அகழியில் காவல் நிலையம் கிடையாது.. களமேழி காவல் சரகத்தின் கீழ்தான் அகழி கிராமம் வரும்.. அங்குதான் காவல் நிலையமும் அமைந்திருக்கிறது..!! களமேழி சற்றே பெரிய ஊர்.. தாலுகா ஆபீஸ், தாசில்தார் ஆபீஸெல்லாம் அங்குதான்.. கலைக்கல்லூரி கூட ஒன்று உண்டு.. அகழியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது..!!
காலையிலேயே களமேழி காவல் நிலையத்துக்கு கால் செய்து.. இன்ஸ்பெக்டரின் இருப்பு நிலவரத்தை அறிந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!! காலை உணவு அருந்தியபிறகு கணவனுடன் காரில் கிளம்பினாள்..!! மலைப்பாதையில் 15 கி.மீ கடந்து களமேழி வந்து சேர ஒருமணி நேரம் ஆகிப்போனது..!! ஒரு சிறிய குன்றின்மேல்.. சுற்றிலும் மரங்கள் அடர்ந்து.. ஓட்டுக்கூரையும், சிவப்புப்பூச்சுமாக.. பனிசூழ காட்சியளித்தது களமேழி காவல் நிலையம்..!! காவல் நிலையத்துக்கு வெளியிலேயே காரை பார்க் செய்துவிட்டு.. கணவனும் மனைவியும் உள்ளே நுழைந்தார்கள்..!!
"நாங்க அகழில இருந்து வர்றோம்.. இன்ஸ்பெக்டரை பாக்கணும்..!! கா..காலைல கால் பண்ணிருந்தோம்..!!"
"ஓ.. நீங்கதானா அது..?? இப்போ வந்துடுவாரு.. வெயிட் பண்ணுங்க..!!"
கான்ஸ்டபிள் சொன்னதும்.. ஓரமாக கிடந்த மரபெஞ்சில் ஆதிராவும் சிபியும் அமர்ந்துகொண்டார்கள்.. ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமல் கட்டிடத்தின் உட்புறத்தை அமைதியாக வேடிக்கை பார்த்தார்கள்..!! ஸ்வெட்டரும் மங்கி குல்லாவும் அணிந்திருந்த கான்ஸ்டபிள்கள் மந்தமாகவே இயங்கிக் கொண்டிருந்தனர்.. அலுவல் எதுவும் நடப்பது மாதிரி தெரியவில்லை.. அரட்டைதான் பிரதானமாக இருந்தது..!!
அவர்கள் சென்றதிலிருந்து அரைமணி நேரம் கழித்துதான் ஸ்டேஷன் வந்து சேர்ந்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்..!! முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயதுக்குள் இருப்பார்.. முன்புற தலையில் நிறைய முடிகளை இழந்திருந்தார்..!! முகத்தில் ஒரு இறுக்கம்.. கண்களில் ஒரு கூர்மை..!! அவர் உள்ளே நுழைந்ததும் ஸ்டேஷன் அப்படியே அமைதியாகிப் போனது.. கான்ஸ்டபிள்கள் அவரிடம் தயங்கி தயங்கித்தான் பேசினர்.. மிகவும் கடுமையானவர் என்று அதிலேயே புரிந்தது..!!
வந்ததும் கான்ஸ்டபிள்களுக்கு ஏதேதோ உத்தரவுகள் பிறப்பித்தார்..!! இவர்கள் வந்திருப்பதை கான்ஸ்டபிள் ஒருவர் நினைவுபடுத்தியதும்.. ஒருமுறை திரும்பி இந்தப்பக்கம் பார்த்தார்..!! மேலும் சிறிது நேரம் கழித்துத்தான் இவர்களை தனது அறைக்கு அழைத்தார்.. 'என்ன விஷயம்?' என்று பொதுவாக விசாரித்தார்.. இவர்களும் வந்த விஷயத்தை சொன்னதும், ஒருசில வினாடிகள் அமைதியாகிப் போனார்..!! பிறகு ஒரு நீண்ட பெருமூச்சுடன்.. ஏளனமான குரலில் ஆரம்பித்தார்..!!
