு சீரியஸா பாத்துட்டு இருக்குற..??"

"என் தங்கச்சி வாழ்ற வீட்டை பாத்துட்டு இருக்கேன்..!!"

"எது..?? அதுவா.. அந்த சிங்கமலையா..??" சிபி தூரத்தில் தெரிந்த சிங்கமலையை கைநீட்டி கேட்டான்.

"ம்ம்.. ஆமாம் அத்தான்.. அங்கதான தாமிரா வாழ்றா..??"



"ஹ்ம்ம்..!! அதுசரி.. உன் தங்கச்சி வாழ்ற வீடு இருக்கட்டும்.. நாம வாழப்போற வீட்டுக்கு எப்போ கெளம்புறது..??"

"ஹ்ஹ.. கெளம்ப வேண்டியதுதான்..!!"

"அப்போ ரெடியா..??"

"ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டா ரெடிதான்..!!"

"ஹாஹா..!!"

சிபி சிரித்துக்கொண்டே ஆதிராவை அணைக்க முற்பட.. அதேநேரம் அவனது முழங்கால் அவளது கால்க்காயத்தை இடிக்க..

"ஆஆஆஆ..!!" ஆதிரா வேதனையில் முனகினாள்.

"என்னாச்சு..??" பதறினான் சிபி.

"காலு.. இடிச்சுட்டிங்க.. வலிக்குது..!!" வேதனையை மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள் ஆதிரா.

"ஓ.. ஸாரி ஸாரி..!!"

"ச்ச.. பரவாலத்தான்..!!"

"ம்ம்.. கால்வலின்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது..!! நான் இல்லாத இந்த ரெண்டுநாளும்.. டேப்ளட்ஸ்லாம் கரெக்டா சாப்டியா..??" கேட்டவன், உடனே நம்பிக்கை இல்லாமல்,

"சாப்பிட்டுருக்க மாட்டியே..??" என்று கேட்டான்.

"ம்ஹூம்..!! அதுலாம் சாப்பிடுற நெலமைலயா நான் இருந்தேன்..??"

"ஹ்ம்ம்ம்ம்.. ஓகே ஓகே..!! இனிமே எதை மறந்தாலும் மெடிசின்ஸ் மறக்கக்கூடாது.. சரியா..??"

"சரித்தான்..!!"

சிபியே அங்கிருந்து நகர்ந்து சென்று.. அலமாரியில் இருந்த பேக் திறந்து.. மாத்திரைப் பட்டைகளை கிழித்து.. ஆதிராவுக்கான அதிகாலை மருந்தினை எடுத்து வந்தான்.. கூடவே தண்ணீர் ஜாடியும்..!!

"ம்ம்.. சாப்பிடு..!!"

என்று உள்ளங்கையை விரித்தான்.. சின்ன சின்னதாய் ஏழெட்டு மாத்திரைகள்..!!

"எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம் அத்தான்..!!"

"என்ன..??"

"முன்னாடியே உங்ககிட்ட கேக்கனும்னு நெனைப்பேன்.. ஆனா கேக்கல..!! இப்போ என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டே கேக்குறேன்..!!"

"எ..என்னன்னு சொல்லு..!!"

"கால்ல இருக்குற அந்த சின்ன வெட்டுக்காயத்துக்கா இத்தனை மாத்திரை..??" ஆதிரா கேட்டுவிட்டு புன்னகைக்க, சிபி பட்டென்று அமைதியானான். அவனது அமைதியை பார்த்து அவளே மீண்டும்,

"காயத்துக்கு எத்தனை மாத்திரை அத்தான்..??" என்று கேட்க,

"ஒ..ஒன்னு..!!" பதில் சொன்னான் சிபி.

"மிச்ச மாத்திரைலாம் அந்த மென்ட்டல் இன்ஸ்டிட்யூஷன்ல ப்ரிஸ்க்ரைப் பண்ணினதா..??"

"ம்ம்..!!" அமைதியாக சொன்ன சிபி, இப்போது மனைவியை ஏறிட்டு பார்த்து,

"உ..உனக்கு ஒன்னும் இல்லடா.. இது சும்மா.. டாக்டர்ஸ் சொல்றதுக்காக.. இதுவும் இன்னும் கொஞ்சநாளைக்குத்தான்..!!" என்று தடுமாறினான்.

"ஹஹா.. பரவாலத்தான்.. எத்தனை வருஷம்னாலும் பரவால.. நீங்க என்கூட இருக்கிங்கல்ள்ல.. எனக்கு அது போதும்..!!"

அமர்த்தலாக சொல்லிவிட்டு மாத்திரைகளை விழுங்க ஆரம்பித்தாள் ஆதிரா.. அவளை அன்பும், ஆதரவுமாக அணைத்துக் கொண்டான் சிபி..!!

