இருட்டுக்குள் இப்போது மிக பிரகாசமாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. கூரையில் இருந்து கீழ்தொங்கிய மின்விளக்குகள் வீட்டுக்குள்ளே வெளிச்சத்தை கிளப்பின என்றால்.. தரையில் இருந்து மேற்கிளம்பிய குமிழ்விளக்கு கம்பங்கள் வீட்டுக்கு வெளியே ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன..!! வாயிற்கதவுக்கருகே ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்போடு சேர்த்து.. இப்போது மேலும் இரண்டு போலீஸ் ஜீப்புகள், ஒரு ஒழுங்கற்ற கோணங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.. அதில் ஒரு ஜீப்பின் நெற்றியில், சிவப்பு விளக்கு இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த ஜனங்களின் கண்களில்.. ஒருவித ஆர்வமும், மிரட்சியும் ஒருசேர காணக்கிடைத்தன..!! வீட்டை சுற்றி வளர்ந்திருந்த மரங்கள்.. சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து.. அசையக்கூட மனமின்றி அப்படியே உறைந்து போயிருந்தன..!!
வீட்டுக்குள்ளே.. காவல்துறையை சேர்ந்த கைரேகை மற்றும் தடவியல் குழுவினர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்..!! அவர்களிடம், ரெட்ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் மலரவன் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும்.. குற்றம் நடந்திருந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்..!! ஆதாரங்கள் என்ற பெயரில் வீட்டிலிருந்த சில பொருட்கள் சேகரிக்கப்பட்டன.. ரத்தத்தில் நனைந்திருந்த மாய கிருஷ்ணனின் சிலை, பாலித்தீன் கவருக்குள் பத்திரமாக்கப்பட்டது..!! அறையின் ஒருமூலையில்.. எச்சில் வடிகிற நாக்கை நீளமாக தொங்கப் போட்டுக்கொண்டு அந்த மோப்ப நாய்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே வீராவேசமாக பின்பக்கம் ஓடி.. ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு சீறிப்பாய்ந்து.. பிறகு ஒரு புதரைக் கண்டதும் சிறுநீர் பெய்துவிட்டு.. மீண்டும் வீட்டுக்குள் வந்து ஓரமாக செட்டில் ஆகியிருந்தது..!!
உயிரற்ற உடல்கள் பிரேத பரிசோதனைக்கென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க.. அவை விழுந்து கிடந்த இடங்கள் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டிருந்தன..!! எப்போதோ உறைந்து போயிருந்த கருஞ்சிவப்பு ரத்தச்சேற்றில்.. இப்போது ஈக்கள் ரீங்காரமிட்டபடி வந்தமர்ந்து, மொய்க்க ஆரம்பித்திருந்தன..!! காற்றில்கூட குருதியின் நெடி கலந்துபோய்.. சுவாசிப்பவர்களின் முகத்தை சற்றே சுளிக்க வைத்தது..!!
வீட்டுக்கு வெளியே.. அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் அந்த காவல்த்துறை வாகனத்தின் மீது சாய்ந்திருந்தனர்.. அவர்களை சுற்றிலும் ஒரு மெலிதான புகை மூட்டம்.. அவர்களுடைய ஒரு கையில் பாதி காலியான டீ க்ளாஸ்.. இன்னொரு கையில் பாதி கரைந்திருந்த சிகரெட்..!! ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகம் ஒருமாதிரி இறுகிப் போயிருக்க.. அசோக்கின் முகமோ ஒருவித கவலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது..!! அவனது பாக்கெட்டில் கிடந்த பென்டன்ட் தொடையை உறுத்த.. பலவித குழப்ப எண்ணங்கள் அவனது மூளையை உறுத்திக் கொண்டிருந்தன..!!
'மீரா ஒரு குற்றவாளி.. கொலைக்குற்றம் செய்திருக்கிறாள்.. அவள் செய்த குற்றத்துக்கு சட்டப்படி தண்டனை உண்டு..!! அப்படியிருக்கையில்.. அவளுடன் உனது வாழ்க்கையை பங்குபோட்டுக் கொள்ள நினைப்பது அறிவுள்ள செயலா..?' என்று.. அவனது புத்தி கிடந்து பதறியது..!! அதையெல்லாம் அவனுடைய காதல்மனம் அப்படியே புறந்தள்ளியது..!!