"அகழில இருக்குற ஒரு பயலுக்கும் அறிவுன்றதே கெடையாதா..?? காத்து அடிச்சா குறிஞ்சி.. கதவு அசைஞ்சா குறிஞ்சி.. மரத்தை பாத்தா குறிஞ்சி.. மலையை கண்டா குறிஞ்சி..!! எப்பத்தான் எல்லாம் திருந்த போறாய்ங்க..??"
"............................." ஆதிராவும் சிபியும் அமைதியாகவே இருந்தனர்.
"எவளாவது எவன்கூடயாவது ஓடிப்போயிருப்பா.. இவய்ங்க குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிட்டு திரிவாய்ங்க..!! கடன் தொல்லை தாங்காம எவனாவது ஊரைவுட்டு போயிருப்பான்.. மகனும் மருமகளும் சேந்து வயசானவரை அடிச்சு தொரத்திருப்பாய்ங்க.. பரிச்சைல பெயிலாயிட்டு ஒரு சின்னப்பய மெட்ராஸ்க்கு ரயில் ஏறிருப்பான்..!! இவய்ங்கட்ட போய் கேளுங்க.. எல்லாத்துக்கும் குறிஞ்சி குறிஞ்சிம்பாய்ங்க..!! உங்க ஊர்க்காரய்ங்கள நெனச்சாலே எரிச்சலா இருக்குயா..!!"
"அ..அப்போ.. குறிஞ்சின்னு ஒரு விஷயமே இல்லைன்றீங்களா..??" தயக்கமாகத்தான் கேட்டாள் ஆதிரா.
"சத்தியமா இல்லை.. இந்த ஆவி, பேய், பிசாசுலலாம் எனக்கு சுத்தமா நம்பிக்கை கெடையாது..!! சாதாரணமா நடக்குறதுக்கெல்லாம் இவய்ங்க பேய்ச்சாயம் பூசுறாய்ங்க..!!"
"ம்ம்.. அப்படியே வச்சுக்கிட்டாலும்.. இத்தனை பேர் காணாம போயிருக்காங்களே.. அதுக்கெல்லாம்.."
"இத்தனை பேர் காணாம போயிருக்காங்க, அத்தனை பேர் காணாம போயிருக்காங்கன்னு நீங்கதான் சொல்லிட்டு திரியிரிங்க.. எங்களுக்கு என்ன தெரியும்..?? இதுவரை எங்களுக்கு வந்திருக்குற கம்ப்ளயின்ட் எத்தனை தெரியுமா.. நாலே நாலு.. அதுல உங்க தங்கச்சி கேஸ் ஒன்னு..!!"
"சரி.. நாலு பேராவது கம்ப்ளயின்ட் குடுத்திருக்காங்களே.. அதுல.."
"ஒருத்தரக்கூட இன்னும் கண்டுபிடிக்க உங்களுக்கு துப்பு இல்லையேன்றீங்களா..??"
"ஐயோ.. அப்படி சொல்லல ஸார்..!!"
"பரவால.. சொல்லிக்கங்க..!! நீங்க என்னவேணா சொல்லிக்கங்க.. என்னவேணா நெனைச்சுக்கங்க..!! எனக்கும் கவலை இல்ல.. எங்க டிப்பார்ட்மன்ட்டுக்கும் கவலை இல்ல..!! நான் சொல்லிக்கிறதுலாம் ஒண்ணுதான்..!!"
"எ..என்ன..??"
"உங்க ஊர்க்காரய்ங்க ஒத்துழைப்பு இல்லாம.. எங்களால ஒன்னும் செய்ய முடியாது..!! காணாமப்போனா கம்ப்ளயின்ட் குடுக்கக்கூட வர மாட்டேன்றாய்ங்க.. அப்படியே கம்ப்ளயின்ட் வந்து விசாரிக்கப்போனா, ஒருத்தனும் வாயை தெறக்க மாட்டேன்றாய்ங்க..!! ஏதாவது சொல்லிட்டா எங்க அடுத்து குறிஞ்சி நம்மள தூக்கிட்டு போயிருவாளோன்னு எல்லாப்பயலுக்கும் பயம்..!! இவய்ங்கள வச்சுக்குட்டு என்னத்த பண்ணச் சொல்றிங்க..??"
