அதன்பிறகு வந்த சில நாட்கள்.. மீரா என்ற புதிருக்கான விடையை அறிந்து கொள்வதில்.. அசோக்கிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிற நாட்களாகவே அமைந்தன..!! முன்பிருந்தது போலல்லாமல்.. முற்றிலும் மாறுபட்ட ஒரு மீராவை அசோக் அந்த நாட்களில் காண நேர்ந்தது..!! அவளுடைய நடவடிக்கைகளின் அர்த்தத்தை.. அவ்வளவு எளிதாக அசோக்கால் விளங்கிக் கொள்ள முடியவில்லை..!! ஏரியின் மீது நின்று தான் பேசிய ஆவேச பேச்சு.. ஏதோ ஒருவகையில் மீராவை பாதித்திருக்கிறது என்பது மட்டுமே அசோக்குக்கு புரிந்தது..!! அது எந்தவகை பாதிப்பு.. அந்த பாதிப்பின் பலன் பாஸிட்டிவா, நெகட்டிவா.. என்பதை எல்லாம் சரியாக அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை..!!
அன்று அவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது.. ஒன்று.. மீரா தன்னை புரிந்து கொள்ளாமல் எரிந்து விழப் போகிறாள்.. இல்லை என்றால்.. தன் தவறை உணர்ந்து, மனமுருக மன்னிப்பு கேட்கப் போகிறாள்.. என்றுதான் அசோக் எதிர்பார்த்திருந்தான்..!! எதற்கும் சம்பந்தமில்லாமல்.. எங்கோ பார்த்துக்கொண்டு.. அவள் 'ச்சோ.. ச்ச்வீட்..' என்று சொன்னதை.. அவன் சற்றும் எதிர்பார்த்திரவில்லை..!! அப்படி சொல்கையில் அவளுடைய முகபாவனை வேறு.. அசோக்கை சற்று மிரள செய்திருந்தது.. அவளுடைய கண்ணீர் மட்டும் அவனுடைய மனதை பிசைவதாக இருந்தது.. ஆனால், அவளிடம் மேற்கொண்டு எதுவும் கேளாமல் மவுனமாகவே இருந்தான்..!! 'ச்சோ.. ச்ச்வீட்..' என்று சொல்லிவிட்டு.. கொஞ்ச நேரம் அமைதியாக ஆகாயத்தையே வெறித்து பார்த்துவிட்டு.. அடுத்து அவள் பேசிய வார்த்தைகள்..
"கெளம்பலாம்.. டைம் ஆச்சு..!!" என்பதுதான்.
சொல்லிவிட்டு அசோக்கை எதிர்பாராமலே, பைக் நோக்கி விடுவிடுவென நடந்தாள். அசோக்குக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதும் புரியவில்லை..!! அவஸ்தையுடன் அவளையே பார்த்தவன், பிறகு அவளின் பின்னால் நடந்தான்.. பில்லியனில் அவள் ஏறிக்கொள்ள.. பைக்கை உதைத்து கிளப்பினான்..!!
வாகன போக்குவரத்து அதிகமில்லாத தார்ச்சாலையில்.. வண்டி மிதமான வேகத்திலேயே சென்று கொண்டிருந்தது..!! ஏரியில் நனைந்த இருவரது உடல்களும்.. எதிரே வீசிய குளிர்ந்த காற்றுக்கு.. லேசாய் வெடவெடத்தன..!! அதே நேரம் இருவருடைய இதயங்களும்.. ஒருவித வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்தன..!! இருவரும் ஒரு இறுக்கமான மனநிலையுடன்.. எதுவுமே பேசாமல்தான் சென்று கொண்டிருந்தனர்..!! அசோக்தான் மீராவின் அமைதியை நெடுநேரம் பொறுக்க முடியாமல்.. முதலில் பேச ஆரம்பித்தான்..!!
"ஏ..ஏன் எதுவுமே பேசாம வர்ற..??" என்று உலர்ந்து போன குரலில் கேட்டான்.
"ஒன்னுல்ல..!!" அவளும் வறண்டு போன குரலில் பதில் சொன்னாள்.
"எ..என் மேல கோவமா..??"
"ம்ஹூம்..!!"
"ஸாரி மீரா..!! நான் உன்னை ஹர்ட் பண்றதுக்காக அப்படி சொல்லல.. எனக்கு.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,
"நீ எதுக்கு ஸாரி கேக்குற.. நீ என்ன தப்பு பண்ணின..?? என் மேலதான் தப்பு..!!" மீரா இடைமறித்து வெடுக்கென்று சொன்னாள்.
"அதுக்கில்ல மீரா.. நான்.."
"ரோட்டை பாத்து வண்டியை ஓட்டு அசோக்.. அப்புறம் பேசிக்கலாம்..!!"
அசோக் அதன்பிறகு பேசவில்லை.. சாலையில் கவனத்தையும் வண்டியையும் செலுத்த ஆரம்பித்தான்..!! ஆனால் மீரா சொன்ன மாதிரி.. அந்த விஷயம் பற்றி பேசத்தான் அதன்பிறகு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை..!! ஆழ்வார் திருநகர் அருகே சிக்னலுக்காக அசோக் வண்டியை நிறுத்த.. மீரா அங்கேயே திடீரென பைக்கில் இருந்து இறங்கிக் கொண்டாள்..!!
"நான் இங்க இறங்கிக்கிறேன்.. நாளைக்கு பாக்கலாம்..!!"