'குற்றம் செய்த எல்லோரும் தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டுமா..? நம்நாட்டு அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் இதைக்கேட்டால்.. விழுந்து விழுந்து சிரிக்க மாட்டார்களா..? பணமும், பதவியும் படைத்தவர்கள் எல்லாம் சட்டத்தை ஏய்த்து சந்தோஷமாக திரிகையில்.. பாவப்பட்ட என் மீரா மட்டும் எதற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும்.. அதுவும் இரு கொடியவர்களை கொன்று முடித்ததற்காக..? அவசியமே இல்லை..!! அவள் சிக்குவது என்னிடமாக இருக்கவேண்டுமே ஒழிய.. போலீஸின் வசம் அல்ல..!! அவள் வாழ வேண்டியது என் மனச்சிறையில்தானே ஒழிய.. மத்திய சிறையில் அல்ல..!!' என்பது மாதிரி இருந்தது அவனது இதயத்தில் எழுந்த எண்ணம்..!!
காதலியை கண்டுபிடிக்கிற காரியத்துக்கு.. காவல்துறையை ஒரு கருவியாகத்தான் இத்தனை நாள் அசோக் கருதியிருந்தான்.. இனி அப்படி கருதுவதற்கு வாய்ப்பில்லை என்று இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்தது..!! சற்று ஒதுங்கியிருப்பதுதான் நல்லது.. இனி மீராவைப்பற்றி போலீஸிடம் என்ன பேசினாலும்.. அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும் என்று தோன்றியது..!! ஏற்கனவே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் பேசிய சில விஷயங்களே.. மீராவுக்கு சிக்கல்களை உருவாக்கக் கூடியவைகளாக இருந்தன..!!
"கைல ஒரு ப்ரேஸ்லட் போட்ருப்பா ஸார்.. அதுல ஹார்ட் ஷேப்ல ஒரு கோல்ட் பென்டன்ட் தொங்கும்..!!"
மீராவின் அங்க அடையாளங்களை பற்றி ஸ்ரீனிவாச பிரசாத்திடம் முன்பு சொன்னபோது.. அந்த பதக்கத்தைப் பற்றியும் அசோக் குறிப்பிட்டிருந்தான்..!! அசோக்கின் கண்ணில்பட்ட அந்த பதக்கம் மட்டும்.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பார்வையில் சிக்கியிருந்தால்.. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது மாதிரி காவல்த்துறையின் வேலை மிக எளிதாக முடிந்து போயிருக்கும்..!! அந்த பதக்கம் தனது கண்ணில் பட்டதற்காக, அசோக் இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்..!! காவல்த்துறையின் பிடியில் இருந்து மீராவை காப்பாற்றிவிட்டது போன்றொரு திருப்தி அவனுக்குள்..!!
அதேநேரம்.. போலீஸின் உதவியில்லாமல் மீராவை எப்படி தேடிக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்ற கேள்வியும்.. அவன் மனதில் எழாமல் இல்லை..!! ஒருசில யோசனைகள் அவன் மூளையில் உதித்தாலும்.. அவை யாவுமே வலுவான யோசனைகளாய் அவனுக்கு படவில்லை..!! இருந்தபோதிலும்.. எத்தனை கஷ்டப்பட நேர்ந்திட்டாலும்.. இனி போலீஸின் உதவியை மட்டும் நாடக்கூடாது என்று மட்டும், மனதுக்குள் ஒரு உறுதியான முடிவெடுத்துக் கொண்டான்..!!
'நானே தனியா அவளை தேடிக் கண்டுபுடிக்கணும்.. போலீஸ்ட்ட மட்டும் அவ பிடிபட்டுட கூடாது..!!'
"ஹ்ம்ம்.. அதுலாம் அவளை புடிச்சுடலாம்.. எங்க எஸ்கேப் ஆயிட போறா..!!"
ஸ்ரீனிவாச பிரசாத் திடீரென அவ்வாறு சொன்னதும்.. அசோக் சற்றே பதறிப்போய் அவரை திரும்பிப் பார்த்தான்.. அவன் முகத்தில் ஒருவித திகைப்பு..!! ஸ்ரீனிவாச பிரசாத்தோ.. ஒரு மெலிதான புன்முறுவலுடன் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்..!!
"எ..என்ன ஸார் சொல்றீங்க..??" அசோக்கின் குரல் தடுமாற்றமாக ஒலித்தது.