"............................."
"குறிஞ்சின்ற பயத்தை விட்டு அவய்ங்க என்னைக்கு வெளில வர்றாய்ங்களோ.. அன்னைக்குத்தான் எங்களாலயும் எதாவது செய்ய முடியும்..!! அதுவரைக்கும் நீங்க என்னவேணா நெனைச்சுக்கங்க.. என்னவேணா பண்ணிக்கங்க..!!"
"உ..உங்க கோவம் புரியுது ஸார்..!! பட்.. தாமிரா கேஸ்ல நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்கலையே.. கண்ணால பாத்த சாட்சி வனக்கொடி.. அவங்க உங்க விசாரணைக்குலாம் ஒழுங்காத்தான கோவாப்ரெட் பண்ணுனாங்க..??" ஆதிரா கேட்க, அவளை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தார் வில்லாளன்.
"யாரு.. அந்த.. கோழிய திருட்ன மாதிரியே முழிக்குமே அந்த பொம்பளையா..??"
"ஆ..ஆமாம்..!!"
"அந்த பொம்பளையை பத்தி மட்டும் பேசாதிங்க.. கடுப்பா இருக்கு எனக்கு..!!"
"ஏன் ஸார்..??"
"பின்ன என்ன.. சும்மா கிளிப்புள்ள மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்துச்சு.. அப்டியே செவுள்ல நாலு அப்பு அப்பலாமான்னு இருந்துச்சு எனக்கு..!!"
"எ..என்ன ஸார் சொல்றீங்க..??"
"அந்த பொம்பளை சரியில்லைங்க.. எதையோ மறைக்குது.. பொய் சொல்லுது.. எனக்கு நல்லாத்தெரியும்..!!"
"ஐயோ.. அவங்க அப்படிப்பட்டவங்க இல்ல ஸார்..!!"
"ஹ்ஹ்ஹ்ம்ம்..!! இதுக்குமேல நான் என்னத்த சொல்றது..?? அந்த பொம்பளைட்ட ஏதோ தப்பு இருக்குன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது.. ஆனா என்னன்னுதான் ஒன்னும் புரியல..!! நானும் என்னால முடிஞ்சளவுக்கு துருவித்துருவி விசாரிச்சுப் பாத்தேன்.. ம்ம்ம்.. புண்ணியமே இல்ல..!! நீங்க என்னடான்னா அந்த பொம்பளைக்கு சர்டிபிகேட் குடுக்குறிங்க..!!"
"ச..சரி ஸார்.. அதெல்லாம் விடுங்க.. அவங்க பொய் சொல்றாங்கன்னே வச்சுப்போம்..!! என் தங்கச்சியை கண்டுபிடிக்க நீங்க வேறென்ன ஸ்டெப்ஸ்லாம் எடுத்திங்க.. அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க.. ப்ளீஸ்..!!"
ஒருவழியாக முக்கியமான விஷயத்திற்கு வந்தாள் ஆதிரா..!! அதுவரை எகத்தாளமாக பேசிக்கொண்டிருந்த வில்லாளன்.. அதன்பிறகு சற்று அடக்கியே வாசித்தார்.. வீராப்பாக பேசுமளவிற்கு விஷயம் எதுவும் அவரிடம் இல்லை என்பதுதான் காரணம்..!! தாமிராவின் புகைப்படத்தை மற்ற ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைத்தது.. அவளுடைய கல்லூரியிலும், தோழிகளிடமும் விசாரித்தது.. அகழி காட்டுக்குள் ஒருவாரம் தேடுதல் வேட்டை நடத்தியது.. இதைத்தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி எந்த உருப்படியான தகவலும் அவர் தரவில்லை..!!
"பேயை நம்புறதுக்கு போலீஸை நம்ப சொல்லுங்க உங்க ஊர்க்காரய்ங்கள.. அப்பத்தான் உங்க ஊருக்கும் ஒரு விடிவுகாலம் பொறக்கும்..!!"
