அன்று மாலை அசோக்கின் வீட்டில்.. அவனுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது..!! மலர் மாலை அணிவித்து.. மங்கள ஆரத்தி எடுக்காத குறைதான்..!! பந்தயம், பரிட்டோ, செருப்பு, முறைப்பு என.. சில சிக்கலான விஷயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மீதி விஷயங்களை எல்லாம்.. ஒன்றுவிடாமல் அசோக்கின் குடும்பத்துக்கு ஒலிபரப்பு செய்திருந்தது.. தி கிரேட் கிஷோர் FM..!! 'அசோக் ஒருபெண்ணை பலநாட்களாக பார்வையாலேயே காதலித்தான்.. இன்று பத்தே நிமிடம் அவளிடம் பேசி.. பதிலுக்கு அவளையும் ஐ லவ் யூ சொல்ல வைத்துவிட்டான்..' என்ற அளவில்தான் செய்தி ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது..!!
விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே.. வீட்டில் அனைவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம்.. குதுகலம்.. மகிழ்ச்சி..!! அனைவரது முகத்திலுமே அப்படி ஒரு பூரிப்பு.. சிரிப்பு.. மலர்ச்சி..!! பொசுபொசுவென, வெள்ளை வெளேரென இருக்கும் பொமெரேனியன்கள் இரண்டும் கூட.. வாசலில் போடப்பட்டிருந்த ரங்கோலியில் புரண்டு எழுந்து.. அன்று கலர்ஃபுல்லாய் காட்சியளித்தன..!! அசோக் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓடிச்சென்று.. அவனுடைய காலை சுற்றி சுற்றி வந்து.. முகர்ந்து முகர்ந்து பார்த்தன..!! அனைவருமே அவசரமாய் சென்று அசோக்கை சூழ்ந்து கொண்டனர்.. அன்புடன் கட்டிக்கொண்டனர்.. கைகுலுக்கினர்.. 'கலக்கிட்டடா' என்று கன்னம் கிள்ளினர்..!!
தன் குடும்பத்தினரிடம் இருந்து, அத்தகைய வரவேற்பை அசோக் எதிர்பார்த்திருக்கவில்லை.. திணறிப் போனான்..!! ஏற்கனவே அந்த மீரா தனது காதலை சொல்லிச் சென்றவிதத்தில், அவனுடைய மனம் ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.. இதில் இவர்கள் வேறு ஆளாளுக்கு கலாட்டா செய்ய.. செய்வதறியாது திருதிருவென விழித்தான்..!! அவனுடன் எப்போதும் சண்டை போடுகிற சங்கீதா கூட.. அன்று அண்ணனின் காதல் கணிந்துவிட்டதென மிக சந்தோஷத்தில் இருந்தாள்..!! அசோக்கை பார்த்து கண்சிமிட்டியவாறே, தனது இனிய குரலால் பாடினாள்..!!
"பெண்கள் பின்னால் சுற்றாமல்.. பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ ஓ.. அவனே காதல் மன்னன்... காதல் மன்னன்.. காதல் மன்னன்..!!"
ஆட்காட்டி விரலை அண்ணனை நோக்கி நீட்டி.. அதை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி சுழற்றி, அவள் அவ்வாறு பாட.. அசோக் அவனுடைய மனக்குழப்பத்தையும் மறந்து, மெலிதாக புன்னகைத்தான்..!!
"ப்ச்.. சும்மா இரு சங்கு..!!" என்று அழகாக வெட்கப்பட்டான். உடனே சங்கீதா
"அழுக்கு சட்டை போட்டாலும்.." என்று அடுத்த லைனை கிண்டலான குரலில் ஆரம்பிக்கவும், வெடுக்கென தங்கையை முறைத்தான்.
"போதும்..!!!! நிறுத்து..!!!!" என்று கடுப்பாக சொன்னான்.
"ஹாஹாஹாஹா...!!! ம்ம்ம்ம்.... எப்படிடா இப்படிலாம்.. ஃபஸ்ர்ட் பால்'லயே சிக்ஸரு.. ம்ம்..?? ஃபஸ்ர்ட் நாள் பேசுனதுமே ஒரு பொண்ணை ஐ லவ் யூ சொல்ல வச்சுட்ட.. அதுவும் பத்தே நிமிஷம் பேசுனதுல..?? உன்னை இதயம் முரளின்ல நான் இவ்வளவு நாளா நெனச்சுட்டு இருந்தேன்.. இப்படி கில்ல்ல்லி மாதிரி சொல்லி அடிச்சுட்டியடா அண்ணா..?? ச்ச.. சான்ஸே இல்லடா..!!" அசோக்கை கலாய்க்கிற குரலிலேயே பாராட்டினாள் சங்கீதா.
"ம்ம்ம்.. அம்மா உனக்காகவே ஆசையா.. ஸ்பெஷலா செஞ்சது அசோக்..!! ஆ.... வாயை தெற.." கையில் இனிப்பு கிண்ணத்துடன் வந்திருந்தாள் பாரதி.
"எ..என்ன மம்மி இ.." அசோக் கேட்டு முடிப்பதற்கு முன்பே,
"ஷாஹி துக்ரான்னு ஒரு மொகலாய் ஸ்வீட்டுடா.. நல்லாருக்கும், சாப்பிட்டு பாரு..!!" சுண்டக் காய்ச்சிய பாலில் ஊறிப்போன அந்த இனிப்புத்துண்டை அவன் வாயில் திணித்தாள்.
"அசோக்-மீரா..!! பேர்ப்பொருத்தம் பிரம்மாதமா இருக்குன்னு.. வல்லக்கோட்டை ஜோஸியரே சொல்லிட்டாரு..!!" - பாட்டி தன் பங்குக்கு சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.
வெறும் சந்தோஷம் என்ற ஒரு வார்த்தையில் சாதாரணமாக அந்த உணர்வை விளக்கி விட முடியாது..!! குடும்பத்தில் எஞ்சியிருந்த இருந்த ஒருவனும்.. இன்று காதல் இனத்தில் கலந்துவிட்டான்.. இப்போதுதான் இவன் நம் வீட்டுப்பிள்ளை.. என்பது மாதிரியான ஒருவித பெருமிதமும் நிம்மதியும் கலந்த பெருமகிழ்ச்சி எல்லோருக்கும்..!!
