அதன்பிறகு ஒரு ஐந்தே நிமிடங்களில் ஆதிரா சிங்கமலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தாள்.. எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்த தாமிராவின் எதிரே படக்கென சென்று நின்றாள்.. என்னவென்று புரியாமல் அவள் திகைப்பாக பார்க்க, கையிலிருந்த அந்த மஞ்சள் காகிதத்தை, அவளுடைய முகத்தில் கசக்கி விட்டெறிந்தாள்..!!
"ச்சீய்.. நீயெல்லாம் ஒரு தங்கச்சியாடி..??" என்று எடுத்ததுமே சீறினாள்.
என்ன நடந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள, தாமிராவுக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை.. பட்டென புரிந்துகொண்டாள்..!! அவ்வாறு புரிந்ததுமே.. தளர்ந்துபோய் மெல்ல எழுந்தவள், தடுமாற்றமாக அக்காவிடம் சொன்னாள்..!!
"அ..அவசரப்படாதக்கா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!"
"போதுண்டி.. நீ சிரிச்சு சிரிச்சு பசப்புனதுலாம் போதும்..!! இன்னும் என்ன சொல்லப்போற.. என்ன சொல்லி நம்பவச்சு, என் கழுத்தை அறுக்கப்போற..??"
"என்ன பேசுற நீ..?? நான் என்ன நம்பவச்சு கழுத்தை அறுத்துட்டேன்..??"
"பின்ன இதுக்கு என்னடி அர்த்தம்..??" கசக்கிப்போட்ட காகிதத்தை கைநீட்டி ஆதிரா கேட்க,
"அ..அது.. நா..நானும் அத்தானை லவ் பண்றேன்னு அர்த்தம்..!!" தாமிரா திக்கித்திணறி சொன்னாள்.
"நான் சின்ன வயசுலே இருந்தே அவரை லவ் பண்றேன்..!!"
"நானுந்தான்க்கா.. நீ எங்கிட்ட சொல்லிட்ட.. நான் வெளில சொல்லல.. அவ்வளவுதான்..!! நீ அவர்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கியோ.. நானும் அவர் மேல அதே அளவு ஆசை வச்சிருக்கேன்..!!"
"ஓ..!! அந்த ஆசைலதான் அந்த மாதிரி வேலைலாம் பண்ணுனியா..??" குத்தலாக கேட்டாள் ஆதிரா.
"எந்த மாதிரி வேலை..??" தாமிராவிடமும் இப்போது வேகம் கூடியிருந்தது.
"நடிக்காதடி..!! ஃபோட்டோலயே அப்படி உரசிக்கிட்டு நிக்கிற.. நேர்ல என்ன பண்ணிருப்ப..?? கூடப்பொறந்த அக்காவுக்கே துரோகம் பண்ண துணிஞ்சிட்டல..?? நீ மைசூர் போனதே அவரை மயக்குறதுக்குத்தான..??"
"ச்சீய்.. வாயை கழுவுக்கா.. அசிங்கமா பேசாத..!! மைசூர்ல என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா..??"
"என்ன நடந்திருக்கும்.. நான் சொன்னதுதான் நடந்திருக்கும்..!! அதான் இங்கவந்தும் இன்னமும் டெயிலி அவர் மனசை கரைக்க ட்ரை பண்ணிட்டு இருக்கியே..??"
"அறிவில்லாம பேசாதக்கா..!! மொதல்ல மைசூர்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுட்டு பேசு..!!"
"சரி சொல்லு.. என்ன நடந்துச்சு..??"
இப்போது தாமிரா மைசூரில் நடந்த சம்பவங்களை அக்காவுக்கு சுருக்கமாக எடுத்து கூறினாள்.. ஆரம்பத்தில் சாதாரணமாக கேட்டுக்கொண்ட ஆதிரா, பிறகு மெல்ல மெல்ல முகம் மாறினாள்..!! தங்கையை பற்றி தான் நினைத்தது தவறோ என்கிற குழப்பம் ஒருபுறம்.. பொய்யை சொல்லி ஏமாற்றுகிறாளோ என்கிற குறுகுறுப்பு இன்னொருபுறம்..!! சிபி தாமிராவைத்தான் காதலிக்கிறான் என்ற செய்தியை ஆதிராவால் சுத்தமாக நம்பமுடியவில்லை.. நம்புவதற்கும் அவள் விரும்பவில்லை.. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றே நினைத்தாள்..!!
"அத்தான் என்னைத்தான்க்கா லவ் பண்றாரு..!! அன்னைக்கு அவரை கெஞ்சி.. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லவச்சதே நான்தான்.. ஆனா அவர் முழுமனசா சரின்னு சொல்லல..!! இப்பவும் அவர் மனசு பூரா நான்தான் இருக்கேன்.. இந்தக் கல்யாணத்துல அவருக்கு இஷ்டம் இல்ல..!! என் மனசை மாத்திக்க சொல்லி, அவர்தான் தெனந்தெனம் என்னை கெஞ்சிக்கிட்டு இருக்காருக்கா..!!" தாமிரா சொல்லி முடிக்க,
"இ..இல்ல.. நீ பொய் சொல்ற.. நான் நம்பமாட்டேன்..!!" ஆதிராவிடம் ஒரு பதற்றம்.
"நான் ஏன் பொய் சொல்லணும்..?? சரி.. கைலதான் ஃபோன் வச்சிருக்கல.. அப்படியே அத்தான் நம்பருக்கு அடிச்சு கேளு.. முழுமனசோடதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னிங்களான்னு கேளு.. என்ன சொல்றார்னு பார்ப்போம்..!!"
"....................." செல்ஃபோனை உயர்த்திய ஆதிராவின் கை, டயல் செய்யாமல் அப்படியே தயங்கி நின்றது.
"ம்ம்ம்.. போடு.. பேசலாம்.. மூணு பேரும் பேசி இன்னைக்கு ஒரு முடிவு எடுத்துடலாம்..!!"
தாமிரா அவ்வாறு துரிதப்படுத்த.. ஆதிராவுக்கு இப்போது தங்கையின் வார்த்தைகளில் ஒரு நம்பிக்கை வந்திருந்தது..!! அதேநேரம்.. 'சிறுவயது முதலே சிபியை திருமணம் செய்துகொள்ள நினைத்த தனது ஆசைக்கு ஆபத்து வந்துவிடுமோ' என்பது மாதிரியான ஒரு பதற்றமும் அதிக அளவில் வந்திருந்தது..!! அவளுடைய உடல் மெலிதாக வெடவெடக்க.. எச்சில் கூட்டி ஒருமுறை விழுங்கிக்கொண்டாள்..!!