அட்லாஸ்டாக ஒரு அட்வைஸை அள்ளிப்போட்டு.. ஆதிராவையும் சிபியையும் அனுப்பி வைத்தார் வில்லாளன்..!! ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த இருவரும்.. தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்..!! காரில் ஏறி அமர்ந்ததும்.. ஆதிரா சற்றே எரிச்சலாக சொன்னாள்..!!
"பேச்சுத்தான் பெருசா இருக்கு.. ஆக்க்ஷன் ஒன்னத்தையும் காணோம்..!!"
"ம்ம்.. ஆமாம் ஆதிரா.. ரொம்ப அசால்ட்டாத்தான் பேசுறாரு..!! அதில்லாம.. இதுல இன்னொரு மேட்டரும் இருக்கு..!!"
"என்ன..??"
"டெட்பாடி கெடைச்சாத்தான் மர்டர் கேஸ்.. அதுவரை எல்லாமே மிஸ்ஸிங் கேஸ்தான்..!! போலீஸ் கொஞ்சம் மெத்தனமாத்தான் இருக்கும்..!!"
"ம்ம்.. புரியுதுத்தான்..!!"
அடுத்த அரைமணி நேரத்துக்கெல்லாம்.. அவர்களுடைய கார் அகழியை நெருங்கியிருந்தது..!! அகழிக்கு செல்கிற சாலை.. களமேழிக்கு பிரிகிற சாலை.. ஊட்டியை சேர்கிற சாலை என.. மூன்று சாலைகளும் சந்தித்துக்கொள்கிற இடத்தை அடைந்திருந்தது..!! முச்சாலை சந்திப்பின் ஒருபக்கம் குழலாறு ஓடிக்கொண்டிருந்தது.. ஆற்றின் அடுத்த கரையில் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்தது சிங்கமலை..!!
"காரை ஸ்டாப் பண்ணுங்கத்தான்.. எதாவது சாப்பிட்டு போகலாம்.. பசிக்குது..!!" என்றாள் ஆதிரா.
மனைவி சொன்னதும் காரின் வேகத்தை குறைத்து.. சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தினான் சிபி..!! இருவரும் காரை விட்டு வெளியே இறங்கினார்கள்..!! இரண்டே இரண்டு சாலையோர கடைகள்தான் இருந்தன அந்த இடத்தில்.. ஒன்று தேநீர்க்கடை.. இன்னொன்று பழக்கடை..!! ஆதிராவும் சிபியும் பழக்கடையை அணுகினார்கள்..!! பீச், ப்ளம்ஸ், மங்குஸ்தான், அண்ணாச்சி, பப்பாளி, திராட்சை என.. பலவகையான பழங்களை சிறுசிறு துண்டங்களாக்கி.. அதை ஒரு பெரிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் நிரப்பி விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்..!! அதை முழுவதும் சாப்பிட்டால் குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு பசியெடுக்காது..!!
"நான் ஒரு பவ்ல் சாப்பிடுறேன்.. உங்களுக்கு..??" ஆதிரா கேட்க,
"எனக்கு வேணாம் ஆதிரா.. நீ மட்டும் சாப்பிடு..!!" பதில் சொன்ன சிபி கடைக்காரனிடம் திரும்பி,
"எவ்வளவுப்பா..??" என்று கேட்டான்.
"நாப்பது ரூவா ஸார்..!!"
சிபி கடைக்காரனுக்கு பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்.. அவன் பழங்கள் நிரம்பிய கிண்ணத்தை ஆதிராவிடம் நீட்டினான்..!! நிஜமாகவே ஆதிராவுக்கு நிறைய பசியெடுத்திருக்க வேண்டும்.. அவசர அவசரமாக அந்த பழங்களை விழுங்கி காலி செய்துகொண்டிருந்தாள்..!! சிபியோ கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டியவாறு.. சிறுபிள்ளைபோல மனைவி சாப்பிடுகிற அழகையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்..!!
"வாவ்...!!!" என்றான் திடீரென.
"என்னத்தான்..??" வாயில் போட்ட பழத்துடன் கேட்டாள் ஆதிரா.