"இப்போத்தான் இதுக்குப்பேரு ஸ்மார்ட் ஃபோன்.. இதுக்கு முன்னாடி வேஸ்ட் ஃபோன்..!!" - மகனுடைய செல்ஃபோனில் புதிதாக சேர்ந்திருந்த மீரா என்ற பெண்ணுக்கான எண்ணை, கட்டை விரலால் தடவியபடியே பெருமையாக பார்த்தார் மணிபாரதி.
"ஹ்ம்ம்.. இந்தக்காலத்து புள்ளைகள்லாம் ரொம்ப கொடுத்து வச்சதுங்க..!! அந்தக்காலத்துல உன் பாட்டி கூட நான் பேசணும்னா.. அவ ஊர்ல அய்யனாருக்கு பொங்கல் வைக்கணும்.. இல்லனா அரண்மனைக்காரருக்கு போர் அடிக்கணும்.. அப்போத்தான் அரசுகொடிப்பாளையம் எல்லைக்குள்ளயே என்னால நொழைய முடியும்..!! அப்புறம் ஆர்மோனியக்காரரு எப்போடா மங்களம் பாடுவாருன்னு.. ராமுழுக்க பல்லை கடிச்சுட்டு காத்திருக்கணும்..!! அதுவும் அதிகாலைல.. அந்த இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு.. அஞ்சு நிமிஷம் உன் பாட்டி கூட பேச முடிஞ்சதுன்னா பெரிய விஷயம் அசோக்கு..!! ஹ்ம்ம்.. இப்போலாம் அப்படியா இருக்கு... இந்தப்பக்கம் நம்பரை அடிச்சமுனா, அந்தப்பக்கம் நம்மாளு கொரலு கேக்குது..!!" எண்கள் கிறுக்கப்பட்டிருந்த பேரனின் உள்ளங்கையை தடவியவாறே, தாத்தா சொன்னவிதத்தில் பெருமிதத்துடன் சின்ன பொறாமையும் கலந்திருந்தது.
"வடபழனி போய் முருகனை பாத்துட்டு வந்தேன்டா கண்ணா.. உங்க காதல், எந்த சிக்கலும் இல்லாம கல்யாணத்துல முடியனும்னு.. உங்க ரெண்டு பேர் பேர்லயும் அர்ச்சனை செஞ்சேன்..!!" காகித மடிப்பு திறந்து, கட்டை விரலால் விபூதி தொட்டு, அசோக்கின் நெற்றியில் கோடிட்டாள் பாரதி.
இப்படி ஆளாளுக்கு ஆனந்தத்தில் திளைத்தது, அசோக்கின் மனதில் இருந்த அழுத்தத்தை அதிகரிக்கவே செய்தது. அந்தப்பெண் என்னடாவென்றால், 'ஐ லவ் யூ' சொல்லிவிட்டு, அடுத்த நொடியே 'பில் பே பண்ணு' என்கிறாள். இவர்களோ குடும்பத்திற்கு இருந்த பெரிய சாபக்கேடு நீங்கிப்போன மாதிரி, குதுகலத்தில் திளைக்கிறார்கள். அவர்களுடைய சந்தோஷம் சற்று அதிகப்படியானதாகவே தோன்றியது அசோக்கிற்கு..!!
அன்று இரவு உணவை, வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில்தான் உண்டார்கள். ஆறு பேரும் டைனிங் டேபிளில் அமர்ந்து, ஆனந்தமாக பேசி சிரித்தவாறே சாப்பிட்டுக்கொண்டிருக்க, அசோக் தன் மனதில் இருந்த அழுத்தத்தை, அடக்கிக் கொள்ள முடியாமல் சொல்லிவிட்டான்.
"நீ..நீங்கல்லாம்.. தேவை இல்லாம.. ரொம்ப ஓவரா சந்தோஷப்படுற மாதிரி எனக்கு தோணுது.. கொஞ்சம் கொறைச்சுக்கங்க ப்ளீஸ்..!!"
அவன் அவ்வாறு சொன்னதும், எல்லோருமே சட்டென முகம் மாறினர். குழப்ப ரேகைகள் ஓடுகிற முகத்துடன் அனைவரும் அசோக்கை ஏறிட்டனர்.
"ஏய்.. என்னடா இப்படி சொல்லிட்ட..?? நீ ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்க.. அதுமட்டும் இல்லாம அவளையும் ஐ லவ் யூ சொல்ல வச்சிருக்க..?? எவ்வளவு பெரிய விஷயம் இது..?? இதவிட எங்களுக்கு வேற என்னடா பெரிய சந்தோஷம் இருக்க முடியும்..?? இந்த அளவுக்கு கூட நாங்க சந்தோஷப்படலன்னா எப்படி.??" மணிபாரதி மகனிடம் கேட்டார்.
"உங்களுக்கு சந்தோஷமா இருக்கு.. எ..எனக்கு என்னவோ கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!!"
"ப்ச்.. நீயும் அவளை லவ் பண்ற.. அவளும் உன்னை லவ் பண்றேன்னு வாய் விட்டு சொல்லிட்டா.. அப்புறம் என்ன உறுத்தல் உனக்கு..??" சங்கீதா அண்ணனிடம் குழப்பமாய் கேட்டாள்.
"ஒருவேளை.. அந்தப் பொண்ணோட குடும்பத்துல இருக்குறவங்க.. இந்த காதலை ஒத்துக்குவாங்களோ இல்லையோன்னு பயப்படுறானோ என்னவோ..?? ஏண்டா அப்படியா..??"
பாட்டி தன் மனதில் இருந்த சந்தேகத்தை பேரனிடம் கேட்டாள். அவள் அவ்வாறு கேட்டதும், இப்போது தாத்தா பலத்த சிரிப்புடன் ஆரம்பித்தார்.
"ஹாஹாஹாஹா..!! ஏன் அசோக்கு.. அதை நெனைச்சா மனசை போட்டு கொழப்பிக்கிற..?? நம்ம கிஷோர் வீட்டுல கூடத்தான்.. ஆரம்பத்துல நம்ம சங்கீதாவை ஏத்துக்கல.. 'காதலாவது கத்திரிக்காயாவது'ன்னு அவரு அம்மா கெடந்து குதிச்சாங்க..!! அப்புறம்.. நம்ம குடும்பத்துல எல்லாரும் அவங்கட்ட பக்குவமா பேசி.. நேரா போய் அவங்களை பாத்து எடுத்து சொல்லி.. எப்படி எப்படி எல்லாமோ போராடி.. கொஞ்சம் கொஞ்சமா அவங்க மனசை கரைக்கலையா..?? இப்போ அந்த அம்மாவே 'உங்க குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்'னு வாயார சந்தோஷமா சொல்றாங்க..!! உன் விஷயத்தை மட்டும் சும்மா விட்ருவோமா..?? உனக்கு நாங்கல்லாம் இருக்கோம்டா.. நாம குடும்பத்தோட போய் நாலு வார்த்தை பேசினாலே.. யாருக்குமே நம்மள புடிச்சு போகும்..!! இதுக்குலாமா கவலைப்படுறது..??"