"என்ன யோசிக்கிற.. ஃபோன் பண்ணு..!!"
"இ..இல்ல.. நான் பண்ணல.. நீ சொல்றதை நம்புறேன்..!!"
ஆதிரா சொல்லிவிட்டு அமைதியாக தலையை குனிந்துகொண்டாள்.. அவள் மனதுக்குள் இப்போது ஒரு குற்ற உணர்வு..!! தாமிரா அக்காவின் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளை நம்பவைத்துவிட்ட திருப்தி ஒருபுறம் இருந்தாலும், அத்தனை நேரம் அவள் அள்ளிவீசிய வார்த்தைகள் தந்த வேதனையும் இன்னொருபுறம் அதிகமாவே இருந்தது..!! காயம்பட்டு நொந்துபோனவளாய் ஆதிராவிடம் சொன்னாள்..!!
"என்னல்லாம் சொல்லிட்டக்கா என்னை பார்த்து.. என்னைப்பத்தி எப்படிலாம் நெனச்சுட்ட..?? பசப்புறவ.. துரோகம் பண்றவன்னு..!! எப்படிக்கா அப்படிலாம் உன்னால பேச முடிஞ்சது..??"
"................................." ஆதிரா பதிலெதுவும் பேசவில்லை. குற்ற உணர்வில் குனிந்த தலை குனிந்ததாகவே இருந்தது.
"நீயெல்லாம் ஒரு தங்கச்சியான்னு கேட்டுட்டல..?? சின்னவயசுல இருந்து நான் உனக்காக என்னல்லாம் பண்ணிருக்கேன்..??"
"................................."
"உன் கழுத்துல போட்ருக்குறியே அந்த முத்துமாலை.. அது உன்கிட்ட எப்படி வந்துச்சுன்னு ஞாபகம் இருக்கா..??"
"................................."
"நீ கட்டியிருக்குற சேலை.. கைல வச்சிருக்குற செல்ஃபோன்.. காதுல தொங்குற ஜிமிக்கி மொதக்கொண்டு நான் உனக்கு விட்டுக் குடுத்ததுடி..!! எல்லாம்.. உன் மனசுக்கே தெரியாம உனக்கு நான் விட்டுக் குடுத்தது..!!" தாமிரா திடீரென சீற்றமாக சொல்ல,
"................................." ஆதிரா அவளையே மிரட்சியாக பார்த்தாள்.
தாமிராவின் முகம் இப்போது பட்டென உணர்ச்சியை மாற்றிக் கொண்டது.. ஆவேசம் கொப்பளித்த அந்த முகத்தில் இப்போது ஒரு பரிதாபம் பொங்கி வழிந்தது.. கண்ணிரண்டிலும் கண்ணீர் தளும்ப சொன்னாள்..!!
"அத்தானையும் அந்த மாதிரிதான் உனக்கே விட்டுக் குடுத்துடலாம்னு நெனைச்சேன்.. ஆனா என்னால முடியலக்கா..!! அவர் என்னை லவ் பண்றார்னு தெரியிறவரைக்கும் எனக்கும் ஒன்னும் தெரியல.. ஆனா அது தெரிஞ்சதுக்கப்புறம்.. ரொம்ப கஷ்டமா இருக்குதுக்கா..!! மனசுக்குள்ள ஆசையை வச்சுக்கிட்டு.. வெளில என்னால வேஷம் போட முடியல..!! 'என காதலை ஏத்துக்கோ'ன்னு அவர் கெஞ்சுறப்போ.. சத்தியமா என்னால முடியலக்கா..!! 'நானும் உங்களை லவ் பண்றேன் அத்தான்'னு ஃபோன்லயே கத்தனும் போல இருக்கும்..!! இப்ப வரைக்கும் நான் அதை செய்யல.. ஏன்...?? எல்லாம் உனக்காகத்தான்..!!"
"................................."
"இனிமேயும் என்னால நடிக்க முடியாதுக்கா.. தெனந்தெனம் இந்த வேதனையை என்னால தாங்க முடியல..!! எனக்கு அத்தான் வேணும்க்கா.. ப்ளீஸ்..!!"
ஆதிராவை கையெடுத்து கும்பிட்டு கெஞ்சலாக சொல்லி முடித்தாள் தாமிரா..!! அதுவரை குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்திருந்த ஆதிரா.. 'எனக்கு அத்தான் வேணும்க்கா' என்று தாமிரா சொன்னதுமே.. வெடுக்கென நிமிர்ந்து பார்த்தாள்..!! சிறுவயதிலிருந்தே சிபி மீது அவள் கொண்டிருந்த கண்மூடித்தனமான காதல்.. உடன்பிறந்த தங்கையையே இப்போது எதிரியாக காட்டியது..!! உடம்பை விறைப்பாகவும், முகத்தை முறைப்பாகவும் வைத்துக்கொண்டு தாமிராவிடம் சொன்னாள்..!!
"இங்க பாருடி.. நான் உன்னைப்பத்தி தப்பா பேசினதுக்கு மொதல்ல என் மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன்.. என்னை மன்னிச்சிடு.. ப்ளீஸ்..!! அதுமாதிரி.. இத்தனை நாளா எனக்கு என்னன்னவோ விட்டுக்குடுத்தேன்னு சொல்றியே.. அதுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.. தேங்க்யூ ஸோ மச்..!! ஆனா.. அதுக்குலாம் பரிகாரமா அத்தானை உனக்கு விட்டுக் குடுக்கனும்னு சொன்ன பாத்தியா.. அது மட்டும் என்னால முடியாது..!!"
"அத்தான் எனக்கு வேணும்னுதான் சொன்னேன்.. அதுக்காக உன்னை விட்டுக்குடுக்க சொல்லல..!!"
"அ..அப்புறம்..??"
ஆதிரா குழப்பமாக கேட்க, தாமிரா சற்றே நிதானித்தாள்..!! ஒரு சில வினாடிகளுக்கு அப்புறம்.. குரலை தாழ்த்திக்கொண்டு தடுமாற்றமாக சொன்னாள்..!!
"நா..நாம.. நாம ரெண்டு பேருமே அவரை கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஓகே வா..??" கேட்டுவிட்டு தாமிரா அக்காவை ஏறிட, அவளுக்கோ தங்கை மீது சுள்ளென்று ஒரு கோபம்.