"இல்லடா.. அந்த விஜயசாரதிட்ட இருந்து, உன் ஆள் பத்தி ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடைக்கும்னு நெனச்சோம்.. அவன் என்னடான்னா இங்க செத்துப்போய் கெடக்குறான்..!! அவளை கண்டுபிடிக்க இருந்த ஒரே சான்ஸும், இப்படி ஆயிருச்சேன்னு நெனச்சு நீ வொர்ரி பண்ணிக்காத.. கூடிய சீக்கிரம் எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடலாம்னு சொன்னேன்.. புரியுதா..??"
அசோக்கின் தடுமாற்றத்தை கவனியாமல், ஸ்ரீனிவாச பிரசாத் அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சொன்னார். அவர் அவ்வாறு சொன்னதும்தான், அவ்வளவு நேரம் நின்று போயிருந்த அசோக்கின் மூச்சு இப்போது நிம்மதியாக வெளிப்பட்டது.
"ம்ம்.. பு..புரியுது ஸார்..!!" என்றான் உலர்ந்த குரலில். ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது அசோக்கின் தடுமாற்றத்தை கண்டுகொண்டார்.
"எ..என்னடா ஆச்சு.. கண்டுபிடிச்சுடலாம் சொல்றேன்.. உன் மூஞ்சில ஒரு எக்ஸ்ப்ரஸனே காணோமே..??"
"ஒ..ஒன்னும்.. ஒன்னுல்ல ஸார்..!!" என்ன பதில் சொல்வதென்று திணறிய அசோக்கிற்கு,
"ஹ்ம்ம்.. ரத்தத்தை பார்த்த ஷாக் இன்னும் போகலையா..??" ஸ்ரீனிவாச பிரசாத்தே உதவி செய்தார்.
"ஆ..ஆமாம்..!!"
"ஹ்ஹ.. இட்ஸ் ஓகே.. நைட் தூங்கி எந்திரிச்சா, காலைல எல்லாம் சரியா போயிடும்..!! உனக்கு ஃபர்ஸ்ட் டைம்ல.. அதான்..!! எனக்கு இதுலாம் பழகிப் போச்சு..!!"
ஸ்ரீனிவாச பிரசாத் அவ்வாறு அமர்த்தலாக சொன்னதும்.. அசோக் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்..!! புகை உள்ளிழுத்து குபுகுபுவென வெளியிட்டவாறே.. எதையோ தீவிரமாக யோசித்தான்..!! பிறகு மனதில் ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. ஸ்ரீனிவாச பிரசாத்தை ஆழம் பார்ப்பது மாதிரி.. மெல்லிய குரலில் அந்த கேள்வியை கேட்டான்..!!
"யா..யாரு இதை பண்ணிருப்பாங்க ஸார்..??"
"எதை..??"
"இ..இந்தக் கொலையை..!!" அசோக் அந்த மாதிரி தயக்கமாக சொன்னதும், ஸ்ரீனிவாச பிரசாத் பட்டென சிரித்துவிட்டார்.
"ஹாஹா..!! டேய்.. என்னை என்ன மந்திரவாதின்னு நெனச்சுட்டியா.. இங்க்-க வெத்தலைல தடவி பட்டுன்னு சொல்றதுக்கு..?? எல்லாம் இன்வெஸ்டிகேட் பண்ணித்தான் கண்டுபிடிக்கணும்..!! ஹ்ம்ம்.. அதுவும்கூட இப்போ என் வேலை கெடையாது.. எல்லாம் ரெட்ஹில்ஸ் போலீஸ் பாத்துப்பாங்க.. கொலை செஞ்சது யாருன்னு அவங்க கண்டுபிடிப்பாங்க..!!"
"தெ..தெரியும் ஸார்.. சும்மா கேட்டேன்..!!"
மெலிதான புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக் அமைதியானான். இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் எதையோ நினைத்துக்கொண்டு புருவத்தை நெறித்தார். ஒரு திடீர் யோசனை தோன்றியவராய் அசோக்கிடம் திரும்பி சொன்னார்.
"அ..அசோக்.. நான் ஒன்னு சொல்லவா..??"
"என்ன ஸார்..??"
"உன் ஆள் பத்தி ரெட்ஹில்ஸ் போலீஸ்ட்ட சொல்லலாமா..??" ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கும்போதே, அசோக்கின் உடலில் சுரீர் என்றொரு மின்சாரம் பாய்ந்தது.
"மீ..மீரா பத்தியா..??"