இறுக்கமான குரலில் சொன்னவள், அசோக்கின் பதிலுக்கு கூட காத்திராமல், சிக்னலுக்காக உறுமிக்கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையில் புகுந்து, அவசர அவசரமாக நடந்தாள். அவள் செல்வதையே அசோக் ஒருவித தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்கு அடுத்த நாள்.. அவன் அதை விட பலமடங்கு தவிக்க வேண்டி இருந்தது.. மீரா அவனை தொடர்பு கொள்ளவே இல்லை..!! 'என்ன ஆயிற்று.. ஏன் ஒரு ஃபோன்கால் கூட செய்யவில்லை.. அவளுடைய செல்ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.. கடுமையான வார்த்தைகளால் அவளை காயப்படுத்தி விட்டேனோ.. கோவத்தில் இருக்கிறாளோ..?? இல்லையே.. 'என் மேலதான் தப்பு' என்று அவள் சொன்னபோது.. அந்த குரலில் ஒரு குற்ற உணர்ச்சி தெரிந்ததே..?? என் மீது அவளுக்கு கோவம் எதுவும் இருப்பது மாதிரி தெரியவில்லை..!! அப்புறம் என்ன..?? ம்ம்ம்ம்.. ஒருவேளை.. அன்று மாதிரி.. வேறெதாவது எதிர்பாராத சூழலில் சிக்கியிருப்பாள்.. அதனால்தான் தொடர்பு கொள்ளவில்லை போலிருக்கிறது..!!' மனதை சமாதானப்படுத்திக் கொண்டாலும்.. அவளை காணாத தவிப்பு என்னவோ கொஞ்சமும் குறைவது மாதிரி இல்லை..!! அன்றைய தினத்தை ஒருவித அழுத்த மனநிலையுடனே அசோக் கழித்தான்..!!
மீரா அசோக்கை ரொம்பவும் தவிக்கவிடவில்லை..!! இரண்டாவது நாள் நண்பகல்.. அசோக் நண்பர்களுடன் ஃபுட்கோர்ட்டில் உணவருந்திக் கொண்டிருக்க.. திடீரென்று 'ஹாய் அசோக்..!!' என்றவாறு அவர்கள் முன்பு வந்து நின்றாள்..!! முகத்தில் ஒரு வசீகர புன்னகையுடன்.. கண்களில் ஒரு பளீரென்ற மின்னலுடன்.. 'என்ன.. நேத்து என்னை மிஸ் பண்ணுனியா..??' என்று கேட்டாள் அசோக்கிடம்..!! அந்த அழகு சிரிப்பில் அசோக்கின் தவிப்பெல்லாம் தவிடு பொடியானது.. 'யெஸ்..!!' என்று புன்னகைத்தான் நிம்மதியாக..!!
அப்புறம் நண்பர்கள் ஆபீஸுக்கு கிளம்பிவிட.. மீரா அதன்பிறகுதான் சாப்பிட ஆரம்பிக்க.. அசோக் வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு.. அவள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவளுடைய முகத்தில் மிக அரிதாகவே காணமுடிகிற ஒருவித அமைதியை.. இப்போது அவன் காண நேர்ந்தது..!!
"நேத்து என்னாச்சு.. ஆளை காணோம்..??" அசோக் திடீரென கேட்டான்.
"அ..அது.. அது வந்து.." என்று ஆரம்பத்தில் தயக்கத்துடன் இழுத்த மீரா, பிறகு
"நே..நேத்து ஒரு இண்டர்வ்யூ.. அதான்..!!" என்றாள் புன்முறுவலுடன்.
"ஓ.. இண்டர்வ்யூலாம் அட்டன்ட் பண்ண ஆரம்பிச்சுட்டியா.. சொல்லவே இல்ல..!!"
"எ..எல்லாம் நேத்துல இருந்துதான்..!! கோர்ஸ் முடிஞ்சி போச்சுல.. இனி ஜாப்க்கு ட்ரை பண்ணனும்..!!"
"ஹ்ம்ம்..!! அப்பா கோடீஸ்வரரா இருந்தாலும்.. நீ உன் சொந்தகால்ல நிக்கனும்னு நெனைக்கிற பாத்தியா..?? உன் ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மீரா..!!"
அசோக் சற்றே பெருமிதமாக சொல்ல, மீரா அதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை. ஒருவித உலர்ந்த புன்னகையை உதிர்த்தாள். தட்டில் இருந்த உணவை, ஸ்பூனால் அள்ளி அள்ளி வாய்க்கு கொடுத்தவாறு, மீண்டும் அமைதியாகிப் போனாள். அப்புறம் அசோக்கே திடீரென ஞாபகம் வந்தவனாய் கேட்டான்.
"அதுசரி.. இண்டர்வ்யூ என்னாச்சுன்னு சொல்லவே இல்லையே..??"
"ஹ்ஹ.. ஊத்திக்கிச்சு..!!" சொல்லும்போதே மீராவிடம் ஒரு விரக்தி சிரிப்பு.
"ஓ..!!"
"ப்ச்..!! நான் ரொம்ப அன்லக்கி அசோக்..!!" மீராவின் குரலில் ஒரு மிதமிஞ்சிய வருத்தம் தொனிக்க, அசோக் அவளை வித்தியாசமாக பார்த்தான்.
"ஹேய்.. என்ன நீ..?? இதுக்குலாம் போய் இவ்ளோ ஃபீல் பண்ணிக்கிட்டு..?? இந்த வேலை இல்லனா.. இன்னொரு வேலை..!! இப்படி ஃபீல் பண்ற.. கமான்.. சியர் அப்..!!"
அசோக் அவ்வாறு சொல்லவும், மனதை அப்படியே கொய்து எடுக்கிற மாதிரியான அந்த புன்னகையை, மீரா இப்போது அவளது உதட்டுக்கு கொடுத்தாள். அசோக்கின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து ஆழமாய் ஒரு பார்வை பார்த்தாள்.
பிறகு.. இருவரும் ஃபுட் கோர்ட்டை விட்டு வெளியே வந்து.. படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருக்கையில்..
"இ..இனி நாம.. அடிக்கடி மீட் பண்ண முடியாதுன்னு நெனைக்கிறேன் அசோக்..!!" என்றாள் மீரா திடீரென.
"ஏ..ஏன் மீரா.. ஏன் அப்படி சொல்ற..??" அசோக் புருவத்தை சுருக்கி கேட்டான்.
"இ..இண்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்றேன் இல்லயா.. அ..அதான்..!! கொஞ்சம் சின்ஸியரா படிக்கணும்..!!"
"ஹ்ஹ.. இவ்ளோதானா..?? இ..இதுலாம் எங்கிட்ட சொல்லிட்டு இருக்கனுமா மீரா.. நான் புரிஞ்சுக்க மாட்டனா..?? எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல.. நீ நல்லா படிச்சு, உன் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு வேலைக்கு போகணும்.. சரியா..?? நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. நல்லா ப்ரிப்பேர் பண்ணு மீரா.. அதான் முக்கியம்.. புரியுதா..??" என்று உறுதியான குரலில் படபடவென சொன்ன அசோக், அப்புறம்
"நா..நாம.. நாம.. நாம வேணா.." என்று சற்றே இழுத்து, பிறகு சட்டென தாழ்வான குரலில்
"அ..அடிக்கடி இல்லன்னாலும்.. அப்பப்போவாவது மீட் பண்ணிக்கலாம்ல மீரா..?? ப்ளீஸ்..!!" என்று ஏக்கமாகவும், பரிதாபமாகவும் முடித்தான்.