"உனக்கென்ன பைத்தியமாடி..??" என்று எரிந்து விழுந்தாள்.
"ஆமாம் பைத்தியந்தான்..!! அத்தான் மேல எனக்கு அவ்வளவு ஆசை..!! இப்படி ஒண்ணுமே இல்லாம இருக்குறதுக்கு.. ரெண்டாவது பொண்டாட்டியா இருக்கக்கூட எனக்கு சம்மதம்..!! நீயும் அவரை ரொம்ப லவ் பண்ற.. நானும் அவரை ரொம்ப லவ் பண்றேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து அவரை ரொம்ப நல்லா பாத்துக்கலாம்..!! ஒருத்தொருக்கொருத்தர் போட்டி பொறாமை இல்லாம.. அவங்கவங்க லவ்வை நல்லவிதமா ஷேர் பண்ணிக்கலாம்..!!" தாமிராவின் நியாயத்தை ஆதிராவால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
"ச்சீய்.. பேசுற பேச்சைப்பாரு.. வெக்கமா இல்ல..?? பைத்தியந்தான்டி புடிச்சிடுச்சு உனக்கு..!!"
"ஐயோ.. இது ஒன்னும் நாட்டுல நடக்காதது இல்லக்கா.. எல்லாத்துக்கும் அவங்கவங்க மனசுதான் காரணம்.. எனக்கு இது ஓகேன்னு தோணுது..!! எல்லாரோட கைல கால்ல விழுந்தாவது இதுக்கு சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு.. என்ன சொல்ற..??"
"என்னால முடியாது..!! நீ வேணா பெரிய புரட்சி பண்றவளா இருக்கலாம்.. நான் அப்படி இல்ல..!! நல்லா கேட்டுக்கா.. அவரு எனக்கு மட்டுந்தான்.. இன்னும் ரெண்டு வாரத்துல எங்களுக்கு கல்யாணம்.. அவரும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியாச்சு.. அவ்வளவுதான்..!! அவரும் நானும் புருஷன் பொண்டாட்டியா ஆகப்போறோம்.. அதை எவ நெனச்சாலும் தடுத்து நிறுத்தமுடியாது..!!" ஆதிராவின் சீற்றத்தில், தாமிராவும் சட்டென சூடானாள்.
"ஏன்..?? நான் நெனச்சா.. அதை தடுத்து நிறுத்த முடியும்..!! ஓகேன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்.. அடுத்த நிமிஷம் அத்தான் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவாரு..!! அப்பா, அம்மாவும் அதை பெருசா எதுக்கப் போறது இல்ல..!!" தாமிராவின் பதிலுக்கு, ஆதிரா சற்றும் சளைக்கவில்லை.
"அப்படி நீ செஞ்சா.. அதுக்கப்புறம் என்னை நீ பொணமாத்தான் பார்ப்ப..!!"
வெடுக்கென சொல்லிவிட்டு.. தங்கையின் பதிலுக்கு கூட காத்திராமல்.. அங்கிருந்து விடுவிடுவென கிளம்பினாள் ஆதிரா..!! அக்கா இத்தகைய அஸ்திரத்தை எறிவாள் என்று, தாமிரா சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை.. ஒரு சிலவினாடிகள் அப்படியே விக்கித்துப் போய் நின்றிருந்தாள்..!! அப்புறம் திடீரென ஏதோ தோன்றியவளாய்.. ஆதிராவின் முதுகை பார்த்து கத்தினாள்..!!
"Game or Shame..??"
தாமிராவின் வார்த்தைகள் காதில் விழுந்ததும்.. அப்படியே சரக்கென ப்ரேக்கடித்து நின்றாள் ஆதிரா..!! தலையை கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பி தங்கையை பார்த்தாள்..!! தாமிரா தனது இரண்டு கைகளையும் முகத்திற்கு முன்பாக விரித்து வைத்தவாறு நின்றிருந்தாள்.. அவளது ட்ரேட் மார்க் மேனரிசம்..!! எப்போதும் அந்த கைகளின் இடைவெளியில் தெரிகிற அவளது ஒற்றைக்கண்.. குறும்பாக ஒரு சிமிட்டு சிமிட்டும்..!! இப்போதோ.. பொலபொலவென கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது..!!
"எ..என்னடி சொல்ற..??" ஆதிரா சற்று குழப்பமாகவே கேட்டாள்.
"ரெண்டு பேரும் ஒரு கேம் ஆடலாம்..!! யார் ஜெயிக்கிறாங்களோ, அவங்களுக்கு தோத்தவங்க அத்தானை விட்டுக் குடுத்துடணும்.. அத்தோட இந்த சேப்டரை க்ளோஸ் பண்ணிடனும்.. அவங்கவங்க வழில அவங்கவங்க வாழ்க்கையை பாத்துக்கிட்டு போயிட்டு இருக்கணும்..!! ஓகேவா..??"
"லூசா உனக்கு..?? கேம் ஆடி டிஸைட் பண்ற மேட்டராடி இது..?? எதுலதான் வெளையாடுறதுன்னு உனக்கு வெவஸ்தை இல்ல..??"
"இது வெளையாட்டு இல்லக்கா.. ஐ'ம் டாம் சீரியஸ்..!! நீ ஜெயிச்சிட்டா.. கடைசி வரைக்கும் என் காதலை பத்தி அத்தான்ட்ட நான் வாயே தெறக்க மாட்டேன்.. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா வாழலாம்..!! சப்போஸ் நான் ஜெயிச்சிட்டா.. அத்தானை எனக்கு விட்டுக் குடுத்துட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்கணும்.. அவ்வளவுதான்..!! சொல்லு.. Game or Shame..??"
தங்கையின் வார்த்தைகளில் இருந்த தீவிரத்தன்மை.. ஆதிராவையும் சற்று நிதானிக்க வைத்தது.. அமைதியாக ஒருகணம் யோசித்தாள்..!! 'எப்போதும் எனக்கு விட்டுக் கொடுப்பதற்காகவே இந்த மாதிரி விளையாட்டு வைப்பதாக இவள் சொல்கிறாளே.. இதுவும் அதுபோலொரு விளையாட்டாக இருக்குமோ..?? என்னுடைய மனது நோகாமலே சிபியை எனக்கு விட்டுக் கொடுப்பதற்காக இப்படி ஒரு ஆட்டத்தை முன்வைக்கிறாளோ..?? ஆட்டத்தில் கலந்துகொண்டால், இந்த பிரச்சினைக்கு எளிதாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியுமோ..??' என்பது மாதிரியாக ஒரு எண்ணம் ஆதிராவின் மனதுக்குள் ஓடவும்.. சிறிது தடுமாற்றத்துடனே சொன்னாள்..!!
