ஆதிரா உச்சபட்சமானதொரு குழப்பத்தில் உழன்று தவித்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அகழி வந்ததிலிருந்தே நடந்த சில சம்பவங்கள் அவள் மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தன..!! இப்போது, அவளது கைபேசிக்கு வந்திட்ட மர்மமான அழைப்பு.. அவளது பழைய எண்ணிலிருந்து வருகிறது என்பதை அறிந்ததும்.. மனதில் ஏற்பட்டிருந்த அந்த கலக்க அதிர்வுகள் இன்னுமே வீரியமடைந்திருந்தன.. புத்திக்கு புலப்படாத ஒரு குழப்பச்சுழலுக்குள் சிக்கித் தவிப்பது போன்றொரு உணர்வு..!!
தனது பழைய கைபேசி எண்ணை ஆதிரா கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தாள்.. அதுவுமல்லாமல், அழைப்பு வந்த இரண்டுமுறையுமே அந்த எண்ணை சற்று கவனித்துப்பார்க்கவும் தவறியிருந்தாள்..!! அதனால்.. பார்த்ததுமே அவளுடைய பழைய எண் என்பது, சட்டென அவளுக்கு உறைக்கவில்லை..!!
இப்போது கதிர் சொன்னபிறகு.. அந்த எண்ணை ஓரிரு வினாடிகள் உற்று நோக்கியபிறகு.. ஒருவருடத்திற்கு முன்பு அவள் உபயோகித்த எண்தான் அது என்கிற உண்மை.. அவளது மூளையை பலமாக அறைந்தது..!! அந்த உண்மை புத்திக்கு புலப்பட்டதுமே.. அவளது தலைக்குள் கிர்ர்ர்ரென்று ஒரு குடைச்சல்.. மயக்கம் வரும்போல உடலில் ஒரு தடுமாற்றம்.. கண்களையும் முகத்தையும் ஒருமாதிரி சுருக்கிக் கொண்டாள்..!!
"எ..எப்படி கதிர் இது.. எ..என்னோட பழைய நம்பர்ல இருந்து.. எ..எனக்கு ஒன்னும் புரியல..!!"
"எனக்கும் எதுவும் புரியலைங்க ஆதிரா..!! கால் பண்ணினா 'நாட் இன் யூஸ்'ன்னு வேற வருது..!!"
"ம்ம்ம்ம்..!!"
"மைசூர் போனதுல இருந்தே இந்த புது நம்பர்தான் யூஸ் பண்றீங்களா..??"
"ஆமாம்..!!"
"உ..உங்களோட பழைய ஸிம்மை என்ன பண்ணுனிங்க..??"
"அ..அது.. என்னோட பழைய மொபைல் தொலைஞ்சு போனப்போ.. அந்த ஸிம்மும் சேர்ந்து தொலைஞ்சு போயிருக்கனும்..!!"
"ஓ..!! மொ..மொபைல் எப்படி தொலைஞ்சு போச்சு..??"
"தெ..தெரியலை கதிர்.. எனக்கு ஞாபகம் இல்ல.. ஒருவருஷமா நடந்த எதுவுமே எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல.. அந்த மொபைல் எப்படி தொலைஞ்சு போச்சுன்னு கூட மறந்துடுச்சு..!!" ஆதிரா அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், கதிர் அவளது இயலாமையை ஓரளவுக்கு புரிந்துகொண்டான்.
"ஒ..ஒருவேளை சிபிக்கு தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கா..?? அவர்ட்ட கேக்கலாமா..??"
"இ..இல்ல.. அவருக்கும் தெரியல.. அல்ரெடி நான் கேட்டுட்டேன்..!! 'தொலைஞ்சு போச்சு'ன்னு மட்டுந்தான் நான் அப்போ அவர்ட்ட சொல்லிருக்கேன்.. எப்படி தொலைஞ்சு போச்சுன்னு சொல்லலைன்னு சொன்னார்..!!"
"ம்ம்ம்ம்.. அந்த நம்பர்ல இருந்து எப்படி.. ஒரே கொழப்பமா இருக்கு ஆதிரா..!!"
"எ..எனக்குந்தான் கதிர்..!!"