"ஐயோ நான் அதுக்குலாம் கவலைப்படல தாத்தா..!!" அசோக் சற்றே எரிச்சலாக சொன்னான்.
"அப்புறம் என்னடா..??" அத்தனை நேரம் அமைதியாக இருந்த பாரதி இப்போது அசோக்கின் முகத்தை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள்.
"எனக்கும் அந்தப் பொண்ணை பத்தி எதுவும் தெரியாது.. அவளுக்கும் என்னைப் பத்தி எதுவும் தெரியாது.. ஆனா ரெண்டு பேரும் ஐ லவ் யூ மட்டும் சொல்லிக்கிட்டோம்..!! நானும் அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல என் காதலை சொல்வேன்னு நெனைக்கல.. அவளும் திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொல்வான்னு எதிர்பார்க்கல.. அ..அதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!! ஏதோ.. எக்ஸாம்க்கு போய்ட்டு எம்ப்ட்டி பேப்பர் நீட்டிட்டு வந்தவனுக்கு.. சென்டம்னு ரிசல்ட் வந்த மாதிரி இருக்கு..!!" அசோக் அந்தமாதிரி குழப்பம் அப்பிய முகத்துடன் சொல்ல, அவனையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த பாட்டி, இப்போது ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தாள்.
"ஹ்ஹ்ம்ம்.. என்ன விஷயம்னு இப்போ எனக்கு கொஞ்சம் புரியுது..!! உன் குழப்பம் போறதுக்கு பாட்டி ஒன்னு சொல்லட்டுமா..??"
"என்ன..??"
"காதலை பத்தியும், காதலிக்கிறவங்கள பத்தியும்.. காதலை சொல்றதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்குறதை விட.. காதலை சொன்னதுக்கப்புறம் தெரிஞ்சுக்குறதுதான் அதிகம்..!! அப்படி காதலை புரிஞ்சுக்கிட்டவங்கதான் உலகத்துல அதிகம் பேர்..!!" பாட்டி அவ்வாறு தனது அனுபவப்பாடத்தை மிக எளிமையாக சொல்ல, அவளுடைய மகன் மணிபாரதி தன் அம்மாவை புன்னகையுடன் ஆமோதித்தார்.
"ம்ம்.. கரெக்டா சொன்னம்மா..!!" என்றவர் உடனே மகனிடம் திரும்பி,
"ஏண்டா.. இன்னைக்கு காதலை சொன்னதுக்காக, நாளைக்கே உனக்கு கல்யாணம்ன்ற மாதிரில நீ பேசுற..?? இப்போ என்ன ஆகிப் போச்சு..?? ரெண்டு பேரும் பேசுங்க.. பழகுங்க.. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கங்க.. காதல்னா என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க..!! அப்புறமா.. கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு உங்களுக்கு தோணுறப்போ, எங்ககிட்ட வந்து சொல்லுங்க.. நாங்க அந்தப் பொண்ணோட ஃபேமிலி கூட பேசி.. எந்த பிரச்னையும் இல்லாம உங்க கல்யாணத்தை முடிச்சு வைக்கிறோம்..!! அவ்வளவுதான.. அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கொழப்பம்..?? மனசை போட்டு அலட்டிக்காம.. நல்லா சந்தோஷமா இருடா..!! ம்ம்... சாப்பிடு.. சாப்பிடு..!!"
உலகத்திலேயே மிக மிக சிறிய பிரச்சினை அதுதான் என்பது போல.. மிக மிக சிம்பிளான தீர்வு ஒன்றை சொல்லி.. அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மணிபாரதி..!!
சந்தோஷத்தை வெளிப்படுத்தியதோடும், அசோக்கை சமாதானப் படுத்தியதோடும் மட்டும், வீட்டில் இருப்பவர்கள் திருப்தி அடைந்து விடவில்லை. ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த வகையில், அசோக்கின் காதலுக்கு டிப்ஸ் கொடுத்தனர்..!!
"அந்தப் பொண்ணை அடிக்கடி வெளில கூட்டிட்டு போ.. அவ ஏதாவது ஆசைப்பட்டு கேட்டா யோசிக்காம வாங்கிக்குடு..!! இப்போ காதலிக்க ஆரம்பிச்சாச்சு.. இன்னும் காசை பாத்துக்கிட்டு கஞ்சப் பிசினாரியா இருக்காத..!! உன்னை நம்பி ஒரு பொண்ணு.. அவ வாழ்க்கையை உன்கிட்ட ஒப்படைக்க நெனைச்சிருக்கா.. அவளை சந்தோஷமா வச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு..!! புரியுதா..??" அசோக்கின் தலையில் நறுக்கென்று குட்டியவாறே சொன்னாள் பாரதி.
"இதுலாம் டாடி எழுதுனதுலயே பெஸ்ட் ரொமாண்டிக் நாவல்ஸ்டா அசோக்.. இத்தனை நாளா உனக்கு இதுலாம் பிடிக்காம இருந்திருக்கலாம்.. இப்போ படிச்சு பாரு.. ரசிகர்கள் ஏன் என்னை காதல்க்கதை சக்கரவர்த்தி அப்டின்னு புகழ்றாங்கனு புரிஞ்சுப்ப..!! ஏகப்பட்ட ரொமான்ஸ் டிப்ஸ்.. எக்கச்சக்கமா கொட்டி கெடக்கும்.. உனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!!" ஒரு நாற்பது ஐம்பது நாவல்களை கைகொள்ளாமல் அள்ளிவந்த மணிபாரதி, அசோக்கின் கட்டிலில் இறைத்து சென்றார்.
"ஜஸ்ட் பிஃப்ட்டித்ரீ ருபீஸ்.. ஒரே ஒரு நம்பர் மட்டும் சூஸ் பண்ணிக்கலாம்.. அந்த நம்பரோட மட்டும் அன்லிமிட்டட் ஃப்ரீ டாக்டைம்..!! பேசலாம் பேசலாம்.. பேசிக்கிட்டே இருக்கலாம்..!! நானும் கிஷோரும் இந்த ப்ளான்தான் யூஸ் பண்றோம்.. உனக்கும் அண்ணிக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!! ட்ரை பண்ணிப்பாரு..!!" அதற்குள்ளாகவே மீராவை உறவு கொண்டாட ஆரம்பித்திருந்த சங்கீதா, ஏதோ ஒரு மொபைல் நெட்வொர்க் கம்பனியின் ப்ளானை, இலவசமாக மார்கெட்டிங் செய்தாள்.