"Game..!!!!"
"குட்..!!" கண்களில் கண்ணீருடன், உதட்டில் ஒரு புன்னகையையும் சிந்தினாள் தாமிரா.
"என்ன கேம்..??"
ஆதிரா கேட்கவும், தாமிரா இப்போது அந்த இடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்.. ஒரு சில வினாடிகள்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய், அக்காவிடம் தெளிவான குரலில் சொன்னாள்..!!
"அதோ.. அந்த பூவை யாரு மொதல்ல போய் பறிக்கிறாங்களோ.. அவங்கதான் வின்னர்..!!"
தாமிரா கைநீட்டிய திசையில் ஆதிரா பார்வையை வீசினாள்..!! சிங்கமுக சிலை வடிக்கப்பட்டிருந்த மலைமுகட்டில்.. வழுக்குப்பாறைகள் நிறைந்த ஒரு பிரதேசத்தில்.. ஒரு பாறை இடுக்குக்குள் இருந்து ஒற்றையாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது அந்த மலர்.. செக்கச்செவேல் என்று சிவந்துபோய், வித்தியாசமான இதழமைப்பு கொண்ட ஒரு அரியவகை மலர்..!! அணிலால் தட்டிவிடப்பட்ட சிவப்பு மை, கண்ணாமூச்சி ரே ரே புத்தகத்தில் ஒரு ஓவியம் தீட்டியதே.. அதே மலர்..!!
போட்டி என்னவென்று தெரிந்ததும் ஆதிரா சற்று மிரண்டுதான் போனாள்.. அந்த மலரை பறிப்பது அவ்வளவு கடினமானது மட்டுமல்ல, உயிருக்கே மிக ஆபத்தான காரியம் என்றும் அவளுக்கு தெளிவாக உறைத்தது..!!
"ஏய்.. என்ன வெளையாடுறியா..?? அதுலாம் ரொம்ப கஷ்டம்டி..!!" என்று மறுத்து பார்த்தாள்.
"கேம்னா கேம்தான்..!! லைஃப்ல கஷ்டப்படாம எதுவும் கெடைக்காது..!! அத்தான் வேணும்னா.. அந்த பூவை பறிக்கிறதை தவிர உனக்கு வேற வழியில்ல..!!"
"ஏய்..!!"
"ரெடி.. ஒன்.. டூ.. த்ரீ.. கோ..!!"
தாமிரா தானாக சொல்லிவிட்டு, அந்த மலரை பறிக்கிற முனைப்புடன் மலையை நோக்கி ஓடினாள்.. ஓரிரு வினாடிகளுக்கு அப்புறமே ஆதிரா சுதாரித்துக் கொண்டாள்.. கையிலிருந்த செல்ஃபோனை ரவிக்கைக்குள் திணித்துவிட்டு, தானும் தங்கையின் பின்னால் ஓடினாள்..!!
சிறுவயதில் இருந்து சின்ன சின்ன விஷயங்களுக்கென ஜாலியாக விளையாடிய ஒரு விளையாட்டை.. இப்போது வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற ஒரு பெரிய விஷயத்துக்காக, அக்காவும் தங்கையும் ஆடத் துணிந்திருந்தார்கள்..!! இருவரும் பரபரவென அந்த மலையில் ஏறினார்கள்..!! பாறைகளில் தங்கள் கைவிரல்களை அழுந்தப் பதித்து.. உடலை எக்கி எக்கி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்தார்கள்..!!
இருவரிலும் தாமிராதான் மிக வேகமாக இருந்தாள்.. அவளது வேகத்துக்கு ஆதிராவால் ஈடுகொடுக்க முடியவில்லை..!! தங்கையின் வேகத்தை பார்த்து ஆதிரா மிரண்டுபோனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. அவளது காலடியை தாண்டி இவளால் மேலே முன்னேற முடியவில்லை.. இருவருக்கும் இடையே அவ்வளவு பெரிய இடைவெளி.. இந்த வேகத்தில் சென்றால், சீக்கிரமே அந்த மலரை தாமிரா கைப்பற்றிவிடுவாள் என்று தோன்றியது..!! தாமிரா விட்டுக்கொடுப்பதைத்தான் இத்தனை நாளாய் ஆதிரா பார்த்திருக்கிறாள்.. முதன்முறையாக தனக்கு சரிக்கு சரி போட்டியிடுவதை, அப்படியே திகைத்துப்போய் பார்த்தாள்..!!
அக்காவும், தங்கையும் இப்போது தளப்பரப்பில் இருந்து பதினைந்து, இருபது அடி உயரத்திற்கு சென்றிருந்தனர்.. அந்த மலர் நீண்டிருந்த பாறையிடுக்கின் வெகு அருகே நகர்ந்திருந்தனர்..!! தாமிராதான் அந்த மலருக்கு மிக நெருக்கமாக இருந்தாள்.. அவளது பாதத்துக்கு நெருக்கமாக ஆதிரா..!!
தாமிரா கையை நீட்டி அந்த மலரை பறிக்க முனைகையில்தான் அது நடந்தது.. பாசி படர்ந்திருந்த ஒரு பாறைப்பரப்பில் தாமிராவின் வலதுகால் அழுத்தமாக அமர, அப்படியே விழுக்கென்று வழுக்கிக்கொண்டது..!!
"ஆஆஆஆஆஆஆஆ..!!!!"
வழுக்கிய வேகத்தில் அவளது கைகள் பிடிமானத்தை இழந்துபோக.. சர்ரென கீழே சரிந்தாள் தாமிரா..!! தன்னை பின்தொடர்ந்து மேல்வந்துகொண்டிருந்த அக்காவின் மீது சென்று தொம்மென மோதினாள்..!! தங்கை வந்து இடித்ததில் ஆதிராவும் நிலைகுலைந்தாள்.. பாறையை பற்றியிருந்த அவளது பிடியும் விட்டுப்போக, தாமிராவுடன் சேர்ந்து தானும் கீழே சரிந்தாள்..!!
"ஆஆஆஆஆஆஆஆ..!!!!"