குழம்பிய மனநிலையுடனே இருவரும் சிங்கமலையில் இருந்து புறப்பட்டார்கள்.. காரை நிறுத்தியிருந்த சாலையை அடையும் மலைச்சரிவில் இறங்கி, மெல்ல நடைபோட்டார்கள்..!! சுற்றிலும் பச்சைப் பசேலென, சூரிய வெளிச்சம் குறைவான பாதை..!! அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்கள்.. ஆங்காங்கே முளைத்த முட்புதர்கள்..!! அந்த முட்புதர்களை.. அனிச்சை செயலாய் கைகொண்டு விலக்கியவாறே.. ஆதிரா மலைச்சரிவில் இறங்கிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தில்.. அவ்வப்போது 'சுருக்.. சுருக்' என்று ஒரு வலி..!!
ஆதிராவின் சிந்தனையோட்டம் இப்போது வெகுவாக சிதைந்து போயிருந்தது.. மூளைக்குள் வெட்டிய குழப்ப மின்னல்களால், அவளது முகம் வெளிறிப்போய் கிடந்தது.. அவளுடைய கண்களில் இனம்புரியாத ஒரு பயமும், மிரட்சியும்..!! அங்கிருந்து அவள் வீட்டை சென்றடைகிற வரை.. ஆங்காங்கே அவ்வப்போது தோன்றி மறைந்த மாயபிம்பங்களும், மருட்சியான காட்சிகளுமே.. அவள் எந்த அளவிற்கு குழப்பக்கடலில் மூழ்கியிருக்கிறாள் என்பதற்கு சான்றுகள்..!!
ஆதிராவுக்கு பக்கவாட்டில்.. சற்று தூரத்தில்.. சிவப்பு அங்கி அணிந்த குறிஞ்சி.. இவளுக்கு இணையாக மலைச்சரிவில் இறங்கிக் கொண்டிருந்தாள்..!! மரங்களுக்கிடையே அவ்வப்போது மறைந்து மறைந்து.. பிறகு மீண்டும் 'சரக் சரக்'கென மின்னலாக தோன்றி..!! முகம் மறைக்கிற கூந்தல் மயிர்களின் வழியே.. ஒற்றைக்கண்ணால் இவளை வெறித்துப் பார்த்தபடி.. இவளுடனே மலைப்பாதையில் சேர்ந்து நடந்தாள்..!!
ஆதிராவின் செவிக்கருகே 'விஷ்ஷ்ஷ்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்..' என்று சப்தம்.. அவளது நாசிக்கருகே வினோதமான மகிழம்பூ வாசனை..!! இமைகள் தானாக செருக ஆரம்பிக்க, தலையை உதறிக் கொண்டாள்..!!
செல்கிற வழியில் செடி நட்டுக்கொண்டிருந்த மணிமாறன்.. இவள் அருகில் சென்றதும் தலையை நிமிர்த்தி சொன்னார்..!!
"ஐஞ்சு வருஷம் ஆச்சும்மா..!! போலீஸால இதுவரை ஒன்னும் புடுங்க முடியல..!!"
மரமொன்றுக்கு பின்னிருந்து.. மயிர்மண்டிய முகத்துடன் வெளிப்பட்ட மாந்திரிகவாதி.. இடுங்கிப்போன பார்வையுடன் இவளை கேட்டார்..!!
"உன் தங்கச்சி அந்த தகட்டை எடுத்ததுக்கு அப்புறந்தான் திரும்ப அந்த மாதிரி மர்மமான சம்பவங்கள் நடக்குது.. இதுக்கு என்ன விளக்கம் சொல்லப்போற ஆதிராக்கொழந்தை..??"
திடீரென ஆதிராவின் கால்களுக்கு அருகே அந்தக்காட்சி..!! தரையில் கிடந்து உருண்டவாறே.. தாரைதாரையாய் கண்ணீர் வடித்தவாறே.. பரிதாபமாய் புலம்பினாள் வனக்கொடி..!!
“நம்ம தாமிராவை என்னால காப்பாத்த முடியல.. இந்தப்பாவியால உன் தங்கச்சியை காப்பாத்த முடியல ஆதிராம்மா..!!"
கைகள் நிறைய சரளைக் கற்களுடன்.. ஆதிராவுக்கு பின்னால் தொடர்ந்து வந்த செம்பியன்.. கண்களில் ஒரு அதீத பயத்துடன் ரகசியக்குரலில் கிசுகிசுத்தார்..!!
"அந்த பூகிமேன்.. அப்டியே ஒரு மேஜிக் மாதிரி.. மனுஷங்களை தூக்கிட்டு போய்டுவான்..!!"