"ம்ம்..!!"
"எ..என்ன சொல்லலாம்னு சொல்றீங்க..??"
"அதான்டா.. இந்த விஜயசாரதி உன் ஆளை லவ் பண்ற மாதிரி நடிச்சது.. அவளை அனுபவிச்சுட்டு அப்புறம் ஏமாத்தினது.. அதனால ஆம்பளைங்கன்னாலே உன் ஆளுக்கு ஒரு வெறுப்பு இருந்தது.." ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக்கொண்டு போக, அசோக் இடையில் புகுந்து அவரை தடுத்தான்.
"ஹையோ ஸார்.. அ..அதுலாம் ஜஸ்ட் என்னோட அஸம்ப்ஷன்தான..?? உ..உண்மையா இருக்கனும்னு ஒன்னும் அவசியம் இல்லையே..??"
"ஆமான்டா.. உன்னோட அஸம்ப்ஷன்தான்..!! அதைத்தான் இவங்கட்ட சொல்லலாம்னு சொல்றேன்..!!"
"அதை எதுக்கு இவங்கட்ட..??"
"புரியலையா..?? இந்த கொலையை பண்றதுக்கு உன் ஆளுக்கு ஸ்ட்ராங் மோட்டிவ் இருக்குன்னு இவங்கட்ட சொல்லலாம்.. ஐ மீன்.. அவங்க நம்புற மாதிரி பொய் சொல்லலாம்..!!"
"அ..அதனால என்ன யூஸ்..??"
"ரெட்டை கொலைடா..!! அதுல ஒருத்தன், சென்னைலயே முக்கியமான பிக் ஷாட்டோட பையன்..!! இன்வெஸ்டிகேஷன் ரொம்ப ரொம்ப சீரியஸா இருக்கும்..!! உன் ஆளுக்கு மோட்டிவ் இருக்குன்னு மட்டும் இவங்க நம்பிட்டாங்கன்னு வச்சுக்கோ.. சும்மா விடமாட்டாங்க.. எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடுவாங்க..!!"
"ஓ..!!"
"அவளை கண்டுபிடிச்சுடுறாங்கன்னு வச்சுக்கோ.. அப்புறம் அவகிட்ட என்கொய்ரி பண்றப்போ.. அவளுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தம் இல்லன்னு இவங்களுக்கே தெரிஞ்சிடும்.. விட்டுடுவாங்க..!! அப்புறம் என்ன.. இவங்க மூலமா உனக்கு உன் ஆளு கெடைச்சுடுவா.. எல்லாம் சுபம்..!! சிம்பிளா சொல்லப்போனா.. இந்த மர்டர் சம்பந்தமான இன்வெஸ்டிகேஷனை.. உன் ஆளை தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்றேன்.. இப்போ புரியுதா..??"
"புரியுது ஸார்.. ஆ..ஆனா.."
"என்ன ஆனா..??"
"அ..அந்த மாதிரி பண்ணுனா.. மீரா பத்தின விஷயம் ந்யூஸ்பேப்பர்ல-லாம் வரும்ல..??" அசோக் கேட்க, ஸ்ரீனிவாச பிரசாத் நெற்றியை சுருக்கினார்.
"ஆ..ஆமாம்..!!"
"எ..எல்லாம் என்னோட அஸம்ப்ஷன்தான்.. இருந்தாலும்.. ஒ..ஒருவேளை.. ஒருவேளை அது உண்மையா இருந்தா.. அவ வாழ்க்கைல நடந்த அந்த அசிங்கம்.. அப்புறம் ஊருக்கே தெரிஞ்சு போயிடும்.. இல்ல..??"
"ம்ம்..!!" அசோக் எங்கே வருகிறான் என்று ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு இப்போது தெளிவாக புரிந்தது.
"வேணாம் ஸார்.. எனக்கு அதுல விருப்பம் இல்ல..!!"
"இ..இல்லடா.. கொஞ்சம் யோசி.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு இது ஒரு.."
