CLOSE

Wednesday, 7 March 2018

கண்ணாமூச்சி ரே ரே - பகுதி - 26


புயலடித்து ஓய்ந்த பூமியென ஆகிப்போயிருந்தது ஆதிராவின் பூப்போன்ற நெஞ்சம்.. சேதாரத்தின் சுவடுகள் ஏராளமாய் காணப்பட்டாலும், அதையும் தாண்டி ஒரு அமைதியையும் அவளால் உணர முடிந்தது..!! மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் இப்போது மறைந்து மங்கிப்போயிருக்க.. இனி செய்வதற்கென்று இருப்பது ஒன்றே ஒன்றுதான் என்பது தெளிவாக அவளுக்கு தெரிந்தது.. அந்த தெளிவுதான் அவளது மனதில் நிலவிய அந்த மயான அமைதிக்கும் காரணம்..!!

இறந்துபோன தங்கையுடன் இறுதியாய் ஒரு விளையாட்டு விளையாடிப் பார்ப்பதைத் தவிர.. தொலைந்துபோன கணவனை உயிருடன் மீட்பதற்கு வேறேதும் வழியிருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை.. வேதனையுடன் தங்கையின் அந்த சவாலை ஏற்றிருந்தாள்..!! என்ன மாதிரியான சவால் என்றெல்லாம் அவளுக்கு புரியவில்லை.. எதுவாயிருந்தாலும் அதை சந்தித்தே தீரவேண்டும் என்று மனதுக்கு மட்டும் வலுவேற்றிக் கொண்டிருந்தாள்..!!

நிலைகுத்திப்போன பார்வையுடன்.. உயிரும் உணர்வுமற்ற ஜடம் போல.. அசைவேதுமின்றி படுக்கையில் அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தாள் ஆதிரா..!! அவளது மூளை மட்டும் இன்னொருபக்கம் சுறுசுறுப்பாய் ஏதேதோ யோசித்துக்கொண்டிருக்க.. ஆவியென அலைந்து திரிகிற தாமிராவின் எண்ணத்தினையும், விருப்பத்தையும்.. அவளால் இப்போது ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது..!!




'தாமிராவுக்கு என்மீதும், என் கணவர்மீதும் நிச்சயமாக கோபமிருக்கிறது.. அது நியாயமான கோபம்தான் எனலாம்..!! தனது உயிரை பலிகொடுத்துவிட்டு.. இவர்கள் மட்டும் இன்பம் சுகிக்கிறார்களே என்பது மாதிரியான கோபமாக அது இருக்கலாம்..!! எனக்கும் அவருக்கும் திருமணமாகி ஒருமாதம்வரை அமைதியாக இருந்தவள்.. அவருடன் நான் முதலுறவு கண்டு புதுவாழ்க்கை தொடங்கிய அன்றே.. கார் மீது காகத்தை ஏவிவிட்டு அந்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கலாம்..!!'

'விபத்தை விளைவிப்பது அவளது நோக்கமாக இருந்திருக்காது.. அதேநேரம், விபத்தினால் எனது நினைவுகள் தொலைந்துபோனபோது, என்னுடன் விளையாடிப் பார்க்கலாம் என்றொரு விபரீத எண்ணம் அவளுக்குள் பிறந்திருக்கவேண்டும்..!! என்னுடன் விளையாடுவதுதான் அவளுக்கு மிகவும் பிடிக்குமே..?? என்னை சீண்டி பார்ப்பதில் அவளுக்கு எப்போதும் ஒரு அலாதி ஆனந்தம்தானே..?? சிறுவயதில் இருந்தே அப்படிப்பட்ட ஒரு குறும்புக்காரத் தங்கைதானே என் தங்கை..?? ஆவியான பிறகும் அந்த விளையாட்டு புத்தி அவளைவிட்டு போகவில்லை போலிருக்கிறது..!!'

'அந்த விளையாட்டு புத்தியால்தான், அகழி வந்த என்னுடன் இத்தனை நாளாய் கண்ணாமூச்சி ஆடியிருக்கிறாள்.. கண்டுபிடி பார்க்கலாம் என்றொரு கபடநாடக புதிர் விளையாட்டு..!! அந்த மெமரி சிப்பை என் கையில் சிக்கவைத்தது.. அந்த ஆட்டோக்ராஃப் புக்கை எனது கவனத்துக்கு கொண்டுவந்தது.. அவ்வப்போது அவள் நினைவுபடுத்திய அந்த 'கண்ணாமூச்சி ரே ரே'.. மகிழம்பூவின் மயக்கும் வாசனை, மர்மமான கைபேசி அழைப்பு, மாறாத தொலைக்காட்சி அலைவரிசை..!! எல்லாமுமே.. என்னையும், எனது தளர்ந்துபோன மூளையையும் சீண்டிப் பார்க்கிற வகையிலான புதிர் விளையாட்டுக்கள்..!!'

'குறிஞ்சி பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை எனது கவனத்துக்கு கொண்டுவருவது கூட.. அவளது முக்கிய நோக்கமாக இருந்திருக்காது..!! அவளுக்கும் அவருக்குமான காதலை எனது நினைவுக்கு கொண்டுவருவதுதான்.. அவளது முழுமுதற் நோக்கமாக இருந்திருக்கும்..!! என் மனதை ஒருகணம் தடுமாற வைத்து, அவளது உயிரிழப்பிற்கு நான் காரணமாகிப்போக, அவளுடைய அந்தக் காதல்தானே மூல முகாந்தரம்..??'

'என்னுடன் இந்தமாதிரி விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்து போயிருக்க வேண்டும்..!! அதனால்தான்.. அவளது எதிர்பார்ப்புக்கு புறம்பாக நான் அகழியில் இருந்து கிளம்ப எத்தனிக்கையில்.. எனது கணவரை அவள் தூக்கி சென்றிருக்கவேண்டும்..!! அதன்மூலமாக அகழியிலேயே என்னை தங்கிப்போக வைப்பதற்கு.. தனது விளையாட்டை இன்னும் என்னுடன் தொடர்வதற்கு வசதியாக..!!'

ஆதிராவுக்கு இப்போது தங்கையின் மீது ஒரு சிறு எரிச்சலும் பிறந்தது.. தன்னை பழிவாங்க சிபியை ஒரு பகடைக்காயாக தாமிரா உபயோகப்படுத்தியதால் பிறந்திருந்த எரிச்சல் அது..!!