அவனுடைய ஏக்கம் மீராவை ஏதோ செய்திருக்க வேண்டும். அசோக்கின் முகத்தையே கண்ணிமைக்காமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் இருந்தது.. கனிவா.. கருணையா.. காதலா.. கணிக்க முடியவில்லை அசோக்கால்..!!
"ம்ம்.. கண்டிப்பா மீட் பண்ணலாம்..!!"
புன்னகையுடன் சொன்ன மீரா, ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. படிக்கட்டில் தடதடவென இறங்கியவள், பஸ் நிறுத்தம் நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அவள் செல்வதையே அசோக் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அதன்பிறகு ஒரு மூன்று முறை மீரா அந்த மாதிரி காணாமல் போனாள். எல்லாம் ஒரு நாட்கள், இரண்டு நாட்கள்தான். ஒரு தடவை மட்டும் அசோக்கிற்கு கால் செய்து சொன்னாள். 'இண்டர்வ்யூவாக இருக்கும்' என்று இரண்டு தடவைகள் அசோக்கே அஸ்யூம் செய்து கொண்டான். அவள் இந்த மாதிரி திடீர் திடீரென காணாமல் போனதற்கெல்லாம் அசோக் அதிகமாக கவலைப்படவில்லை. வேறெதற்கு என்று கேட்கிறீர்களா..?? அவள் நடந்துகொள்கிற விதமும்.. அசோக்கை அவள் அணுகுகிற முறையுமே.. முற்றிலும் மாறிப்போயின.. அதை நினைத்துத்தான் அசோக் மிகவும் கவலையுற்றான்..!!
எந்த மாதிரியான மாற்றங்கள் என்று சொல்ல வேண்டுமானால்..
அவளுடைய கண்களில் எப்போதும் மின்னுகிற ஒரு குறும்பை, இப்போதெல்லாம் காணமுடிவதில்லை. அவளுடைய பேச்சில் எப்போதும் தொனிக்கிற கேலி, இப்போது தொலைந்து போயிருந்தது. இப்போதெல்லாம் அவளுடைய முகத்தில் ஒரு அசாத்திய அமைதிதான் அனுதினமும். கண்களில் சலனமற்ற ஒரு பார்வை.. பேச்சில் இதமான ஒரு மென்மை..!! அசோக்கிற்கு இவையெல்லாம் வித்தியாசமாகப் பட்டன..!!
முன்பெல்லாம் மீரா எப்போது இவனுக்கு ஃபோன் செய்தாலும், இவன் எடுத்ததுமே 'இங்கு வா.. அங்கு வா..' என்று ஆணைதான் பிறப்பிப்பாள். ஆணை பிறப்பித்த அடுத்த நொடியே, இவனுடைய பதிலை கூட எதிர்பாராமல் காலை கட் செய்வாள். இவனுடைய விருப்பத்துக்கு ஒரு மதிப்பே இருக்காது. 'தலையெழுத்தே' என்று, அவள் இட்ட கட்டளைகளை எல்லாம்.. தலை மீது வைத்து இவன் நிறைவேற்ற வேண்டியிருக்கும்..!! ஆனால் இப்போது அப்படி அல்ல.. இவன் கால் பிக்கப் செய்து 'ஹலோ' சொன்னதும்தான்.. அவள் பேசவே ஆரம்பிக்கிறாள்..!! அதுவும்..
"ஹாய் அசோக்..!! உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நீ இப்போ ஃப்ரீயா..?? ஜ..ஜஸ்ட் டூ மினிட்ஸ்..!!" என்று தயங்கி தயங்கி ஃபார்மலாக கேட்டுவிட்டுத்தான் பேசுகிறாள்.
"ஹேய்.. என்ன மீரா இது..?? பேசுறதுக்குலாம் என்கிட்ட நீ பெர்மிஷன் கேக்கணுமா..??" என்று அசோக் அன்புடன் கடிந்து கொண்டாலும் அவள் கேட்பதில்லை.
"ப..பரவால.. நீ ஏதாவது வேலையா இருப்ப.. நான் பேசி டிஸ்டர்ப் பண்ண கூடாதுல.. அதான்..!!" என்று பொறுமையாக பதில் சொல்வாள்.
இன்னொரு நாள்.. அசோக்கும் மீராவும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்..
"ப்ச்.. ரெட் சில்லி சாஸ் கேட்டேன்.. தரவே இல்ல பாரு..!! இரு.." என்று சலிப்பாக சொல்லிக்கொண்டே சேரில் இருந்து அவள் எழ முயல,
"நீ உக்காரு.. நான் போய் வாங்கிட்டு வரேன்..!!" என்றவாறு அசோக் எழப்போனான். மீரா உடனே வெடுக்கென்று அவனை ஏறிட்டு முறைத்தாள்.
"நீ என்ன எனக்கு வேலைக்காரனா..?? என் வேலைலாம் பாக்கனும்னு உனக்கு என்ன தலைஎழுத்தா..?? உக்காரு..!!"
என்று சீற்றமாக சொல்லிவிட்டு, ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் நோக்கி கோபமாக நடந்தாள். அசோக் சற்றே மிரண்டு போய் அவளையே பார்த்தான். 'எனக்கு ஒரு பரிட்டோ வாங்கிட்டு வா.. போ..' என்று எகத்தாளமாக உத்தரவிட்ட மீராவா இவள், என்று அசோக் திகைக்க வேண்டியிருந்தது.
அதுவுமில்லாமல்.. அசோக்கின் தொழில்துறை சம்பந்தமாகவோ.. அவனுடைய கனவு, லட்சியம் பற்றியோ.. மீரா முன்பெல்லாம் அதிக அக்கறை காட்டிக்கொண்டது கிடையாது..!! எப்போதாவது அசோக் சொல்லும்போது கேட்டுக்கொள்வதோடு சரி.. 'ம்ம்.. நல்லாருக்கு.. குட்..' என்று ஃபார்மலாக பாராட்டுவதோடு சரி..!! ஆனால் இப்போதோ..
மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு நாளின் மாலை நேரத்தில்..
பேருந்தில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த மீரா.. கம்பிகளுக்கு வியர்த்தது போல, முத்து முத்தாய் பூத்திருந்த மழைத்துளிகளை.. கைவிரல் கொண்டு ஒவ்வொன்றாய் சிதறடித்துக் கொண்டிருந்தவள்.. திடீரென திரும்பி தனக்கருகே அமர்ந்திருந்த அசோக்கிடம் சொன்னாள்..!!
"இன்னைக்கு காலைல கண்ணு முழிச்சதுமே உன் ஞாபகம்தான் தெரியுமா..??"
"எனக்கு கண்ணை மூடுனா கூட உன் ஞாபகமாதான் இருக்குது.. கனவுல கூட நீதான் வர்ற..!! அப்படியே கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுக்கிட்டு.. பெருசு பெருசா பல்லுலாம் வச்சுக்கிட்டு.. கழுத்துல மண்டை ஓடு மாலை..!! ஹாஹா.. ராட்சசி..!!"
அசோக் குறும்பாகவும், சிரிப்பாகவும் சொல்ல.. மீரா அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை..!! மெலிதாக புன்னகைத்தாள்.. கடந்த சில நாட்களாக அடிக்கடி அவனை பார்க்கிற அந்த ஆழமான பார்வையை இப்போதும் வீசினாள்.. மெல்ல தலையை கவிழ்த்துக் கொண்டாள்..!! பிறகு மீண்டும் ஜன்னல் பக்கமாய் திரும்பி.. எதிரே நகர்கிற மரங்களை.. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..!! அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு அசோக்கே கேட்டான்..!!
"ஹ்ம்ம்... அப்படி என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?? கண்ணு முழிச்சதுமே என் ஞாபகம் வந்திருக்கு..??" அசோக் அவ்வாறு கேட்க, மீரா இப்போது இவன் பக்கம் திரும்பி மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தாள்.
"அதுவா.. எங்க வீட்டுக்கு எதுத்தாப்ல ஒரு பெரிய அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருப்பாங்க அசோக்.. ஃப்ளக்ஸ் போர்ட்னு சொல்வாங்களே.. அது..!!"
"ம்ம்..!!"
"என் பெட்ரூம் ஜன்னல் வழியா பார்த்தா.. அதுதான் பெருசா தெரியும்..!! இத்தனை நாளா ஏதோ ஒரு ஜ்வல்லரி ஆட் வச்சிருந்தாங்க.. இன்னைக்கு காலைல கண்ணுமுழிச்சதும்.. அப்படியே பெட்ல கெடந்துக்கிட்டே.. ஜன்னல் வழியா வெளில பார்த்தா.. ரியல் சர்ப்ரைஸ் எனக்கு..!!"
"எ..என்ன..??"
"கவாஸாகி அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருந்தாங்க.. அந்தப் பையனும், பொண்ணும் பைக்ல பறக்குற மாதிரி ஸ்டில்..!! நல்லா பெருசா.. சும்மா நச்சுனு..!!"
"ஓ..!!"
"என்னன்னு தெரியல.. அதை பாக்குறப்போ ரொம்ப பெருமையா இருந்தது.. மனசு ஃபுல்லா உன் நெனைப்பு.. ரொம்ப நேரம் அந்த போர்டையே பாத்துட்டு இருந்தேன்..!!" மீரா பெருமிதமாக சொல்ல, அசோக் அவளையே காதலாக பார்த்தான்.
"ம்ம்..!!"
"ஆனா.. கொஞ்சம் கடுப்பாவும் இருந்தது..!!"
"எதுக்கு..??"
"அந்த விளம்பரத்தை எடுக்க நீ எவ்ளோ கஷ்டப்பட்ருப்ப..?? அந்த போர்ட்ல ஒரு மூலைல கூட உன் பேர் போடல..!! உன் பேரை போட்டா என்ன கொறைஞ்சா போயிடுவானுக..?? கவாஸாகின்னு மட்டும் மெகாசைஸ்ல போட்டு வச்சிருக்கானுக..!! ஸ்டுபிட்ஸ்..!!"
"ஹாஹா..!! கஷ்டப்பட்டதுக்குத்தான் காசு தந்துட்டாங்களே மீரா.. பேர்லாம் எதுக்கு போடப் போறாங்க..?? அதுமில்லாம.. அது அவங்க பைக்கை ப்ரோமோட் பண்றதுக்காக வச்சிருக்குற போர்ட்.. அதுல என் பேரை போட்டு, என்னை ப்ரோமோட் பண்ண சொல்றியா..??"
"ஹ்ம்ம்.. நீ சொல்றது சரிதான்.. இருந்தாலும் மனசு கேக்கலை..!! அந்த போர்ட் பார்த்ததும் எனக்கு இன்னொரு ஆசை வேற..!!"
"என்ன..??"
"கூடிய சீக்கிரம்.. அதே போர்ட்ல.. நீ டைரக்ட் பண்ணப்போற மூவியோட அட்வர்டைஸ்மன்ட் வரணும்.. 'எண்ணமும், இயக்கமும் அசோக்'னு.. பெருசா உன் பேரோட..!! காலைல எந்திரிச்சதும்.. அந்த போர்ட்ல நான் கண்ணு முழிக்கணும்..!!"
உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையிலும்.. உண்மையான ஆசை தெறிக்குமாறு.. மீரா அப்படி சொல்ல.. அசோக் அவளுடைய அழகு முகத்தையே.. அன்பு பொங்கப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..!!
அப்போதுதான் மீரா திடீரென.. ஜன்னலுக்கு வெளியே கை நீட்டி.. குரலில் ஒரு புது உற்சாகத்துடன் கத்தினாள்..!!
"ஹேய் அசோக்.. அங்க பாரு அங்க பாரு.. அதேதான்.. அதைத்தான் சொன்னேன்.. ஸேம் ஸ்டில்.. ஸேம் சைஸ்..!!"