"இதை சாதாரண வளையம்னு நெனைக்காத.. உங்க ரெண்டு பேரோட நெருக்கத்துக்கு இது ஒரு சனியன்.. இதை கழட்டி எடுத்தாத்தான், பின்னாடி உக்கார்ற அவளுக்கு பிடிமானம் இருக்காது.. பேலன்ஸ்க்கு உன்னை புடிச்சுப்பா..!!"
அசோக்கின் பைக் பின் சீட்டுக்கு அருகே இருந்த அந்த ஸ்டீல் வளையத்தை, ஸ்பானர் உதவியுடன் கழட்டிக்கொண்டே தாத்தா கண்ணடித்தார். அசோக்கோ நெற்றியை பிசைந்து கொண்டான்.
சாப்பிடும்போது அசோக் எழுப்பிய விஷயத்தை மற்றவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பாரதி அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை. கணவர் சொன்ன தீர்வில் மகன் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்பதை, அவனுடைய முகத்தை பார்த்தே புரிந்து கொண்டாள். ஆனால் அப்போதே அத்தனை பேர் முன்னிலையிலும் அவனை துருவி துருவி கேட்க அவள் விரும்பவில்லை. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, அன்று இரவு அவளுடைய மடியில் அவன் தலை சாய்த்திருந்த வேளையில், அவனது தலை முடியை கோதி விட்டவாறே மெல்ல கேட்டாள்.
"அப்போ ஏண்டா அப்படி சொன்ன...?"
"எ..எப்படி..??"
"மனசுல ஏதோ உறுத்தல்.. ஏதோ கொழப்பம்.. அப்டின்னு..!!"
பாரதி அவ்வாறு கேட்கவும், அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். பிறகு அன்று புட்ஃகோர்ட்டில் நடந்த விஷயங்களை அம்மாவிடம் சுருக்கமாக எடுத்துரைத்தான். அசோக் சொன்னதை எல்லாம் பாரதி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். கேட்டு முடித்தபிறகும் அவள் அமைதியும், யோசனையுமாக இருக்க, அசோக்கே தொடர்ந்தான்.
"நானாவது வேற வழி இல்லாம ஐ லவ் யூ சொன்னேன்.. அவ கைல காசு இல்லாம காதலிக்கிறேன்னு சொல்லிட்டாளோன்னு.. கன்ஃப்யூஸ்டா இருக்கு மம்மி..!!" மகன் பரிதாபமாக சொன்னவிதம், பாரதிக்கு சிரிப்பை வரவழைத்தது.
"ஹாஹாஹாஹா...!! ச்சே.. ச்சே.. அப்படிலாம் எதுவும் இருக்காதுடா..!! நீ ஏன் அப்படி நெனைக்கிற.. மொத நாளே உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டான்னு நெனச்சுக்கோ..!!"
"இல்ல மம்மி.. உனக்கு புரியல..!! நான் அவ கேரக்டர் பத்தி நெனச்சு வச்சிருந்ததுக்கும்.. அவ திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொன்னதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்ல.. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு..!!"
"ப்ச்.. அதான் அவளும் உன்னை அடிக்கடி அங்க பாத்திருக்கேன்னு சொல்லிருக்காள்ல..?? உன் மனசுல ஒரு ஆசை இருந்த மாதிரி.. அவ மனசுலயும் அதே ஆசை இருந்திருக்கும்..!!"
"ம்ம்ம்... உன் லாஜிக்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா எனக்குத்தான் மனசு சமாதானம் ஆக மாட்டேன்னுது..!!"
"அடடா... இதுக்குப்போய் ஏன் இப்படி ஃபீல் பண்ற..?? ம்ம்ம்ம்.... சரி.. அவதான் ஃபோன் நம்பர் குடுத்திருக்காள்ல.. நீ சந்தேகப்படுற மாதிரிலாம் இருந்தா, அவ ஏன் ஃபோன் நம்பர்லாம் குடுக்கணும்..??" அம்மா அந்தமாதிரி கேட்கவும், இப்போது அசோக்கிற்கும் 'அதான..??' என்று தோன்றியது.
"நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. அவகூட பேசு..!! அவ மனசுல என்ன இருக்குன்னு தெளிவா கேட்டு புரிஞ்சுக்கோ..!!"
பாரதி இதமான குரலில் சொல்லிவிட்டு அமைதியானாள். அசோக்கின் மனதிலும் இப்போது குழப்பம் நீங்கி ஒருவித நிம்மதி பரவியது. அந்த நிம்மதியுடன் சேர்ந்து புதுவித ஆசையும் இப்போது அவனது மனதுக்குள் முளைத்தது. 'மீராவுக்கு இப்போது ஃபோன் செய்து பேசினால் என்ன..??' என்ற ஆசை. அந்த ஆசைவந்ததுமே அசோக்கின் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற ஆரம்பித்தது. உடனே அவளுடைய குரலை கேட்க வேண்டும் என்றொரு உந்துதல் உள்ளத்துக்குள் உருவாகியது. தலை கோதி விட்டுக்கொண்டிருக்கிற அம்மாவை, மெல்லிய குரலில் அழைத்தான்.
"மம்மி...!!"
"ம்ம்...??"
"உ..உனக்கு தூக்கம் வரலையா..??"
"இல்ல.. ஏன் கேக்குற..??"
"பதினோரு மணியாக போகுதே..??"
"பரவாலடா.. படுத்துக்கோ.. நீ தூங்குனப்புறம் மம்மி போறேன்..!!"
"இ..இல்ல மம்மி.. நான் தூங்கிக்கிறேன்.. நீ கெளம்பு.. டாடி வெயிட் பண்ணிட்டு இருக்க போறாரு..!!"
"ஹாஹா.. அவர்லாம் அப்போவே தூங்கிட்டாரு.. நீ படுத்துக்கோ..!!"
"ஐயோ.. நான்தான் தூங்கிக்கிறேன்னு சொல்றேன்ல.. நீ கெளம்பு.. உன் ரூமுக்கு போ..!!"
