ஆதிராவின் மூளைக்குள் ஒரு அதகள பிரளயமே நடந்துகொண்டிருந்தது.. அதிர்ச்சியை தாங்கமுடியாமல் அவளது இதயம் அப்படியே ஸ்தம்பித்து போயிருந்தது..!! காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை அவள்.. அந்த பசிக்கு வராத மயக்கம், தலைச்சுற்றல் எல்லாம், இந்த படங்களைப் பார்த்தபோது அவளுக்கு வந்து சேர்ந்தது.. கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலிருக்க, தலையை இரண்டு கைகளாலும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள்..!!
அந்த ஃபோல்டர் முழுவதிலும் சிபியே நிறைந்து வழிந்திருந்தான்.. அவனோடு அருகில் இழைந்துகொண்டு பாதிப்படங்களில் தாமிராவும்..!! அத்தனை படங்களிலுமே அவர்களைத்தவிர இன்னொருவர் முகத்தை காணமுடியவில்லை..!! ஒன்று.. சிபி மட்டும் கன்னத்தில் குழிவிழ சிரிக்கிற தனிப்படங்களாக இருந்தன.. இல்லாவிட்டால்.. அவனும் தாமிராவும் அருகருகே நிற்கிறமாதிரி, க்ரூப் ஃபோட்டோக்களில் இருந்து கத்தரித்து எடுக்கப்பட்ட படங்களாக இருந்தன..!! குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது.. மற்றவர்களுக்கு எந்த உறுத்தலும் வராத மாதிரி.. வெகுஇயல்பாக நகர்ந்து சிபியை அண்டிக்கொண்டு நின்றிருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது..!!
அவற்றில் பெரும்பாலான படங்களை ஆதிரா ஏற்கனவே பார்த்திருக்கிறாள்.. ஆனால் இப்போது.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்.. பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டிருக்கிற ஒரு ப்ரைவேட் ஃபோல்டருக்குள்.. அதுவும் மற்றவர்களை கத்தரித்து நீக்கப்பட்ட நிலையில் பார்க்கும்போது.. அந்தப்படங்கள் ஆதிராவுக்குள் ஏற்படுத்திய தாக்கம் வேறுமாதிரியாக இருந்தது.. சிபி மீது தாமிரா கொண்டிருந்த கண்மூடித்தனமான ரகசியக்காதலை, வெளிச்சம் போட்டு காட்டுகிற வகையில் அமைந்திருந்தது..!!
அதிர்ச்சியில் விரிந்த விழிகளும், பதற்றத்தில் படபடக்கும் இருதயமுமாக.. ஆதிரா அந்தப்படங்களை பார்த்தாள்..!! ஒவ்வொன்றாக அவற்றை பார்க்க பார்க்க.. அவளுக்குள் உச்சந்தலையில் யாரோ சுளீர்சுளீரென உளியடிப்பது போலொரு உணர்வு.. அவளது மூளை நரம்புகள் எல்லாம் அரவக்குஞ்சுகளாய் சரசரவென நெளிவது மாதிரியொரு தோற்றம்.. அவளுடைய சிந்தனையோட்டத்தில் அவ்வப்போது பளீர்பளீரென குழப்ப மின்னல்கள் வேறு..!!
மைசூர் அரண்மனைக்கு முன்பாக சிபியும், தாமிராவும் சிரிக்கிற அந்த புகைப்படத்தை பார்க்க நேர்ந்ததும்.. ஆதிராவின் மூளைக்குள் பரவியிருந்த உஷ்ணத்தின் வெப்பநிலை இன்னுமே அதிகரித்தது..!! மறந்து போயிருந்த ஒரு சம்பவத்தை அவளது ஞாபகஅடுக்குகள் தூசுதட்டி புதுப்பிக்க.. அவளுடைய மண்டையோட்டுக்குள் குடைச்சல் எடுக்க ஆரம்பித்தது..!! அந்த உணர்வு உண்டாக்கிய வலியை தாங்கமுடியாமல்.. ஆதிரா அப்படியே இமைகளை சுருக்கிக் கொண்டாள்.. நெற்றியின் இருபுறமும் கைவிரல்களால் அழுத்திக் கொண்டாள்.. பற்களை கடித்து இறுக்கமாக நெரித்துக் கொண்டாள்..!!
ஆதிராவின் மூளை அவளது கட்டுப்பாட்டுக்குள் இல்லை.. அவளுக்குள் உருவான வேதனையை பொருட்படுத்தாமல், அந்த மைசூர் புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை, மங்கிப்போயிருந்த ஞாபக செல்களில் இருந்து மன்றாடி மீட்டெடுத்தது..!! உடனே.. அந்த சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளும், அடுக்கடுக்காய் அவளது நினைவடுக்குக்குகளின் இடுக்கிலிருந்து படக்படக்கென மேலெழுந்தன..!!
"ஹாஹா.. ஒன்னும் பயப்படாத.. உன் புருஷனை ஒன்னும் நான் வளைச்சுப்போட்ற மாட்டேன்..!!" - கேலிச்சிரிப்புடன் தாமிரா.
"ச்சீ.. நீயெல்லாம் ஒரு தங்கச்சியாடி..??" - ஆவேசமான குரலில் ஆதிரா.
"அக்காஆஆஆ..!!!" - இதயத்தை பிசைவது மாதிரி தாமிராவின் பரிதாபக்குரல்.
ஒரு ஒழுங்கில்லாமல் அங்குமிங்குமாய் துண்டுதுண்டாய் தோன்றிய ஞாபகப்பிசிறுகள்.. பிறகு சரசரவென முழுவடிவம் எடுத்து.. அதனதன் வரிசையில் சென்று கச்சிதமாய் பொருந்திக்கொள்ள.. நடந்தவை மொத்தமும் இப்போது ஆதிராவின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்தன..!!
ஒரு வருடத்திற்கு முன்பு..!! குறிஞ்சி பற்றிய ஆராய்ச்சி தொடர்பாக, சிபியின் முதலாளியை சந்தித்து உதவி கேட்பதற்கென, தாமிரா மைசூர் பயணிக்க இருந்ததற்கு முதல்நாள்..!! அகழிவீட்டில் ஆதிராவும் தாமிராவும் பகிர்ந்துகொண்டிருந்த, இரவில் ஒன்றாக படுத்துறங்குகிற அறை..!!
"அக்காஆஆஆஆ..!!!!"
உற்சாகமாக கத்திக்கொண்டே.. 'படார்ர்ர்ர்...' என்று கதவை தள்ளிக்கொண்டு புயலென அறைக்குள் நுழைந்தாள் தாமிரா..!! நழுவியிருந்த மாராப்புடன், இடுப்புப்பகுதி புடவைமடிப்பை இயல்பாக சரி செய்துகொண்டிருந்த ஆதிரா.. சப்தத்திற்கு பதறிப்போனவளாய் முந்தானையை அள்ளி அவசரமாக அவளது மார்புகளை மூடிக்கொண்டாள்..!!
"ஏய்ய்ய்ய்ய்ய்..!!!!! லூசாடி நீ..?? கதவை தட்டிட்டு வரணும்னு அறிவில்ல..?? பிசாசு..!!" என்று தங்கையிடம் சீறினாள்.
"ம்க்கும்..!! போதும் போதும்.. நீ பொத்திப் பொத்தி வச்சதுலாம்..!! எல்லாத்தையும் தெறந்து காட்டுறதுக்கு நேரம் வந்துருச்சுடி யக்கோவ்..!!" தாமிராவின் குரலில் கேலி.
"எ..என்னடி சொல்ற..??"
"ம்ம்ம்..?? இந்த கூச்சத்தைலாம் கூடப் பொறந்தவளோட மட்டும் வச்சுக்க, கட்டுன புருஷன்கிட்ட வெக்கப்படாம வெவரமா நடந்துக்கன்னு சொல்றேன்..!!" அக்காவின் கன்னத்தைப் பிடித்தவாறு கொஞ்சலாக சொன்ன தாமிரா,
"பொண்ணுக.. வெக்கப்படுற மாதிரி நடிக்க மட்டுந்தான் செய்யணும்.. வெக்கப்படக்கூடாது.. வேலைல கரெக்ட்ட்ட்டா இருக்கணும்..!!" என்றுவிட்டு கண்ணடித்தாள்.
"ஐய்யே.. ச்சீய்...!! வெவஸ்தையே கெடையாதுடி உனக்கு.. அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டு..!!"
"ஓஹோ.. அசிங்கமா இது..?? இருக்கட்டும் இருக்கட்டும்.. இன்னும் அஞ்சாறு மாசத்துல வயித்தை தள்ளிக்கிட்டு வந்து நிப்பல.. அப்ப வச்சுக்குறேன் உன்னை..!!"
"எ..என்னது அஞ்சாறு மாசத்துல..??"
"ஆமாம்.. அடுத்த மாசம் கல்யாணம்னா.. அஞ்சு மாசத்துக்குள்ள இந்த ஏரியா உனக்கு பெருசாயிடாது..??" அக்காவின் வயிறை சுட்டிக்காட்டி தாமிரா சொல்ல, ஆதிராவிடம் இப்போது ஒருவித எரிச்சல்.
"லூசு மாதிரி ஏதாவது உளறாதடி..!!"
"நான் ஒன்னும் உளறல.. உனக்குத்தான் இன்னும் புரியல..!!"
"எனக்கு என்ன புரியல..??"
"காலைல நம்ம வீட்டுக்கு ஜோசியர் வந்தாரே.. எதுக்குன்னு நெனைக்கிற..??"
"எதுக்கு..??"
"உன் கல்யாணத்துக்கு நாள் குறிக்க..!!"
"என்னடி சொல்ற..??"
"ஆமாக்கா.. உண்மையைத்தான் சொல்லிட்டு இருக்குறேன்..!! நாம நெனச்ச மாதிரியேதான்.. அப்பா மனசுலயும் அத்தானைத்தான் முடிவு பண்ணிருந்திருக்காரு..!! அடுத்த மாசம் அத்தானுக்கும் உனக்கும் கல்யாணம்.. வந்த ஜோசியர் நாள்கூட குறிச்சு குடுத்துட்டு போயிட்டாரு..!!"
அத்தனை நேரம் தாமிரா சொன்னதையெல்லாம் வழக்கமான கிண்டல் என்றே நினைத்திருந்த ஆதிராவுக்கு.. இப்போதுதான் அவளது வார்த்தைகளில் இருந்த தீவிரம் மெல்ல மெல்ல உறைத்தது..!! உடனே அவளுடைய உள்ளத்துக்குள் ஒருவித ஆனந்த பூரிப்பு.. அவளது கட்டுப்பாடு இல்லாமலே அவளுடைய முகம் மெல்ல மெல்ல ஒரு மலர்ச்சிக்கு போனது..!! காதால் கேட்பதை நம்பமுடியாமல், ஒருவித இனிமையான அதிர்ச்சியில், அவளது வார்த்தைகளில் மட்டும் லேசான தடுமாற்றம்..!!