'ஏன் இப்படி செய்தாள்..?? என் மீது கோபம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே.. என் உயிரை கூட பறித்திருக்கலாமே..?? என் கணவரை எதற்காக தூக்கி செல்லவேண்டும்..?? அவர் என்ன பாவம் செய்தார்.. என்மீது இரக்கமுற்று எனக்கொரு புதுவாழ்க்கை அமைத்து தந்ததை தவிர..?? என்னை மணந்த பாவத்திற்காக.. அவரது உடலுக்கோ உயிருக்கோ எந்த சேதாரமும் நேர்ந்துவிடக்கூடாது கடவுளே..!!'

கணவனின் நிலையை பற்றி நினைக்க நினைக்க.. ஆதிராவுக்கு கண்களில் கண்ணீர் சுரந்து ஓட ஆரம்பித்தது..!! பிறகு.. மனதுக்குள் ஒரு தீர்க்கமான முடிவெடுத்தவள்.. கன்னத்தில் வழிந்த கண்ணீர் துளிகளை அழுந்த துடைத்துக் கொண்டாள்..!!

'எது எப்படியோ என் கணவரை இப்போது மீட்டாக வேண்டும்.. அந்த முயற்சியில் எனது உயிரை தொலைத்தாலும்கூட எனக்கு அணுவளவும் கவலையில்லை..!! விளையாடலாம் வாவென்று அழைக்கிறாள்.. என்ன திட்டம் வைத்திருக்கிறாளோ தெரியவில்லை..!! அவளது திட்டம் எதுவாயினும்.. எனது கணவரை அவளுடைய பிடியில் இருந்து விடுவிப்பதில்தான்.. எனது கவனமும் தீவிரமும் முழுமையாக இருந்திடவேண்டும்..!!’

‘நான் நினைப்பது நடக்குமா.. என் கணவரை மீட்க முடியுமா.. ஆவியுடன் போட்டியிட்டு வெல்ல முடியுமா என்னால்..?? ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் எனக்கு சாதகமென இருப்பதாக படுகிறது.. தாமிராவுக்கு என்னதான் என்மீது கோபம் இருந்தாலும், அவள் என்னிடம் வைத்திருந்த அன்பு என்னவோ இன்னும் முழுதாக வற்றிப் போகவில்லை என்றே தோன்றுகிறது..!! தனது சாவுக்கு காரணமாக இருந்திருந்த போதிலும், அக்கா இன்னொரு மிருகத்திடம் சிக்கி சீரழிவதை தாமிரா விரும்பவில்லை.. அந்த மிருகத்திடம் இருந்து என் உயிரையும், மானத்தையும் காப்பாற்றி இருக்கிறாள்..!!’

‘அப்படியானால்.. அவளுக்கு இன்னும் என்மீது அன்பிருக்கிறது என்றுதானே அர்த்தம்..?? என் கணவரை மீட்கிற முயற்சியில் அது பயன்படும்தானே..?? அவள் என் மீது வைத்திருக்கிற அந்த அன்புதான் எனது துருப்புச்சீட்டு..!!'

அப்படி ஒரு எண்ணம் தோன்றியதுமே.. ஆதிராவின் மனதுக்குள் அவளையும் அறியாமல்.. தங்கைமீது ஒரு பெருமிதமும், தன்மீது ஒரு சுயவெறுப்பும் ஊற்றாக உருவாகி.. குபுகுபுவென பொங்கிப் பெருக ஆரம்பித்தது..!!

'கொல்ல நினைத்த அக்காவை, ஒரு கொடூர மிருகத்திடம் இருந்து காப்பாற்றி இருக்கிறாளே.. அவளைப்போல ஒரு தங்கை இங்கு யாருக்கேனும் கிடைப்பார்களா..?? அன்பே உருவான தங்கையை, அந்தரத்தில் நழுவவிட்டு ஆற்றுக்குள் வீழச்செய்தேனே.. என்னைப்போல ஒரு இழிபிறவி இவ்வுலகில் வேறாரும் இருப்பார்களா..??'

'சின்னவயதில் இருந்தே சுயநலம் பிடித்த ஒரு அற்பப்பதராய்த்தானே வாழ்ந்து வந்திருக்கிறேன்.. எதுவானாலும் எனக்கே எனக்கென்று பொசுக்கென ஆசைப்பட்டுவிடுவது..!! உள்ளுக்குள் வளர்ந்துவந்த அந்த சுயநலக்கிருமி, ஒருநாள் விஸ்வரூபம் எடுத்து நின்று.. என்மீது அத்தனை பாசமாயிருந்த எனது தங்கையின் உயிரையே குடித்துவிட்டதே.?? என்னால்தானே.. என் சுயநல புத்தியால்தானே..??’

‘தாமிரா மட்டுமல்ல.. என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே என்மீது அன்பை பொழிந்திருக்கிறார்கள்..!! அம்மா, அப்பா, அத்தான், திரவியம் அங்கிள், வனக்கொடி அம்மா.. எல்லோருமே நான் செய்த பாவத்தை மன்னித்து, எனக்கொரு புதுவாழ்வை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்..!! அதுமட்டுமல்லாமல்.. அந்த விபத்தின் பிறகு.. எனது ஞாபகங்கள் தொலைந்துபோனபிறகு.. எல்லாமும் தெரிந்துகொண்டு இத்தனை நாளாய் எல்லோரும் என்னிடம் நாடகமாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.. என் மீதிருக்கிற அன்பினால், நான் மனம் வாடிப் போய்விடக் கூடாது என்பதற்காக, எல்லாவற்றையும் மறந்துவிட்டு இந்த புதுவாழ்வில் நான் மகிழ்ந்திருப்பதற்காக..!! எல்லோரும் என்மீது இத்தனை அன்பாயிருந்திருக்க.. நான் மட்டும் ஏன் இப்படி இருந்திருக்கிறேன்..??'