கதிரும் ஆதிராவும் காரில் ஏறி அமர்ந்தனர்.. கார்க்கதவை அறைந்து சாத்திய ஆதிரா, எதேச்சையாக பின்புறம் திரும்பினாள்..!! பின்சீட்டில் கைகளை விரித்துவைத்து கம்பீரமாக அமர்ந்திருந்தார் வில்லாளன்.. எகத்தாளமான குரலில் இவளிடம் கேட்டார்..!!
"அகழில இருக்குற ஒரு பயலுக்கும் அறிவுன்றதே கெடையாதா..??"
கார் சென்றுகொண்டிருக்கையிலேயே அவளது காலுக்கடியில் ஏதோ தட்டுப்பட்டது.. சீட்டுக்கடியில் இருந்து, அந்த குட்டிப்பெண் விருட்டென தலையை வெளியே நீட்டினாள்.. அகல்விழியின் தங்கை..!! வெளிறிப் போன முகமும், பயம் அப்பிய விழிகளுமாக மிரட்சியாக சொன்னாள்..!!
"அ..அக்காவை.. குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டா..!!"
காரோட்டிக்கொண்டிருந்த கதிர் திடீரென இவள்பக்கமாக திரும்பினான்.. வெறித்த பார்வையுடன், கியர் மாற்றிக்கொண்டே இறுக்கமாக சொன்னான்..!!
"இல்லைங்க.. குறிஞ்சிதான் காரணம்னு எனக்கு தோணல..!!"
வீட்டை அடைந்ததும் ஆதிரா காரில் இருந்து இறங்க.. பின்பக்க கதவை திறந்துகொண்டு கூடவே இறங்கினான் முகிலன்.. குரூரமாக முகத்தை வைத்துக்கொண்டு எச்சரித்தான் இவளை..!!
"அப்படியே கோழிக்குஞ்சை திருகுற மாதிரி அவ கழுத்தை திருகிப் போட்ருவேன்.. சொல்லி வையி..!!"
வாசலை அடைந்து படி ஏறுகையில்.. கையில் கிஃப்ட் பாக்ஸுடன் எதிர்ப்பட்டார் திரவியம்..!!
"ஹாஹா.. எனக்கு எல்ல்ல்ல்ல்லாம் தெரியும்மா..!!" என்று விஷமப் புன்னகையை சிந்தினார்.
வீட்டுக்குள் நுழைந்த ஆதிரா, அயர்ந்துபோய் தொப்பென்று சோபாவில் விழுந்தாள்.. அத்தனை நேரம் அவளை நெருக்கிய குழப்ப அழுத்தத்தில் இருந்து மீளமுடியாமல், அப்படியே கண்களை இறுக்கிக் கொண்டு கிடந்தாள்..!!
"என்னாச்சு ஆதிராம்மா..?? உடம்பு கிடம்பு சரியில்லையா..??" என்று கனிவாக கேட்ட வனக்கொடிக்கு கூட,
"ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்லமா.. லேசா தலைவலி..!!" என தடுமாற்றமாகவே பதில் சொன்னாள்.
"சாப்பாடு ரெடிமா..!! சாப்பிடுறியா..??"
"இ..இல்லம்மா.. கொஞ்ச நேரம் ஆகட்டும்..!!"
தனது கைபேசிக்கு வருகிற அந்த மர்மமான அழைப்பைப்பற்றி.. உடனடியாய் தனது கணவனிடம் தெரிவிக்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு.. ஊட்டியிலிருக்கும் அவனுக்கு கால் செய்து பேசிவிடலாமா என்று கூட ஒருகணம் நினைத்தாள்..!! பிறகு.. அலுவலக வேலை நிமித்தமாக சென்றிருக்கும் அவனுக்குள்.. தனது அழுத்தத்தை இட்டு நிரப்பவேண்டாமே என்று தோன்றவும்.. அந்த யோசனையை கைவிட்டாள்..!!
அன்றிரவு.. தான் குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சிபி..!! அவனுடைய வருகைக்காகத்தான் காத்திருந்த ஆதிரா.. அவன் வந்ததுமே ஓடோடிச்சென்று அந்த விஷயத்தை அவனுக்கு உரைத்தாள்.. அவனுடைய வார்த்தையை மீறி கதிருடன் சுற்றியதை மட்டும் தவிர்த்துவிட்டு, அந்த மர்ம அழைப்பைப்பற்றி மட்டும் சொன்னாள்..!!