"நெ..நெஜமா.. நெஜமாத்தான் சொல்றியா தாமிரா..??"
"ஆமாண்டி ஆமாம்..!! அம்மா, அப்பா, திரவியம் அங்கிள்லாம் பேசிட்டு இருந்தாங்க.. அதை ஒட்டுக் கேட்டுட்டு வந்துதான் உன்கிட்ட சொல்றேன்..!!"
"எ..என்னால.. எனக்கு நம்பவே முடியலடி..!!"
"ப்ச்.. இன்னுமா நீ நம்பல.. இதைவிட நான் என்ன சொல்.." ஜன்னல் பக்கமாக எதேச்சையாக பார்த்த தாமிரா, பேசியதை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு,
"இரு.. வர்றேன்..!!"
என்று அறைக்கு வெளியே ஓடினாள்.. ஐந்தாறு நொடிகளிலேயே மீண்டும் அறைக்குள் நுழைந்தாள்.. அவளுடன் இப்போது திரவியமும்..!! அந்தப்பக்கமாக கடந்து சென்றுகொண்டிருந்த அவரது கையை பிடித்து, அறைக்குள் இழுத்து வந்தாள்..!!
"வாங்க அங்கிள்.. உள்ள வாங்க.."
"ஹாஹா.. என்னம்மா இது..?? எங்க இழுத்துட்டுப்போற என்னை.??"
"வாங்க அங்கிள்.. வந்து இவகிட்ட சொல்லுங்க.. நம்ப மாட்டேன்றா..!!"
"என்ன சொல்லணும்..??"
"உள்ள நீங்க அப்பாட்ட பேசிட்டு இருந்திங்கல்ல.. அதைப்பத்தி சொல்லுங்க..!!"
"ஹாஹா.. ஆதிராவோட கல்யாண விஷயமா..??"
"ஆமாம்..!! நான் சொன்னா நம்ப மாட்டேன்றா.. நீங்க சொல்லுங்க..!!" தாமிரா அவ்வாறு சொன்னதும், திரவியம் இப்போது ஆதிராவின் பக்கமாக திரும்பினார்.
"ஹ்ஹ்ம்ம்ம்..!! உன் தங்கச்சி சொல்றது உண்மைதான்மா.. உன் கல்யாணம் விஷயமாத்தான் பேசிட்டு இருந்தோம்..!! உனக்கும் சிபிக்கும் அடுத்த மாசமே முடிச்சிறலாம்னு முடிவு பண்ணிருக்கோம்..!!" என்றவர்,
"என்னம்மா.. கரெக்டா சொல்லிட்டனா..??" என்று தாமிராவிடம் கேட்டார்.
"பெர்ஃபக்ட் அங்கிள்..!!" விரல்களை மடக்கி கண்களை சிமிட்டி சொன்னாள் தாமிரா.
"ஹாஹாஹாஹா..!! ம்ம்ம்.. கல்யாணத்தை நாலு மாசம் கழிச்சு வச்சுக்கலாம்னுதான் இருந்தோம்..!! ஜோசியர்தான்.. 'அடுத்த மாசத்துலயே முடிச்சுட்டா நல்லது, இல்லைன்னா ஒரு வருஷம் தள்ளிப் போகும்'னு சொன்னாரு.. யோசிச்சு பாத்து நாங்களும் சரின்னுட்டோம்..!!"
"ஓ..!!"
"உனக்கு சம்மதந்தானம்மா ஆதிரா..??"
அன்பும் அக்கறையுமாக திரவியம் கேட்ட கேள்விக்கு, ஆனந்த அதிர்ச்சியும், அடங்காத வெட்கமுமாக, ஆதிரா பதில் சொல்லமுடியாமல் உறைந்துபோய் நின்றிருந்தாள்.. தாமிராவே கேலியான குரலில் அவருக்கு பதில் சொன்னாள்..!!
"ம்க்கும்.. நல்ல கேட்டிங்க போங்க..!! அவளே எப்போ எப்போன்னு இருக்குறா.. நீங்க வேற..!!"
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" தாமிரா சொன்னதை கேட்டு, திரவியம் பெரிதாக சிரித்தார்.
"ஏய்.. லூசு..!!!! சும்மா இருடி..!!!!" ஆதிரா தங்கையை முறைத்தாள்.
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"
அவளது கோபம் திரவியத்தின் சிரிப்பை இன்னுமே அதிகமாக்கியது..!! இப்போது திரவியத்திடம் திரும்பிய ஆதிரா, திடீரென பூத்துக்கொண்ட ஒரு வெட்கத்துடன் தடுமாற்றமாக கேட்டாள்..!!
"அ..அவரு.. அவர்ட்ட கேட்டாச்சா அங்கிள்..??"
"சிபிட்டயா..??"
"ம்ம்..!!"
"அவன்ட்ட இன்னும் பேசலம்மா.. செல்ஃபோன் ரீச் ஆகல.. அவன் ஆபீஸ்க்குத்தான் ஃபோன் பண்ணி கேட்டோம்.. மடிக்கேரி ஃபாரஸ்ட்க்குள்ள இருக்கானாம்.. நாளைக்கு காலைலதான் மைசூர் வர்றதா சொன்னாங்க..!! உன் அப்பாவும் நாளைக்கே அவன்ட்ட பேசிடுறதா சொல்லிட்டு இருந்தான்..!!"
"ஓ..!!"
"ஹாஹா.. அதெல்லாம் நெனைச்சு ஏன்மா கவலைப்படுற..?? சிபி என்ன வேணாம்னா சொல்லப்போறன்..?? சின்ன வயசுல இருந்தே அவனை தூக்கி வளர்த்தது உன் அப்பன்.. மாமா மேல அவனுக்கும் அவ்வளவு மரியாதை.. மாமா பொண்ணு வேற நல்லா மகாலட்சுமி மாதிரி இருக்க.. கட்டிக்க கசக்குதா என்ன அவனுக்கு..?? ஹாஹாஹாஹா..!!" கேட்டுவிட்டு திரவியம் சிரிக்க, ஆதிரா நாணத்தில் முகம் சிவந்து போனாள்.
"ஹையோ.. போங்க அங்கிள்..!!"
"ஹாஹாஹாஹா..!!"
"அப்படி சொல்லுங்க அங்கிள்.. என் அக்காவை கட்டிக்க அத்தான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!" தாமிரா பெருமிதமாக சொல்லியவாறே ஆதிராவின் தோளில் கைபோட்டு அணைத்துக்கொள்ள, அவளோ தங்கையை இப்போது ஒரு ஸ்நேஹப் பார்வை பார்த்தாள்.
அதன்பிறகு தணிகைநம்பியும், பூவள்ளியும்.. ஆதிராவிடம் தங்களது முடிவைப்பற்றி முறைப்படி தெரிவித்தனர்.. அவளது சம்மதத்தை கேட்டனர்.. அவளும் திரவியத்திடம் சிந்திய அதே வெட்கப்புன்னகையுடன், தலையசைத்து தனது ஒப்புதலை உணர்த்தினாள்..!!
அன்று முழுவதுமே.. ஆதிராவுக்கு நடக்கிற உணர்வென்பது சிறிதளவும் இல்லை.. அந்தரத்தில் மிதப்பது போலவே அங்குமிங்கும் அலைந்து திரிந்தாள்.. அப்படியொரு சந்தோஷ ஊற்று அவளது உள்ளத்துக்குள் சிதறியடித்துக் கொண்டிருந்தது..!! சிறுவயதில் இருந்தே அவளது மனதுக்குள் வளர்த்துக்கொண்ட ஆசை அது.. அத்தானை மணந்து அவனுக்கு மனைவியாகிவிட வேண்டும் என்பது..!! எண்ணம்போலவே திருமணவாழ்வு அமையப்போவதில்.. எல்லையில்லா ஆனந்தக்கடலில் மூழ்கித்திளைத்தாள்..!!
அன்று இரவு..
அகழி ரயில் நிலையம்.. மைசூருக்கு செல்கிற அந்த ரயில் புறப்பட தயாரான நிலையில் இருந்தது.. யானையின் பிளிறல் போல ஒருமுறை சப்தம் எழுப்பி ஓய்ந்தது..!! பாட்டிலில் தண்ணீர் நிரப்பிவிட்டு அவசரமாக திரும்பிய ஆதிரா.. எதிர்ப்பட்ட செம்பியன் மீது எதிர்பாராதவிதமாய் முட்டிக் கொண்டாள்..!!
"ஸாரி அங்கிள்..!!"
"ஹாஹா.. பரவாலம்மா..!! ஆமாம்.. என்ன இந்தப்பக்கம்.. ?? ஊருக்கு எங்கயும் போறியா..??"
"நான் இல்ல அங்கிள்.. தாமிரா போறா.. நான் சும்மா வழியனுப்ப வந்தேன்..!!"
"ஓ.. சரி சரி..!! அப்பா, அம்மால்லாம் நல்லா இருக்காங்களா..??"
"ம்ம்.. நல்லா இருக்காங்க அங்கிள்..!!"
"சரிம்மா.. சீக்கிரம் போய் தண்ணியைக் குடு.. வண்டி இப்போ கெளம்பிடும்..!!"
சொல்லிவிட்டு செம்பியன் நகர, ஆதிரா ரயிலை நோக்கி ஓடினாள்.. ஜன்னலோரமாய் அமர்ந்திருந்த தங்கையிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்..!! அதை வாங்கிக்கொண்ட தாமிரா, மூடி திறந்து தொண்டையை கொஞ்சம் நனைத்துக் கொண்டாள்.. பாட்டிலை மூடி பேகின் பக்கவாட்டில் செருகியவள், ஈரப்பட்ட உதடுகளை துப்பட்டாவால் துடைத்துக்கொள்ள.. ஆதிரா இப்போது அவளிடம் இயல்பாக கேட்டாள்..!!
"காலைல எப்போடி ரீச் ஆகும்..??"
"அஞ்சு அஞ்சரைக்குலாம் போயிருவான்னு நெனைக்கிறேன்..!!"
"அத்தான் வெளியூர்ல இருக்குறதா சொன்னாங்க.. அதுக்குள்ள வந்துடுவாரா..??"
"வந்துடுவேன்னாரு, ஸ்டேஷன் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு.. பாக்கலாம்..!!"
"ஹ்ம்ம்.. எனக்கு இன்னுமே அவர் என்ன சொல்வாரோன்னு இருக்குடி..!!"
"எதுக்கு..?? கல்யாணத்துக்கா..??"
"ம்ம்ம்..!!!"
ஆதிரா சற்று கவலையாக சொல்ல, அக்காவின் முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள் தாமிரா.. பிறகு, உதட்டில் ஒரு புன்னகையை தவழவிட்டவாறே சொன்னாள்..!!
"ஒன்னு பண்ணலாமா..??"
"என்ன..??"
"காலைல நான் மைசூர் போனதும்.. உனக்கு கால் பண்றேன்.. நீயே டைரக்டா அத்தான்ட்ட பேசுறியா..??"