மகனுடைய குரலில் தொணித்த எரிச்சலை உணர்ந்த பாரதி, இப்போது அவனை வித்தியாசமாக பார்த்தாள். எப்போதும் 'நான் தூங்கும்வரை இருந்துவிட்டு செல்' என்று ஏக்கமாய் சொல்கிறவன், இன்று 'போ.. போ..' என்று விரட்டுகிறானே..?? குழப்பத்துடனே அசோக்கின் முகத்தை வியப்பாக பார்த்தாள். ஓரிரு விநாடிகள்தான். மகனுடைய கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தை கண்டுகொண்டதும், காரணம் புரிந்து போனது பாரதிக்கு. உடனே அவனுடைய காதை பிடித்து திருகியவள், ஒரு போலிக்கோபத்துடன் சொன்னாள்.
"திருட்டுப்பயலே.. 'என் ஆளோட பேசப்போறேன், எந்திரிச்சு போ'ன்னா.. போயிட்டு போறேன்.. அதுக்கு ஏன்டா என்னன்னவோ சொல்ற..??"
"ஐயையோ.. அ..அதெல்லாம் ஒன்னுல்ல மம்மி.. நான் ஒன்னும் இப்போ அவகூட பேசப்போறது இல்ல.. நா..நாளைக்கு பேசிக்கிறேன்..!!"
"ம்ம்.. ம்ம்.. தெரியும் தெரியும்.. நடிக்காத..!! சரி.. நான் கெளம்புறேன்.. எவ்வளவு நேரம் வேணா நீ பேசிக்கோ..!!"
சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க, இப்போது அசோக் பதில் ஏதும் சொல்லாமல் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டான். பாரதி அவனுடைய அறையை விட்டு வெளியேறினாள். அசோக் அதன்பிறகும் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அப்புறம் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான். எல்லோரும் அவரவர் அறைகளில் அடைந்து விட்டார்களா என்று, அப்படியும் இப்படியுமாய் பார்வையை வீசி உறுதி செய்து கொண்டான். திருப்தியானவன், மீண்டும் தன் அறைக்குள் வந்து தாழிட்டுக் கொண்டான். வேறொன்றும் இல்லை.. அவன் தனது காதலியுடன் பேசுவதை வேறு யாராவது ஒட்டுக் கேட்டு, அவனை கேலி செய்துவிட்டால்..??
மெத்தையில் விழுந்தவன், தனது செல்போனை எட்டி எடுத்தான். மீரா தந்த எண்ணுக்கு டயல் செய்தான். தொண்டையை ஒருமுறை செருமியவன், செல்போனை காதில் வைத்துக்கொண்டான். அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்படுவதற்காக, ஒருவித படபடப்புடன் காத்திருந்தான்.
"கிர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்..."
ரிங் சென்று கொண்டே இருந்தது. சிலவினாடிகள். பிறகு யாராலும் பிக்கப் செய்யப்படாமலே கட் ஆனது. அசோக்கிற்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது. மீண்டும் முயன்றான். மீண்டும் அதே ரிசல்ட்..!! மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்..!! ஒரு ஐந்தாறு முறை முயன்றவன், பிறகு அலுத்துப்போனான். 'ச்சே...' என்று எரிச்சலாக, செல்போனை மெத்தையின் ஓரமாக விட்டெறிந்தான். 'ப்ச்.. என்னது இது.. மொத மொத பேசணும்னு நெனைக்கிறப்போ.. இப்படி ஆயிடுச்சு..' என்று சலிப்பை உதிர்த்தான். அப்படியே படுக்கையில் சாய்ந்து புரண்டு படுத்துக் கொண்டான். கண்கள் மூடி சிறிது நேரம் அமைதியாக கிடந்தான்.
ஒரு ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அவனுடைய செல்போன் அலறியது. உடனே அசோக் பரபரப்பாக எழுந்தான். 'மீராவாகத்தான் இருக்கவேண்டும்..' என்று எண்ணியவன், சந்தோஷமும் பதற்றமுமாய் செல்போனை எட்டி எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்ததும் ஏமாற்றமும், குழப்பமுமாய் நெற்றி சுருக்கினான். வேறு ஏதோ புதிய எண்ணிலிருந்து கால்..!! 'யாராக இருக்கும்.. இந்த நேரத்தில்..??' என்று ஒருகணம் யோசித்தவன், பிறகு கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான்.
"ஹலோ..!!" என்றான்.
"ஹலோ.. யாருங்க நீங்க..??" - அடுத்த முனையில் ஒரு தடித்த ஆண்குரல்.
"என்னங்க இது.. எனக்கு கால் பண்ணிட்டு என்னையே யார்னு கேக்குறீங்க..?? மொதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க..!!"
"என் பேரு வாசு..!! உங்க நம்பர்ல இருந்து 98414 16476-ன்ற நம்பருக்கு.. ஒரு ஆறு மிஸ்ட் கால் வந்திருக்கு.. அதான் நீங்க யார்னு.."
அந்த ஆள் கேட்க, அசோக்கின் உடம்பில் உடனடியாய் ஒரு உதறல்..!! 'ஒருவேளை மீராவின் அப்பாவாக இருக்குமோ..?? ஐயையோ.. இப்போது எப்படி பேசி சமாளிப்பது..??'
"ஓ.. அ..அதுவா.. அ..அது.. மீ..மீ..மீராவோட நம்பர்ல..." அசோக் தடுமாறினான்.
"ஆமாம்..!!!! நான் அவளோட புருஷன்தான் பேசுறேன்.. என் பொண்டாட்டிக்கு இந்த நேரத்துல எதுக்கு நீ கால் பண்ணுனன்னு தெரிஞ்சுக்கலாமா..??" அசோக் இப்போது பக்கென அதிர்ந்து போனான்.
"எ..என்னது..??? பொண்டாட்டியா...???" காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் கத்தினான்.
"ப்ச்.. ஆமாண்டா...!!! யார்டா நீ..??? உனக்கு எப்படி இந்த நம்பர் கெடைச்சது..??" அசோக்கின் தடுமாற்றத்தை உணர்ந்து அந்த ஆள் மரியாதையை வெகுவாக குறைத்துக் கொண்டான்.
"அ..அது.. அ..அவங்கதான் குடுத்தாங்க.."
"ஓஹோ..?? அவளே குடுத்தாளா..?? ம்ம்.. எத்தனை நாளா உங்களுக்குள்ள பழக்கம்..??"
"இ..இப்போதான்.. கொ..கொஞ்ச நாளா.."