நினைக்க நினைக்க ஆதிராவுக்கு இதயம் குமுறி கொந்தளித்தது..!! தனது மனக்குமுறலை அன்றே தணிகைநம்பியிடமும், வனக்கொடியிடமும் கொட்டித் தீர்த்தாள்.. மறந்துபோனவை திரும்பவும் ஞாபகம் வந்துவிட்டதை அவர்களிடம் சென்று சொன்னாள்..!! அவர்கள் முதலில் அதிர்ந்துதான் போனார்கள்.. ஆரம்பத்தில் ஏதோ பொய் சொல்லி அவளை சமாளிக்க முயன்றார்கள்.. பிறகு, அத்தகைய பொய்யால் எந்த பலனுமில்லை என்பதை புரிந்துகொண்டு, தடுமாற்றத்துடன் உண்மையை ஒப்புக் கொண்டார்கள்..!!

"ஏன்ப்பா இப்படி பண்ணுனிங்க.. ஏன் இத்தனை நாளா எங்கிட்ட இருந்து உண்மையை மறைச்சுட்டிங்க..??"

ஆதிரா கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு.. தணிகைநம்பி தனது கண்ணாடியை கழற்றி கையில் எடுத்தவாறே நிதானமாக பதில் சொன்னார்..!!

"எல்லாம் உன்னோட நல்லதுக்குத்தான்மா..!! தாமிரா போனதுல இருந்து ஆறுமாசம், ஒருவருஷம்.. நீ என்ன மாதிரி நெலமைல இருந்த, எவ்வளவு கஷ்டப்பட்டன்னு நாங்க கண்கூடா பாத்திருக்குறோம்..!! ஒருவருஷம் கழிச்சு ஓரளவுக்கு நீ பழைய ஆதிராவா மாறியிருந்தப்பதான்.. ஆக்சிடன்ட்ல உனக்கு நடந்ததுலாம் மறந்துபோச்சு..!! அதெல்லாம் திரும்ப உனக்கு ஞாபகப்படுத்தி.. மறுபடியும் ஒரு மோசமான நெலமைக்கு உன்னை தள்ள நாங்க விரும்பலை.. அதான்..!!”

"ம்ம்..!!"

“அந்த ஆக்சிடன்ட்ல உனக்கு பழசெல்லாம் மறந்துபோனது.. ஆரம்பத்துல எங்களுக்கு அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு.. அப்புறந்தான்.. அதுவும் ஒருவகைல நல்லதுக்குன்னு தோணுச்சு..!! அதேநேரம்.. அதெல்லாம் உனக்கு திரும்ப ஞாபகத்துக்கு வந்தா.. நீ எந்த மாதிரி நடந்துப்பியோன்ற பயமும் எங்களுக்கு இருந்துச்சு..!!"

" பு..புரியுது..!!"

"உன்னை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற அன்னைக்கு.. மைசூர்ல உனக்கு ட்ரீட்மன்ட் குடுத்த அந்த டாக்டர்ட்ட.. நானும், சிபியும் இதைப்பத்தி பேசினோம்மா..!! 'இந்த மாதிரி ஒரு விஷயத்தை மறந்துட்டா.. அதை திரும்ப ஞாபகப் படுத்தலாமா?'ன்னு கேட்டோம்.. அவர் வேணாம்னு சொல்லிட்டாரு..!! ‘அது உனக்கு தெரியாம இருக்குறதே நல்லது, திரும்ப ஞாபகம் வந்தா, பழைய மாதிரி ஆகக்கூட சான்ஸ் இருக்கு’ன்னு சொன்னாரு..!! எங்களுக்கும் வேற வழியில்ல.. மறைச்சுட்டோம்..!!"

"ம்ம்..!!"

"எல்லாம் நல்லபடியாத்தான்மா போயிட்டு இருந்துச்சு.. நீங்க அகழி வர்ற வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்ல..!! ஹ்ம்ம்ம்ம்ம்.. ஆரம்பத்துலயே சிபிட்ட நான் சொன்னேன்.. 'அகழிக்கு போகவேணாம், அது எனக்கு நல்லதா படல'ன்னு..!! அவன் கேக்கல.. 'அஞ்சுநாள்தான மாமா.. ரொம்ப அடம்புடிக்கிறா.. கூட்டிட்டு போகலன்னா சந்தேகம் வந்துடும்'னு சொல்லி என்னை சமாளிச்சுட்டான்..!!"

பேச்சுவாக்கில் தணிகைநம்பி அவ்வாறு சொல்லிவிட, ஆதிரா இப்போது சற்றே அதிர்ந்துபோய் அப்பாவை ஏறிட்டு பார்த்தாள்.. 'அப்படியானால், நாங்கள் அகழி வந்தது உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா..?' என்பது மாதிரியான ஒரு அதிர்ச்சி பார்வை..!! அவளது பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட தணிகைநம்பியோ, அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து பேசினார்..!!

"ஆமாம்மா.. நீங்க இங்க வந்தது அன்னைக்கே எனக்கு தெரியும்.. சிபி சொல்லிட்டான்..!! நீங்க இங்க வந்ததுல இருந்து.. நான், சிபி, திரவியம், வனக்கொடி நாலு பேரும்.. உன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு டெயிலி ஃபோன்ல பேசிப்போம்..!!" தணிகைநம்பி சொல்ல சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதிராவிடம் இப்போது பட்டென ஒரு விரக்தி.

"ஓ..!! எல்லாரும் எல்லாமும் தெரிஞ்சுக்கிட்டேதான் எங்கிட்ட நடிச்சிருக்கிங்க இல்ல..??"

"சேச்சே.. அப்படி இல்லமா.. உன்கிட்ட நடிக்கனும்னு இல்ல..!!"

"எனக்குத்தான் எதுவும் தெரியல..!! நானே என் தங்கச்சியை கொன்னுட்டு.. பைத்தியக்காரி மாதிரி.. யாரை யாரையோ சந்தேகப்பட்டுக்கிட்டு.." ஆதிரா சொல்லும்போதே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, ஆதரவாக அவளது தோளை பற்றினாள் வனக்கொடி.

"இப்படிலாம் பேசாத ஆதிராம்மா..!! நீ செஞ்சது தப்புதான்.. ஆனா.. தப்பு செய்யாத மனுஷங்க இங்க யாரு இருக்கா.. எல்லாருந்தான் தப்பு செய்றோம்..!! நீ வேணும்னே திட்டம் போட்டு எதையும் செய்யல.. ஒருநொடி உனக்கு புத்தி பிசகிப்போய் அப்படி செஞ்சிட்ட.. அது நம்ம தாமிரா உசுருக்கு வெனையா போய்ருச்சு.. அது அவ தலையெழுத்து.. அவ்வளவுதான்..!!”