"ஏய்ய்ய்..!!! எ..என்ன வெளையாடுறியா..?? ம்ஹூம்.. அ..அதுலாம் ஒன்னும் வேணாம்..!!"
"ப்ச்.. ஏன்டி இப்படி வெக்கப்படுற..?? சும்மா பேசு.. 'நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு பேசிக்கிறாங்க.. எனக்கு சம்மதம்.. என்னை கட்டிக்க உங்களுக்கு சம்மதமா..'ன்னு கேளு..!! அப்படியே.. சின்ன வயசுல இருந்து அவர்ட்ட சொல்லணும் சொல்லணும்னு நெனச்சுட்டு இருக்கியே.. அதையும் சொல்லிடு..!!"
"எதை..??"
"ம்ம்..?? ஐ லவ் யூ அத்தா.........ன்..!!!" தாமிரா விழிகளை சுழற்றி, குரலை இழுத்து கிண்டலாக சொல்ல, ஆதிராவின் முகத்தில் இன்ஸ்டன்டாய் ஒரு வெட்கச்சிவப்பு.
"ச்சீய்.. போடி லூசு..!!"
"யாரு..?? நானா..?? ஹ்ம்ம்ம்.. இப்பவும் சொல்லலனா வேற எப்ப சொல்லப்போறியாம்..?? டைரக்டா ஃபர்ஸ்ட் நைட்ல போய், ஐ லவ் யூ சொல்லிக்கலாம்னு அம்மணிக்கு ஐடியாவோ..??"
"ஹையோ.. போடி எனக்கு வெக்கமா இருக்கு.. அப்டிலாம் அவர்ட்ட சொல்ல முடியாது..!!"
"சரி போ.. நான் சொல்லிக்கிறேன்..!!"
"ஏய்ய்ய்ய்..!!"
"ப்ச்.. ஐ லவ் யூ இல்லடி.. கல்யாண மேட்டரை சொல்றேன்னு சொன்னேன்..!! மேட்டரை சொல்லி.. அவர் மனசை தெரிஞ்சுக்கிட்டு.. உடனே உனக்கு கால் பண்ணி சொல்றேன்.. போதுமா..??"
"இ..இல்ல தாமிரா.. வேணாம்..!! அப்பா சொன்னது ஞாபம் இல்லையா.. அப்பாவே அவர்ட்ட பேசட்டும்.. அதுதான் சரியா இருக்கும்.. நீ வாயை மூடிக்கிட்டு கம்முனு இரு..!! புரியுதா..??"
"ம்ம்..!!"
தாமிரா அமைதியாக அமோதித்துக் கொண்டிருக்கும்போதே, ரயில் பெரிதாக ஒரு அலறலை வெளிப்படுத்தியது.. அதைத்தொடர்ந்து தனது சக்கரக்கால்களால் தண்டவாளத்தில் மெல்ல ஊர்ந்தது..!!
"பார்த்து பத்திரமா போடி..!!!"
"சரிக்கா..!!"
ரயில் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து.. அவ்வப்போது 'க்கீய்ங்ங்ங்க்.. க்கீய்ங்ங்ங்க்..' என்று கத்தியவாறே.. தண்டவாளத்தில் தடதடவென ஓட ஆரம்பித்தது..!! கண்ணிலிருந்து தங்கையின் முகம் மறையும்வரை.. கையசைத்தவாறே நின்றிருந்தாள் ஆதிரா..!!
தாமிராவை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவள், தனது அறைக்குள் சென்று தனிமையில் அடைந்துகொண்டாள்.. கட்டிலில் விழுந்து கல்யாணக் கனவுகளில் மூழ்கிப் போனாள்..!! கண்களின் பார்வை மொத்தமும் அந்தரத்தில் சஞ்சரிக்க.. கைவிரல்களோ கழுத்துச் சங்கிலியை அனிச்சையாக பற்றியிழுக்க.. கவனம் முழுதையும் கற்பனைக்குள் தொலைத்துவிட்டு, காதல் நாயகனுடன் கல்யாணக் கனவு..!!
செய்தி கேள்விப்பட்டு அகழி வந்திருந்த சிபி, மற்றவர்கள் அறியாமல் ஆதிராவை காதல் பார்வை பார்த்தான்.. இவளை சுவற்றோடு சாய்த்து பிடித்து வைத்திருந்தவன், 'நீ சொல்லலனா என்ன.. நான் சொல்றேன்..!! ஐ லவ் யூ ஆதிரா..!!' என்று இவளது காதோரமாய் கிசுகிசுத்தான்..!! கழுத்தில் தாலியை கட்டிவிட்டு, இவளுடைய இடுப்புச்சதையை இழுத்தான்.. மணமேடை வலம் வருகையில் விரல்களை அழுத்தி நெரித்தான்.. ஆசீர்வாதத்திற்கென காலில் விழுகையில், அவன்மட்டும் பக்கவாட்டில் திரும்பி இவளைப்பார்த்து கண்சிமிட்டினான்..!!
கையிலிருந்த பாலை வாங்கிக்கொண்டு, கட்டிலில் அமர வைத்தான்.. பால் மீது ஆர்வமில்லாமல், பார்வையால் இவளது அழகை அருந்தினான்..!! உதட்டோடு உதட்டினை வைத்து ஈரமாய் கொஞ்சம் உரசினான்.. உடையினை கையால் பற்றி மெல்லமாய் சற்று நெகிழ்த்தினான்.. கட்டிலில் சாய்த்து மேலே கவிழ்ந்தான்.. கழுத்துப்பகுதியில் அனல்மூச்சோடு மோதினான்..!!
ஆதிரா அன்று இரவு முழுவதும் உறங்கவே இல்லை.. விடியும்வரை இதே ரீதியிலான கனவு.. விழிகளை விரித்து வைத்தவாறே கண்டிட்ட கனவு..!!
அதேஇரவில்.. ரயிலில் பயணித்த தாமிராவும் அக்காவைப் போலவே உறக்கத்தை தொலைத்திருந்தாள்.. ஆதிரா கற்பனையில் திளைத்துக் கொண்டிருந்தாள் என்றால், தாமிரா கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்..!! ரயில் படுக்கையில் குப்புறப்படுதிருந்தவள், குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.. அவள் எழுப்பிய அழுகையோசை ரயிலின் தடதட சப்தத்துக்குள் காணாமல்போய், அடுத்தவர் காதுகளுக்கு எட்டாமலே காற்றில் கலந்திற்று..!!
நள்ளிரவு தாண்டிய சமயத்தில் பாத்ரூம் சென்று.. முகத்தில் நீர் தெளித்து அலம்பிக்கொண்டு.. கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை, தானே பரிதாபமாக பார்த்தவாறு நெடுநேரம் நின்றிருந்தாள் தாமிரா..!!
அக்காவைப் போலவே அவளுக்கும் அத்தான் மீது சிறு வயதில் இருந்தே ஒரு ஈர்ப்பு.. அவள் வளர வளர அந்த ஈர்ப்பும் அவளுடன் வளர்ந்து, கன்னிப்பெண் ஆகையில் காதலென அசுர வடிவம் எடுத்து நின்றிருந்தது..!! உள்ளத்தில் இருந்த காதலை உடன்பிறப்புடன் பகிர்ந்துகொள்வதில் ஆதிரா சற்றே முந்திக்கொள்ள.. உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்கிற ஒரு நிலைக்கு தாமிரா தள்ளப்பட்டிருந்தாள்.. அக்கா மீது அவள் வைத்திருந்த அளவிலா அன்புதான் அவளை அவ்வாறு செய்ய வைத்திருந்தது..!!
ஆசைப்படுகிற ஒரு மனதைத்தான் ஆண்டவன் ஆதிராவுக்கு கொடுத்திருந்தான்.. தாமிராவின் மனதையோ அன்பையும், தியாகத்தையும் குழைத்து வார்த்தெடுத்திருந்தான்..!! குழந்தையாய் இருந்த சமயத்தில் இருந்தே.. அக்கா ஆசைப்பட்டதை எல்லாம் அவளது அறிவுக்கு எட்டாத வகையிலேயே விட்டுக் கொடுப்பதுதான் தாமிராவின் இயல்பு.. காதல் விஷயத்திலும் அவ்வாறே நடந்துகொள்ள நினைத்தாள்..!!
தானும் சிபியை காதலிப்பதை அக்காவிடம் சொல்லி.. அவளது மனதில் சிறு சஞ்சலம் வருவதைக்கூட தாமிரா விரும்பவில்லை..!! அதுவுமல்லாமல்.. ஆதிராவுக்குத்தான் சிபியை மணமுடிக்க வேண்டும் என்று, அவளது பெற்றோர்களுடைய மனதில் இருந்த எண்ணமும் அவளுக்கு அரசல் புரசலாக தெரியவர.. ‘அக்கா நிஜமாகவே அதிர்ஷ்டக்காரி’ என்று நினைத்து, ஆதிராவுக்காக மிகவும் சந்தோஷப்பட்டாள்.. அதேநேரம், அவளது மனதிலும் ஒரு இனம்புரியாத விரக்தி..!!
அக்காவின் மனம்போலவே மணவாழ்வு அமையப்போவதில்.. தாமிராவுக்கும் எல்லையில்லா ஆனந்தம்தான்..!! ஆனால்.. சிபி மீது தான் வைத்திருந்த ஆசையும், காதலும்.. தனது மனதுக்குள்ளேயே புதைந்து மரணிக்கப் போகிறதே என்பதை எண்ணும்போது.. அவளது கண்களில் பொங்கிய கண்ணீரையும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..!! எப்போதும்போலவே இப்போதும் தனிமையில் அழுது தீர்த்தாள்.. இந்தமுறை, தண்டவாளத்தில் தடதடக்கிற ரயிலுக்குள்..!!
தங்கையின் மனதினைப் பற்றியோ, அந்த மனதுக்குள் உறைந்திருந்த காதலைப் பற்றியோ, ஆதிரா அப்போதெல்லாம் அறிந்ததில்லை.. அதேபோல தங்கையின் மைசூர் பயணத்தின்போது நடந்தவையும் ஆரம்பத்தில் அவளுக்கு தெரியாது..!!
வாக்களித்தபடியே மைசூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்திருந்தான் சிபி.. அழுதசுவடு சிறிதளவும் வெளியே தெரியாதவண்ணம், அவனுடன் இயல்பாக சிரித்துப் பேசினாள் தாமிரா..!! இருவரும் முதலில் சிபியின் வீட்டுக்கு சென்றார்கள்.. குளித்து முடித்துவிட்டு அவனது அலுவலகத்துக்கு சென்றார்கள்.. அவனுடைய முதலாளியை சந்தித்துப்பேசி உதவி கோரினார்கள்..!! தாமிராவின் பேச்சு அவருக்கு பிடித்துப்போக, உதவி செய்வதாய் அவரும் உறுதியளித்தார்.. அந்த சந்தோஷத்திலேயே, சிபியும் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு, அலுவலகத்திலிருந்து தாமிராவுடனே கிளம்பினான்..!! மீதியிருக்கிற நாளை ஊர் சுற்றி கழிப்பதாக திட்டம்..!!