"ம்ம்.. நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு..!! எங்கல்லாம் ஊர் சுத்திருக்கீங்க ரெண்டு பேரும் .. எனக்கு தெரியாம என்னல்லாம் செஞ்சிருக்கீங்க..?? ம்ம்..?? கேக்குறேன்ல.. சொல்லுடா..!!!!" வாசு ஆத்திரமாய் கத்த, அசோக் மிரண்டு போனான்.
"ஐயோ ஸார்.. எ..எனக்குலாம் எதுவும் தெரியாது.. அவங்களுக்கு கல்யாணம் ஆனது கூட எனக்கு தெரியாது.. அ..அவங்கதான் என்னை ரொம்ப நாளா சைட் அடிச்சேன்.. காதலிக்கிறேன்லாம் சொன்னாங்க.."
"ஓ.. காதலிக்கிறேன்னு சொன்னாளா அந்த கருவா சிறுக்கி..?? வச்சுக்குறேன் அவளை..!! சரி.. உன் பேர் அட்ரஸ் சொல்லு.. உன்னை நான் நேர்ல பாக்கணும்..!!"
"இ..இங்க பாருங்க ஸார்.. நீங்க நெனைக்கிற மாதிரி தப்பா எதுவும் நடக்கல..!!"
"தப்பா சரியான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்டா.. நீ உன் அட்ரஸ் குடு..!!" வாசுவின் குரலில் உக்கிரம் ஏறியிருக்க, அதற்கு மேலும் பேச்சை தொடர அசோக்கிற்கு விருப்பம் இல்லை.
"ஸார்.. நான்தான் என்மேல தப்பு எதுவும் இல்லன்னு சொல்றேன்ல.. எதுவா இருந்தாலும் உங்க வொய்ஃப்ட்டயே கேட்டுக்கங்க.. என்னை ஆளை விடுங்க..!!"
அவசரமாய் சொல்லிவிட்டு அசோக் காலை கட் செய்தான். உடனே வாசுவின் எண்ணிலிருந்து இவனுக்கு மீண்டும் கால் வர, அதை பிக்கப் செய்யாமல் தவிர்த்தான். செல்ஃபோன் ஒரு அரை நிமிடம் அலறிவிட்டு அமைதியானது. அது அமைதியாகி நெடுநேரம் ஆகியும் அசோக்குடைய இதயத்தில் ஏறியிருந்த படபடப்பு மட்டும் அடங்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு எதுவுமே புரியவில்லை அவனுக்கு..!!
'மீராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதா..?? அப்புறம் ஏன் அதை என்னிடம் மறைத்தாள்..?? ச்சே.. எப்படி எல்லாம் பேசி என்னை ஏமாற்றிவிட்டாள்..?? நானும் தேவையற்ற கற்பனைகளை எல்லாம் மனதில் வளர்த்துக் கொண்டேனே..??' என்று ஆரம்பத்தில் நினைத்தவனுக்கு திடீரென ஒருவிஷயம் புத்தியில் பளிச்சிட்டது. 'வெயிட்.. வெயிட்.. அந்த ஆள் கருவா சிறுக்கி என்றானே.. மீராவின் கலருக்கும் அந்த கமென்ட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே..?? ஒருவேளை இப்படி இருக்குமோ.. நான் கால் செய்தது மீராவின் நம்பரே இல்லையோ..?? ராங் காலா அது..?? இல்லையே.. நான் மீரா என்றதுமே 'நான் அவளோட புருஷன்' என்றானே அந்த வாசு..?? ஒருவேளை இது வேறொரு மீராவாக இருக்குமோ..?? ஒன்றும் புரியவில்லையே..??'
அசோக்கின் மனதில் பலப்பல குழப்பமான கேள்விகள்..!! மீரா தனக்கானவள் என்று முடிவே செய்துவிட்ட அவன் மனது, அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை நம்ப மறுத்தது. 'இது.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்..' என்று திரும்ப திரும்ப சொல்லி தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். படுக்கையில் வீழ்ந்தவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.
அவனுடைய வேண்டுதல் கடவுள் காதில் விழுந்தது போல, நள்ளிரவில் அவனுடைய நம்பருக்கு அந்த கால் வந்தது. மீரா என்று அவன் சேகரித்து வைத்திருந்த நம்பரில் இருந்து..!! ஒருவித குழப்பத்துடனே கால் பிக்கப் செய்து பேசினான்.
"ஹலோ..!!" என்றான் மெலிதான பதற்றத்துடனே.
அவ்வளவுதான்..!! அடுத்த முனையில் ஒரு கர்ண கொடூரமான பெண்குரல் படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தது. அந்தக் குரலை கேட்ட அடுத்த நொடியே, அது தன்னுடைய மீரா இல்லை என்று அசோக்கிற்கு புரிந்து போனது. ஆனால் அதற்காக சந்தோஷப் பட முடியாமல், அந்தப்பெண் வண்டை வண்டையாக அசோக்கை வறுத்தெடுத்தாள்.
"ஏய்ய்.. டொச்சு.. யார்றா நீ..?? என் போனுக்கு கால் பண்ணி கீற..??"
"ஹலோ.. கொ..கொஞ்சம் மரியாதையா பேசுங்க.."
"அடிங்.. கொய்யால... உன்கு இன்னாடா மருவாதி என் டோமரு.. பேமானி..!! இன்னாடா சொல்லிக்கின அந்தாளாண்ட..??"
"ஹையோ.. நா..நான்... நான்லாம் ஒன்னும் சொல்லலை.."
"ஏய்ய்.. இன்னா.. என்னான்டயே டபாய்கிறியா..? அப்டியே வுட்டேன்.. பல்ப்பு பீஸாப் போடும்..!! அந்தாளே ஒரு கொரங்கு கம்னாட்டி.. அந்த கொரங்குக்கு கோட்டர் ஊத்தி விட்டுனுக்குற நீயி.. கோச்சுக்குனு போயிட்டான் இப்போ..!! அல்லாம் உன்னால.. பாடு.. பன்னாடை.. பொறம்போக்கு..!!"
"ஹலோ.. திட்டாதீங்க ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. ஆக்சுவலி இட்ஸ் நாட் மை ஃபால்ட்.. இட்ஸ் ஜஸ்ட் எ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!"
"ஏய்ய்.. அல்லாம் பண்ணிட்டு இன்னா பீட்டர் வுட்னுகிற..?? அந்தாள் மட்டும் திரும்ப வரல.. மவன உன் மாஞ்சாசோத்தை கீறி துன்னுருவேன்.. சொல்ட்டேன்..!! சோமாறி.. கயித.. கஸ்மாலம்.."