மனைவி சொல்வதை கவனமாக கேட்டுக்கொண்டே வந்த சிபி.. கொஞ்சம் கொஞ்சமாய் முகம் மாறினான்.. திகைப்பும், குழப்பமும் கலந்துகட்டி வழிந்தது அவனது முகத்தில்..!! 'எப்படி இது சாத்தியம்?' என்பது போல நெற்றியைப்பற்றி பிசைந்துகொண்டான்.. எங்கேயோ ஒரு வெறித்த பார்வை பார்த்தான்..!!
குழப்பத்தில் தத்தளித்த கணவனிடம், ஆதிரா இப்போது கவலையாக கேட்டாள்..!!
"அந்த மொபைல் நம்பரை ட்ரேஸ் பண்ணனும் அத்தான்.. யாராவது அந்த நம்பரை யூஸ் பண்ணிட்டு இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கணும்.. முடியுமா..??"
"ம்ம்.. நாவரசு ஸார்ட்ட வேணா ஹெல்ப் கேட்டுப் பாக்கலாம் ஆதிரா..!! தமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மன்ட்ல அவருக்கு கொஞ்சம் இன்ஃப்ளூயன்ஸ் இருக்கு..!!"
"ஓ..!! அப்போ அவர்ட்ட பேசுறிங்களா..??"
"இ..இப்போவேவா..??"
"ம்ம்.. இப்போவேதான்..!!"
"அன்-டைமா இருக்கேன்னு பார்த்தேன்..!!"
"என்ன மேட்டர்னு எனக்கு உடனே தெரிஞ்சாகனும்.. ப்ளீஸ்த்தான்..!!!"
மனைவியின் கெஞ்சலில் இருந்து தப்பமுடியாமல்.. அவ்வளவாக விருப்பம் இல்லாமலேயே, அந்த அசௌகரியமான நேரத்தில் தனது முதலாளியை கைபேசியில் அழைத்தான் சிபி..!! விஷயத்தை சுருக்கமாக சொல்லி அவரது உதவியை கேட்டான்.. அவரும் உடனடியாய் செய்வதாக உறுதியளித்தார்..!!
இரவு உணவு அருந்தி முடித்து இருவரும் படுக்கையில் வீழ்ந்த சமயத்தில்.. சிபியின் செல்ஃபோன் அதிர்வுற்று 'க்க்க்ர்ர்ர்ர்ர்ர்... க்க்க்ர்ர்ர்ர்ர்ர்...' என்று ஓசையெழுப்பியது..!! அறைக்குள் சிக்னல் கிடைக்காமல் செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான் சிபி.. ஐந்து நிமிடங்கள் கழித்தே அறைக்கு மீண்டும் திரும்பினான்..!! அவனுக்காக காத்திருந்த ஆதிரா இப்போது ஆர்வமாக கேட்டாள்..!!
"யாருத்தான் ஃபோன்ல..??"
"நாவரசு ஸார்தான்..!!"
"ஓ..!! என்ன சொன்னாரு..??"
"நம்ம விஷயமா போலீஸ்ட்ட ஹெல்ப் கேட்ருக்காரு.. அவங்களும் இனிஷியலா சில இன்ஃபர்மேஷன்ஸ் குடுத்திருக்காங்க..!!"
"எ..என்ன அது..??"
"அந்த மொபைல் நம்பரோட லாஸ்ட் ஆக்டிவிட்டி அகழியைத்தான் பாயிண்ட் பண்ணுது ஆதிரா.. பட்.. ஒருவருஷத்துக்கு முன்னாடி..!! லாஸ்ட் ஒன் இயரா அந்த மொபைல் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆகித்தான் இருக்குதாம்.. யாருமே யூஸ் பண்ணலைன்னு சொல்லிருக்காங்க..!!" சிபி சொல்ல, ஆதிரா திகைப்பாக புருவத்தை நெறித்தாள்.
"அ..அப்புறம்.. அப்புறம் எப்படி என் மொபைல்க்கு அந்த நம்பர்ல இருந்து கால் வருது..??"
"ம்ம்.. நாவரசு ஸார் இது பத்தி அவங்கட்ட கேட்ருக்காரு.. அவங்களும் டீடெயிலா ட்ரேஸ் பண்ணனும்னு சொல்லி, இன்னும் ரெண்டு நாள் டைம் கேட்ருக்காங்க..!!"