அக்காவின் அறிவுரைக்கு மதிப்பு கொடுத்து, கல்யாண விஷயத்தை பற்றி தாமிரா சிபியிடம் வாயைத் திறக்கவில்லை.. ஆனால், எந்த நேரமும் அப்பாவின் அழைப்பு அத்தானின் கைபேசிக்கு வரலாம் என்று எதிர்பார்த்துத்தான் காத்திருந்தாள்..!! சிபியோ இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாமல்.. இயல்பாக தாமிராவுடன் எல்லா இடங்களுக்கும் சுற்றித் திரிந்தான்.. அவன் முகத்தில் மட்டும் எப்போதும் இருக்கிற அந்த கன்னத்துக்குழி புன்னகை..!!
அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள், முதலில் மைசூர் அரண்மனை சென்று சுற்றிப்பார்த்து, சிறிது நேரம் செலவிட்டார்கள்.. அந்த புகைப்படமும் அப்போதுதான் எடுத்துக் கொண்டார்கள்.. இருவரும் சற்றே நெருக்கமாக, ஒருவரது புஜம் அடுத்தவரது புஜத்தை அழுத்துகிற மாதிரி..!!
மைசூர் அரண்மனைக்கு எதிரே இருக்கிற ஒரு அசைவ உணவகத்திலேயே, மதிய உணவை முடித்துக்கொள்ள நினைத்து உள்ளே புகுந்தனர்.. காலியாய் இருந்த டேபிளில் அமரச்சென்ற தாமிராவைத் தடுத்த சிபி,
"இங்க வேணாம் தாமிரா.. உள்ள போயிறலாம்..!!"
என்றவாறு உணவகத்துக்குள் இன்னும் உட்புறமாக அழைத்து சென்றான்..!! சற்று தள்ளியிருந்த ஏ/ஸி அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள்.. உள்ளே மிகவும் சொற்பமானவர்களே அமர்ந்திருக்க, இவர்கள் ஓரமாக கிடந்த மேஜையொன்றில் எதிரெதிரே அமர்ந்துகொண்டார்கள்..!!
தாமிராவின் அபிப்ராயத்தை தெரிந்துகொண்டு சில அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்தான் சிபி.. அவையெல்லாம் டேபிளுக்கு வந்து சேர்கிற நேர இடைவெளியில், இயல்பாகத்தான் அந்தப்பேச்சை ஆரம்பித்தான்..!!
"ஹேய் தாமிரா.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்..!!" என்று புன்னகையுடன் சொன்னான்.
"எ..என்ன..??"
"I have a gift for you..!!"
"Woww.. really..??" தாமிரா தனது முட்டைக்கண்களை முழுதாக திறந்தவாறு கேட்டாள்.
"yesss..!!!"
"என்ன கிஃப்ட்.. என்ன கிஃப்ட்..?? காட்டுங்க.. எனக்கு உடனே பாக்கணும்..!!"
"ஹாஹா.. இரு.. அவசரப்படாத..!!"
சிரிப்பை சிந்தியவாறே, அத்தனை நேரம் ஒளித்து வைத்திருந்த அந்த சிறிய பரிசுப்பெட்டியை வெளியே எடுத்தான் சிபி.. அதை தாமிராவிடம் நீட்ட முனையும்போதே, அவனுடைய செல்ஃபோன் சப்தம் எழுப்பியது.. பரிசுப்பெட்டியை கைக்குள் வைத்தவாறே, சட்டைப்பைக்குள் இருந்து செல்ஃபோனை வெளியே எடுத்து பார்த்தான்..!!
"ஹேய் ஒரு நிமிஷம்.. மாமா கூப்பிடுறார்..!!" என்றவன் காலை பிக்கப் செய்து பேச ஆரம்பித்தான்..!!
அப்பா எதற்காக அழைக்கிறார் என்கிற விஷயம் புரிந்த தாமிரா, அமைதியாக அத்தானின் முகத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!! செல்ஃபோனில் பேச ஆரம்பித்த சிபி நிறைய 'ம்ம்' கொட்டினான்.. பேசப்பேச அவனுடைய முகத்தில் அத்தனை நேரம் இருந்த உற்சாகம் மெல்ல மெல்ல குறைவதை தாமிராவால் உணர முடிந்தது.. எதுவும் புரியாமல் அவனையே குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!
"ஒ..ஒரு நிமிஷம் மாமா.. நா..நான் இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப கூப்பிடவா..??"
தயக்கமாக சொன்ன சிபி, அழைப்பை பட்டென துண்டித்தான்.. எதிரே அமர்ந்திருந்த தாமிராவை, ஏறிட்டு வெறுமையாக பார்த்தான்..!! அவன் முகத்தில் தெரிந்த திகைப்பும் தவிப்பும், தாமிராவை இன்னும் அதிகமாகவே குழம்பியது..!!
"எ..என்னத்தான்.. என்னாச்சு..?? அப்பா என்ன சொன்னாரு..??"
"ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல தாமிரா..!!" சிபியின் குரலில் ஒரு புது தடுமாற்றம்.
"அப்புறம் ஏன் ஒருமாதிரி ஆய்ட்டிங்க..??"
"இ..இல்லையே..!!"
"இல்ல.. உங்க முகமே சரியில்ல..!! அப்பா என்ன சொன்னார்ன்னு சொல்லுங்க..!!"
"அ..அது.. அது வந்து.."
"ம்ம்..??"
"ஆ..ஆதிராவுக்கும்.. ஆதிராவுக்கும் எனக்கும் கல்யாணம் பண்றதா.."
"வாவ்..!!! நல்ல விஷயம்தான.. அதுக்கு ஏன் ஷாக்காகிட்டிங்க..??" தாமிரா போலி சந்தோஷத்துடன் குதூகலித்தாள்.
"அ..அதுக்கு இல்ல.. ஆனா.."
"என்ன ஆனா..??"
"ஒ..ஒன்னும் இல்ல..!!"
தளர்வாக சொல்லிவிட்டு சிபி அமைதியாகிப் போனான்.. தாமிரா ஓரிரு வினாடிகள் அவனது முகத்தையே கூர்மையாக பார்த்தாள்.. அந்த முகத்தில் தெரிந்த உணர்வுகளில் இருந்து அவளால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை..!! ஒரு சில வினாடிகள்.. பிறகு..
"ஹ்ம்ம்.. சரி விடுங்க..!! அது இருக்கட்டும்.. எனக்கு என்ன திடீர்னு கிஃப்ட்லாம்..??"
என்று தாமிரா இயல்பாக கேட்டுக்கொண்டே, சிபியின் கையிலிருந்த அந்த பரிசுப்பெட்டியை பறித்தாள்.. உள்ளே என்ன இருக்கிறதென்று ஆர்வமாக பிரித்து பார்த்தாள்..!!
உள்ளே.. அந்த தங்க மோதிரம்.. இரண்டு இதயங்கள் ஒன்றோடொன்று பிண்ணியிருப்பது மாதிரியான வேலைப்பாட்டுடன்..!! காதல் பரிசாக கொடுப்பதற்கு கச்சிதமான மோதிரம் என்பது.. பார்த்ததுமே பளிச்சென்று புரிந்தது..!!
தாமிரா அதை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!! நெஞ்சுக்குள் ஒருவித அதிர்ச்சி அலைகள் 'விர்ர்ர்.. விர்ர்ர்ர்..' என்று வீறிட்டு கிளம்ப.. முகம் முழுவதிலும் பரவிப்படர்ந்த ஒரு திகைப்போடு.. சிபியை மெல்ல மெல்ல ஏறிட்டு பார்த்தாள்..!! அவனோ சோர்ந்து போனவனாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.. இவள் அவனை பார்க்கவும், இப்போது உலர்ந்துபோன குரலில் சொன்னான்..!!
" ஐ.. ஐ லவ் யூ தாமிரா..!!"
காதில் வந்து விழுந்த வார்த்தைகளில் தாமிரா அப்படியே ஆடிப்போனாள்.. அவளது மனதுக்குள் அப்படியொரு உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..!! தனது மனதில் இருப்பவன் தன்னைத்தான் காதலிக்கிறான் என்பதற்காக சந்தோஷப்படுவதா.. அல்லது.. அக்காவுக்கு மட்டும் இது தெரியவந்தால், அவள் எப்படி துடித்துப்போவாள் என்றெண்ணி துக்கப்படுவதா..?? எந்தமாதிரியான உணர்வை வெளிப்படுத்துவது என்றுகூட புரியாமல் விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள் தாமிரா..!!
அழுகை வரும்போல் இருந்தது அவளுக்கு.. கண்களில் ஒருதுளி கண்ணீர் முணுக்கென்று எட்டிப் பார்த்தது.. அதை சிபி பார்ப்பதற்கு முன்பே அவசரமாக துடைத்துக்கொண்டவள், கையிலிருந்த பரிசுப்பெட்டியை டேபிளில் விசிறினாள்.. விருட்டென இருக்கையில் இருந்து எழுந்தாள்.. விடுவிடுவென அறைக்கதவை நோக்கி நடந்தாள்..!!
"தாமிரா.. தாமிரா நில்லு..!!"
பின்னாலிருந்து சிபி கத்துவதை அவள் பொருட்படுத்தவில்லை.. வேகமாய் நடந்து அந்த உணவகத்தை விட்டு வெளியேறினாள்.. சாலையில் வந்த ஒரு ஆட்டோவை கைநீட்டி நிறுத்தி ஏறிக்கொண்டாள்..!!
"எல்லிம்மா..??" ஆட்டோ ட்ரைவர் கேட்டதற்கு, ஓரிரு வினாடிகள் திகைத்தாள்.. பிறகு..
"ஃபிலோமினா சர்ச்..!!"
என்று மைசூரில் தனக்கு தெரிந்த ஒரு இடத்தை சொன்னாள்..!! சொல்லிவிட்டு.. ஆட்டோ பின்சீட்டில் தலைசாய்த்து, கண்ணீர் சிந்தி கன்னத்தை நனைக்க ஆரம்பித்தாள்..!!
சர்ச் என்று சொன்னது நல்லதாய் போயிற்று.. தாமிராவால் உள்ளே சென்று மனம்விட்டு அழ முடிந்தது..!! பார்ப்பவர்களில் சிலர் பாவமன்னிப்பு கேட்கிறாள் என்று நினைத்துக் கொண்டார்கள்.. 'உறவினர் எவருக்காவது உடல்நலம் சரியில்லையாய் இருக்கும்' என்று சிலர் உச்சுக்கொட்டினர்..!! அரைமணிநேரம்.. அழுது தீர்த்திருந்தாள் தாமிரா.. அதற்குள் இருபது மிஸ்ட் கால் அவளது செல்ஃபோனுக்கு வந்திருந்தது.. சிபியிடம் இருந்து..!!
"வீட்டுக்கு வர்றேன் அத்தான்.. வந்து பேசிக்கலாம்..!!"
சிபியை செல்ஃபோனில் அழைத்து பேசிவிட்டு, சர்ச்சில் இருந்து கிளம்பினாள் தாமிரா..!!