"ம்ம்..!!"

“நீ செஞ்ச தப்பை நெனச்சு நெனச்சு.. உன் உசுரையும் உடம்பையும் உருக்கிக்கிட்டு, ஒருவருஷம் நீ பட்ட கஷ்டமே போதும்மா.. இனிமேலயும் அது வேணாம்.. இன்னொருமுறை அந்த மாதிரி ஒரு நெலமைல உன்னை பாக்குறதுக்கு.. எங்க யாருக்குமே திராணி இல்லம்மா..!!"

"ம்ம்..!!"

"ஹ்ம்ம்.. நாம நெனச்சது ஒன்னு, நடக்குறது ஒன்னா என்னன்னவோ ஆய்ப்போச்சு.. இனிமேயும் நீ இங்க இருக்குறது நல்லதில்ல ஆதிராம்மா.. அப்பாவோட ஊருக்கு கெளம்பு..!! சிபித்தம்பி எந்தக்குறையும் இல்லாம நம்மட்ட திரும்ப வரும்னு எல்லாருமா நம்புவோம்.. நீ இங்க இருக்கவேணாம்.. கெளம்பு..!!"

"இல்லம்மா.. நான் இங்கதான் இருக்கனும்.. நான் மட்டுந்தான் இருக்கனும்.. அப்பத்தான் அவரை காப்பாத்த முடியும்..!!" ஆதிரா அவ்வாறு தீர்க்கமாக சொல்ல, மற்ற இருவரும் அவளை சற்றே திகைப்பாக பார்த்தனர்.

"எ..என்னம்மா சொல்ற.. எனக்கு புரியல..!!" குழப்பமாய் கேட்டார் தணிகைநம்பி.

"சொல்றேன்ப்பா..!!"

தனக்கு வந்த மர்மமான தொலைபேசி அழைப்பு பற்றியும், அதில் ஒலித்த 'GGGGGame or SSSSShame..??' பற்றியும் அவர்களிடம் கூறினாள்.. அதைத்தொடர்ந்து தன் மனதில் எழுந்த திட்டத்தையும், இறுதியாக எடுத்த முடிவையும் விளக்கி சொன்னாள்.. ஆவியாகிப்போன தங்கையுடன் இறுதியாக ஒரு விளையாட்டு விளையாடிப் பார்க்கப்போகிறேன் என்றாள்..!! அவள் சொன்னதை கேட்க கேட்க.. தணிகைநம்பியும், வனக்கொடியும் அப்படியே அவளை மிரண்டு போய் பார்த்தார்கள்..!!

"இ..இல்லம்மா.. இது சரியா வரும்னு எனக்கு தோணல..!! சொல்றதை கேளு.. வா.. நாம இங்க இருந்து கெளம்பிடலாம்..!!"

தணிகைநம்பி மகளின் மனதை மாற்ற முயன்றார்.. ஆனால், ஆதிராவோ அவளது முடிவில் மிக உறுதியாக இருந்தாள்..!!

"நான் வரமாட்டேன்ப்பா.. அவர் இல்லாம இங்க இருந்து நான் கெளம்ப மாட்டேன்..!! நமக்கு வேற வழி இல்ல.. அவர் திரும்ப வேணும்னா இதை நான் செஞ்சுதான் ஆகணும்..!!"

உரம் வாய்ந்த குரலில் திடமாக பேசிய ஆதிரா.. தணிகைநம்பியையும், வனக்கொடியையும் தனது திட்டத்துக்கு சம்மதிக்க வைத்தாள்..!! அவளை எதிர்த்து பேசி சமாளிக்கவும் அவர்களுக்கு வேறு ஏதும் உபாயம் இருக்கவில்லை.. மனதில் ஒருவித கலக்கத்துடனே சம்மதித்து இருந்தார்கள்..!! அவர்களது கலக்கத்தை போக்கும் வகையில் ஆதிராவே அவர்களுக்கு நம்பிக்கையும் ஊட்டினாள்..!!

அடுத்த நாள் மாலை.. அகழியின் வானத்தை அடர்ந்த மேகங்கள் சூழ்ந்திருந்தன..!! எந்தநேரமும் மழை பொத்துக்கொள்ளலாம் என்பதுமாதிரியான ஏகாந்த வானிலை..!! வீசுகிற காற்றிலே ஈரப்பதமும் திசைவேகமும் ஏராளமாய் கூடியிருந்தன.. எதிர்ப்படுகிற மரங்களையும் மனிதர்களையும் சிலுசிலுவென வருடி, எங்கேயோ விரைந்துகொண்டிருந்தது அந்த குளிர்காற்று..!!

தணிகைநம்பி அகழியில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார்..!! கதவை திறந்து காருக்குள் ஏறப்போனவர் ஒரு கணம் நின்று.. கவலை வழிகிற கண்களுடன் மகளை ஒருமுறை ஏறிட்டார்..!!

"எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கும்மா ஆதிரா.. எதுக்கும் இன்னொரு தடவை நல்லா யோசிம்மா..!!"

"இனி யோசிக்கிறதுக்கு எதுவும் இல்லப்பா.. இது ஒன்னுதான் வழி..!! நீங்க எதுவும் கவலைப்படாதீங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. உங்க மாப்ளையோட நான் மைசூருக்கு திரும்ப வரத்தான் போறேன்..!! இப்போ தைரியமா கெளம்புங்க..!!"

"ஹ்ஹ்ம்ம்ம்ம்...!!!!!!"

நீளமாக ஒரு பெருமூச்சை உதிர்த்த தணிகைநம்பி, காரில் ஏறி கதவை சாத்திக்கொண்டார்.. இஞ்சின் ஒரு கனைப்புடன் ஸ்டார்ட் ஆகிக்கொள்ள, வண்டி மெல்ல நகர ஆரம்பித்தது..!! கையசைத்து அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ஆதிரா.. சமையலறைக்குள் இருந்து வெளிப்பட்ட வனக்கொடியிடம்..

"நீங்களும் கெளம்புங்கம்மா..!!" என்றாள்.