வேறு உடைக்கு மாறிய சிபியும் ஆதிராவும்.. ஆளுக்கொரு பேகை தூக்கிக்கொண்டு படியிறங்கி கீழே வந்தார்கள்..!! ஹாலில் அவர்களுக்காக நிறைய பேர் காத்திருந்தனர்.. திரவியம், வனக்கொடி, கதிர், தென்றல் ஒருபுறம்.. முகிலன், நிலவன், அங்கையற்கண்ணி, யாழினி மறுபுறம்..!! எல்லோரிடமும் நின்று சிறிதுநேரம் பேசிவிட்டு.. மேற்கொள்ளப்போகிற பயணத்துக்கு ஆசிவாங்கிவிட்டு.. வீட்டைவிட்டு வெளியே வந்தனர் இருவரும்..!!

டிக்கியில் பேகை திணிப்பதற்கென சிபி காருக்கு பின்புறம் செல்ல.. ஆதிராதான் முதலில் சென்று கார்க்கதவை திறந்தாள்.. கதவை திறந்ததுமே நாசிக்கருகில் அந்த வாசனை மாற்றத்தை உணர்ந்தாள்.. காரின் உட்புறத்தை குப்பென நிறைந்திருந்தது மகிழம்பூ வாசனை..!! உடனே ஆதிராவின் கண்களில் ஒரு பரவசம் பிறக்க..

"தாமிரா.." என்று மெலிதாக முனுமுனுத்தாள்.

கார் முன்சீட்டின் மையமாக வைக்கப்பட்டிருந்த அந்த மோதிரம் இப்போது அவளது பார்வையில் பட்டது.. மெலிதான ஒரு புன்னகையுடனும், சிறு தயக்கத்துடனும் அந்த மோதிரத்தை கையில் எடுத்தாள்..!!

"என்னாச்சு ஆதிரா..??" அந்தப்பக்கம் காருக்குள் வந்தமர்ந்த சிபி ஆதிராவிடம் கேட்டான்.

"தா..தாமிரா.. தாமிரா வந்துட்டு போயிருக்கா அத்தான்..!!"

"என்னது..??"

"அ..அவ.. அவதான் அன்னைக்கு ஆத்துக்குள்ள.. இந்த மோதிரத்தை எங்கிட்ட இருந்து எடுத்துட்டு போனது.. இப்போ அவளே வந்து வச்சுட்டு போயிருக்கா..!!"

சொல்லிக்கொண்டே ஆதிரா அந்த மோதிரத்தை கணவனிடம் நீட்ட.. அதைப்பார்த்த சிபிக்கு இப்போது பட்டென முகம் மாறியது.. என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்ச்சி அழுத்தத்துக்கு உட்பட்டவனாய் அந்த மோதிரத்தையே இமைக்காமல் பார்த்தான்..!!

"என்னாச்சு அத்தான்..??"

"ஒ..ஒன்னுல்ல ஆதிரா..!! இ..இது.. இந்த மோதிரம்.. தாமிராவை நான் ப்ரொபோஸ் பண்ணினப்போ அவகிட்ட கொடுத்தது.. அப்போ அதை வாங்கிக்காம விட்டெரிஞ்சுட்டு போய்ட்டா..!!"

"ஓ..!!"

"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இதை நீ போட்டுக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்..!!"

சொல்லிவிட்டு ஆதிராவின் முகத்தை ஏக்கமாக பார்த்தான் சிபி.. அவனுடைய மனதை புரிந்துகொண்ட ஆதிரா, முகத்தில் ஒரு புன்னகையுடன் அவனுக்கு முன்பாக தனது விரல்களை நீட்டினாள்..!! உடனடியாக உற்சாகமுற்ற சிபியும் ஆதிராவின் விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தான்..!!

"லவ் யூ ஆதிரா..!!" என்றான் உணர்ச்சிப் பெருக்கோடு.

எல்லோரும் வாசலில் நின்று கையசைக்க, கார் மெல்ல கிளம்பியது.. வீட்டை விட்டு வெளியேறி பிரதான சாலையை அடைந்ததும் வேகமெடுத்து விரைந்தது.. அடுத்த பத்து நிமிடங்களில் எல்லாம் அகழியைத்தாண்டி பறந்து கொண்டிருந்தது..!! சலசலத்து ஓடுகிற குழலாற்றையே பார்த்துக்கொண்டு வந்த ஆதிரா, ஒருவித அயர்ச்சியுடன் காணப்பட்டாள்.. இரண்டு மூன்று நாட்களாக தூக்கமின்மை.. இப்போது சற்று நேரத்துக்கு முன்பாக உட்கொண்ட மாத்திரைகள்.. நீண்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சில் பரவியிருந்த நிம்மதி.. எல்லாமுமாக சேர்ந்து அவளது இமைகளை மெல்ல செருகச்செய்தன..!!