அசோக் இப்போது தலையை குனிந்து பேருந்துக்கு வெளியே பார்த்தான். அந்த ஃப்ளக்ஸ் போர்ட் பார்வையில் பட்டது. மழைத்தூறலின் பின்னணியும், மஞ்சள் விளக்கின் வெளிச்சமுமாய்.. கூரிய பார்வையுடன் சாலை வெறிக்கும் அவனும், குதுகலத்துடன் துப்பட்டா விரிக்கும் அவளுமாய்.. சினம் கொண்ட சிங்கம் போல, சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது அந்த சிவப்பு நிற கவாஸாகி..!!
"காதலின் முடிவிலா பயணம்.. கவாஸாகியுடன்..!!!!" என்ற வார்த்தைகள் பொன்னிறத்தில் ஜொலித்தன.
"எப்டி..??? செமையா இருக்குல..???"
முகமெல்லாம் பூரிப்பாக.. குரலெல்லாம் உற்சாகமாக.. குழந்தைக்கே உரிய சந்தோஷத்துடன் மீரா அவ்வாறு கேட்க.. 'எப்போதிருந்தடி நீ இப்படி மாறிப்போனாய்..??' என்பது போல.. அசோக் அவளையே வித்தியாசமாக பார்த்தான்..!!
மீராவிற்கு அசோக்கிடமும், அவனுடைய தொழில் மீதும் மட்டும் புதிதாக அக்கறை பிறக்கவில்லை..!! முன்பெல்லாம் அசோக்கின் நண்பர்களை அவள் மதிக்கவே மாட்டாள். அறிமுகம் செய்து வைத்த நாளுக்கப்புறம், அவர்களை அருகிலேயே அவள் அண்ட விடுவதில்லை. அவள் முன்பே சொல்லியிருந்த மாதிரி, எப்போதும் தூரத்திலேயே அவர்களை நிறுத்தி வைத்திருப்பாள். சில நேரங்களில்.. அவள் ஃபுட் கோர்ட்டுக்கு தாமதமாக வருகிற தருணங்களில்.. அசோக் தன் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்திருந்தால்.. அவர்களை கடந்து செல்கிற மீரா, ஒரு முறைப்பான பார்வையுடனே.. 'ம்ம்.. எந்திரிச்சு வா..' என்று அந்த பார்வையாலேயே அவனுக்கு சொல்லி.. அவனை மாத்திரம் தனியாக கிளப்பிக் கொண்டு செல்வாள்..!!
ஆனால் இப்போதெல்லாம்.. இவளும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள்.. அவர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டே உணவருந்துகிறாள்..!!
"இன்னைக்கு என்ன.. சாலமன் அண்ணாவ ஆளை காணோம்..??" மீராவின் கேள்விக்கு,
"அவனுக்கு ஏதோ உடம்பு சரி இல்ல..!!" கிஷோர் பதில் சொன்னான்.
"ஓ..!! என்னாச்சு..??"
"ஃபீவர்னு நெனைக்கிறேன்..!!"
"என்னது.. நெனைக்கிறீங்களா..?? என்ன ஃப்ரண்ட்ஸ் நீங்க..??" கிஷோரை சற்றே கடிந்து கொண்ட மீரா, வேணுவிடம் திரும்பி,
"வேணு அண்ணா.. உங்க செல்ஃபோன் கொஞ்சம் கொடுங்களேன்..!!" என்று உரிமையாக அவனுடைய செல்போனை வாங்கி, சாலமனுக்கு கால் செய்தாள்.
"ஆங்.. அண்ணா.. நான் மீரா பேசுறேன்..!!"
"உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க.. என்னண்ணா ஆச்சு..??"
"ஓ..!! டாக்டர்ட்ட போனீங்களா..??"
"ஹையோ.. ஏண்ணா இப்படி பண்றீங்க..??"
"சரி.. நான் ஒன்னு சொல்றேன் கேக்குறீங்களா..?? ஒரு டேப்லட் சொல்றேன்.. அதை இப்போ ஒன்னு.. நைட் ஒன்னு போடுங்க.. காலைல எல்லாம் சரியாயிடும்..!!"
மீரா சாலமனுக்கு ஃபோனிலேயே மருந்து பரிந்துரைக்க.. வேணு, கிஷோருடன் சேர்ந்து.. அசோக்குமே அவளை வியப்பாக பார்த்தான்..!!
ஆமாம்..!! மீராவின் இந்த மாதிரியான மாற்றங்கள்.. வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகவே அசோக்கிற்கு இருந்தன..!! அவனுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிற மாதிரி.. ஒருநாள் நள்ளிரவு அசோக்கிற்கு கால் செய்தாள்..!! அதற்குமுன்பே ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்திருந்த அசோக்.. உறக்கம் கலைந்தும், கலக்கம் களையாமலே.. கால் பிக்கப் செய்து..
"ஹலோ..!!" சொன்னான்.
"என்னப்பா தூங்கிட்டியா..??" அடுத்த முனையில் மீராவின் குரல் மிக மென்மையாக ஒலித்தது.
"ம்ம்ம்ம்..!! எ..என்னாச்சு.. இந்த நேரத்துல கால் பண்ணிருக்குற..??"
"ஒ..ஒன்னுல்ல.. சு..சும்மா.."
"ஹ்ம்.. இன்னும் தூங்கலையா நீ..??"
"இ..இல்ல.. தூக்கம் வரல..!!"
"ஏன்..??"
"தெரியல..!!"
"தெரியலையா..?? என்ன சொல்ற..?? எனக்கு புரியல..!!"
"அ..அசோக்.."
"ம்ம்.."
"உ..உன்கிட்ட.. ஒன்னு சொல்லனும்.."
"என்ன..??"
"அ..அது.. அ..அதை எப்படி.."
மீரா சொல்ல வந்ததை சொல்லாமல்.. தயங்கி தயங்கி இழுத்தாள்..!! பிறகு அதுவுமில்லாமல் சில வினாடிகள் அவள் அமைதியாகிப் போக, அசோக்கிற்கு கொட்டாவி வந்தது..!!
"ஹ்ஹாஹாஹா.. என்ன மீரா.. சீக்கிரம் சொல்லு.."
"தூக்கம் வருதா உனக்கு..??"
"ம்ம்.."
"சரி.. தூங்கு.."