மனதில் ஒரு முடிவுடன்தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.. தனது காதலால் அக்காவின் சந்தோஷத்துக்கு எந்த பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அந்த முடிவு..!! 'தனக்கு சிபி மீது காதல் இல்லை.. தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை..' என்று உறுதியாக அவனிடம் தெரிவித்தாள்..!! தணிகைநம்பிக்கு கால் செய்து, ஆதிராவுடனான திருமணத்துக்கு அவனது சம்மதத்தை தெரிவிக்குமாறு வற்புறுத்தினாள்..!! அவளது உறுதியான பேச்சில் சிபி சற்றே தளர்ந்து போயிருந்தான்..!!
"ப்ளீஸ் தாமிரா.. நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ..!! நா..நான்.. நான் என் லைஃபை உன் கூட வாழணும்னு ஆசைப்படுறேன்.. ஆதிராவை விட நீதான் எனக்கு பொருத்தமானவளா இருப்பேன்னு நெனைக்கிறேன்..!! உன்னை நான் நல்லா பாத்துப்பேன் தாமிரா.. உனக்கு ஒரு நல்ல புருஷனா நடந்துப்பேன்..!!"
"ஹையோ.. அதுலலாம் எனக்கு சந்தேகம் இல்லத்தான்.. நீங்க நல்லவரு.. நல்லா பாத்துப்பிங்க.. எனக்கு தெரியும்..!!"
"அப்புறம் என்ன.. வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு நெனைக்கிறியா..?? நாம ரெண்டு பேரும் ஒண்ணாப்போய் நின்னு.. 'கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறோம்'ன்னு சொன்னா.. கண்டிப்பா அவங்க ஒத்துப்பாங்க தாமிரா.. சந்தோஷப்படத்தான் செய்வாங்க..!!"
"தெரியும் அத்தான்..!! ஆனா.. அது நடக்காது..!!"
"அதான் ஏன்னு கேக்குறேன்..??"
"ஏன்னா என்ன சொல்றது.. எனக்கு உங்கள புடிக்கும், உங்கமேல அன்பு இருக்குது.. ஆனா.. உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் எப்போவுமே நெனச்சது இல்ல..!!"
"சரி.. இதுக்கு முன்னாடி நெனச்சது இல்லைன்னா பரவால.. இப்போ ஏன் நெனச்சு பாக்க கூடாது..??"
"நான் நெனச்சு பாக்குறது இருக்கட்டும்.. நீங்க ஏன் அக்காவை பத்தி கொஞ்சம்கூட நெனைச்சு பாக்க மாட்டேன்றிங்க..?? அவ என்ன அத்தான் பாவம் பண்ணினா..?? அவகிட்ட என்ன குறை கண்டிங்க..??"
"இங்க பாரு.. ஆதிரா மேல நான் எந்த குறையும் சொல்லல.. அவ நல்ல பொண்ணுதான்..!! ஆனா.. நான் விரும்புறது உன்னை.. என் மனசுல நீதான் இருக்குற..!! ஆதிராவை கட்டிக்கிட்டு நான் சந்தோஷமா இருக்க முடியாது தாமிரா..!!"
"இல்லத்தான்.. தப்பா சொல்றீங்க.. அக்காவை கட்டிக்கிட்டா நீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பிங்க..!! அவ உங்களை எவ்வளவு லவ் பண்றா தெரியுமா.. உங்க மேல உயிரையே வச்சிருக்கா அத்தான்..!! சின்ன வயசுல இருந்தே உங்க மேல அவளுக்கு அவ்வளவு ஆசை..!! உங்ககிட்ட எக்ஸ்ப்ரஸ் பண்றதுக்கு அவளுக்கு ஒரு தயக்கம், வெட்கம்.. அவ்வளவுதான்..!! மத்தபடி.. எங்கிட்ட எல்லாம் சொல்லிருக்கா..!! அந்த அளவுக்கு உங்கமேல உசுரா இருக்குற அக்காவை கட்டிக்க, நெஜமாவே நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!"
".........................." சிபி இப்போது சற்றே வாயடைத்துப்போய் நின்றிருந்தான்.
"வீட்ல எல்லாம் சந்தோஷமா இருக்காங்க அத்தான்.. அக்கா, அப்பா, அம்மா, திரவியம் அங்கிள், வனக்கொடி அம்மா.. எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க.. அவங்க சந்தோஷத்தைலாம் கெடுக்கப் போறிங்களா..??"
"நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த சந்தோஷம் அவங்களுக்கு கெடைக்கும் தாமிரா..!! ஆதிராவுக்கு வேணா வேற.."
"இல்ல.. எனக்கோ அக்காவுக்கோ சத்தியமா அதுல சந்தோஷம் கெடைக்காது..!!"
"தாமிரா..!!"
"ப்ளீஸ்த்தான்..!! கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. உங்களை கல்யாணம் பண்ணிக்க சுத்தமா இன்ட்ரஸ்ட்டே இல்லாத நான் வேணுமா.. இல்ல.. உங்களையே நெனச்சு ஒவ்வொரு நிமிஷமும் உருகிக்கிட்டு இருக்குற அக்கா வேணுமா..?? யாரை கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு யோசிச்சு பாருங்க..!! என் முடிவை நான் சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..!!"
படபடவென சொல்லிவிட்டு தாமிரா அமைதியானாள்.. சிபி சில வினாடிகள் அவளுடைய முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! தாமிரா தன்னை காதலிக்கவில்லை என்பது அவனுக்கு அதிர்ச்சியான, ஆச்சரியமான விஷயமாக இருந்தது.. அவளது பேச்சிலும், பார்வையிலும், செயல்பாட்டிலும் பலமுறை காதலை உணர்ந்திருக்கிறான்.. இப்போது அதெல்லாம் இல்லை என்று அவள் சொல்லும்போது, அவனால் நம்புவதற்கே மிக கடினமாக இருந்தது.. ஆனால் அதை நம்புவதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை..!!
"நெஜமாவே உனக்கு என்மேல காதல் இல்லையா தாமிரா..??" என்று பரிதாபமாக ஒருமுறை கேட்டான்.
"இல்லத்தான்.. சத்தியமா இல்லை..!!" உணர்ச்சியற்ற குரலில் தெளிவாக சொன்ன தாமிரா,
"ம்ம்.. அப்பாக்கு கால் பண்ணி பேசுங்க..!!" என்று சிபியின் செல்ஃபோனை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
".........................." செல்ஃபோனை வாங்கிக்கொண்ட சிபி, வெறுமையாக அவளை பார்த்தான்.
"யோசிக்காதிங்கத்தான்.. பேசுங்க.. அக்காவை கட்டிக்க சம்மதம்னு சொல்லுங்க.. அப்பா அங்க டென்ஷனா உக்காந்துட்டு இருப்பாரு.. அவரு உங்களுக்கு எவ்வளவு நல்லது பண்ணிருக்காருன்னு நெனச்சு பாருங்க.. உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காருன்னு நெனச்சு பாருங்க..!! இந்த கல்யாணம் நடந்தாத்தான் எல்லாருக்குமே சந்தோஷம் அத்தான்.. ப்ளீஸ்.. பேசுங்க..!!"
சிபி சிறிதுநேரம் செய்வதறியாது தளர்ந்து போனவனாய் உறைந்திருந்தான்..!! இவனது பதிலுக்காக அகழியில் தணிகைநம்பி காத்திருக்கிற நிலையில்.. இவன் மீது காதல் இல்லை என்று தாமிரா திட்டவட்டமாக சொல்லி முடித்தபிறகும்.. அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை..!! தணிகை நம்பியை தனது கைபேசியில் அழைத்து பேசினான்.. ஆதிராவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தான்.. அதுவும் சுரத்தற்ற குரலில், சுத்தமாக விருப்பமே இல்லாமல்..!!
"பெரியவங்களா பாத்து என்ன செஞ்சாலும் எனக்கு சரிதான் மாமா..!!" என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
"தேங்க்ஸ் அத்தான்..!!"
தாமிரா சிபியை நன்றியுடன் பார்த்தாள்.. ஒரு பெரிய பிரச்சினையை ஒருவழியாக சமாளித்தாயிற்று என்று சற்றே நிம்மதியுற்றாள்.. ஆனால் அவளது நிம்மதி நீண்டநாள் நீடிக்கப்போவதில்லை என்பதை, அப்போது அவள் அறியவில்லை..!! கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்தாயிற்று என்று, சிபி அத்துடன் தனது முயற்சியை கைவிட்டு விடவில்லை.. முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தாமிராவை தொடர்ந்து கெஞ்சிக்கொண்டுதான் இருந்தான்..!!
காதலை புறக்கணிப்பது எப்போதுமே கடினமான காரியம்தான்.. தன்மீது அன்பு வைத்திருக்கும் இன்னொரு ஜீவனை எவ்வாறு எளிதில் உதறித்தள்ள முடியும்..?? அதுவும்.. மனதுக்குள் அவன்மீது அவளும் கொள்ளை கொள்ளையாய் காதலை வைத்துக்கொண்டு..?? தாமிரா அடுத்த நாளையும் மைசூரில்தான் கழித்தாள்.. இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளாவிட்டாலும், இருவருடைய இதயங்களும் ஒரு இனம்புரியாத அழுத்தத்துக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தன..!! சிபியின் ஏக்கமான பார்வையும், உடைந்துபோன குரலும், பரிதாபமான கெஞ்சலும்.. தாமிராவின் காதல் மனதை கசக்கி பிழிவதாக இருந்தன..!! அடிக்கடி அவன் தனது காதலை வலியுறுத்தி, கல்யாணக் கற்பனை சொல்வது.. அவளது மனஉறுதியை மிகவுமே அசைத்துப் பார்ப்பதாக அமைந்தது..!!
அடுத்தநாள் இரவு.. தாமிரா மைசூரில் இருந்து அகழி கிளம்புகையிலும்.. ரயில் பெட்டிக்குள் அவள் காலடி எடுத்து வைக்கும்போதும்கூட.. சிபி அதையேதான் சொன்னான்..!!
"இன்னும் எதும் கெட்டுப்போகல தாமிரா.. இப்போக்கூட உன் முடிவை நீ மாத்திக்கலாம்..!! மாமா, அத்தையை எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னு யோசிக்காத.. அதை நான் பாத்துக்குறேன்.. நான் பேசி அவங்கட்ட சம்மதம் வாங்குறேன்..!! ஆதிராவுக்கு வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிவச்சுட்டு.. அப்புறம்கூட நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்..!! ஊருக்கு போய் கொஞ்சம் ரிலாக்ஸ்டா யோசி.. கல்யாணத்துக்கு இன்னும் ஒருமாசம் இருக்கு.. அதுக்கு முன்னாடி ஒரு நல்லமுடிவா எடு..!!"
"எத்தனை நாள் ஆனாலும் என் முடிவு மாறாது அத்தான்..!!" - தாமிராவின் குரலில் இரண்டு நாட்க ளுக்கு முன்பாக இருந்த உறுதி இப்போது இல்லை என்பதை தெளிவாக உணரமுடிந்தது.