"என்னாச்சு ஆதிரா.. ஒரு மாதிரி இருக்குற..??"

"தூக்கம் வர்ற மாதிரி இருக்கு அத்தான்..!!"

"ஹஹா.. அவ்ளோதானா.. தூக்கம் வந்தா தூங்க வேண்டியதான..?? தூங்கு ஆதிரா.. எந்தக்கவலையும் இல்லாம கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கு..!!"

"ம்ம்.. சரித்தான்..!!"

புன்னகையுடன் சொன்ன ஆதிரா, சிபியின் பக்கமாக நகர்ந்தாள்.. அவன்மீது சாய்ந்து தோள்மீது முகத்தை பதித்துக்கொண்டாள்.. கணவன் காரோட்டுவதை பார்த்துக்கொண்டே, கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணுறங்கிப் போனாள்.. நிம்மதியாக..!!

(இங்கதான் கதையை முடிக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா..)

ஆதிராவுக்கு விழிப்பு வந்தபோது.. சிலவினாடிகள் அவளுக்கு எதுவுமே புரியவில்லை.. எங்கிருக்கிறோம் என்றுகூட அவளது புத்திக்கு விளங்கவில்லை..!! இமைகளை மெல்ல பிரித்து விழிகளை கசக்கி பார்த்தாள்.. அவள் படுத்திருந்த இடத்தை சுற்றிலும் வெள்ளையாய் பனிமண்டலம்.. அருகில் இருக்கிற பொருட்கள் கூட கண்ணுக்கு புலப்படவில்லை..!!

"விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்..!!!"

திடீரென அவளது காதுக்குள் அந்த சப்தம்.. அதைத்தொடர்ந்து அவளது முகத்தில் மிருதுவாய் எதுவோ அறைந்தது.. ஆதிரா திகைத்துப்போய் பார்க்க, அடர்பனிக்குள் அந்த சிவப்புத்துணி படபடத்து மறைந்தது..!!

"ஹ்ஹக்க்க்..!!"

விருட்டென எழுந்து அமர்ந்தாள் ஆதிரா.. மிரட்சியாக பார்த்துக்கொண்டே பனியை விலக்கி மெல்ல நடந்தாள்..!! நெருக்கமாய் அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்களுக்குள் நடப்பது கொஞ்சம் கொஞ்சமாய் அவளது புத்திக்கு புலப்பட்டது..!!

"அத்தான்.. அத்தான்..!!" சிபியை ஒருமுறை அழைத்து பார்த்தாள்.

சூழ்ந்திருந்த பனிமூட்டம் இப்போது மெல்ல விலக.. அவள் நின்றிருந்த இடத்தில் இருந்து நீளமாக ஓடிய அந்த குறுகலான பாதை தெளிவாக தெரிந்தது.. பாதையின் இருபுறமும் பழுப்புநிற மரங்கள், பச்சைநிற செடிகொடிகள்..!! பாதை பார்வைக்கு புலப்பட்டதுமே.. ஆதிரா மெல்ல மெல்ல வேகமெடுத்தாள்.. அவளது நடை கொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டமாக மாறியது..!!



"அத்தான்.. அத்தான்..!!"

அப்படியும் இப்படியுமாய் பார்வையை அலைபாயவிட்டு அலறிக்கொண்டே ஓடினாள்..!! கொஞ்ச தூரம் ஓடியதும் அப்படியே ப்ரேக் போட்டது மாதிரி நின்றாள்.. கண்முன்னே அவள் கண்ட காட்சியை நம்பமுடியாமல் அப்படியே திகைத்துப்போய் பார்த்தாள்..!!

அவளுக்கு முன்பாக நீளமாகவும், அகலமாகவும் விரிந்து கிடந்தது அந்த நீலக்கடல்.. கடற்கரை மணலை அதிக சப்தமில்லாமல் வந்து, கொஞ்சி கொஞ்சி சென்றுகொண்டிருந்தன கடலலைகள்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தவகை உயிரினமும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை..!! ஆளில்லாத் தீவொன்றில் தனித்து விடப்பட்டிருந்தாள் ஆதிரா..!!

என்ன நடக்கிறது என்று எதுவும் புரியாமல்.. நுரைநுரையாய் பொங்கி வந்த அலைகளையே ஆதிரா மிரட்சியாக பார்த்துக்கொண்டிருக்க.. அவளது காதோரமாய் அந்தக்குரல் ஒலித்தது.. சற்றே கிசுகிசுப்பாக.. அவளது தங்கை தாமிராவின் குரல்..!!

"GGGGGame or SSSSShame..??"

(கதை மட்டும் முடிஞ்சது.. கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்..!!)

No comments:

Post a Comment