இருவரும் அந்த இருபது அடி உயர சரிவில் இருந்து கடகடவென கீழே உருண்டார்கள்..!! அவர்களது முகம், கை, கால் எல்லாம் கரடுமுரடான பாறையில் உராய்ந்து சிராய்த்துக்கொள்ள.. சரசரவென உருண்டு உருண்டு தளப்பரப்பிற்கு வந்தார்கள்..!! தளப்பரப்பின் அந்தப்பக்கம் ஆயிரத்து ஐநூறு அடி உயர சரேல் பள்ளத்தாக்கு.. பள்ளத்தாக்கின் அடியில் குழலாறு..!! யாரும் கவனமில்லாமல் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக எழுப்பப்பட்டிருந்த.. இரும்புக்குழாய்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு தடுப்புச்சுவர்..!! உருண்டவேகத்தில் அந்த தடுப்புச்சுவரை சென்று டமாரென்று மோதினார்கள் இருவரும்..!!
"ஆஆஆஆஆஆஆஆ..!!!!"
இற்றுப்போன ஒரு இரும்புக்குழாய் படாரென்று உடைந்துகொள்ள.. அந்த இடைவெளியின் வழியே பள்ளத்தாக்குக்குள் சரிந்தாள் தாமிரா.. அவளை பின்தொடர்ந்து வந்த ஆதிராவின் கைக்குள் வலுவான ஒரு பிடிமானம் சிக்கிக்கொள்ள, இன்னொரு கையால் தங்கையின் கையை எட்டி பிடித்தாள்..!!
"ஆஆஆஆஆஆஆஆ..!!!!"
ஆதிரா இப்போது தளப்பரப்பில் ஓரளவுக்கு வசதியாக கிடந்தாள்.. அவளது ஒருகை தடியான ஒரு இரும்புக்குழாயை இறுகப் பற்றியிருந்தது.. இன்னொரு கை தாமிராவின் இடதுகையை இழுத்து பிடித்திருந்தது..!! தாமிரா மட்டும் ஆயிரத்து ஐநூறு அடி மலைச்சரிவில் அப்படியும் இப்படியுமாக அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தாள்.. அக்கா தனது கையை பற்றியிருக்க, இவளும் அவளது கையை அழுந்தப் பற்றியவாறு தொங்கிக்கொண்டிருந்தாள்.!!
"அக்காஆஆ.. அக்காஆஆ..!!!!" பயத்தில் மிரண்டுபோய் அலறினாள்.
"தாமிராஆஆஆ..!!!" தங்கையின் எடை தந்த வேதனையுடன் பற்களை கடித்து கத்தினாள் ஆதிரா.
"மே..மேல தூக்குக்கா.. மேல தூக்கு..!!"
"மு..முடியலடி.. கஷ்டமா இருக்கு..!!"
"கொஞ்சம்க்கா.. ட்ரை பண்ணு...!!"
"இ..இருடி..!!"
"விழுந்துருவேன் போல இருக்குக்கா.. சீக்கிரம்..!!"
"கொஞ்சம் இருடி..!!"
ஆதிரா இப்போது தனது கால் ஒன்றை சற்றே மடக்கினாள்.. தனது நிலையை உறுதியாக்கிக்கொண்டு தங்கையை மேலே தூக்கிவிட வேண்டும் என்று நினைத்தாள்..!! அப்போதுதான்.. அவளது மனநிலையில் அந்த மாற்றம்..!!
கூட்டம் கூட்டமாய் நாட்டுக்குள் வாழ்கிற ஒரு மிருகம்தான் மனிதன் என்பவன்..!! சட்டதிட்டங்களோ, சொந்தபந்தங்களோ இல்லாமல் போய்விட்டால்.. எந்த மனிதனிடமும் மனிதகுணத்தை காண இயலாது..!! ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாய் இருந்தாலும்.. அவனுக்குள்ளும் ஒரு மிருக குணம் ஒழிந்திருக்கும்..!! அக்குணம் எங்கே ஒளிந்திருக்கிறது என்று எவருக்கும் தெரியாது.. எப்போது வெளிப்படும் என்றும் யாருக்கும் புரியாது..!! ஆதிராவுக்குள் ஒளிந்திருந்த ஒரு மிருககுணம் அப்போது வெளிப்பட்டது..!!
சிறுவயதில் இருந்தே சிபி மீது அவள் வைத்திருந்த தீராக்காதல்.. அந்தக்காதல் கல்யாணத்தில் கனியப்போகிறதென்ற அவளது சந்தோஷம்.. அந்த சந்தோஷத்திற்கு சமாதி கட்டுவது மாதிரியான தங்கையின் காதல்.. 'நான் நெனச்சா இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும்' என்ற தாமிராவின் பேச்சு.. போட்டியில் வென்று சிபியை அடைய தாமிரா காட்டிய வேகம்.. எல்லாமுமாக சேர்ந்து ஆதிராவின் ஆழ்மனதுக்குள் புதைந்திருந்த அந்த மிருககுணத்தை படக்கென வெளிப்பட செய்தன..!!
"ம்ம்ம்.. மேல இழுக்கா.. சீக்கிரம்..!!" தாமிரா அந்தரத்தில் துடித்துக் கொண்டிருந்தாள்.
ஆதிராவின் முகம் திடீரென ஒரு திருட்டுச்சாயம் பூசிக்கொள்ள, தாமிராவை இறுகப் பற்றியிருந்த பிடியை மெல்ல மெல்ல தளர்த்தினாள்.. தங்கையின் கையோடு அழுந்தியிருந்த அவளது ஐந்து விரல்களும், கொஞ்சம் கொஞ்சமாய் இளக்கம் கொடுத்தன..!! ஓரிரு விநாடிகள்தான்.. ஆதிராவின் மொத்த மனமாற்றமுமே ஓரிரு விநாடிகள்தான்.. காதலின் வெற்றியை பெரிதென கருதிய ஆதிரா, அதற்கென தங்கையையும் பலிகொடுக்க நினைத்துவிட்ட அந்த ஓரிரு விநாடிகள்.. இந்தக்கதைக்கு மிக மிக முக்கியமான அந்த ஓரிரு வினாடிகள்..!!
ஆனால்.. அந்த ஓரிரு வினாடிகளே தாமிராவுக்கு போதுமானதாக இருந்தது.. அக்காவின் உள்நோக்கத்தை புரிந்துகொள்வதற்கு..!! அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. ஆதிரா தன்மீது கோவத்தில் இருக்கிறாள் என்று தாமிராவுக்கு நன்றாக தெரியும்.. ஆனால், இப்படி தனது உயிரை தொலைத்தாவது அவளது காதலைப் பெற எண்ணுவாள் என்று சத்தியமாக தாமிரா நினைத்திருக்கவில்லை..!! அக்காவின் முகத்தையே ஏக்கமும், பரிதாபமுமாக பார்த்தாள்..!!