"நா..நான் மட்டுமாவது கூட இருக்கேனே ஆதிராம்மா.. ஒத்தைல உன்னை விட்டுட்டு போக எனக்கு 'திக்கு திக்கு'ன்னு இருக்குது..!!"

"ப்ச்.. புரியாம பேசாதிங்கம்மா.. நான் மட்டும் இருந்தாத்தான் அவ வருவா.. நாம நெனச்சதும் நடக்கும்..!!"

"பு..புரியுதும்மா.. ஆனா.."

"என்ன ஆனா..??"

"உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குது கண்ணு..!!" குரல்முழுக்க கவலையுடன் வனக்கொடி அவ்வாறு சொல்ல, ஆதிராவின் உதட்டில் ஒரு விரக்திப் புன்னகை..!!

"ஹ்ஹ.. அவ என் தங்கச்சிம்மா.. என்மேல உயிரையே வச்சிருந்த என் குட்டித்தங்கச்சி..!! அவ என்னை என்ன பண்ணிடுவா..?? எனக்கு ஒன்னும் ஆகாது.. நீங்க கெளம்புங்க..!!"

சொல்லும்போதே ஆதிராவுக்கு கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்தது.. வனக்கொடியும் புடவைத்தலைப்பால் வாயைப்பொத்தி, துக்கத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றாள்..!!

வனக்கொடியும் சிறிது நேரத்தில் கிளம்பிவிட.. அத்தனை பெரிய, பிரம்மாண்டமான வீட்டில் ஆதிரா மட்டும் இப்போது தனித்து விடப்பட்டிருந்தாள்..!! இதுவரை தாமிராவுடன் அவள் விளையாடிய 'Game or Shame' விளையாட்டுக்கள் அனைத்துமே.. அவர்கள் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விளையாட்டுக்கள்.. அக்கா தங்கைக்கு இடையே அந்த மாதிரி ஒரு வழக்கம் இருப்பதே அவர்களது வீட்டில் யாருக்கும் தெரியாது..!! நேற்று இரவு கைபேசியில் 'Game or Shame' என்று குரல் ஒலித்ததுமே.. ஆதிரா முதலில் முடிவு செய்தது இதுதான்.. தாமிராவை சந்திக்க இந்தமாதிரி தனித்திருப்பது மிக மிக அவசியம் என்று கருதினாள்.. அதனால்த்தான் இப்போது வனக்கொடியையும், தணிகைநம்பியையும் வலுக்கட்டாயாமாக அனுப்பிவைத்துவிட்டு அவள்மட்டும் தனித்திருக்கிறாள்..!!

வனக்கொடி சென்றபிறகு குளியலறைக்குள் புகுந்துகொண்ட ஆதிரா.. கொட்டுகிற ஷவருக்கு அடியில், சிலைபோல நெடுநேரம் நின்றிருந்தாள்..!! டைல்ஸ் பதிக்கப்பட்ட பக்கவாட்டு சுவற்றில் இரண்டு கைகளையும் அழுத்தமாக ஊன்றி.. கூந்தல் நனைத்து முகத்தில் வழிகிற நீர்க்கோடுகளுடன், தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்..!!

குளித்துமுடித்து வெளியே வந்தபோது, மேற்குவானம் செந்நிறமாகிப் போயிருந்தது.. சூரிய வெளிச்சம் வற்றிப்போயிருக்க, இருள் கவிழ ஆரம்பித்திருந்தது..!! தனது அறைக்கு திரும்பி வேறு உடை மாற்றிக்கொண்டாள் ஆதிரா.. மிக மிருதுவான, உடலை உறுத்தாத ஒரு உடை..!! அவளது பார்வை எங்கோ நிலைகுத்திப் போயிருக்க.. அவளது புத்தி முழுதும் ஒரே விஷயத்தை பற்றி கூர்மையாக சிந்தித்துக் கொண்டிருக்க.. அவளது ஒரு கை மட்டும் அனிச்சையாக சீப்புகொண்டு கூந்தல் வாரியது, சிக்கெடுத்து முடிச்சிட்டது.. கழுத்து, காது, மூக்கு அணிந்திருந்த ஆபரணங்களை எல்லாம் கழற்றி எடுத்து, மேஜையில் வைத்தது..!!

ஆதிராவின் மனநிலை ஒருவித அழுத்தத்துக்கு உட்பட்டிருக்க.. அவளுடைய பார்வைக்குள் ஒருசில மாயபிம்பங்கள் ஆங்காங்கே தோன்றின..!! மிக நிதானமாக அவள் படியிறங்கி கீழே வரும்போது.. பக்கவாட்டில் அவளுடன் நடந்துவந்தாள் அவளது கொள்ளுப்பாட்டி.. முகத்தை திருப்பி ஆதிராவை ஒரு அமானுஷ்யப் பார்வை பார்த்தவாறே சொன்னாள்..!!

"நாம பயப்பட பயப்படத்தான்டி பேய்க்கு பலம்.. எதுத்து நின்னமுன்னா எந்த பேயா இருந்தாலும் பணிஞ்சுதான் ஆகணும்..!! அப்படி எதுத்து நின்னுதான் உன் தாத்தனை நான் மீட்டுக் கொண்டாந்தேன்.. நீயும் அந்தமாதிரி புடிவாதமா நின்னு உன் புருஷனை மீட்டுக்க ஆதிரா..!! பயத்தை விடு.. பயந்தான் பேயை விட பெரிய சனியன்..!!"

"ம்ம்.. சரி பாட்டி.. பயப்படல..!!" மாயபிம்பத்துக்கு பதில் சொல்லிக்கொண்டே படியிறங்கினாள் ஆதிரா.

வீட்டுக்கு வெளியே இப்போது ச்சோவென்று மழைகொட்டிக் கொண்டிருந்தது.. பளிச் பளிச்சென்று அடிக்கடி மின்னல் கீற்றுகள்.. திடும் திடுமென்று அவ்வப்போது இடிமுழக்கங்கள்..!! காற்றின் வேகமும் பலமாக இருக்க.. ஜன்னல் கதவுகள் சடார் சடாரென்று கம்பிகளை அறைந்துகொண்டு கிடந்தன..!!