அசோக்கால் அதன்பிறகும் அவளுடைய வசவுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. படக்கென காலை கட் செய்தான். உதடுகள் குவித்து 'உஃப்.. உஃப்.. உஃப்..' என்று ஊதிக்கொண்டான். மீண்டும் அந்தப் பெண்ணிடம் இருந்து கால் வர, 'இது வேலைக்காவாது' என்று முடிவு செய்த அசோக், செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான். தூக்கி ஓரமாக போட்டுவிட்டு, படுக்கையில் விழுந்தான். போர்வையால் தன் உடலை முழுவதுமாக மூடிக் கொண்டான். இமைகளை இறுக்க மூடிக்கொண்டு உறங்கிப்போக முயன்றான்.
'ச்சே.. என்ன பெண் இவள்..?? இவளை எல்லாம் எப்படி கட்டி மேய்க்கிறான் அந்த வாசு..?? ப்ச்... அந்த மீரா ஏன் இப்படி செய்தாள்..?? வேறு யாருடைய நம்பரையோ எனக்கு கொடுத்து.. ச்சே.. அவளால் எவ்வளவு டென்ஷன்..?? இப்படி ஒரு நல்ல.. இல்லை இல்லை.. ஒரு கேவலமான தம்பதிகளின் பிரிவுக்கு காரணமாகி விட்டேனே..??'
எரிச்சலிலும் குழப்பத்திலும் தவித்தவன், எப்படியோ அன்று இரவு உறங்கிப் போனான். காலையில் குளித்து முடித்து ஆபீஸுக்கு கிளம்பும் போதுதான், ஆஃப் செய்து வைத்திருந்த செல்ஃபோனை எடுத்து, மீண்டும் ஆன் செய்தான். அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, உடனே செல்போன் அலறியது. ஏதோ ஒரு புது எண்ணிலிருந்து கால்..!! எடுக்கலாமா வேணாமா என்று ஒருகணம் யோசித்தவன், பிறகு பிக்கப் செய்தான்.
"ஹலோ..!!"
"ஹலோ..!!" அடுத்த முனையில் ஒரு மென்மையான பெண்குரல்.
"ம்ம்.. யாரு..??"
"நான் யார்னு உங்களுக்கு தெரியாது.. நீங்க யார்னும் எனக்கு தெரியாது.. ஆனா உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கேன்..!! உங்களாலதான் இன்னைக்கு என் புருஷன் எனக்கு திரும்ப கெடைச்சிருக்காரு.. என் புருஷன்ட்ட உண்மைலாம் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க..!!" அந்தப்பெண் பேசிக்கொண்டே போக, அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.
"ஹலோ.. நீங்க யார் பேசுறீங்கன்னு மொதல்ல சொல்லுங்க..!!"
"நான் மிசஸ் வாசு பேசுறேன்.. நேத்து என் ஹஸ்பன்ட் கூட நீங்க பேசுனிங்க.. கரெக்டா..??" அந்தப் பெண் கேட்க, இப்போது அசோக் குழப்பத்துடன் நெற்றியை சுருக்கினான்.
"ஓ.. நீங்கதான் அவர் மிசஸா..?? அப்போ நேத்து நைட்டு எனக்கு கால் பண்ணி என்னை திட்டுனது..??"
"தெ..தெரியலையே.. நான் காலைல இருந்து உங்க நம்பருக்கு ட்ரை பண்ணி.. இப்போத்தான் கெடைச்சது..!!"
"இல்லைங்க.. அவங்களதான் வொய்ஃப்னு மிஸ்டர் வாசு சொன்னாரு..!!"
"ஓ.. அந்த பஜாரியா..??"
"கரெக்டா சொன்னிங்க.. யாருங்க அது..??"
"எ..என்ன கேக்குறீங்க நீங்க.. அவ யார்னே உங்களுக்கு தெரியாதா..?? அப்புறம் எப்படி..???? எ..எனக்கு ஒன்னும் புரியல..!!"
"எனக்கும் ஒண்ணுமே புரியலைங்க..!! ஆக்சுவலா தப்பு என் மேலதான்.. தப்பான நம்பருக்கு கால் பண்ணிட்டேன்.. அப்புறம் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!"
என்று ஆரம்பித்த அசோக், முதல் நாள் இரவு நடந்த விஷயங்களை அந்த பெண்ணுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான்.
"அந்த மீராதான் இந்த மீரான்னு நெனச்சுட்டு.. நான் பாட்டுக்கு என்னன்னவோ சொல்லிட்டேன்..!!" அசோக் சொல்ல, அந்தப்பெண் இப்போது சிரித்தாள்.
"ஹாஹா.. எனக்கு இப்போ நல்லா புரிஞ்சு போச்சு.. ஹாஹா.. ஹையோ ஹையோ..!!"
"என்னங்க.. சிரிக்கிறீங்க..??"
"நீங்க மீரான்னு சொன்னது.. என் வீட்டுக்காரர் காதுல மீனான்னு விழுந்திருக்கும் போல..??"
"மீனாவா..?? அது யாரு..??"
"நேத்து உங்களுக்கு கால் பண்ணி திட்டுனான்னு சொன்னீங்களே.. அவதான்..!! சரியான எடுபட்ட சிறுக்கி.. இத்தனை நாளா என் புருஷனை மயக்கி வச்சிருந்தா.. நேத்து உங்கட்ட பேசுனப்புறம் என் புருஷனுக்கும் அவளுக்கும் பயங்கர சண்டை போல.. இப்போ அவரு எங்கிட்டயே திரும்ப வந்துட்டாரு.. 'அவளை பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டேன் துளசி.. இனிமே நீதான் எனக்கு எல்லாம்'னு.. நடுராத்திரில வீட்டுக்கு வந்து அழுவுறாரு..!! ஹ்ம்ம்... எப்படியோ.. உங்களோட ராங் காலால எனக்கு என் வாழ்க்கை திரும்ப கெடைச்சிடுச்சு.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. உங்க உதவியை இந்த தங்கச்சி எப்போவும் மறக்க மாட்டேன்..!!"
அந்த துளசி 'அண்ணா.. அண்ணா..' என்று அன்பை பொழிந்துவிட்டு, இணைப்பை துண்டித்தாள். அவளுடன் பேசிமுடித்த பிறகுதான், அசோக்கிற்கு நேற்று இரவு தொலைந்து போன உற்சாகம் திரும்ப கிடைத்தது. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று தோன்றியது. தவறான அழைப்பினால் சரியானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். மீரா தவறான நம்பர் கொடுத்துவிட்டாளே என்ற எரிச்சல் கூட அவனிடமிருந்து அப்போது மறைந்து போனது.