"அக்காஆஆஆஆ..!!" என்று இதயத்தை பிசைவது மாதிரியாக ஈனஸ்வரத்தில் ஓசை எழுப்பினாள்.
அவ்வளவுதான்..!! தங்கையின் பரிதாப முகத்தை பார்த்த ஆதிரா, இப்போது பட்டென சுதாரித்துக் கொண்டாள்.. இயல்பாகவே அவளுக்கு தங்கை மீதிருக்கிற அன்பு, திடீரென எழுந்த அந்த மிருக குணத்தை விரட்டியடித்திருந்தது..!! 'ச்சே. என்ன காரியம் செய்ய துணிந்துவிட்டோம்..' என்று தன்னைத்தானே கேவலமாக கடிந்துகொண்டவாறு..
"தாமிராஆஆஆ..!!!"
என்று பதிலுக்கு பாசமாக அழைத்தபடியே, தாமிராவின் கையை மீண்டும் இறுகப் பற்றிக்கொள்ள முயன்றாள்.. ஆனால்.. அது தாமதமான முயற்சியாக அமைந்துபோனது..!! ஆதிராவின் கணநேர செயல்பாடு தந்த அதிர்ச்சியில், வாழவேண்டும் என்கிற எண்ணமே தாமிராவுக்குள் இற்றுப்போயிருந்தது.. அக்கா தனது கையை மீண்டும் பற்றிக்கொள்ளும் முன்பே, இவள் அக்காவின் கையை பிடித்திருந்த பிடியை விடுவித்தாள்.. அப்படியே அந்தரத்தில் வீழ்ந்தாள்..!!
"தாமிராஆஆஆஆஆஆ..!!!" பதறிப்போன ஆதிரா பெரிதாக அலறினாள்.
கீழே வீழ்ந்த தாமிரா நீண்டதூரம் செல்லவில்லை.. மலைச்சரிவின் பக்கவாட்டில் வளர்ந்திருந்த அந்த மகிழம்பூ மரத்தின் மேற்பரப்பில் சென்று விழுந்தாள்.. மரத்தின் கிளைகளுக்குள் அவளது கை,கால்கள் எசகுபிசகாக சிக்கிக்கொள்ள.. அப்படியே அந்தரத்தில் அசைந்து கொண்டிருந்தாள்..!!
"தாமிராஆஆஆஆஆஆ..!!!" ஆவி துடித்து வீறிட்டாள் ஆதிரா.
"அக்காஆஆஆஆ..!!" பரிதாபக்குரல் எழுப்பினாள் தாமிரா.
"அக்காவை மன்னிச்சுடுடி.. அக்காவை மன்னிச்சுடு..!! ஏண்டி இப்படி பண்ணுன..??"
ஆதிரா பதற்றத்தில் பிதற்றிக்கொண்டே அல்லாடினாள்.. அவளது கைக்கெட்டும் தூரத்தை தாண்டிப் போயிருந்தாள் அவளது தங்கை.. ஆனால் எப்படியாவது அவளை காப்பாற்றிவிடவேண்டும் என்ற ஒரு புதுவித வேகம் ஆதிராவுக்குள் பிறந்திருந்தது..!! சுற்றி முற்றி பார்த்தாள்..!!
"இருடி வரேன்.. ஒருநிமிஷம்.. அந்த மரத்தை புடிச்சுக்க..!!"
அழுதவாறே ஆதிரா எழுந்து ஓடினாள்.. சிங்கமுக சிலைக்கு முன்புறம் கற்பாளங்களால் எழுப்பப்பட்ட அந்த மேடையின் அடிப்பாகத்தில் சுற்றப்பட்டிருந்தது ஒரு சிவப்புத்துணி.. அதை சரசரவென அவிழ்த்து எடுத்தாள்..!! மலை விளிம்பை அடைந்து.. அந்த துணியை அப்படியே சுருட்டி.. தங்கையின் பக்கமாக வீசினாள்..!!
"அந்த துணியை புடிச்சுட்டு மேல வாடி.. அக்கா டைட்டா புடிச்சுக்குறேன்..!!" கதறினாள் ஆதிரா.
"அக்காஆஆஆஆ..!!"
ஏமாற்றமும், சோகமும் நிறைந்த சப்தத்தை மட்டுமே தாமிரா எழுப்பினாள்.. 'என்னை இந்த மாதிரி பலிகொடுக்க துணிந்து விட்டாயே அக்கா' என்பது போல இருந்தது அந்த குரலின் தொனி.. வெறுத்துப்போன விரக்தி மனநிலையில் அவள் அப்போது இருந்தாள்..!! ஆதிரா வீசிய அந்தத்துணியை பற்றிக்கொள்ள சிறுமுயற்சி கூட எடுத்துக் கொள்ளவில்லை..!!
தங்கையின் செய்கையை பார்த்த ஆதிராவின் மனதை.. குற்ற உணர்ச்சி குத்தி குத்தி கிழித்துக் கொண்டிருந்தது..!!
"ப்ளீஸ்டி.. அந்த துணியை புடிச்சுக்கடி.. எப்படியாவது மேல வந்துருடி.. அக்காவை மன்னிச்சுடுடி தாமிரா..!!" ஆதிரா அழுது புலம்பிக்கொண்டிருக்க,
"அக்காஆஆஆஆ..!!" என்று தாமிரா பரிதாபமாக அழைத்துக்கொண்டே இருக்க,
மகிழம்பூ மரத்தின் கிளை இப்போது சரக்கென முறிந்தது.. கொத்தாக வளர்ந்திருந்த வாசனைப் பூக்களின் குவியலோடு.. குழலாற்றை நோக்கி ஆகாயத்தில் பயணம் செய்தாள் தாமிரா..!!
"தாமிராஆஆஆஆஆஆ..!!!"