"நீ ஏதோ சொல்ல வந்த..??"
"காலைல சொல்றேன்..!!"
அவ்வளவுதான்.. காலை கட் செய்துவிட்டாள்..!! அசோக் சில வினாடிகள் எதுவும் புரியாமல் தலையை சொறிந்தான்.. பிறகு அவனது வாயைக் கிழித்துக்கொண்டு, பெரிதாக ஒரு கொட்டாவி வெளிப்பட.. கண்கள் செருகிப்போய் பொத்தென மெத்தையில் கவிழ்ந்தான்..!!
தனது மனதில் ஏற்பட்ட குழப்பத்தையும் வியப்பையும் பற்றி.. மீராவிடம் கேட்கவும் அசோக் தவறவில்லை.. அவ்வப்போது அவளிடம் அதுபற்றி பேசுவான்..!! ஆனால்.. அப்படி அவன் பேசியதால் ஏதாவது பிரயோஜனம் உண்டா என்று கேட்டால்.. இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.. தொடர்ந்து ஒரு குழப்ப நிலையிலேதான் அவன் இருக்க வேண்டி இருந்தது..!! இப்படி நள்ளிரவு மீரா கால் செய்தாள் அல்லவா.. அதற்கு அடுத்த நாள் கூட.. அசோக் மீராவிடம் அவனுடைய குழப்பம் பற்றிய பேச்சை எடுத்தான்..!!
"மீரா.."
"ம்ம்.."
"நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது..!!"
"எ..என்ன.."
"உ..உனக்கு ஏதாவது பிரச்னையா..??"
"ஹ்ஹ.. ஏன் அப்படி கேக்குற..??"
"எனக்கு அந்த மாதிரி தோணுச்சு..!!"
"அதெல்லாம் ஒண்ணுல்ல.. எ..எனக்கு என்ன பிரச்னை.. ஐ'ம் ஆல்ரைட்..!!"
"இல்ல.. நீ முன்னாடி மாதிரி இல்ல..!!"
"ஓ.. வேற எப்படி இருக்குறேன்..??"
"உன்னோட யூஷுவல் சிரிப்பு, கேலி, கிண்டல்.. எதுவுமே இப்போ உன்கிட்ட இல்ல..!! ரொம்ப அமைதியா.. ரொம்ப சாஃப்டா மாறிட்ட..!! எந்த நேரமும் எதையாவது சீரியஸா யோசிச்சுட்டே இருக்குற.. மூஞ்சில ஒரு களையே இல்ல.. ஏதோ சோகத்துல இருக்குற மாதிரியே இருக்குற..??"
"ப்ச்.. அது ஒன்னும் இல்ல.. ஜாப்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்ல.. அதான்..!! அப்பா தயவு இல்லாம சொந்தக்கால்ல நிக்கனும்னு வைராக்கியம்.. நல்ல வேலையா கெடைக்கனுமேனு கவலை.. லைஃப் பத்தி திடீர்னு ஒரு பயம்.. அவ்வளவுதான்..!!"
"நெஜமா அவ்வளவுதானா..??" அசோக் நம்பிக்கையில்லாமல் கேட்க,
"அவ்வளவுதான்.. வேற என்ன..??" மீரா கூலாக திருப்பி கேட்டாள்.
"ஹ்ம்ம்ம்..!! சரி.. அதைவிடு.. நேத்து நைட்டு எதுக்கு கால் பண்ணின..??"
"அ..அதான் சொன்னனே.. சும்மா..!!"
"இல்ல... நீ எதோ சொல்ல வந்த.."
"என்ன சொல்ல வந்தேன்..??"
"ப்ச்.. என்கிட்ட ஏதோ சொல்லனும்னு ஆரம்பிச்சியே..??"
"அ..அதுவா..?? அ..அது ஒன்னுல்ல.. ஜஸ்ட் குட் நைட் சொல்ல வந்தேன்..!!"
"அப்புறம் ஏன் சொல்லமாலே வச்சுட்ட..??"
"நீதான் அதுக்கு முன்னாடியே தூங்கிட்டியே..?? அப்புறம் எதுக்கு சொல்லனும்னு.."
"அப்போ காலைல சொல்றேன்னு சொன்னது..??"
"அதான் இப்போ சொல்லிட்டு இருக்குறனே..??"
அவ்வளவுதான்..!! அதற்கு மேல் அசோக்கிற்கு அவளிடம் என்ன கேட்பது என்று புரியவில்லை. அமைதியாகிப் போனான். அவனுடய குழப்பம் முழுமையாக தீராமல் போனாலும், ஒரு அளவுக்கு மேல் மீராவை துளைத்து எடுப்பதை அவன் விரும்பவில்லை. நேரம் வரும்போது அவளே சொல்லட்டும் என்று நினைத்துக் கொண்டான். அதுவுமில்லாமல்.. தனது குழப்பமே முதலில் நியாயமானதுதானா என்றொரு சந்தேகமுமே அவனுக்கு இருந்தது..!! அந்த சந்தேகம்தான் தன் அம்மாவிடம் இந்த விஷயம் பற்றி அவனை பேச தூண்டியது.. அதுவும் அடிக்கடி..!!
அது சங்கீதாவின் அறை..!! வளமாக குரலை மாற்றும் பொருட்டு.. வாயில் ஒரு சித்தரத்தையை வைத்து கடித்துக்கொண்டு.. மூச்சை உள்ளடக்கி பயிற்சி செய்தவாறு.. அம்மாவும் அண்ணனும் பேசிக்கொள்வதை, ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தாள் சங்கீதா..!! மடியில் லேப்டாப்புடன் இருந்த அசோக்.. இணையத்தில் சமையற் குறிப்பு தேடச்சொன்ன பாரதியை.. மீரா பற்றி பேசி மொக்கை போட்டுக் கொண்டிருந்தான்..!! பாரதி ஏற்கனவே பலமுறை அசோக்கின் பிரச்சனையை கேட்டு கேட்டு.. சலித்துப் போயிருந்தாள். .!!
"அவ ஏன் மம்மி இப்படிலாம் பண்றா..??"
"அப்படி என்னடா பண்ணிட்டா..??"