"ஓ..!!"
"ஸோ.. ரெண்டு நாள் வெயிட் பண்ணலாம் ஆதிரா.. என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்..!! இப்போதைக்கு இதை ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம்.. சரியா..??" சிபி அவ்வாறு அமர்த்தலாக சொல்ல,
"ம்ம்.. சரித்தான்..!!" ஆதிரா திருப்தியில்லாமலே தலையசைத்தாள்.
அன்றிரவு கணவனுடன் உறவில் ஈடுபட்ட போதிலும்.. ஆதிராவால் கவனத்துடன் ஈடுபட முடியவில்லை..!! உறவு தந்த களைப்பு உடலில் நிறைந்திருந்தபோதிலும்.. உறக்கம் வராமல் நீண்ட நேரம் நெளிந்துகொண்டு கிடந்தாள்..!! ஏதேதோ குழப்ப நினைவுகள்.. என்னென்னவோ சீரற்ற சிந்தனைகள்.. அவஸ்தையாக அப்படியும் இப்படியும் புரண்டுபுரண்டு படுத்தாள்..!! ஒருமணிக்கு அப்புறம் ஒருவழியாக கண்கள் அயர்ந்தபோதுதான்.. அவளுக்கு அந்த கனவு வந்தது.. நிஜத்தில் நடப்பதுபோல் அவள் மனக்கண்ணில் அந்தக்காட்சி..!!
அடர்ந்து இருண்ட காடு அது.. அந்தி சாய்கிற சமயம் அது..!! சுற்றுச்சூழலில் எக்கச்சக்கமாய் மாலைநேரத்து பனிப்பொழிவு.. காற்றில் மிதக்கிற பனித்துகள்கள் கூட கண்களுக்கு தெளிவாக புலப்பட்டன..!!
அகன்ற அடிப்புறம் கொண்ட மரமொன்றில்.. எட்டு வயது ஆதிரா நெற்றியை சாய்த்திருந்தாள்..!! அவளது கண்கள் ஒரு சிவப்புநிற துணியால் கட்டப்பட்டிருந்தன.. அவளுடைய உதடுகள் அந்தப்பாடலை உச்சரித்தன.. அவள் உச்சரித்த அந்த வார்த்தைகள் அவளுக்கே தெளிவில்லாமல்தான் காதில்வந்து விழுந்தன..!!
"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!!"
ஆறு வயது தாமிரா பச்சரிசிப்பற்கள் பளபளக்க சிரித்தவாறே.. அக்காவின் முதுகை தொட்டுவிட்டு ஓட்டமெடுத்தாள்..!! தரையில் முளைத்திருந்த புல்வெளியில்.. தனது தளிர்ப்பாதங்களை பதித்து பதித்து.. ஸ்லோமோஷனில் தூரமாக ஓடிக்கொண்டே இருந்தாள்..!! மரத்தின் பக்கமாக திரும்பி நின்றிருந்த ஆதிராவோ.. தொலைதூரம் தங்கை செல்வதை அறியாமல்.. தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தாள்..!!
"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு..
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா..!!"
தலைதிருப்பிய ஆதிரா இப்போது தங்கையை தேட ஆரம்பித்தாள்..!! கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்க.. காற்றில் பறக்கிற பனித்துகள்களுக்குள்.. கைவிரல்களை அசைத்து அசைத்து தேடினாள்..!! விரித்துவைத்த கைகளுடன்.. அங்குமிங்கும் நகர்ந்து தங்கையை தேடியவாறே.. அந்தப்பாடலை விடாமல் மழலைக்குரலில் பாடினாள்..!!
"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"
நீண்ட நேரமாக தாமிரா தட்டுப்படவில்லை.. அலைந்து அலைந்து ஆதிராவின் கைவிரல்கள் அயர்ச்சி கண்டதுதான் மிச்சம்..!! நேரம் ஆக ஆக.. அவளது நெஞ்சுக்குழிக்குள் பயம் கொப்பளிக்க ஆரம்பித்தது.. தங்கை என்ன ஆனாளோ என்கிற பயம்..!!
கண்களை கட்டியிருந்த துணியை.. படக்கென அவிழ்த்து கையிலெடுத்தாள் ஆதிரா..!! அத்துவான காட்டுக்குள்.. ஒத்தையாய் நின்று.. சத்தம்போட்டு கத்தினாள்..!!