"அ..அங்க பாரேன்..!!"
"என்ன..??"
"பட்டர்ஃப்ளை ஆதிரா..!!"
அவன் கைநீட்டிய திசையில் அந்த பட்டாம்பூச்சி காட்சியளித்தது.. அதன் சிறகில் அப்படியொரு அழகுக்கலவையான பலவண்ண பூச்சுக்கள்.. இப்போது ஒரு செடியில் சென்றமர்ந்து மெலிதாக சிறகசைத்துக் கொண்டிருந்தது..!!
"எவ்வளவு அழகா இருக்கு பாரேன்..!!" சொல்லும்போதே சிபியிடம் அப்படி ஒரு உற்சாகம்.
"ம்ம்.. ஆமாத்தான்..!!" கணவனின் உற்சாகம் ஆதிராவையும் தொற்றிக் கொண்டது.
"ச்ச.. அப்படியே அந்த பட்டாம்பூச்சியாவே நானும் மாறிடலாம் போல இருக்கு..!!"
"ம்ம்.. நல்ல ஆசைதான்.. ஹாஹா..!!"
"ஹேய்.. இரேன்.. நான் போய் கேமரா எடுத்துட்டு வந்துடுறேன்.. எனக்கு இதை ஃபோட்டோ எடுத்தே ஆகணும்..!!"
ஆதிராவின் பதிலை எதிர்பாராமலே காரை நோக்கி ஓடினான் சிபி.. உதட்டில் ஒரு புன்னகையுடன் அவனது முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! 'அப்படி என்னதான் இருக்கிறது இந்த பட்டாம்பூச்சியிடம்.. எப்போது எங்கே பார்த்தாலும் இப்படி குழந்தையாகி விடுகிறானே..?' என்று நினைத்துக் கொண்டாள்..!! அதேநேரம்.. கணவனுடைய மென்மையான ரசனையும், மிருதுவான இயல்பும்.. அவளுக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கவே செய்தது..!!
"ச்சத்த்..!!"
திடீரென அருகே அந்த சப்தம் கேட்க.. ஆதிரா சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினாள்..!! அப்புறம் தனது புடவைத் தலைப்பை பார்த்ததும்தான் விஷயம் புரிந்தது அவளுக்கு.. ஏதோ ஒரு பறவையின் எச்சம்..!!
"ஐயே..!!"
என்று முகத்தை சுளித்தாள்..!! தலையை அண்ணாந்து பார்த்தாள்.. மேலே இரண்டு செங்கால் நாரைகள் சிறகடித்து பறந்துகொண்டிருந்தன..!! ஓரிரு வினாடிகள் அவஸ்தையாக நெளிந்தாள்..!! கணவனைப் பார்த்தாள்.. அவன் காருக்குள் புகுந்திருந்தான்.. கையை பார்த்தாள்.. கிண்ணம் காலியாகிற நிலையில் இருந்தது..!! நடந்து சென்று அந்த கிண்ணத்தை குப்பைக்கூடையில் எறிந்தாள்.. புடவைத்தலைப்பை தனித்துப் பிடித்தவாறே ஆற்றுப்பக்கமாக நகர்ந்தாள்..!!
"ஹேய்.. என்னாச்சு..??" எதிரே வந்த சிபி ஆதிராவை கேட்டான்.
"நாரை பொடவைல எச்சம் போட்ருச்சு அத்தான்..!!"
"ஹாஹா.. ஓகே ஓகே.. போய் வாஷ் பண்ணு போ..!!"
சிரிப்புடன் சொல்லிவிட்டு.. பட்டாம்பூச்சியை புகைப்படம் எடுக்க விரைந்தான் சிபி..!! ஆதிரா ஆற்றை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.. நடக்கும்போதே தலையை நிமிர்த்தி சிங்கமலையை ஒருமுறை பார்த்தாள்..!! மலையுச்சியில் பற்கள் தெரிய கர்ஜித்தவாறு சீற்றமான சிங்கமுக சிலை.. அதைச்சுற்றி வளர்ந்திருக்கிற அடர்த்தியான பச்சை மரங்கள்.. சரேலென செங்குத்தாக ஆற்றை நோக்கி இறங்கும் மலைச்சரிவு..!! ஊருக்கு தீங்கு செய்த குறிஞ்சியை ஊர்மக்கள் எல்லாம் சேர்ந்து தீயிட்டு கொளுத்தியபோது.. அவள் அந்த மலையுச்சியில் இருந்துதான் இந்த குழலாற்றில் குதித்தாள் என்று அகழியில் கதை சொல்வார்கள்.. அது இப்போது ஆதிராவுக்கு ஞாபகம் வந்தது..!!