"அவளை கண்டுபிடிக்கிறது எனக்கு முக்கியந்தான் ஸார்.. ஆனா அதை விட.. அவளுக்கு எந்த களங்கமும் வராம பாத்துக்குறது ரொம்ப ரொம்ப முக்கியம்..!! அவளை என் உயிரைவிட அதிகமா நேசிக்கிறேன்.. என்மூலமா அவளுக்கு ஒரு கெடுதல் நடந்துச்சுனா.. சத்தியமா அதை என்னால தாங்கிக்கவே முடியாது ஸார்..!! அவ எனக்கு கெடைக்காட்டா கூட பரவால.. இந்த மாதிரி ஊருக்கே அந்த விஷயம் தெரிஞ்சு, அவ அசிங்கப்பட கூடாது..!! ப்ளீஸ் ஸார்.. தயவு செஞ்சு மீரா பத்தி எந்த விஷயமும் இவங்கட்ட சொல்லிராதிங்க.. நான் சொன்னதெல்லாம் உங்க மனசோடவே இருக்கட்டும்.. ப்ளீஸ் ஸார்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. ப்ளீஸ்..!!"
அழுதுவிடுகிற குரலில் படபடவென அசோக் கெஞ்சலாக சொல்ல, ஸ்ரீனிவாச பிரசாத் அவனையே திகைப்பாக பார்த்தார். அந்தப்பார்வையில் 'ஏமாற்றி சென்றவள் மீதுதான் இவனுக்கு எத்தனை காதல்..?' என்பது மாதிரியான பிரமிப்பும் கலந்திருந்தது. முழுதும் கரைந்துபோன சிகரெட் இப்போது அவருடைய விரலை சுட, கையை உதறி அதனை விசிறினார். தலையை மெலிதாக உலுக்கிக்கொண்டவர், வேறுபக்கமாக பார்வையை வீசினார். தூரத்தில் கேட்டுக்கருகே தெரிந்த மனித கும்பலை வெறித்தவாறே, எதையோ யோசிக்க ஆரம்பித்தார்.
அவ்வளவு நேரம் அவரிடம் அப்பாவியாக, பரிதாபமாக ஒரு முகத்தை காட்டிக்கொண்டிருந்த அசோக்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த முகத்தை மாற்றிக் கொண்டான்..!! அவனுடைய முகம் இப்போது பாறை போல இறுக ஆரம்பித்தது..!! அப்படியே தலையை மெல்ல திருப்பி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான்..!! அவருடைய முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்ததும்.. அசோக்கின் மனதுக்குள் ஒருவித நிம்மதியும், திருப்தியும் ஒருசேர பரவின.. அவனது உதட்டோரத்தில் ஒரு குறும்புன்னகை மெலிதாக கசிந்தது..!!
'மீரா பற்றிய பேச்சினை இவரே ஆரம்பித்தது, மிக வசதியாக போயிற்று.. இவர் ஆரம்பித்ததை மீராவுக்கு சாதகமாக திருப்பியாயிற்று..!! குற்றத்தை புலனாய்வு செய்யப் போகிறவர்களிடம்.. மீரா பற்றிய விஷயங்களை இவர் சொன்னால்.. நிச்சயம் அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும்..!! அவர்களுடைய சந்தேகப்பார்வை மீரா இருக்கிற திசைக்கே திரும்பக்கூடாது.. அதற்கு.. மீரா பற்றி இவர் அவர்களிடம் வாயை திறக்கவே கூடாது..!! என் மீது இவருக்கு அன்பிருக்கிறது.. என் கெஞ்சலை இவர் நம்பிவிட்டார்.. இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.. சொல்வதா வேண்டாமா என்று..!! இவரை மேலும் குழப்ப வேண்டும்.. இவருக்கு என் மீதிருக்கும் அன்பினை, மீராவுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளவேண்டும்..!!'
மனதில் அந்த மாதிரி எண்ணம் ஓடவும்.. அசோக் இப்போது மீண்டும் தனது முகத்தை அப்பாவித்தனமாக மாற்றிக் கொண்டான்..!! மேலும் சில சென்டிமன்டான டயலாக்குகளை அவசரமாக யோசித்துக் கொண்டவன்.. அவற்றை ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொல்வதற்காக வாயை திறந்தபோதுதான்..
"என்ன ஸார்.. இங்க வந்து தனியா நின்னுட்டிங்க..??"
அவர்களுக்கு பின்னால் இருந்து அந்த சப்தம் கேட்டது.. உடனே இருவரும் திரும்பி பார்த்தார்கள்..!! தடித்த மீசைமயிர்களுடனும்.. கனத்த கன்னக்கதுப்புகளுடனும்.. இரவு நேரத்திலும் அணிந்த குளிர்கண்ணாடியுமாக.. இன்ஸ்பெக்டர் மலரவன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அவரிடம்,
"ஒன்னுல்ல ஸார்.. உங்க வேலையை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான்..!!" என்றார் மெலிதான புன்னகையுடன்.