"தாமிராஆஆஆஆ..!!!!!"
தங்கை சென்றிருக்க வாய்ப்பிருக்கிற திசையென.. உத்தேசமாய் ஒருதிசையை முடிவு செய்துகொண்டு.. அந்தத்திசையிலேயே தொண்டைகிழிய அலறிக்கொண்டு ஓடினாள்..!!
"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"
ஆதிராவின் கையிலிருந்த சிவப்புத்துணி இப்போது காற்றில் படபடத்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் அந்தத்துணியின் அகலமும், நீளமும் பெரிதாகி.. குறிஞ்சியின் அங்கியாக பிரம்மாண்ட உருவெடுத்தது.. காற்றில் சுழன்றடித்து ஆதிராவை அப்படியே சுருட்டிக்கொள்ள முயன்றது..!!
"ஆஆஆஆ..!!"
பதறியடித்து அலறிய ஆதிரா.. உடலை முறுக்கி அந்தத்துணியை உதறினாள்.. தரையில் விழுந்து கடகடவென உருண்டாள்.. 'தஸ்புஸ்' என் மூச்சிரைத்தாள்..!! அதே நேரம்..
"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..
ஹாஹாஹாஹாஹாஹா..!!!!!"
காட்டு மரங்களுக்கு இடையே தாமிராவின் குரல் சிரிப்புடன் எதிரொலித்தது..!! தரையில் இருந்து எழுந்தாள் ஆதிரா.. தலையைத் திருப்பி, அந்த அங்கியை மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. தங்கையின் குரல் வந்த திசையிலே ஓடினாள்..!!
அடர்ந்த வனத்துக்குள் ஓடிக்களைத்த ஆதிராவுக்கு.. இப்போது அந்த சிங்கமுக சிலை காட்சியளித்தது.. அதன் பக்கவாட்டிலேயே இருண்டுபோன அந்த குகை..!! அந்த குகைக்குள் இருந்துதான் தாமிராவின் குழந்தைக்குரல் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது..!!
"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"
சிறுமி ஆதிரா இப்போது சற்றே நிதானித்தாள்.. அவளது மார்பு மட்டும் 'படக், படக்' என அடித்துக்கொண்டுதான் கிடந்தது..!! அதீத பயம் அப்பிய விழிகளுடனே.. அந்த குகையை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!!
"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"
சன்னமான குரலில் தங்கையை அழைத்துக் கொண்டே நகர்ந்தாள்.. குகை வாசலில் வந்து கைகள் விரித்து நின்றாள்..!! குகைக்குள் ஒரே கும்மிருட்டு.. உள்ளிருக்கும் எதுவுமே கண்ணிரண்டுக்கும் புலப்படவில்லை..!! இருட்டுக்குள் இருந்து அந்தப்பாடல் மட்டும் கிசுகிசுப்பாக ஒலித்தது..!!
"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"
குட்டி ஆதிரா இப்போது அந்தக்குகைக்குள் நுழைந்தாள்.. ஒவ்வொரு அடியாக நகர்ந்து இருளுக்குள் முன்னேறினாள்..!! அவளது நெஞ்சுக்குழி பயத்தில் பதறியடித்துக் கொண்டிருந்தாலும்.. தங்கையை எப்படியாவது மீட்டுவிடவேண்டும் என்று அவளுக்குள் ஒரு தீவிரம்..!!
"நீ என்னை கண்டுபிடிக்கலைன்னா.. அப்புறம் நான் தொலைஞ்சு போயிடுவேனே..??" - திடீரென காதுக்குள் ஒலித்த தாமிராவின் குரல்.
இருட்டுக்குள் கைகளை அலையவிட்டவாறே.. அடிமேல் அடிஎடுத்து வைத்து மெல்ல மெல்ல உள்நடந்தாள்.. அவ்வப்போது ரகசிய குரலில் தங்கையை அழைத்தாள்..!!
"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"
குகைக்குள் இப்போது திடீரென ஒரு வெளிச்சக்கீற்று.. சுற்றிலும் அடர்இருள் ஆக்ரமித்திருக்க ஓரிடத்தில் மட்டும் சரக்கென ஒரு வெளிச்சம்.. அவ்விடத்தில் யாரோ ஒரு பெண்ணின் முகம்.. யாரென்று இங்கிருந்து தெளிவாக தெரியவில்லை..!! ஆதிரா அந்தப்பெண்ணை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!!
"தாமிராஆஆ..!!"