வீட்டின் நுழைவாயிலை மட்டும் விட்டுவிட்டு, மற்ற கதவுகளையும் ஜன்னல்களையும் ஒவ்வொன்றாக அடைத்து தாழிட்டாள் ஆதிரா..!! படக் படக்கென்று அடித்துக்கொண்ட ஒரு ஜன்னல் கதவை, இழுத்து அடைக்க அவளது கையை வெளியே நீட்டியபோது.. ஜன்னலுக்கு வெகுஅருகே, கொட்டுகிற மழையில் நனைந்தவாறு நின்றிருந்தார் அந்த மாந்திரிகவாதி.. முகம் முழுவதும் கொசகொசவென்று தாடி மீசையுடன்..!! இவளது கண்களை அப்படியே கூர்மையாக உற்றுப்பார்த்தவாறு கேட்டார்..!!

"ஆதிரா.. நல்ல பேர்.. கண்ணகிக்கு நிகரான கற்புக்கரசி.. புருஷன் உசுரை காப்பாத்த தீயில பாஞ்சவ.. சரியா..??"

"ச..சரிதான் சாமி..!!"

"காப்பாத்திடுவியா உன் புருஷனை..??"

"காப்பாத்திடுவேன்.. என் உயிரை கொடுத்தாவது அவர் உயிரை காப்பாத்திடுவேன்..!!"

"ஹாஹாஹாஹாஹா..!!!!"

அமானுஷ்யமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர் பட்டென மறைந்துபோனார்.. அந்த ஜன்னல்கதவை அறைந்து சாத்திவிட்டு, தீர்க்கமான ஒரு பார்வையுடன் திரும்பினாள் ஆதிரா..!!

நடந்துசென்று.. வீட்டுக்கு மின்சாரம் பகிர்ந்தளிக்கிற மெயின் ஸ்விட்சை படக்கென கீழிழுத்தாள்..!! வீடே இப்போது சட்டென ஒரு அடர்இருளில் மூழ்கிப் போனது.. பிரதான நுழைவாயிலில் மட்டும் மசமசப்பாய் ஒரு வெளிச்சம்..!! குண்டூசி விழுந்தால்கூட அதன் ஓசை கேட்குமாறு அப்படியொரு நிசப்தம் இப்போது வீட்டுக்குள்..!! அந்த நிசப்தத்தை கிழித்துக்கொண்டு..

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!!!" என்று மேஜை இழுபடுகிற சப்தம்..!!

ஓரமாய் கிடந்த ஒரு மரமேஜையை ஹாலின் மையத்துக்கு நகர்த்தினாள் ஆதிரா..!! மிகவும் கனமான மேஜை.. நகர்த்துவதற்கு கடினமாக இருந்தது.. பற்களால் உதட்டை அழுந்த கடித்துக்கொண்டு இழுத்தாள்..!! இப்போது மேஜையின் இன்னொரு பக்கம் செம்பியனின் மாய பிம்பம்.. அந்தப்பக்கம் இருந்து மேஜையை தள்ளி இவளுக்கு உதவுவது போலொரு தோற்றம்..!! அவ்வாறு தள்ளிக்கொண்டே மூச்சிரைப்பான குரலில் சொன்னார்..!!

"ஆ..ஆவிகளை நாம தேடிப்போறது ரொம்ப கஷ்டம் ஆதிரா.. அ..அதுங்கள நம்மளத்தேடி வரவைக்கிறதுதான் ஈஸியான வழி..!!"

"ஆமாம் அங்கிள்.. அதைத்தான் இப்போ பண்ணப்போறேன்..!!"

"அவளை வர வை.. விளையாண்டு பாரு.. உன் புருஷன் உனக்கு கெடைக்கிறானான்னு பாக்கலாம்..!!"

"கண்டிப்பா கெடைப்பாரு..!!"

"கெடைச்சா நல்லதுதான்..!! ஹ்ஹ்ம்ம்ம்.. ஆ..ஆனா ஒன்னு மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்க ஆதிரா.. மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது..!! பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. நம்மால உறுதியா சொல்ல முடியாது.. அவகிட்ட ஜாக்கிரதையா நடந்துக்க..!!"

"ம்ம்.. புரியுது அங்கிள்.. பாத்துக்குறேன்..!!"

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!!!"

இல்லாத செம்பியனின் உதவியோடு, இழுத்துப் போட்டாள் மரமேஜையை..!! இருட்டாக இருந்த வீட்டுக்குள் ஆங்காங்கே மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்தாள்..!! தாமிராவுக்கு சொந்தமான சில பொருட்களை மேஜைமீது பரப்பினாள்.. நாற்காலி இழுத்துப்போட்டு வசதியாக அமர்ந்துகொண்டாள்..!! சாம்பிராணி கொளுத்தி அதனை புகைய வைத்தாள்.. அதன்மீது அந்த க்ரிஸ்டல் பவ்லை கவிழ்த்து வைத்தாள்..!!

கண்களை மெலிதாக மூடிக்கொண்டு.. அந்த க்ரிஸ்டல் பவ்லின் இருபுறமும் கைகளை வைத்துக் கொண்டாள்..!! சிலவினாடிகள் எடுத்துக்கொண்டு.. அலைபாய்கிற மனதை ஒருமுகப்படுத்தி ஒற்றைப்புள்ளியில் குவித்தாள்..!! தங்கையை சந்திக்கிற உத்வேகத்துடன்.. மனதுக்குள்ளேயே அவளது பெயரை திரும்ப திரும்ப சொல்லி அழைத்தாள்..!!

'தாமிராஆஆ.. தாமிராஆஆ.. தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!!!'

இப்போது இமைகளை மெல்ல பிரித்தாள்.. பவ்லுக்குள் கசிகிற புகையையே மிக உன்னிப்பாக உற்று நோக்கினாள்..!! வெளியே மழையின் சடசட சப்தம்.. அவ்வப்போது திடுமென்ற இடியோசை.. வீட்டுக்குள் மட்டும் ஒரு அசாத்திய அமைதி..!!

அந்த அமைதியுடனே ஆதிரா சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்..!! நொடிகள் கரைந்தன.. நிமிடங்கள் ஆகின.. அந்த நிமிடங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவிச் சென்றுகொண்டிருக்க.. ஆதிராவிடம் மட்டும் எந்த அசைவுமில்லை.. அந்த பவ்லுக்குள் நிறைகிற புகையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! வெளிப்புற குளிரையும் மீறி.. அவளது முகத்தில் இப்போது மெலிதாக வியர்வை முத்துக்கள் துளிர்க்க ஆரம்பித்திருந்தன..!!