"ஹ்ம்ம்.. பாக்கலாம்..!! பார்த்து பத்திரமா போ.. நான் நாளைக்கு கால் பண்றேன்..!!"
"ப்ளீஸ்த்தான்.. வேணாம்.. இனிமே எனக்கு கால் பண்ணாதீங்க.. ப்ளீஸ்..!!"
"பண்ணுவேன் தாமிரா.. கண்டிப்பா பண்ணுவேன்..!! என் காதலை அவ்வளவு சீக்கிரம் செத்துப்போக விடமாட்டேன்.. கல்யாணத்துக்கு மொதநாள் வரைகூட, உன் மனசை மாத்த ட்ரை பண்ணிட்டேதான் இருப்பேன்..!! 'என்மேல உனக்கு அக்கறை இல்ல.. எக்கேடோ நான் கெட்டாலும் பரவால்ல..'ன்னு நீ நெனச்சா.. என் காலை பிக்கப் பண்ணவேணாம்..!!"
சிபி சிந்திய வார்த்தைகள் தாமிராவின் தளிர்மனதை வதைப்பதாக இருந்தன.. கண்களில் வழியமுனைந்த கண்ணீர்த்துளிகளை கட்டுப்படுத்தியவாறே, கம்பார்ட்மன்ட்டுக்குள் அவசரமாக புகுந்துகொண்டாள்..!!
ஏ/ஸி கம்பார்ட்மன்ட்.. தோலை ஊடுருவும் ஈரப்பதமான காற்று.. அங்கொன்றும், இங்கொன்றுமாக அமர்ந்திருந்த பயணிகள்..!! தனது இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்துகொண்டாள் தாமிரா.. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரிந்த சிபியை பார்த்தாள்..!! அவனது பார்வையில் தெறித்த அந்த ஏக்கமும், காதலும்.. இப்போது இவளை ஏதோ செய்தன.. இவள் மனதிலும் காதல் ஊற்றை மெலிதாக கசியச் செய்தன.. கண்ணில் துளிர்த்த நீருடன் காதலனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!
நீண்ட ஒரு இரைச்சலுடன் ரயில் கிளம்பியது..!! இவளது கம்பார்ட்மன்ட் மெல்ல நகர ஆரம்பிக்க.. வெளியே நின்றிருந்த சிபி, இவளைப்பார்த்து மெலிதாக கையை அசைக்க.. இவளுக்கு திடீரென என்னானதோ.. என்ன நினைத்தாளோ..
"ஐ லவ் யூ அத்தான்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!" என்று சிபியை பார்த்து கத்தினாள். அவளது குரலை கண்ணாடி ஜன்னல் தடுத்து நிறுத்தியது.
"எ..என்ன.. என்ன சொல்ற தாமிரா.. எனக்கு கேக்கல..!!" ரயில் பெட்டியின் பின்னாலேயே ஓடினான் சிபி.
"நான்.. நான் உங்களைத்தான் லவ் பண்றேன் அத்தான்.. உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்..!!"
"இ..இல்ல.. கேக்கல தாமிரா..!!"
"என்னை மன்னிச்சிடுங்க அத்தான்.. எனக்கு வேற வழி இல்ல..!! என்னை மன்னிச்சிடுங்க.. ப்ளீஸ்..!!"
"தாமிராஆஆ..!!"
ரயில் தடதடவென வேகமெடுத்து ஓட ஆரம்பித்திருந்தது.. கம்பார்ட்மன்ட்டுக்குள் கண்ணீர் சிந்தியவாறு அமர்ந்திருந்தாள் தாமிரா..!! அவ்வாறு அவள் அழுது கொண்டிருக்கையிலேயே.. அவளது செல்ஃபோன் இப்போது கிணுகிணுத்தது.. சிபிதான் கால் செய்திருந்தான்.. ஒருவித தயக்கத்துடனே எடுத்து பேசினாள்..!!
"எ..என்னாச்சு தாமிரா.. என்ன சொன்ன..?? எனக்கு ஒன்னும் கேக்கல..!!" சிபி பதற்றமாக கேட்டான்.
"ஒ..ஒன்னுல்லத்தான்..!! நீங்களும் கெளம்புங்க.. பார்த்து பத்திரமா போங்கன்னு சொன்னேன்..!! வேற ஒன்னும் இல்ல..!!" இறுக்கமாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள் தாமிரா.
ஆதிராவுக்கு மைசூரில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அப்போதெல்லாம் தெரியாது.. அகழி திரும்பிய தங்கையின் கண்களில் இருந்த கலக்கம் மட்டுமே அவளது கவனத்தில் சற்று உறுத்தியது..!!
"என்னடி.. என்னாச்சு.. ஒரு மாதிரி இருக்குற..??"
"அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே.. ட்ராவல் பண்ணின டயர்டா இருக்கும்..!!"
"கண்ணுலாம் செவந்து போயிருக்கு..??"
"நைட்டு சரியா தூக்கம் இல்லக்கா.. வேற ஒன்னும் இல்ல..!!"
"ஓ..!! போன வேலைலாம் நல்லபடியா முடிஞ்சுச்சா..??"
"ம்ம்.. பெர்ஃபக்ட்..!!" சொல்லும்போதே தாமிராவின் குரலில் இருந்த ஒரு மென்சோகத்தை, ஆதிராவால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை.
"ஹ்ம்ம்..!! அத்தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாருடி.. தெரியும்ல..??" என்று பூரிப்பாகவே கேட்டாள்.
"ஹாஹா..!! அத்தான் ஃபோன் பண்றப்போ நான் பக்கத்துலதான்க்கா இருந்தேன்..!!" புன்னகையுடன் சொன்ன தாமிரா,
"என் அக்கா மாதிரி ஒரு அழகு தேவதையை.. எந்த முட்டாப்பயலாவது வேணான்னு சொல்வானா..?? ம்ம்..??" என்று ஆதிராவின் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள்.
"ச்ச்சீய் போடி..!!!" வெக்கப்பட்ட ஆதிரா,
"அதுசரி.. மைசூர் நல்லா சுத்தி பாத்தியா.. எங்கல்லாம் உன்னை கூட்டிட்டு போனாரு..??" என்று பேச்சை வேறுபக்கம் திருப்பினாள்.
"ரொம்பலாம் சுத்தலக்கா.. ஃபர்ஸ்ட் டே மட்டும் வெளில போனோம்.. செகண்ட் டே செம டயர்ட்.. எங்கயும் போகல..!!"
"ஓ..!! ம்ம்ம்ம்.. சரி உன் கேமரா குடு.. ஃபோட்டோஸ் பாக்கலாம்..!!"
தாமிரா தனது டிஜிட்டல் கேமராவை எடுத்து அக்காவிடம் கொடுத்தாள்.. ஆதிராவும் ஆர்வமாக அந்த கேமராவில் சேகரிக்கப்பட்டிருந்த படங்களை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தாள்..!!
"என்னடி கொஞ்ச ஃபோட்டோதான் எடுத்திருக்கீங்க போல..??"
"அ..அதான் சொன்னன்ல.. ரொம்பலாம் வெளில சுத்தல..!!"
கட்டைவிரலால் பட்டனை அழுத்தி, ஒவ்வொரு படமாக பார்த்துக்கொண்டே வந்த ஆதிரா.. அந்த மைசூர் அரண்மனை முன்பாக எடுத்திருந்த படத்தை பார்த்ததும், சற்றே முகம் மாறினாள்.. அடுத்த படத்தை மாற்றத் தோன்றாதவளாய், அந்தப் படத்தையே உன்னிப்பாக முறைத்துப் பார்த்தாள்..!! தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறவனும், தனது தங்கையும்.. நெருக்கமாக எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம்.. ஆதிராவின் நெஞ்சுக்குள் ஒரு பொறாமைத்தீயை கொளுத்திப் போட்டிருந்தது..!!
"என்னாச்சு..??" தாமிரா கேட்க,
"ஒ..ஒன்னுல்ல..!!" ஆதிரா தடுமாறினாள்.
ஆதிரா சொல்லாவிட்டால் என்ன.. அக்காவின் முகமாற்றத்தில் இருந்தே, அவளுடைய மனநிலையை கச்சிதமாக புரிந்துகொண்டாள் தாமிரா..!!
"என்ன.. அத்தான்கூட உரசிட்டு நிக்கிறது உனக்கு எரிச்சலா இருக்கோ..??" என்று கேலியான குரலிலேயே கேட்டாள்.
"இ..இல்ல.. அப்படிலாம் ஒன்னுல்ல..!!" ஆதிரா பலவீனமாகவே மறுத்தாள்.
"ஹாஹா.. ஒன்னும் பயப்படாத.. உன் புருஷனை ஒன்னும் நான் வளைச்சுப்போட்ற மாட்டேன்..!!"
"ஏய் ச்சீய்.. லூஸு..!!"
"குடு.. டெலிட் பண்ணிடலாம்..!!"
"ஏய் வேணாண்டி.. பரவால..!!"
பதறிய ஆதிராவை பொருட்படுத்தாது, அவளது கையிலிருந்த கேமராவை பிடுங்கி, அந்த ஃபோட்டோவை படக்கென டெலிட் செய்தாள் தாமிரா..!!
"ஓகேவா இப்போ..?? ஹாஹா..!!" என்று அக்காவை பார்த்து போலியாக சிரித்தாள்.
"ப்ச்.. ஏன்டி டெலிட் பண்ணின..?? நான் ஒன்னும் அதுக்காக சொல்லல..!!"
"அடடடடா..!! விடு விடு.. எல்லாம் எனக்கு தெரியும்..!! உனக்கு பிடிக்கலல.. அப்புறம் என்ன..?? அதான் டெலிட் பண்ணிட்டேன்.. அக்கா இப்போ ஹேப்பிதான..??" கண்சிமிட்டி அழகாக சிரித்தாள் தாமிரா.
"ஹ்ம்ம்ம்ம்..!!! தேங்க்ஸ்டி..!!!"
பூரிப்பான முகத்துடன் சொன்ன ஆதிராவின் மனது, அப்போதைக்கு அமைதிப்பட்டுப் போனது.. ஆனால், புகைப்படத்தை அழித்து நீக்கிய தாமிராவின் மனதோ, ஒருவித பதைபதைப்புக்கு உள்ளாகியிருந்தது..!! எப்படியாவது அந்த புகைப்படத்தை, மீண்டும் மீட்டெடுத்து விடவேண்டுமே என்கிற பதைபதைப்பு..!!