உயிரே பறிபோவது போல அலறி துடித்தாள் ஆதிரா.. அந்த சிவப்பு துணி அவளது கையில் இருந்து விடுபட்டு காற்றில் பறந்தது.. அதேநேரம் அவள் ரவிக்கைக்குள் செருகி வைத்திருந்த செல்போனும் வெளியே நழுவியது..!! அந்த துணியும், செல்ஃபோனும் தாமிராவுடன் சேர்ந்து குழலாற்றுக்குள் வீழ்ந்தன..!! அங்குமிங்கும் பாறைகளில் முட்டி மோதி, செந்நிற குருதியை பீய்ச்சியடித்தவாறே.. இறுதியாக குழலாற்றில் சென்று நீரை கிழித்துக்கொண்டு வீழ்ந்தாள் தாமிரா..!! அவளைத் தொடர்ந்து சென்று வீழ்ந்தது அந்த செல்ஃபோன்..!! சிவப்புத்துணி மட்டும் காற்றில் அசைந்து அசைந்து மெல்ல மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது..!!
ஆதிராவுக்கு இதயத்துடிப்பே நின்று போனது மாதிரி இருந்தது.. சிறிது நேரம் எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே தரையில் வீழ்ந்து கிடந்தாள்..!! அவளது இமைகள் விரிந்துபோய் அப்படியே உறைந்திருந்தன.. சுவாசம் விடக்கூட மறந்துபோனவளாய் அசைவில்லாமல் கிடந்தாள்..!! தனது சுயநலத்தால் தங்கையை பலி கொடுத்துவிட்டோமே என்கிற குற்றஉணர்வு.. அவளது இதயத்தை சல்லடையாக கிழித்துக் கொண்டிருந்தது..!!
ஒருசில வினாடிகள்.. பிறகு என்ன நினைத்தாளோ.. பட்டென எழுந்து நின்றாள்..!! நடந்துமுடிந்த அமளிதுமளியில் அவளது கூந்தல் பிரிந்து முகமெல்லாம் வழிந்துகொண்டிருந்தது..!! தங்கையின் சாவுக்கு காரணமான தானும் இனிமேல் உயிருடன் இருக்கக்கூடாது என்பதுதான் அவளது எண்ணமாக இருக்கவேண்டும்..!! அதே மலைச்சரிவில் வீழ்ந்து உயிர்துறக்க முடிவு செய்தாள்..!! அந்த அதலபாதாள பள்ளத்தாக்கை ஒருமுறை வெறித்து பார்த்தாள்..!!
"ஆதிராம்மா.. வேணாம்.. நில்லு..!!"
சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்..!! கையிலிருந்த வெள்ளைநொச்சி இலைகளை தூக்கி எறிந்துவிட்டு.. இவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் வனக்கொடி..!! முகம் மறைக்கிற கூந்தல் கற்றைகளின் இடைவெளியில் அவளையே உற்றுப் பார்த்தாள் ஆதிரா.. 'உஸ்.. உஸ்..' என மூச்சிரைத்தாள்..!!
அந்த பள்ளத்தாக்குக்குள் விழுந்துவிடமேண்டும் என்று ஆதிரா பாய.. அதே நேரத்தில் வனக்கொடி ஓடிவந்து இவள் மீது பாய்ந்து, இறுகப்பற்றிக்கொள்ள.. இருவரும் பாதுகாப்பான ஒரு சமவெளியில் உருண்டார்கள்..!! தங்கை இறந்த அன்றே சாக இருந்த ஆதிராவை.. காப்பாற்றி உயிர்கொடுத்தது வனக்கொடிதான்..!!
நடந்து முடிந்ததெல்லாம் முழுவதுமாக நினைவுக்கு வர.. ஆதிரா அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தாள்.. லேப்டாப் திரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! 'தங்கையின் மறைவுக்கு யார் காரணம் யார் காரணம்' என்று தேடி களைத்துப்போனவள்.. இப்போது தான்தான் காரணம் என்கிற உண்மை உறைக்கவும்.. அப்படியே ஸ்தம்பித்துப்போய் உறைந்திருந்தாள்..!!
அகழி வந்ததிலிருந்து அவளுக்கு வந்த அந்த இரண்டு கனவுகளுக்கான அர்த்தம் இப்போது அவளுக்கு நன்றாக புரிந்தது..!! தனது ஆழ்மனதுக்குள் இருந்த உண்மையின் வெளிப்பாடாக அந்த கனவுகள் அவளுக்கு தோன்றிற்று..!! கனவில் தங்கைக்கு நெருக்கமாக இருந்த அந்த உருவத்தின் முகம் மெல்ல மெல்ல இப்போது அவளுக்கு தெளிவானது.. அது சிபியின் முகம்தான்..!! தாமிராவை அணைத்துக்கொண்டு சிரித்தது கனவில் வந்த சிபியின் உருவம்..!! தாமிரா மட்டும், 'அக்காஆஆஆஆ..!! அக்காஆஆஆஆ..!!' என்று ஈனஸ்வரத்தில் அழைத்துக் கொண்டிருந்தாள்.. அன்று அந்தரத்தில் தொங்கியவாறு அழைத்ததைப் போலவே..!!
தாமிரா இறந்துபோனதன் பிறகு நடந்த சில நிகழ்வுகளும்.. இப்போது சரசரவென ஆதிராவின் மனதுக்குள் ஃப்ளாஷ் அடித்தன..!!
"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!! அக்காகிட்ட வாடி.. ப்ளீஸ்டி..!!" விட்டத்தை நோக்கி கையை நீட்டியவாறு பிதற்றினாள் மனநிலை பிறழ்ந்த ஆதிரா.
"ஐயோ கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதிக்கிற..?? ஒரு பொண்ணை பறிச்சுக்கிட்ட.. இன்னொரு பொண்ணை இப்படி ஆக்கிட்டியே..??" தணிகைநம்பி அழுது புலம்பினார்.
"குறிஞ்சி மேல பழியை போட்றலாம் ஐயா.. நானே கண்ணால பாத்ததா சாட்சி சொல்றேன்..!! நம்ம புள்ள பாவம்.. ஏதோ தெரியாம பண்ணிருச்சு.. ஒரு புள்ளையைத்தான் பறிகுடுத்துட்டோம், இன்னொரு புள்ளையையாவது காப்பாத்திக்குவோம்..!! இந்த விஷயம் என்னை விட்டு வெளில போகாது.. நான் பெத்த புள்ளைகளுக்கு கூட சொல்ல மாட்டேன்.. இது சத்தியம்..!!" உறுதியாக சொன்னாள் வனக்கொடி.
"ஆதிராவை இங்க வச்சிருக்குறது நல்லது இல்ல தணிகா.. ஆளாளுக்கு ஏதாவது கேள்வி கேட்பாங்க..!! பேசாம மைசூர் கூட்டிட்டு போய்டு..!!" அறிவுரை சொன்னார் திரவியம்.