மிகவும் விஸ்தாரமான அந்த பழங்கால வீட்டின் மையத்தில்.. க்ரிஸ்டல் பவ்ல் கவிழ்க்கப்பட்ட மேஜைக்கு முன்பாக ஆதிரா மட்டும் தனியே அமர்ந்திருந்தாள்..!! அவளுக்கு நேர் எதிரே வீட்டின் நுழைவாயில் அகலமாக திறந்து கிடந்தது.. மற்ற கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டு வீட்டுக்குள் ஒரு புழுக்கம்..!! ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்திகள் மெலிதான மஞ்சள் வெளிச்சத்தை கசிந்துகொண்டிருந்தன.. அவ்வப்போது வெளிவானத்தில் வெட்டிய மின்னலின் பளீர் வெளிச்சமும், அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன் சேர்ந்துகொண்டது..!!

இப்போது வீட்டுக்குள் திடீரென்று சிலுசிலுவென குளிர்காற்று வீச ஆரம்பித்தது.. ஆதிராவின் தளிர்மேனியை அந்தக்காற்று ஜில்லென வருட, அவளது ஆடையும் கூந்தலும் மெலிதாக தடதடத்தன..!! வீட்டுக்குள் வீசிய குளிர்காற்று அந்த வாசனையையும் அள்ளி வந்திருந்தது.. கமகமவென அந்த அறையை நிறைத்தது மகிழம்பூ வாசனை..!!

வாசனை வந்தவுடனேயே தங்கையின் வருகையையையும் உணர்ந்துகொண்டாள் ஆதிரா.. அவளது இமைகள் அகலமாக விரிந்துகொன்டாலும், அவளது கவனம் முழுவதும் கசிகிற புகையிலேயே நிலைத்திருந்தது..!! அதேநேரம் அந்த க்ரிஸ்டல் பவ்லிலும் சரேலென வெப்பம் ஏற ஆரம்பித்தது.. ஒரு சில வினாடிகளிலேயே சரசரவென சூடாகிப்போய் அனலடித்து கொதித்தது.. தாங்கமுடியாமல் தகித்தது..!! ஆதிராவின் உள்ளங்கை பொசுங்க ஆரம்பிக்க.. அதை அவள் பொருட்படுத்தவில்லை.. அந்த பவ்லில் இருந்து கையை விலக்கிக் கொள்ளவில்லை..!! உதடுகளை மட்டும் அழுந்த கடித்தவாறு.. வேதனை பொறுத்துக் கொண்டாள்..!!

"ச்ச்சிலீர்ர்ர்ர்ர்ர்..!!" வெப்பத்தை தாங்கமுடியாமல் வெடித்து சிதறியது அந்த க்ரிஸ்டல்.

"ஆஆஆஆஆஆஆஆ..!!" அதிர்ந்துபோய் அலறி விருட்டென எழுந்தாள் ஆதிரா.



அவள் அமர்ந்திருந்த நாற்காலி கீழே சரிந்து தடதடவென ஓசையெழுப்ப.. அதைத்தொடர்ந்து வீட்டுக்குள் மீண்டும் அந்த அடர்த்தியான நிசப்தம்..!!

பதற்றத்தில் இருந்த ஆதிராவுக்கு மூச்சிரைத்துக் கொண்டது.. அவளது மார்புகள் சர்சர்ரென மேலும் கீழும் ஏறி இறங்கின..!! அகலமாய் விரித்து வைத்த விழிகளுடன்.. அந்த அறைக்குள் பார்வையை மெலிதாக சுழற்றி..

"தா..தாமிரா.. தா..தாமிரா.." என்று தடுமாற்றமாக அழைத்தாள்.

அதேநொடியில்.. வெளியே திடுமென்று ஒரு இடியோசை.. அதைத்தொடர்ந்து நுழைவாயிலில் பளீரென்று ஒரு மின்னல் வெளிச்சம்..!! அந்த வெளிச்சத்தின் பின்னணியில் ஒரு கருப்புநிற பிம்பம்.. சின்னதாக.. ஏதோ ஒரு பறவை.. இவளை நோக்கி பறந்து வருவது போல.. ஏதோ ஒரு பறவை அல்ல.. ஒரு காகம்.. தனது சிறகை படபடவென அசைத்து அசைத்து, இவளை நோக்கி விர்ர்ர்ரென விரைந்து வந்தது.. தனது கூரிய அலகுகளை விரித்து இவளது முகத்தை கொத்திக் குதறுவது போல..

"ஆஆஆஆஆ...!!!!!"

கடைசி நொடியில் சுதாரித்துக்கொண்ட ஆதிரா தனது முகத்தையும், உடலையும் முறுக்கி ஒரு திருப்பு திருப்ப.. காகத்தின் ரெக்கை மட்டும் அவளது முகத்தை சத்தென்று அறைய.. கால்கள் பிண்ணிக்கொள்ள தடுமாறிப்போய் தரையில் வீழ்ந்தாள்..!! பறந்து வந்த காகம், ஒரு வெண்கல சிலை மீது சென்று அமைதியாக அமர்ந்துகொண்டது.. ஆதிராவோ அதிர்ச்சி விலகாமல் அப்படியே கிடந்தாள்..!!

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!"

சன்னமாக ஒரு சப்தம் இப்போது ஆதிராவின் காதில் விழுந்தது.. என்ன சப்தம் என்பது ஆரம்பத்தில் அவளுக்கு புரியவில்லை.. தரையில் கிடந்தவாறே தலையை திருப்பி திருப்பி பார்த்தாள்.. வீட்டுக்குள் எந்த சலனமும் இருக்கவில்லை.. வாசலுக்கு அருகில்தான் ஏதோ ஒரு சலனம்..!!

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!"

அந்த சப்தம் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகிக்கொண்டே போக.. வாசலில் இருந்து ஏதோ ஒன்று.. மிகவும் சின்னதாய்.. ஏதோ வளையம் போல.. இவளை நோக்கி சர்ரென உருண்டு வந்துகொண்டிருந்தது..!!

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!"