ஆதிரா அருகில் நெருங்க நெருங்க.. அந்தப்பெண்ணின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவானது..!! தாமிராதான் அது..!!! குட்டிப்பெண்ணாய் அக்காவின் முதுகுதொட்டு காட்டுக்குள் ஓடியவள்.. இப்போது கன்னிப்பெண்ணாய் இவள் கண்களுக்கு காட்சியளித்தாள்..!! தங்கையைப் பார்த்த மகிழ்ச்சியில்.. 'தாமிரா' என்று கத்திக்கொண்டே.. எட்டுவயது ஆதிரா உற்சாகமாக அவளை நோக்கி ஓடினாள்..!! ஆனால்.. தாமிராவோ எந்தவித சலனமும் இல்லாமல் மிரட்சியாக இவளையே பார்த்தாள்.. இமைகளை அகலமாக திறந்து வைத்திருந்தவள்..
"அக்காஆஆ..!!" என்று ஈனஸ்வரத்தில் முனுமுனுத்தாள்..!!
ஆதிரா எதுவும் புரியாமல் தங்கையையே பார்த்துக் கொண்டிருக்க.. இப்போது தாமிராவின் முதுகுப்புறம் இருந்து அந்த உருவம் வெளிப்பட்டது..!! அடையாளம் காணமுடியாத மாதிரி.. தெளிவில்லாத மசமசப்பான உருவம்..!! அந்த உருவத்தை பார்த்ததும் ஆதிராவின் இருதயத்தில் பக்கென்று ஒரு பயம்.. கத்தவேண்டும் போலிருந்தது.. கத்தவும் செய்தாள்.. சத்தம்தான் வெளியே வரவில்லை..!!
தாமிரா மட்டும் தொடர்ந்து பரிதாபமாக அக்காவை அழைத்துக் கொண்டே இருந்தாள்..!!
"அக்காஆஆ..!! அக்காஆஆ..!!"
ஆதிரா இப்போது ஒருகையை உயர்த்தி.. நடுங்குகிற விரல்களை விரித்து.. மெல்ல மெல்ல அசைத்து.. தங்கையை அணைத்திருந்த அந்த உருவத்தை தொட முயன்றாள்..!! அவளுடைய விரல்களுக்குள் எதுவும் சிக்கவில்லை..!!
"அக்காஆஆ..!!"
ஆதிரா இப்போது இமைகளை விரித்து விரித்து.. விழிகளை கசக்கி கசக்கி.. மிகவும் கஷ்டப்பட்டு அந்த உருவத்தின் முகம்காண முயன்றாள்..!! எவ்வளவு முயன்றும் அந்தமுகத்தை இவளால் தெளிவாக பார்க்க முடியவில்லை.. இறுதிவரை மசமசப்பாகவே இருந்தது..!!
அந்த உருவத்தின் முகத்தை பார்த்துவிடுகிற முயற்சியில்.. தலையை இப்படியும் அப்படியுமாய் அவஸ்தையாக அசைத்த ஆதிரா.. விருட்டென படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்..!!
கனவு கலைந்து போயிருந்தது.. அவளது இதயம் மட்டும் இன்னும் பதறியடித்துக் கொண்டிருந்தது.. கண்களில் இன்னும் அந்த பயம் நிரம்பி வழிந்தது.. மார்புப்பந்துகள் குபுக் குபுக்கென மேலும் கீழும் ஏறியிறங்கின.. 'புஸ்ஸ்..புஸ்ஸ்' என மூச்சிரைப்பு..!! கண்டது கனவுதான் என்று உணர்ந்தபிறகு.. அந்த மூச்சிரைப்பு மெல்ல மெல்ல நிம்மதிப் பெருமூச்சானது..!! அன்று பார்த்த அந்த சிங்கமலை குகை.. அந்த 'கண்ணாமூச்சி ரே ரே' என்ற வார்த்தைகள்.. குறிஞ்சி பற்றிய குழப்பமான தகவல்கள்.. அவள் அணிந்து வருவதாக சொல்லப்படுகிற அங்கி.. இவையெல்லாம் கலந்துகட்டித்தான் அந்த கனவை உருவாக்கியிருக்கின்றன என்று ஆதிராவுக்கு தோன்றியது..!!