மைசூரில் ஒரு மனநல மருத்துவமனையில்.. தரையில் உருண்டு புரண்டு அழுது கொண்டிருந்தது அந்த குழந்தை..!!
"என் பொம்மை.. என் பொம்மை..!!" என்று வீறிட்டது.
"குடுத்துடும்மா.. பாவம்ல அந்த கொழந்தை..!!" கரடி பொம்மையை பிடுங்கி வைத்திருந்த ஆதிராவை கெஞ்சினாள் பூவள்ளி.
"ம்ஹூம்.. குடுக்க மாட்டேன் போ..!! இது என் தாமிரா.. கீழ விழப்போனாளா.. நான் ஓடிப்போய் புடிச்சுக்கிட்டேன்.. என் தங்கச்சியை நான் காப்பாத்திட்டேன்மா..!! என் தங்கச்சியை யார்கிட்டயும் குடுக்கமாட்டேன் போ..!!" பச்சைஉடை அணிந்திருந்த ஆதிரா குழந்தையை போல பேசினாள்.
"இப்போ நல்ல இம்ப்ரூவ்மன்ட் தெரியுது.. சீக்கிரமே முழுசா குணமாகிடுவாங்க.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!! நீங்க மட்டும் கொஞ்சம் கவனமா பாத்துக்கங்க.. போதும்..!!" மனநல மருத்துவர் ஒருவர் ஆதிராவை வீட்டுக்கு அனுப்பிவைக்கயில் சொன்னது.
"எதுக்கு உன்கிட்ட முகம் குடுத்து பேசணும்.. என் தாமிரா சாகுறதுக்கு காரணமா இருந்தவ நீ.. உன் மூஞ்சில முழிக்கிறதே பாவமா நெனைக்கிறேன்..!!" ஆதிராவிடம் வெறுப்பை உமிழ்ந்த சிபி, அன்றிரவே ஐந்தாவது முறையாக அவள் தற்கொலைக்கு முயற்சிக்க, அடுத்த நாள் ஹாஸ்பிட்டலில்,
"ஸாரி ஆதிரா.. இனிமே அப்படி உன்னை ஹர்ட் பண்ண மாட்டேன்.. என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்..!! இந்தமாதிரிலாம் இனிமே பண்ணாத..!!" என்று அவளது கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினான்.
"சிபியும் சம்மதம் சொல்லித்தான்மா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன்.. நீ அவன்மேல வச்சிருக்குற பாசத்தை அவன் புரிஞ்சுக்கிட்டான்மா..!! நடந்ததை எல்லாம் மறந்துட்டு புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பி..!!" ஆதிராவிடம் சொன்னார் தணிகைநம்பி.
"இதுலாம் இப்போவே வேணாம் ஆதிரா.. கொஞ்ச நாள் ஆகட்டும்.. நம்ம மனசு இதுக்கு செட் ஆகட்டும்.. வெயிட் பண்ணுவோம்.. சரியா..??" முதலிரவன்று சொன்ன சிபி, உடனே முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.
"யெஸ்..!! கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆகியும்.. இத்தனை நாளா இதை விட்டு வச்சுட்டோமேன்னு இப்போ ஃபீல் பண்றேன்..!!" ஒருமாதம் கழித்து கன்னத்தில் குழுவிழ சொன்னான்.
"அப்போ.. இன்னொன்னு..??" கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் தோளில் கைபோட, அதே நேரத்தில் 'படீர்ர்ர்ர்' என கார்க்கண்ணாடியில் வந்து மோதியது அந்த காகம்..!!
பழைய நினைவுகளில் மூழ்கி திளைத்தவாறு ஆதிரா அமர்ந்திருக்க.. அவளது செல்போன் இப்போது சப்தம் எழுப்பியது..!!
"க்க்க்க்கிர்ர்ர்ர்... க்க்க்க்கிர்ர்ர்ர்...!!"
ஆதிரா கவனம் சிதறி போனவளாய்.. அந்த செல்ஃபோன் மீது பார்வையை வீசினாள்..!! அழைப்பு வந்திருந்த மொபைல் நம்பரை பார்த்ததும்.. மீண்டும் ஒரு பதற்றத்துக்கு உள்ளானாள்..!! அகழி வந்ததிலிருந்து இரண்டுமுறை இவளுக்கு மர்மமான அழைப்பு வந்ததே.. அதே மொபைல் நம்பர்.. ஆதிராவின் பழைய மொபைல் நம்பர்..!! தாமிராவை காப்பாற்ற முனைகையில், அவளுடன் சேர்ந்து குழலாற்றில் வீழ்ந்ததே.. அந்த மொபைலின் நம்பர்தான்..!!
பதற்றமாக காலை பிக்கப் செய்து பேசினாள்..!!
"ஹலோ..!!"
".................................." அடுத்த முனையில் ஒரு நிசப்தம்.
"தா..தாமிராஆஆஆ...!!!" தடுமாற்றமாக அழைத்தாள் ஆதிரா.
"க்க்க்க்ர்ர்ர்ர்ர்... க்க்க்க்ர்ர்ர்ர்ர்... க்க்க்க்ர்ர்ர்ர்ர்... க்க்க்க்ர்ர்ர்ர்ர்...!!!!" - அந்தப்பக்கம் இப்போது ஒரு இரைச்சல்.
"தா..தாமிரா.. அக்காவை மன்னிச்சுடுடி..!!" ஆதிரா தழதழத்த குரலில் கெஞ்சினாள்.
".................................." மறுமுனையில் மீண்டும் ஒரு நிசப்தம்.
"தாமிரா.. தாமிரா..!! தாமிரா.. தாமிரா..!!"
ஆதிரா திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டிருக்க.. அடுத்த பக்கத்தில் இருந்து இப்போது அந்த வார்த்தைகள் தெளிவாக அவளது காதில் வந்து விழுந்தன..!!
"GGGGGame or SSSSShame..??"
அதைக்கேட்ட ஆதிரா அப்படியே விக்கித்துப் போனாள்.. விழிகளை விரித்து வைத்தவாறு ஒரு சில வினாடிகள் அப்படியே திகைத்துப்போய் அமர்ந்திருந்தாள்..!! இறந்துபோன தங்கையின் எண்ணம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆதிராவுக்கு தெளிவாக.. அவளது கண்களிலும் முணுக்கென்று கண்ணீர் பூத்துக்கொண்டு கன்னம் நனைத்து ஓட.. திக்கித்திணறி சொன்னாள்..!!
"Game..!!!!!"
No comments:
Post a Comment