அந்த சந்தோஷத்துடனே சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்பினான். பைக்கில் வடபழனியை அடைந்து, சிக்னலுக்காக காத்திருந்த போது, அவனுடைய செல்போன் மீண்டும் பதறியது. மீண்டும் ஒரு எண்ணிலிருந்து கால்..!! இந்த முறை எந்த தயக்கமும் இல்லாமல், இயல்பாக அந்த காலை அட்டண்ட் செய்தான்..!! அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அடுத்த முனையில் ஒரு ஆள், ஆத்திரமாக சீறினான்.
"டேய்.. யார்டா நீ.. எந்த ஊரு உனக்கு..?? எங்க மீனாக்கா அந்த ஆளை எவ்ளோ கஷ்டப்பட்டு உஷார் பண்ணி வச்சிருந்தது தெரியுமா..?? ஒன்னு ஒன்னா அவன் சொத்துலாம் உருவலாம்னு ப்ளான் போட்ருந்தோம்.. இப்படி ஒரே கால்ல எல்லாத்தையும் காலி பண்ணிட்டியேடா நாதாரி..?? உன்னை நாங்க சும்மா விட மாட்டோம்டா..!!"
"ஹலோ.. நா..நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கங்க.. அ..அதுலாம் நான் வேணும்னு பண்ணல.. எல்லாம் ஒரு.."
"ஏய்.. மூட்றா.. பேசுன.. பேத்துடுவேன்..!! நான் சொல்றதை மட்டும் தெளிவா கேட்டுக்கோ.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எங்களுக்கு தெரியாது.. நாளைக்கு நைட்டு நாங்க சொல்ற எடத்துக்கு பத்து லட்ச ரூவா பணத்தோட வர்ற.. என்ன.. புரியுதா..??"
"என்னது..?? பத்து லட்சமா..??"
"ஆமாம்.. நீ பண்ணுன காரியத்துக்கு ஃபைனு..!!" அந்த ஆள் கூலாக சொல்ல, அசோக் டென்ஷன் ஆனான்.
"யோவ்.. என்ன வெளையாடுறியா..?? பணம் வேணுமாம்ல..?? பணம்லாம் ஒன்னும் தர முடியாது.. வேணுன்னா ஒரு ஸாரி சொல்லிக்குறேன்..!! ஸாரி..!!!! ஓகேவா..??" இப்போது அந்த ஆள் டென்ஷன் ஆனான்.
"என்னது.. ஸாரியா..?? என்னடா.. கொழுப்பா உனக்கு..?? என்ன கேட்டுட்டு இருக்குறோம்.. என்ன சொல்லிட்டு இருக்குற நீ.. பத்து லட்சம் எங்க இருக்கு.. உன் பிஸ்கோத்து ஸாரி எங்க இருக்கு..?? பணம் வரலன்னா உன் உசுரு உனக்கு இல்ல மவனே.. ஞாபகம் வச்சுக்கோ.. நீ எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு உன்னை போட்டுத்தள்ளாம விடமாட்டோம்..!!"
"யோவ்.. இந்த மெரட்டலுக்குலாம் நான் பயப்பட மாட்டேன்.. பணம்லாம் தர முடியாது.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ.. போ..!!"
அசோக் கெத்தாக சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தான். திரும்பவும் அதே நம்பரில் இருந்து கால் வர, கண்டுகொள்ளாமல் செல்போனை பாக்கெட்டில் போட்டான். 'நன்னாரிப்பயலுக.. ஒத்தை ராங் கால் பண்ணதுக்கு பத்து லட்சம் ஃபைனாம்.. ரொம்பத்தான் ஆசையெடுத்து அலையுரானுக..!!' என்று மனதுக்குள்ளேயே அந்த ஆளை திட்டியவாறு, எரிச்சலுடன் சிக்னலை ஏறிட்டான். இன்னும் சிவப்புதான் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!!
அப்போதுதான் அவனுக்கு பக்கவாட்டில் வெண்ணிற அந்த டாடா சுமோ வந்து சரக்கென்று நின்றது. உள்ளே தடிதடியாய் நான்கைந்து ஆட்கள். ஒருத்தன் முகத்திலும் கடுகளவு கூட கண்ணியம் இல்லை. எல்லோரும் கரடுமுரடு ஆசாமிகளாக காட்சியளித்தனர். சிக்னலுக்காக நின்றவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ள, கவனம் கலைந்த அசோக் அவர்களை திரும்பி பார்த்தான்.
"என்னடா ஆச்சு..??"
"எடுக்க மாட்டேன்றான் மாமு..!! என்ன பண்ணலாம்..??"
"பரவால விடு.. நம்ம எஸ்.ஐட்ட அந்த நம்பரை குடுத்து, அவன் அட்ரஸ் ட்ரேஸ் பண்ண சொல்லலாம்..!!"
"ங்கொய்யால.. அவன் மட்டும் பணம் தரமாட்டேன்னு மொரண்டு புடிக்கட்டும்.. அவனுக்கு என் கையாலதான் மாமு சாவு..!!"
முகத்தில் வெட்டு காயத்துடன் கொடூரமாக இருந்த அவன், சொல்லிக்கொண்டே கையிலிருந்த கத்தியால் தாடியை சொறிந்தான். அரையடிக்கும் அதிகமான நீளத்தில், அகலமாக பல்பல்லாக பளபளத்தது அந்த கத்தி..!! அதை பார்த்துக் கொண்டிருந்த அசோக் அப்படியே ஆடிப் போனான். அடிவயிறு கலங்கிப் போனது அவனுக்கு.
'ஆத்தி.. கொலைகாரப்பயலுக கூடவா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்..?? கத்தியும் கையுமால அலையுறானுக..??'
விரிந்த விழிகளுடனும், ஆவேன பிளந்த வாயுடனும் அந்த கத்தியையே சிலவினாடிகள் 'பெக்கே பெக்கே' என்று பார்த்தவன், அப்புறம் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியாவாறே, மெல்ல தலையை திருப்பிக்கொண்டான். கேஷுவலாக கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொள்வது மாதிரி பாவலாவுடன், ஒரு கையை சட்டை பாக்கெட்டுக்குள் விட்டு தன் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.
No comments:
Post a Comment