"அதனால என்ன ஸார்.. பரவால..!!" சொன்ன மலரவன் அவரை நெருங்கி,
"Can I borrow a cigarette..??" என்று கேட்டார் ஆங்கில இளிப்புடன்.
உடனே ஸ்ரீனிவாச பிரசாத் சிறு பதற்றத்துடன், சிகரெட் பாக்கெட் எடுத்து அவசரமாக அவரிடம் நீட்ட.. மலரவன் அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி உதட்டில் பொருத்திக் கொண்டார்..!! ஸ்ரீனிவாச பிரசாத் நெருப்பு பற்றவைக்க.. மலரவன் புகையிழுத்து வெளியே ஊதி, வளிமண்டலத்தை மாசுபடுத்த ஆரம்பித்தார்..!!
"வெப்பன் கெடைச்சதா ஸார்..??" கேட்டார் ஸ்ரீனிவாச பிரசாத்.
"எங்க..??? எவ்வளவு தேடியும் கெடைக்கலை..!! Knife மாதிரி எதோ ஷார்ப்பான வெப்பன்தான் ஸார்.. உடம்பு பூரா அப்படியே பஞ்சர் பண்ணிருக்காங்க..!! அந்த மூர்த்தி ஸார் பையனோட பின்னந்தலைல.. இந்த எடத்துல.. செமத்தியா ஒரு அடி விழுந்திருக்கு.. அனேகமா அந்த கிருஷ்ணன் சிலையை வச்சுத்தான் அடிச்சிருக்கனும்னு தோணுது..!! ஹ்ஹ்ம்ம்ம்.. அதுதான் இப்போதைக்கு கெடைச்சிருக்குற ஒரே வெப்பன்..!!" பதில் சொன்னார் மலரவன்.
"ம்ம்.. மூர்த்தி ஸார்க்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா..??"
"பண்ணியாச்சு..!! மனுஷன் மலேசியால இருக்காரு போல.. மேட்டரை சொல்றேன், பெருசா அவர்ட்ட ஷாக்கே இல்ல ஸார்..!! சொன்னதெல்லாம் 'ம்ம்.. ம்ம்..'ன்னு பொறுமையா கேட்டுக்கிட்டாரு.. உடனே கெளம்புறேன்னு மட்டும் சொன்னாரு.. காலைல இங்க இருப்பாருன்னு நெனைக்கிறேன்..!! ஹ்ம்ம்... அப்புறம்.. இன்னொரு விஷயம் ஸார்.."
"என்ன..??"
"உள்ள எங்களுக்கு நெறைய ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கெடைச்சிருக்கு..!! உங்க ரெண்டு பேரோட ஃபிங்கர் ப்ரின்ட்ஸ் கூட எங்களுக்கு வேணும்.. எலிமினேட் பண்றதுக்கு..!!"
"ஷ்யூர்.. அதனால என்ன.. குடுத்திடலாம்..!!"
"தேங்க்ஸ்..!! இப்போ வேணாம்.. நாளைக்கு பாத்துக்கலாம்.. சரியா..?? ம்ம்ம்ம்ம்ம்.. அப்புறம்.. உங்களை இன்னொன்னு கேக்கனும்னு நெனச்சேன்.."
"கேளுங்க..!!"
"நீ..நீங்க எப்படி.. இ..இந்த நேரத்துக்கு.. கரெக்டா இங்க..??"
நெற்றியை சுருக்கியவாறு மலரவன் அந்தமாதிரி கேட்க.. அத்தனை நேரம் அமைதியாக நின்றிருந்த அசோக்கின் மனதுக்குள்.. இப்போது திடீரென ஒரு கலக்கம்..!! படக்கென பக்கவாட்டில் திரும்பி ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஏறிட்டான்.. அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று.. பதற்றம் அப்பிய முகத்துடன் அவரையே பார்த்தான்..!! அவரும் தனது முகத்தை திருப்பி, அசோக்கை ஒரு சலனமற்ற பார்வை பார்த்தார்.. பிறகு மலரவனிடம் திரும்பி..
"நாங்க.. ஒரு ஃப்ராட் பொண்ணை ட்ரேஸ் பண்ணிட்டு இருக்கோம் ஸார்..!!" என்றார்.