அன்று மதியமே தாமிரா அந்தவேலையில் மூழ்கியிருந்தாள்.. கேமராவின் மெமரி ஸ்டிக்கில் இருந்து, டெலிட் செய்யப்பட்ட அந்த புகைப்படத்திற்கு, டேட்டா ரெகவரி டூல் மூலம் திரும்பவும் உயிர்கொடுக்கிற வேலை..!! ஒருவழியாக அந்த புகைப்படத்தை அவள் ரெகவர் செய்து, அவளும் சிபியும் அருகருகே உரசி நிற்பதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. ஆதிரா அந்த அறைக்குள் நுழைந்தாள்..!! அக்காவின் வருகையை உணர்ந்ததுமே, புகைப்படத்தை படக்கென மூடி, ஏதோ கட்டுரை டைப் செய்வது போல பாவ்லா செய்தாள் தாமிரா..!! கம்ப்யூட்டர் டேபிளில் வந்து படாரென விழுந்தது அந்த ஆட்டோக்ராஃப் புத்தகம்..!!
"என்னடி இது..??"
"எ..எது..??"
"ம்ம்ம்ம்..??? இது..!!!"
ஆட்டோக்ராஃப் புத்தகத்தில்.. ஆதிரா எடுத்துக்காட்டிய பக்கத்தில்.. அகல்விழியால் எழுதப்பட்ட அந்த வாசகம்..!!
"தெளிவாக யோசி பெண்ணே.. துணிச்சலாக ஒரு முடிவெடு.. உனது காதல் கைகூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! - அன்புத்தோழி அகல்விழி"
சிபியை மேற்கோள் காட்டியே அகல்விழி அதை எழுதியிருந்தாள்..!! ஆனால்.. அந்தமாதிரியான ஒரு நிலைமையில்.. அந்த உண்மையை.. அக்காவிடம் தாமிராவால் சொல்ல முடியாதே..?? காதலன் யார் என்று அவள் கேட்டதற்கு.. ஒரு சிறு திகைப்புக்கு அப்புறம், கதிர் மீது பழியை தூக்கிப் போட்டாள் தாமிரா..!! தன்னை காதலித்து தன்னால் நிராகரிக்கப்பட்ட கதிரின் பெயரை.. இப்படியொரு சூழ்நிலையில் சமயோஜிதமாக உபயோகப்படுத்திக் கொண்டாள்..!! அப்பாவிடம் பேசலாம் என்று கிளம்பிய ஆதிராவை..
"ஹையோ.. சும்மா இருக்கா நீ வேற.. காரியத்தையே கெடுத்துடாத..!! இப்போத்தான் உனக்கும் அத்தானுக்கும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க.. இந்த நேரத்துல இதைப்போய் சொல்லி அவங்களை டென்ஷனாக்க வேணாம்..!! நீ மொதல்ல கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டு கெளம்பு.. என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன்..!! கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை உனக்குள்ளேயே வச்சுக்கோக்கா.. யார்ட்டயும் சொல்லாத.. ப்ளீஸ்..!!" என்றுகூறி அப்போதைக்கு செயலிழக்க செய்துவிட்டாள்.
அக்காவின் விஷயத்தில்தான் அவ்வாறு வாயடைத்துப்போக வைக்க முடிந்தது தாமிராவால்.. சிபியின் விஷயத்தில் அவளால் அது இயலவில்லை..!! அடுத்து வந்த ஒரு வாரம், பத்து நாட்கள்.. தீயின் மீது நிற்கிற உக்கிரமான தகிப்பை உணர்ந்தாள் தாமிரா..!! ஒருபக்கம் அக்காவின் மீதான அளவிலா அன்பு.. இன்னொருபக்கம் சிபியின் மீதான ரகசியக் காதல்.. இரண்டுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிப் போனாள்..!!
சிபி தினசரியும் அவளை கைபேசியில் அடிக்கடி அழைத்தான்.. தாமிரா ஆரம்பத்தில் அவனது அழைப்பை உதாசீனம் செய்து பார்த்தாள்.. அப்புறம்.. அவளாலேயே முடியாமல் அவனுடன் பேச ஆரம்பித்தாள்..!!
அக்காவின் அருமை பெருமைகளை சொல்லி.. சிபியின் மனதை மாற்ற முயன்றாள் தாமிரா..!! அகத்துக்குள்ளிருந்த காதலின் தீவிரத்தை சொல்லி.. தாமிராவை தன்வழிக்கு கொண்டுவர முனைந்தான் சிபி..!! இரண்டு வெவ்வேறு விதமான முயற்சிகளில்.. சிபிதான் வெற்றியடைந்தான் என்று சொல்லவேண்டும்.. தாமிரா கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டிருந்தாள்..!!
மனித இயல்புதான் அது..!! நமக்கு பிடித்த சில விஷயங்களை.. பிடிக்காத மாதிரி மற்றவர்களுக்காக வெளிவேஷம் போட்டாலும்.. உள்ளுக்குள் அவைகளை ரகசியமாக ரசித்துக் கொண்டிருப்பது.. மிக மிக பொதுவான மனித இயல்புதான்..!! தாமிராவும் மனுஷிதானே..??
சிபியின் காதலை தாமிரா புறக்கணித்தாலும்.. அந்தக்காதலை மதிக்காத மாதிரி அக்காவுக்காக வெளிவேஷம் போட்டாலும்.. அவன் இவ்வாறு தினசரி ஃபோன் செய்து கெஞ்சுவது அவளுக்கு ஒருவகையில் பிடித்திருந்தது..!! அக்காவுக்காக தனது காதலை விட்டுக்கொடுத்த திருப்தி ஒருபக்கம் இருந்தாலும்.. 'எனது மனதிலிருப்பவன் என்னை எந்த அளவுக்கு காதலிக்கிறான் பார்' என்பது மாதிரியான ஒரு சந்தோஷமும்.. இன்னொரு பக்கம் அவளது மனதை நிறைக்க தவறவில்லை..!!
சிபியிடம் தனது உணர்வுகளை கொட்டாவிட்டாலும்.. தனிமையில் நிறைய அழுது தீர்த்தாள் தாமிரா..!!
அடிக்கடி தாமிரா தொலைபேசி அழைப்பிலேயே இருப்பது.. ஆதிரவுக்கும் சற்றே உறுத்தலாக இருந்தது..!!
"யாருடி ஃபோன்ல..??"
"அத்தான் கூப்டாருக்கா.. சும்மா.. அந்த ஆராய்ச்சி கட்டுரை பத்தி கேக்குறதுக்கு..!!"
தாமிரா கேஷுவலாக சமாளித்தாலும்.. 'என்ன இவன்.. என்னை திருமணம் செய்துகொள்ளப் போகிறவன், எனக்கு ஒருமுறை கூட அழைப்பு விடுக்காமல், எனது தங்கையுடனே எந்த நேரமும் பேசிக்கொண்டிருக்கிறானே..??' என்பது மாதிரியான ஒரு அதிருப்தியும், சலிப்பும்.. ஆதிராவின் மனதையும் மெல்ல மெல்ல சூழ ஆரம்பித்தன..!!
திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிற நிலையில்.. ஒருநாள் காலை..!!
ஆதிரா தனது அறையைவிட்டு வெளியே வந்தபோது வீடே அமைதியாக இருந்தது.. பூவள்ளியைத் தவிர வீட்டில் வேறு யாரும் இல்லை.. அவளும் அலமாரியில் எதையோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாள்..!!
"தாமிரா எங்கமா.. ஆளைக்காணோம்..??" ஆதிரா கேட்க,
"எங்க போச்சோ பிசாசு.. 'சாப்டுட்டு போடி'ன்னு சொல்ல சொல்ல கேட்காம, அந்த சனியன் புடிச்ச கேமராவை தூக்கிட்டு எங்கயோ ஓடுறா.. காலங்காத்தாலேயே..!!" தேடுவதில் இருந்து கவனத்தை திருப்பாமல், பூவள்ளி அவ்வாறு சலிப்பாக சொல்லவும்தான்..
"காலைல சிங்கமலை வர போலாம்னு இருக்கேன்க்கா.. ஆர்ட்டிக்கிள்க்கு இன்னும் கொஞ்சம் பிக்சர்ஸ் ஆட் பண்ணினா நல்லாருக்கும்னு நெனைக்கிறேன்..!!"
நேற்றிரவு தூங்குகையில் தாமிரா சொன்னது ஆதிராவின் நினைவுக்கு வந்தது..!! தனக்கு வந்த ஞாபகத்தை ஆதிரா அம்மாவிடம் சொல்லாமல்..
"ஹ்ம்ம்.. ஒரு காபி போட்டுத் தர்றியாம்மா.. அப்டியே தலைவலிக்குது..!!" என்று இயல்பாக கேட்டாள்.
"போய் போட்டுக்கடி.. எல்லாத்தையும் யாராவது பண்ணனும் இவளுக்கு..!! சின்னப்புள்ளையா நீ.. கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வாரந்தான் இருக்கு..!!"
"அதைத்தான் நானும் சொல்றேன்.. இன்னும் ரெண்டு வாரந்தான காலைல உன் கையால காபி குடிக்க முடியும்..?? அப்புறம் நானாத்தான போட்டுக்கப் போறேன்..??"
"ம்ம்ம்..?? இப்ப இருந்தே அதுலாம் பழகிக்க.. போ..!!"
"ப்ளீஸ்ம்மா.. போட்டுக் குடும்மா..!!"
"கடுப்பை கெளப்பாம போயிரு ஆதிரா.. உன் அப்பாத்தான் அங்க உக்காந்துட்டு என் உசுரை வாங்கிக்கிட்டு இருக்காருன்னா.. நீ வேற..!!"
"ஏன்.. அப்பாக்கு என்ன..??"
"அந்த ப்ரஸ்க்காரன் நேத்து வந்து கல்யாண பத்திரிகை காப்பி குடுத்துட்டு போனான்.. தப்பு இருந்தா கரக்சன் பண்றதுக்கு..!!"
"ஆமாம்.. நான்கூட பார்த்தேன்..!!"
"அதை எங்க வச்சு தொலைச்சார்னு தெரியல.. வீடு பூரா தேடியாச்சு, எங்கயும் காணோம்..!! அது இப்ப உடனே வேணும்னு அங்கருந்து போனுக்கு மேல போனு..!!"
"ஹாஹா..!! சரி சரி.. டென்ஷனாகாம தேடு.. காபி நானே போய் போட்டுக்குறேன்..!!"
சமையலறை நோக்கி நடந்த ஆதிரா.. திரும்பிப் பார்க்காமலே அம்மாவிடம் இயல்பாக கேட்டாள்..!!
"வனக்கொடிம்மா இன்னைக்கும் வரலையா..??"
"வரலடி..!! கல்யாண வேலைலாம் அப்படி அப்படியே கெடக்குது.. இந்தநேரம் பாத்து அந்தப்புள்ளைக்கு உடம்புக்கு முடியாம போய்டுச்சு..!!"
"ஹ்ம்ம்.. என்னாச்சாம் தென்றலுக்கு..??"
"தலைல நீர் கோர்த்துக்குச்சு போல.. நாலு நாளாகியும் சரியாகல.. ஒரே இருமலு, தும்மலு..!! வனக்கொடி மட்டும் மதியமாவது வந்துர்றேன்னா.. பாப்போம்..!!"
"ஓ..!! சரி சரி..!!"