"இன்னைக்கு பாலாஜி அட்வர்டைஸிங்ல ஒரு டிஸ்கஷன்ல இருந்தேன்.. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கவும்.. இவ ரிஷப்ஷனுக்கே கால் பண்ணிருக்கா..!!"
"சரிஈஈ..!!"
"கால் பண்ணவ என்ன கேட்ருக்கா தெரியுமா..??"
"என்ன கேட்ருக்கா..??"
"அசோக் ஸார் இருக்காரான்னு கேட்ருக்கா மம்மி..!!" தனக்கு நேர்ந்துவிட்ட ஏதோ பெரிய அவமானத்தை சொல்வது போல அசோக் சொன்னான்.
"ஹ்ம்ம்.. அதுக்கு என்ன..??" பாரதி கூலாகவே கேட்டாள்.
"அதுக்கு என்னவா..?? இவ எதுக்கு என்னை ஸார்னுலாம் சொல்றா..??"
"ஆமாம்.. இவனை ஸாருனுலாம் சொல்லிருக்க கூடாது.. புளிச்சுப்போன மோருன்னு சொல்லிருக்கணும்..!!" சங்கீதா சித்தரத்தையை ஓரமாய் ஒதுக்கிக்கொண்டு, கடுப்புடன் சொன்னாள்.
"ஏய்.. சும்மா இருக்க மாட்ட.." மகளை அதட்டிய பாரதி,
"ம்ம்.. நீ சொல்லுடா..!!" என்றாள் மகனிடம் திரும்பி.
"என்னத்த சொல்ல.. டிஸ்கஷன் முடிஞ்சு வெளில வந்தா.. 'ஸார்.. அசோக் ஸார்.. உங்களுக்கு ஸார்.. ஒரு கால் ஸார்..' அப்டின்னு.. அந்த ஓட்டைப்பல்லு ரிஷப்ஷனிஸ்ட் என்னை ஓட்டுறா மம்மி..!! இந்த மீரா ஏன் இப்படிலாம் பண்றா.. எதுக்கு இப்படி ஸார்னுலாம் மரியாதை..??"
"சரிடா.. கட்டிக்கப்போறவனை அடுத்தவங்க முன்னாடி விட்டுக் குடுக்க கூடாதுன்னு அப்படி சொல்லிருப்பா..!! அதை விடு.. சாப்பாட்டு விஷயத்துல அவ எப்படி.. நல்லா கைநெறைய அள்ளி சாப்பிடுவாளா.. இல்ல அப்படியே கோழி மாதிரி கொறிப்பாளா..??"
"அதுலாம் நல்லா சாப்பிடுவா.. ஆள் பாக்குறதுக்குத்தான் கொத்தவரங்காய் மாதிரி இருப்பா.. ஆனா பத்துப்பேர் தீனியை ஒத்தை ஆளா தின்பா..!!"
"ஆங்.. காய்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. அவளுக்கு வெண்டைக்காய் பிடிக்குமா..??"
"அவளுக்கு மிரப்பக்காய்தான் ரொம்ப பிடிக்கும்..!!"
"மிரப்பக்காயா..?? அப்படினா..??"
"தெலுங்குல மிளகாய்ன்னு அர்த்தம் மம்மி..!!"
"மிளகாயா..??" பாரதி ஒருமாதிரி முகத்தை சுளித்தவாறு கேட்டாள்.
"ஆமாம்..!! அதுவும் ஜானி வாக்கரோட சேர்த்து சாப்பிட்டா.. ரொம்ம்ம்ம்ப பிரியம்..!!"
"ஓ..!!!"
"அதை விடு மம்மி.. அதுவா இப்போ முக்கியம்..?? நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்..!!"
"ப்ச்.. என்னடா உன் பிரச்னை இப்போ..??" பாரதியின் குரலில் சலிப்பு மிகுந்து போயிருந்தது.
"அவ ஒன்னும் சரியில்ல மம்மி..!! ஏதோ ஆயிருச்சு அவளுக்கு.. என்னன்னவோ சொல்றா தெரியுமா..!!"
"ஹ்ம்ம்.. என்ன சொன்னா..??"
"நேத்து சும்மா பேசிட்டு இருக்குறப்போ திடீர்னு.."
"ம்ம்.."
"நீ ரொம்ப அழகா இருக்குற அசோக்னு சொல்றா மம்மி..!!" அசோக் சோகமாக சொல்ல, இப்போது சங்கீதா இடையில் புகுந்து..
"அதுசரி.. அழகா இருக்குறன்னு சொன்னாங்களா.. அப்போ அண்ணிக்கு ஒரு அப்பாயிண்ட்மண்ட் வாங்கிட வேண்டியதுதான்..!!" என கிண்டலாக சொன்னாள்.
"அப்பாயிண்ட்மண்டா..?? எங்க..??" அசோக் தங்கையிடம் திரும்பி குழப்பமாக கேட்டான்.
"ம்ம்..?? வாசன் ஐ கேர்ல..!!" சங்கீதாவின் கேலி, பாரதியை டென்ஷனாக்கியது.
"ஏய்.. திமிரா உனக்கு..?? எம்புள்ளை அழகுக்கு என்னடி கொறைச்சல்..??" சங்கீதாவிடம் எகிறிய பாரதி, பிறகு அசோக்கிடம் திரும்பி,
"ஏண்டா.. அழகா இருக்குறன்னு சொன்னது ஒரு குத்தமா..?? அழகாதான இருக்குற நீ..??"
"ஐயோ.. நான் அழகா இருக்குறன்னு எனக்கு தெரியாதா..?? ஆனா.. அவ அதெல்லாம் சொல்ற ஆளு இல்ல மம்மி..!! எப்போவாவது நான் பேசுறது புடிச்சிருந்தா.. 'ச்சோ ச்வீட்'னு சொல்வா.. மத்தபடி என்னோட அப்பியரன்ஸலாம் கவனிச்சு அப்ரெஷியேட் பண்ற ஆளு இல்ல அவ..!!'
"சரி அதை விடு.. ஏதோ தெரியாத்தனமா சொல்லிட்டா..!! ம்ம்ம்ம்.. நீ ஸ்வீட்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. மீராவுக்கு அல்வா பிடிக்கும்ல..??" பாரதி அந்தப்பேச்சை தனக்கு சாதகமாக திருப்ப படாதபாடு பட்டாள்.