"ஓகே..!!"
"அந்தப்பொண்ணு யூஸ் பண்ணின மொபைல் நம்பர்.. இந்த விஜயசாரதியோட பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருந்தது.. அது சம்பந்தமா விசாரிக்கத்தான் வந்தோம்..!!"
"ஓ..!! ம்ம்... அப்போ அந்தப்பொண்ணுக்கும் இந்த பையனுக்கும்..??" மலரவன் கேள்வியாக பார்க்க,
"இல்ல.. எந்த சம்பந்தமும் இல்ல..!!" ஸ்ரீனிவாச பிரசாத் அழுத்தம் திருத்தமாக சொன்னார். சொன்னவர் கோர்வையாக மேலும் தொடர்ந்தார்.
"ரெண்டு வாரம் முன்னாடியே.. விஜயசாரதி கூட நான் ஃபோன்ல பேசினேன்.. அப்போவே தெளிவா சொல்லிட்டான்.. இவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு..!! ஆக்சுவலா.. இவன் யூ.எஸ் போறதுக்கு முன்னாடியே.. இவனோட செல்ஃபோனை எங்கயோ தொலைச்சிருக்கான்.. அது அந்தப்பொண்ணு கைல சிக்கிருக்கு.. அவ அதே நம்பரை அவளோட ஃப்ராட் வேலைக்கு யூஸ் பண்ணிருக்கா.. தேட்ஸ் ஆல்..!!"
"ஹ்ஹ.. ஓகே ஓகே..!! ஹ்ம்ம்.. அப்படி என்ன ஃப்ராட் பண்ணினா அந்தப்பொண்ணு..??"
"பேங்க்ல லோன் வாங்கி தர்றதா சொல்லி.. ஒரு நாலஞ்சு பேர்ட்ட, பத்து லட்ச ரூபாக்கு மேல ஆட்டையை போட்டுட்டு.. ஆள் எஸ்கேப் ஆகிட்டா..!! ஒருமாசமா அலையுறோம்.. அவளை ட்ரேஸ் பண்ணவே முடியல..!!"
"ம்ம்ம்... செம கேடியா இருப்பா போல..??"
"சந்தேகமே வேணாம் ஸார்.. பயங்கர கேடி..!!" சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி,
"என்ன அசோக்.. சரிதான..??" என்று சற்றே கிண்டலான குரலில் கேட்டார்.
"ஆ..ஆமாம்..!!" அசோக் தடுமாற்றமாக சொன்னான்.
"ஹ்ம்ம்.. So.. What's your next move..??" மலரவன் அவ்வாறு கேட்க,
"Next move-னா..?? புரியல..!!" ஸ்ரீனிவாச பிரசாத் புரிந்தும் புரியாதவர் போல திரும்ப கேட்டார்.
"இல்ல.. இ..இப்போ இந்த விஜயசாரதியும் இல்ல.. அந்தப்பொண்ணை எப்படி கண்டு பிடிக்கப் போறீங்கன்னு கேட்டேன்..!!"
"ஹாஹா.. அது என் தலைவலி ஸார்.. உங்களுக்கு எதுக்கு..??"
அந்த விஷயத்தை பற்றி, அதற்கு மேலும் பேச தனக்கு விருப்பம் இல்லை என்பதை.. ஒரு சிரிப்புடன் ஸ்ரீனிவாச பிரசாத் நாசுக்காக சொன்னார்..!! மலரவனுக்கும் அது புரியாமல் இல்லை.. பதிலுக்கு புன்னகைத்தவர்..
"ஹாஹா.. ஆமாமாம்.. உங்க தலைவலி எனக்கெதுக்கு..?? எனக்குத்தான் ஏற்கனவே ரெட்டைத்தலைவலி வந்துடுச்சே.. அதைப்போய் என்னன்னு பாக்குறேன்..!!"
என்று சிரிப்புடனே சொல்லிவிட்டு.. சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்து நசுக்கிவிட்டு.. அங்கிருந்து நகன்றார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி.. 'என்னடா.. திருப்தியா..?' என்பது போன்ற பார்வையுடன் புன்னகைத்தார்..!! அசோக்கும்.. அவர் மலரவனிடம் பேசிய விதத்தில் விளைந்திருந்த ஒருவகை நிம்மதியுடன்..
"தேங்க்ஸ் ஸார்..!!" என்றான் மெலிதாக.
No comments:
Post a Comment