ஆற்றை அணுக மரத்தாலான மேடை போடப்பட்டிருந்தது அந்த இடத்தில்.. ஆற்றின் நீர்வரத்து அதிகமாக இருக்க, மேடைக்கு அருகாகவே நீர் பாய்ந்து கொண்டிருந்தது..!! ஆதிரா அந்த மேடையில் நடந்து சென்றாள்.. அதன் அடுத்த முனையை அடைந்ததும் அப்படியே குத்துக்காலிட்டு அமர்ந்தாள்..!! குழலாறு சலனமில்லாமல் குழைவாக ஓடிக்கொண்டிருந்தது.. சூரியக்கதிர்கள் ஆற்றுநீரில் மோத, நீர்ப்பரப்பெங்கும் பாதரசக்கீற்றுக்கள்..!!
ஆதிரா புடவைத்தலைப்பை நீரில் நனைத்து சுத்தம் செய்தாள்.. அப்படியும் இப்படியுமாய் அதைப்போட்டு கசக்கினாள்.. சிறிது நேரத்துக்குப் பின் திருப்தி வந்ததுமே கசக்குவதை நிறுத்தினாள்.. புடவையை சரி செய்துகொண்டாள்.. இடுப்பு மடிப்பை இறுக்கிக்கொண்டாள்..!! ஆற்றின் நீரோட்டம் தெளிவாக இருந்தது.. அடியில் நீந்துகிற மீன்கள் எல்லாம் மேலே தெரிந்தன..!! ஆதிரா அந்த மீன்களின் அழகை சிலவினாடிகள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!
பிறகு.. கைகளை ஒருமுறை கழுவிக்கொள்ளலாம் என்று நினைத்து.. இரண்டு கைகளையும் ஆற்றுநீருக்குள் நுழைத்தாள்..!! உள்ளங்கைகளை ஒன்றோடொன்று வைத்து அழுத்தி தேய்த்துக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது..!!
ஆற்றுக்குள் இருந்து படக்கென ஒரு கை நீண்டு வந்து ஆதிராவின் கைகளை அழுத்தமாக பற்றியது.. இரும்புப்பிடியென இறுகப் பிடித்து.. சரக்கென அவளை ஆற்றுக்குள் இழுத்தது..!! அதை சற்றும் எதிர்பாராத ஆதிரா, கத்துவதற்கு கூட அவகாசம் இல்லாமல், ஆற்றுக்குள் படார் என்று தலைகுப்புற விழுந்தாள்..!! விழுந்த வேகத்தில்.. கீழே கீழே கீழே என.. ஆற்றின் ஆழத்தை நோக்கி சென்றாள்..!! இதயம் தறிகெட்டு துடிக்க, கைகளையும் கால்களையும் வெடுக் வெடுக்கென வெட்டினாள்.. நீரின் மேற்பரப்புக்கு வர முயன்றாள்.. ஆனால் அவளுடைய உடலை யாரோ அமுக்குவது போல தோன்றியது.. பாரமாக இருந்தது..!!
"விஷ்ஷ்ஷ்க்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்க்..!!" என்று ஏதோ ஒரு சப்தம்.
நீருக்குள் அவள் அப்படியே சுழல.. அவளுடன் சேர்ந்து அவளை கட்டிக்கொண்டு இன்னொரு உருவமும் சுழன்றது..!! ஆதிராவின் கண்களுக்கு அந்த உருவம்.. தோன்றியது மறைந்தது.. தோன்றியது மறைந்தது.. தோன்றியது மறைந்தது..!! சிவப்பு நிற அங்கி அவளுடைய முகத்தை.. அறைந்தது விலகியது.. அறைந்தது விலகியது.. அறைந்தது விலகியது..!!