"ம்ம்.. அரைப்படி மொளகாப்பொடிய கொட்டி.. அல்வாவை கிண்டி வையி.. நல்ல்ல்லா சாப்பிடுவா..!!"
"மொளகாப்பொடி அல்வாவா..??" பாரதி மீண்டும் முகத்தை சுளித்தாள்.
"அவளுக்கு ஸ்வீட்டே பிடிக்காது மம்மி.. காரந்தான் பிடிக்கும்..!! மிர்ச்சின்னு ஒரு நிக்நேம் வேற..!!" என்று சற்றே எரிச்சலாக சொன்னவன், பிறகு திடீரென குரலை தாழ்த்திக்கொண்டு,
"ச்ச.. அவ முன்ன மாதிரி இல்ல மம்மி.. முன்னாடிலாம் என்கிட்ட எப்படி நடந்துக்குவா தெரியுமா..??" என்று பழைய பல்லவியையே பாடினான்.
"எப்படி..??" தூரத்தில் அமர்ந்திருந்த சங்கீதா இப்போது முறைப்புடன் கேட்டாள். தங்கை கேட்ட கேள்விக்கு அசோக் அம்மாவிடமே பதில் சொன்னான்.
"முன்னாடிலாம் சூப்பரா திட்டுவா மம்மி.. தலைலயே நங் நங்னு அழகா கொட்டுவா.. கன்னத்துலயே சப் சப்புன்னு செமையா அறைவா தெரியுமா..?? இப்போலாம் எதுவுமே பண்றது இல்ல.. அவ ஏன் மம்மி இப்படி மாறிட்டா..??"
அசோக் நிஜமாகவே ரொம்பவும் ஏக்கத்துடன் அவ்வாறு சொல்ல, சங்கீதாவால் அதற்கு மேலும் அவனுடைய இம்சையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வாயில் இருந்த சித்தரத்தையை 'த்தூ..' என்று துப்பியவாறே, விருட்டென சேரில் இருந்து எழுந்தாள்.
"ஏண்டா.. உனக்கு எங்களை பாத்தா எப்படி தெரியுது..?? நானும் அப்போ இருந்து பாத்துக்கிட்டே இருக்கேன்..!!" என்று எரிச்சலாக கத்தியவாறே, அண்ணனை நோக்கி ஆவேசமாக வந்தாள்.
"இப்போ என்ன.. உனக்கு கன்னத்துல சப்பு சப்புன்னு அறை வேணும்.. அவ்வளவுதான..?? இரு.. நான் அறையுறேன்..!!"
என்றவாறு அவனுடைய தலை முடியை ஒரு கையால் கொத்தாக பிடித்தாள். அவனது கன்னத்தில் அறைவதற்காக இன்னொரு கையை ஓங்கினாள். தங்கையின் ஆவேசத்தில் சற்றே பதறிப்போன அசோக், உடனடியாய் சுதாரித்துக்கொண்டு, ஓங்கிய அவளுடைய கையை தடுத்து பிடித்துக் கொண்டான். கண்களை உருட்டி உக்கிரமாக அவளை பார்த்து கத்தினான்.
"ஏய்.. அடி வாங்கப் போறடி சங்கு.. ஒழுங்கா முடியை விடு..!!"
"முடியாது..!! இன்னைக்கு ஒரு அறையாவது உன்னை அறையாம விடுறது இல்ல..!!"
"விட்றி.. அப்புறம் நான் அறைஞ்சா நீ தாங்க மாட்ட..!!"
"அதையும் பாக்கலாம்..!!"
பிள்ளைகள் இருவரும் அவ்வாறு முட்டி மோதிக்கொண்டிருக்க, பாரதிதான் நொந்து போய் தலையில் அடித்துக் கொண்டாள்.
"ஐயயயயயே.. என்ன இது.. சின்ன புள்ளைக மாதிரி..?? ஏய்.. அவன் முடியை விடுடி.. விடுன்னு சொல்றேன்ல..??"
அம்மா அதட்டவும், அண்ணனின் தலைமுடியை சங்கீதா விடுவித்தாள். அப்புறம் அங்கேயே நின்றவாறு அசோக்கின் முகத்தையே கடுப்புடன் முறைத்துக்கொண்டிருக்க, பாரதி அவளை விரட்டினாள்.
"ஏய்.. போடி.. போய் எக்ஸர்சைஸ் பண்ணு.. போ..!!"
இப்போது சங்கீதா மெல்ல அவளுடைய சேருக்கு நகர்ந்தாள். அவளையே சில வினாடிகள் எரிச்சலாக பார்த்த பாரதி, பிறகு தலை கலைந்து போய் அமர்ந்திருந்த மகனிடம் திரும்பி சொன்னாள்.
"இந்தாடா.. உனக்குந்தான்..!! மீரா பத்தி பொலம்புறதை இத்தோட நிறுத்திக்கோ.. சும்மா சும்மா அந்த பொண்ணு பண்ற நல்ல விஷயத்தை எல்லாம்.. கொலைக்குத்தம் மாதிரி வந்து சொல்லிட்டு இருக்காத.. எனக்கே எரிச்சலா வருது..!! என்ன.. புரியுதா..??"
"ம்ம்.." அசோக்கும் முறைப்பாக சொன்னான்.
"ப்ச்.. சும்மா மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருக்காம.. நீ சொன்ன அந்த ஐட்டத்துக்கு.. இன்டர்நெட்ல ஏதாவது சமையல் குறிப்பு, செய்முறை விளக்கம் போட்ருக்கானான்னு பாரு.. நாளைக்கு செஞ்சு அசத்திடலாம்..!!" பாரதி இயல்பாகவே கேட்க, அசோக் இப்போது குழப்பமாக அம்மாவை ஏறிட்டான்.
"எ..எந்த ஐட்டத்துக்கு..??"
"அதாண்டா.. ஜானி வாக்கர்னு ஏதோ புதுசா ஒரு ஐட்டம் சொன்னியே.. மீராவுக்கு ரொம்ம்ம்ப புடிக்கும்னு..??"
பாரதி அப்பாவியாக கேட்டாள். சங்கீதா குபுக்கென்று எழுந்த சிரிப்பை, வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முயன்றாள். அசோக் திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி திருதிருவென விழித்தான்.
No comments:
Post a Comment