தண்ணீர் ஜாடியை எட்டி எடுத்தாள்.. 'கடக் கடக்'கென தொண்டைக்குள் நீரை சரித்துக் கொண்டாள்..!! மீண்டும் தொப்பென படுக்கையில் விழுந்தாள்.. அருகில் கிடந்த கணவனின் மீது காலை தூக்கிப் போட்டு, அவனது மார்போடு அண்டிக்கொண்டாள்.. ஒரு குழந்தையைப்போல அவனை நெருக்கியடித்து படுத்துக் கொண்டாள்..!! இவளது அதீத இறுக்கமான அணைப்பு.. சிபியின் உறக்கத்தை சற்றே கலைத்தது..!! இமைகளை மெல்ல பிரித்தவன்..
"எ..என்னாச்சு ஆதிரா..??" என்று கேட்டான்.
"ஒ..ஒன்னுல்லத்தான்.. ஒரு கெட்ட கனவு..!!" ஆதிரா தடுமாற்றமாக சொன்னாள்.
"என்ன கனவு..??"
தனக்கு வந்த கனவை, ஆதிரா கணவனுக்கு சுருக்கமாக சொன்னாள்..!! குறிஞ்சி, தாமிரா பற்றிய கனவு என்று தெரிந்ததும்.. சிபி மனதுக்குள் சற்று எரிச்சலானான்..!! ஆனால்.. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்.. மனைவியை ஆறுதல் படுத்தவே முயன்றான்..!!
"ஏன் ஆதிரா இப்படி பண்ற..?? கண்டதையும் நெனச்சுக்கிட்டு..?? இப்பப்பாரு.. நிம்மதியா தூங்கக்கூட கஷ்டப்படுற..??"
"நான் என்னத்தான் பண்ணுவேன்..?? எனக்கு அதே நெனைப்பா இருக்கு..!!" ஆதிரா அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், சிபி இப்போது அவளை பாவமாக பார்த்தான்.
"சரி விடு.. தூங்கலாம் வா..!! காலைல திருவிழா.. சீக்கிரம் வேற எந்திரிக்கனும்..!!"
"ம்ம்.. ஆமாம்..!!"
"வா.. நெஞ்சுல சாஞ்சுக்கோ.. தட்டிக் குடுக்குறேன்.. நிம்மதியா தூங்கு..!!"
"ம்ம்..!!"
சிபி படுக்கையில் சரிந்துகொள்ள.. ஆதிரா அவனது மார்பில் படர்ந்துகொண்டாள்..!! மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்ட சிபி.. அவளது வெற்று முதுகை பிசைந்து, இதமாக தடவிக் கொடுத்தான்.. அவளுடைய நெற்றியில் ஈரமாக 'இச்' பதித்தான்..!!
"மனசைப் போட்டு கொழப்பிக்காத ஆதிரா..!! இன்னும் ரெண்டு நாள்.. எதைப்பத்தியும் யோசிக்காம, ஜஸ்ட் திருவிழாவை மட்டும் செலிப்ரெட் பண்ணு..!! ரெண்டு நாள் முடிஞ்சதும்.. இந்த ஊரை காலிபண்ற வழியை பார்ப்போம்..!! புரியுதா..??"
"பு..புரியுதுத்தான்..!!"
"ம்ம்.. இப்போ சமத்தா தூங்கு..!! செல்லம்ல.. குட்டிப்புள்ளல..??"
ஒரு குழந்தையை உறங்க வைப்பதுபோல, கணவன் தனது முதுகை சுகமாக தட்டிக்கொடுக்க.. மூளையை ஆக்கிரமித்திருந்த குழப்ப நினைவுகளில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு.. அவனது மார்பிலேயே நிம்மதியாக உறங்கிப் போனாள் ஆதிரா..!!
அவள் உறங்குகிறவரை தானும் இமைமூடி படுத்திருந்த சிபி.. அவள் உறங்கிவிட்டாள் என்று உறுதியானபிறகு.. மெல்ல மெல்ல விழிகளை திறந்தான்..!! மனைவியின் உறக்கம் கலைக்காமல் அவளை மெத்தைக்கு மாற்றிவிட்டு.. இவன் படுக்கையில் இருந்து எழுந்துகொண்டான்.. அருகில் கிடந்த நாற்காலியில் மெல்ல அமர்ந்துகொண்டான்..!! இரவுவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த மனைவியின் முகத்தையே.. சலனமில்லாமல், கூர்மையாக, ஒரு வெறித்த பார்வை பார்த்தான்..!!
No comments:
Post a Comment