ஆதிராவின் முகத்துக்கு அருகே வந்ததும் நின்றது.. நின்ற இடத்திலேயே 'க்க்க்கிர்ர்ர்ர்' என்று சுழன்றது.. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியாகி அடங்கியது..!!

அது.. அந்த மோதிரம்.. கடந்த காதலர் தினத்தன்று.. கணவனுடன் அவள் புதுவாழ்க்கையை தொடங்கிய அன்று.. காகம் வந்து மோதி கார் விபத்து நேர்ந்த அன்று.. சிபி இவளுக்கு அன்பளிப்பாக அணிவித்த அந்த மோதிரம்.. அகழி வந்த பிறகு திடீரென ஒருநாள் காணாமல் போயிருந்த மோதிரம்..!!

'இ..இது.. இது எப்படி..??'

ஆதிராவுக்கு ஓரிரு வினாடிகள் ஒன்றும் புரியவில்லை.. பிறகு அவளது மூளையில் ஒரு பளிச்..!! அன்றொரு நாள்.. அந்த சிவப்பு அங்கி உருவம் அவளை ஆற்றுக்குள் இழுத்துப்போட்டு.. நீருக்குள் அவளை அழுத்தி நெருக்கி.. அவளது கைகளை பற்றி இழுத்து.. அவளுடைய கைவிரல்களையும் அழுந்தப்பற்றி நெரித்து..!! ஆதிராவுக்கு இப்போது புரிந்துபோனது.. தாமிராதான் அன்று தன்னை ஆற்றுக்குள் இழுத்திருக்க வேண்டும்.. இந்த மோதிரத்தை பறித்து சென்றிருக்க வேண்டும்..!!

'ஆனால் எதற்காக..?? அப்படி என்ன முக்கியத்துவம் இந்த மோதிரத்திற்கு..??' - அது மட்டும் புரியவில்லை.

அந்த மோதிரத்தையே திகைப்பாக பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா.. தனது ஒருகையை மெல்ல நீட்டினாள்.. அந்த மோதிரத்தை கையில் பற்றிக்கொள்ள முயன்றபோது..

"விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!" என்ற சப்தத்துடன் அந்த மோதிரம் பட்டென காணாமல் போனது.. காற்று வந்து கொத்தாக அள்ளிச்சென்றது போல..!!

"ஹ்ஹக்..!!" ஆதிரா திகைத்துப்போய் நிமிர,

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!" முதுகுத்தண்டு சில்லிட்டுப்போவது மாதிரி வீட்டுக்குள் அந்த சிரிப்பொலி.

"தாமிராஆஆஆ..!!" தரையில் கிடந்தவாறு அலறினாள் ஆதிரா.

வீட்டுக்குள் இப்போது மீண்டும் ஒரு பலத்த நிசப்தம்.. ஆதிரா தரையில் இருந்து மெல்ல எழுந்தாள்.. மிரட்சியான முகத்துடன் அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்..!!

"க்க்காஆ.. க்க்காஆ.. க்க்காஆ..!!!" - காகம் கரைந்தது.

அதன் சப்தத்தை கண்டுகொள்ளாமல் ஆதிரா இப்போது மெல்ல அடியெடுத்து வைத்தாள்.. அந்த சிரிப்பொலி சப்தம் வந்த திசையை நோக்கி மெல்ல நகர்ந்தாள்..!!

"தாமிரா.. தாமிரா..!!" - தங்கையை ஒருமுறை அழைத்தாள்.

தயங்கி தயங்கி அடிமேல் அடி எடுத்து வைத்து.. ஒரு பத்து அடி தூரம் நகர்ந்திருப்பாள்..!!

"க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்.....!!!!!!"

அவளுடைய முதுகுப்புறமாக இருந்து திடீரென அந்த சப்தம்..!! ஆதிரா நின்றாள்.. தனது தலையை மெல்ல திருப்பி பார்த்தாள்..!! ஊஞ்சல்.. உத்தரத்தில் இருந்து தொங்கிய இரட்டை ஊஞ்சல்களில், ஒன்று மட்டும் தனியாக ஆடிக்கொண்டிருந்தது.. ஆளில்லாமல்.. சற்றே வேகமாக.. சர்சர்ரென..!!

ஆதிராவின் மனதுக்குள் பட்டென ஒரு ஃப்ளாஷ்பேக்..!! அவள் சிறுமியாக இருந்தபோது.. இதே இடத்தில் நின்று.. அவள் அம்மா பூவள்ளி,

"ஊஞ்சல்தான் ஏற்கனவே ஒன்னு இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அதேமாதிரி இன்னொன்னு வாங்கிட்டு மாட்டிக்கிட்டு இருக்கீங்க இப்போ..??" என தன் கணவரிடம் கேட்டாள்.

"அது ஆதிராவுக்கு.. இது தாமிராவுக்கு.. ஆளுக்கொரு ஊஞ்சல்..!! என் பொண்ணுக ரெண்டு பேருக்கும் எந்த விஷயத்துலயும் போட்டின்றதே வரக்கூடாது.. அதான்.. ஹாஹா..!!" சிரிப்புடன் சொன்னார் தணிகைநம்பி.

பழைய நினைவுகளில் இருந்து பட்டென மீண்ட ஆதிரா.. ஆளில்லாமல் ஆடுகிற அந்த ஊஞ்சலையே ஒருகணம் மிரட்சியாக பார்த்தாள்..!! பிறகு, மெல்ல அந்த ஊஞ்சலை நோக்கி நகர்ந்தாள்..!! அவளது மனதுக்குள் ஏற்கனவே மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பித்திருந்தது.. வலுக்கட்டாயமாக ஒரு தைரியத்தை நெஞ்சுக்குள் ஊற்றிக்கொண்டே, ஊஞ்சலை நெருங்கினாள்..!! ஆடாமல் நின்றிருந்த இன்னொரு ஊஞ்சலில் மெல்ல அமர்ந்துகொண்டாள்.. இருகைகளாலும் இரும்புச்சங்கிலியைப் பற்றி, கால்களை உந்தித்தள்ளி தானும் ஊஞ்சலாட ஆரம்பித்தாள்.. பயத்தையும் மீறி அவளது முகத்தில் ஒரு தீர்க்கமும், கூர்மையும்..!!

No comments:

Post a Comment