ஆதிரா விழிகளை விரித்து அந்த உருவத்தை அடையாளம் காண முயன்றாள்.. முடியவில்லை.. தெளிவில்லாமல் காட்சியளித்தது..!! வாயையும் மூக்கு துவாரங்களையும் இறுக மூடி வைத்திருந்தாள்.. அதையும் மீறி அவளுடைய நாசியை தாக்கியது அந்த வாசனை.. மகிழம்பூ வாசனை..!!
ஆதிரா அவ்வாறு அந்த உருவத்திடம் இருந்து மீளமுடியாமல் போராடிக் கொண்டிருக்கும்போதே.. நீர்ப்பரப்பை கிழித்துக்கொண்டு உள்ளே விழுந்தது இன்னொரு உருவம்.. ஆற்றின் ஆழத்துக்கு இறங்கி ஆதிராவை அணைத்துக் கொள்ள முயன்றது..!! ஆதிரா பிடிகொடுக்காமல் உடலை முறுக்கினாள்.. கைகால்களை படக் படக்கென உதறினாள்.. விழுக்கென்று நழுவ முயன்றாள்..!! பிறகு அந்த உருவத்தை அடையாளம் கண்டுகொண்டதும்தான் மெல்ல மெல்ல அடங்கினாள்.. இரண்டாவது உருவம் அவளுடைய கணவன் சிபிதான்..!!
மனைவியை கையில் அள்ளிக்கொண்டு நீர்ப்பரப்புக்கு வந்தான் சிபி.. பழக்கடைக்காரன் உதவியுடன் இருவரும் மரமேடைக்கு வந்தனர்..!! புஸ்புஸ்சென்று மூச்சிரைத்தனர் இருவரும்.. சர்சர்ரென அவர்களது மார்பு காற்றுக்காக அடித்துக்கொண்டது.. சலசலவென நீர் சொட்டியது இருவருடைய உடலில் இருந்தும்..!!
"எ..என்னாச்சு ஆதிரா..??"
சிபி சுவாசத்திணறலுடன் கேட்டான்..!! ஆதிராவோ சில வினாடிகள் எதுவும் பதில் சொல்லவில்லை.. அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது ஒருபுறம் இருக்க.. அவளுடய மூளையும் இன்னொருபுறம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது..!! நேற்று இரவு சிபி அவளிடம் கடிந்துகொண்டது அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது.. சிறிதுநேர அவசர யோசனைக்குப் பிறகு..
"ஒ..ஒன்னுல்லத்தான்.. கால் ஸ்லிப் ஆகி உள்ள விழுந்துட்டேன்..!! வே..வேற ஒன்னுல்ல..!!" என்று பொய் சொன்னாள்.
சிபி சில வினாடிகள் மனைவியையே தவிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! ஐந்தாறுபேர் சுற்றிநின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்..!! மேடையில் இருந்து எழுந்த ஆதிராவும், சிபியும்.. பழக்கடைக்காரனுக்கு மட்டும் ஒரு நன்றி சொல்லிவிட்டு.. மற்றவர்களிடம் இருந்து விலகி தனியே நடந்தனர்..!! கீழே விசிறியடித்திருந்த கேமராவை சிபி கையில் எடுத்துக்கொள்ள.. இருவரும் காரை நோக்கி சென்றனர்..!!
"கொஞ்சநேரம் பயந்தே போயிட்டேன் ஆதிரா..!!"
"ம்ம்.. ஸாரித்தான்.. நா..நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல..!!"
"பரவால.. விடு..!!"
அமர்த்தலாக சொல்லிவிட்டு சிபி முன்னால் நடக்க.. ஆதிரா மட்டும் பின்னால் திரும்பி, குழலாற்றை ஒருமுறை மிரட்சி அப்பிய விழிகளுடன் பார்த்தாள்..!! முன்பு அவளுடைய தங்கை தாமிரா கத்தியது.. இப்போது அவளது நினைவுக்கு வந்தது..!!
"வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!!"
No comments:
Post a Comment