சமையலறை சென்று தானாகவே காபி தயாரித்து தனது அறைக்கு எடுத்து சென்றாள் ஆதிரா.. காபியை உறிஞ்சிக்கொண்டே ஒரு நாளிதழை புரட்டிக்கொண்டிருக்கையில்..
"ட்டிங் ட்டிங்..!!"
என்றொரு சப்தம் அறைக்குள் சன்னமாக ஒலித்தது.. செல்ஃபோனுக்கு வருகிற மெசேஜ் அலர்ட்..!! தனது செல்ஃபோனுக்கு எதுவும் மெசேஜ் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட ஆதிராவுக்கு.. அருகில் கிடந்து ஒளிர்ந்த தாமிராவின் செல்ஃபோன் இப்போதுதான் பார்வையில் பட்டது..!!
"ஃபோனை இங்கயே விட்டுட்டு போயிட்டாளா..??"
என்று மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு, வெகு இயல்பாக தங்கையின் செல்ஃபோனை கையில் எடுத்து பார்த்தாள்..!! கதிருடைய எண்ணிலிருந்து இருந்து மெசேஜ் வந்திருந்தது.. கவனத்தை செலுத்தி பார்ப்பதற்கு முன்பே, செல்ஃபோனின் மேற்புறம் மின்னிய மெசேஜ் வரிகள் அவளது கண்களை பளிச்சென்று தாக்கின..!!
"என் காதலைத்தான் ஏத்துக்கல.. காலையாவது பிக்கப் பண்ணலாம்ல..?? ப்ளீஸ் தாமிரா..!!" என்கிற கெஞ்சல் வரிகள்.
அதைப்படித்ததும் ஆதிராவுடைய நெற்றியின் மையத்தில் பட்டென ஒரு சுருக்கம்..!! 'கதிரிடம் தனது காதலை சொல்லிவிட்டதாகத்தானே தாமிரா சொன்னாள்..?? அப்புறமும் ஏன் இவன் இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான்..??' என்று குழம்பிப்போனாள்..!! எதுவும் புரியாமல் தலையை திருப்பியவளின் பார்வையில் எதேச்சையாகத்தான் அது பட்டது.. அந்த புத்தகம்.. 'கண்ணாமூச்சி ரே ரே' என்கிற தலைப்பு வரிகள் மின்னுகிற அந்த புத்தகம்.. அந்த புத்தகத்துக்குள் இருந்து கொஞ்சமாய் வெளிநீட்டிக் கொண்டிருக்கிற அந்த மஞ்சள் நிற காகிதம்..!!
ஆதிராவின் மனதுக்குள் இப்போது மெலிதான அதிர்வலைகள் கிளம்ப ஆரம்பிக்க.. எழுந்து சென்று அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.. நீட்டிக்கொண்டிருந்த அந்த காகிதத்தை வெளியே எடுத்தாள்..!! அவள் சந்தேகப்பட்டது சரிதான்.. கீழே பூவள்ளி தேடிக்கொண்டிருக்கிற அதே காகிதம்தான்.. ஆதிராவுடைய திருமண அழைப்பிதழின் முதல் நகல்..!!
அந்த காகிதத்தை பிரித்து பார்வையை வீசியவள்.. சுருக்கென்று ஒரு வலியை இதயத்துக்குள் உள்வாங்கினாள்..!! 'மணமகன்: சிபி' என்பது அவ்வாறே இருக்க.. 'மணமகள்: ஆதிரா' என்று அச்சடிக்கப்பட்டிருந்ததில்.. 'ஆதிரா'வை நீல மையால் அழித்து, 'தாமிரா'வென்று திருத்தப்பட்டிருந்தது..!! 'ஐ லவ் யூடா சிபி.. நீ எனக்கு வேணுண்டா..' என்று காகிதத்தின் குறுக்காக கிறுக்கப்பட்டிருந்தது..!! தாமிராவின் கையெழுத்து..!!
அதை பார்க்க நேர்ந்த ஆதிராவின் மனநிலை, எப்படி மாறிப்போயிருக்கும் என்று விளக்கத் தேவையில்லை.. தங்கையின் மீது அவளுக்கு சுள்ளென்று ஒரு ஆத்திரம்.. 'எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் அவளுக்கு..??' என்பது மாதிரியாக ஒரு ஆவேசம்..!! 'தான் காதலிப்பவன் என்று தெரிந்தும், இவள் எப்படி அவன்மீது காதலை வளர்த்துக்கொள்ளலாம்..?? அதுவும் இப்போது திருமணம் வரை வந்தபிறகும், இப்படி கிறுக்கி வைத்திருக்கிறாள் என்றால்.. கதிரைத்தான் காதலிக்கிறேன் என்று பொய் சொல்லி என்னை ஏமாற்றியிருக்கிறாள் என்றால்.. எவ்வளவு சின்னத்தனமான திருட்டு புத்தி அவளுக்கு..??' என்று தங்கையின் மீது பிறந்த கோவத்தின் வீரியம் அதிகமாகிக்கொண்டே சென்றது..!!
ஆத்திரம் அதிகரிக்கும்போது மூளையின் செயல்பாடு மங்கிப் போகிறது..!! அந்த மைசூர் அரண்மனை புகைப்படம் ஆதிராவின் மனதுக்குள் இப்போது மீண்டும் வர.. அங்கிருந்து வந்ததிலிருந்தே தாமிரா அடிக்கடி சிபியுடன் கைபேசியில் பேசுவதும் ஞாபகத்துக்கு வர.. தங்கையை பற்றி ஒருவித குறுக்குப்புத்தியுடன் சிந்திக்க ஆரம்பித்தாள்..!! 'ஒருவேளை.. இவள் எனக்கு துரோகம் செய்கிறாளோ..?? வெளியே சிரித்தாலும், உள்ளுக்குள் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்திட துடிக்கிறாளோ.. அதற்காகத்தான் அந்த மைசூர் பயணமோ..?? அத்தானின் மனதை மயக்க முயல்கிறாளோ.. அவருடன் எப்படி உரசிக்கொண்டு நின்றிருந்தாள்..?? இப்போது இங்குவந்தும் தினசரி அவரை தொல்லை செய்கிறாளோ.. அக்காவை கழற்றிவிட்டு தன்னை ஏற்றுக்கொள்ள கெஞ்சுகிறாளோ..??'
ஆதிராவின் புத்தி அவ்வாறு தடம் மாறி சிந்திக்க.. தாமிராவின் மீது ஒரு தாங்கொணா வெறுப்பு கலந்த ஆத்திரம் பிறந்தது..!! தங்கையை உடனே சென்று பார்த்து, நாக்கை பிடுங்கிக்கொள்கிற மாதிரி, அவளை நான்கு கேள்விகள் கேட்கவேண்டும் போலிருந்தது..!! ஆத்திரம் அவளது கண்ணை மறைக்க.. அவசரமாய் தனது அறையில் இருந்து கிளம்பினாள்..!! வீட்டின் பின்புற வாசலில் இருந்து வெளிப்பட்டு.. சிங்கமலை செல்கிற சாலையை அடைந்தாள்..!!
ஒரு கையில் அவளது செல்ஃபோன்.. இன்னொரு கையில் அந்த மஞ்சள் காகிதம்.. கண்களில் ஒரு கோபக்கனல்.. உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அப்படி ஒரு ஆவேசம்..!! அந்த குறுகிய மலைப்பாதையில் விடுவிடுவென நடந்து.. சிங்கமலையின் உச்சி நோக்கி மேலேறிக் கொண்டிருந்தாள்..!!
சிறிது தூரம் சென்றிருக்கையிலேயே.. சற்று தொலைவில்.. வேறொரு திசையில் இருந்து வனக்கொடி வருவது தெரிந்தது.. அவளது கைகள் நிறைய வெள்ளைநொச்சி இலைகள்..!! ஆதிரா செல்வதை தூரத்தில் இருந்து பார்த்த வனக்கொடிக்கு.. அவளது நடையில் தெரிந்த வேகம் சற்றே உறுத்தலாக தோன்றியது..!!
"ஆதிராஆஆ.. ஆதிராம்மா..!!"
அங்கிருந்தே சப்தம் எழுப்பினாள்..!! வனக்கொடி அழைப்பதை கண்டுகொள்ளாமல், சரசரவென தொடர்ந்து மேல்நோக்கி நடந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!! வனக்கொடி இப்போது ஓட்டமும் நடையுமாக வந்து ஆதிராவை வழிமறித்தாள்.. அவளது கையை பிடித்துக்கொண்டு..
"எ..என்னம்மா.. என்னாச்சு.. எங்க போயிட்டு இருக்க..??" என்று பதற்றமாக கேட்டாள்.
"ஒன்னுல்லம்மா.. கையை விடுங்க..!!"
"என்னன்னு சொல்லுமா.. ஏன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு..??"
"ஐயோ.. ஒன்னுல்ல.. நீங்க வீட்டுக்கு போங்க.. எனக்கு இங்க ஒரு வேலை இருக்கு..!!"
"என்ன வேலை..??"
"வந்து சொல்றேன்.. மொதல்ல கையை விடுங்க..!!"
"சொல்லும்மா.. எனக்கு அப்டியே நெஞ்சு அடிச்சுக்குது..!!"
"ப்ச்.. சொல்றேன்ல.. விடுங்க கையை..!!"
உடம்பை முறுக்கிக்கொண்டு வனக்கொடியின் கையை பலமாக உதறித் தள்ளினாள் ஆதிரா.. தடுமாறிப்போன வனக்கொடி கால்கள் பின்னிக்கொள்ள தரையில் சரிந்தாள்.. ஒரு சிறிய பள்ளத்தில் கடகடவென உருண்டாள்..!!
வனக்கொடியை திரும்பிப்பார்க்கிற மனநிலையில் ஆதிரா அப்போது இல்லை.. விறுவிறுவென தனது நடையை தொடர்ந்தாள்..!! வனக்கொடி எழுந்து பார்ப்பதற்கு முன்பே.. அவளது கண்பார்வையில் இருந்து மறைந்து போயிருந்தாள்..!!
"ஆதிராம்மா.. ஆதிராம்மா..!!"
தனியே நின்றவாறு தலையை திருப்பி திருப்பி பார்த்து கத்திய வனக்கொடி.. ஆதிரா எந்தப்பக்கம் சென்றாள் என்பது தெரியாமல், திசைதப்பிப்போய் வேறொரு பாதையில் ஓட ஆரம்பித்தாள்..!!
அதேநேரத்தில்.. தாமிரா சிங்கமலையில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்..!! சிபி தினசரி அவளிடம் பேசி தனது காதலை வலியுறுத்தியது, அவளது மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.. அக்கா மீதான அன்பும், சிபி மீதான காதலும் அவளது மனதுக்குள் ஒன்றோடொன்று மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன..!! இரண்டு வாரங்களுக்கு முன்பு தெளிவான ஒரு மனநிலையில் இருந்தவள்.. இப்போது என்ன முடிவு எடுப்பது என்றே அறியாதவளாய் குழம்பிப் போயிருந்தாள்..!!
No comments:
Post a Comment