CLOSE

Friday, 6 April 2018

அன்புள்ள ராட்சசி - பகுதி - 15

அடுத்த நாள் காலை.. இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள், வானத்தின் மையத்தை எட்டி விடவேண்டும் என்று.. சூரியன் மெல்ல மேல்நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த நேரம்..!! அந்த சூரியனை சுற்றிலும் கருப்பு நிற குளிர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க.. வெப்பத்தின் உக்கிரம் வலுவிழந்து போய்.. சற்றே குளுமையான வானிலை பூமியில்..!! மாலை அதற்குள் வந்துவிட்டதோ என மயக்கம் கொள்கிற அளவுக்கு.. மங்கிப்போன வெளிச்சமே எங்கெங்கிலும்..!! காற்றிலும் ஈரப்பதம் மிகுந்து போயிருந்தது.. ஜிலுஜிலுவென ஊருக்குள் அலைபாய்ந்து.. மரங்களையும் மனிதர்களையும் இதமாய் வருடிச் சென்றது..!!

அசோக்கின் பைக் விருகம்பாக்கம் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. மந்தமான போக்குவரத்துடன் கூடிய மாநில நெடுஞ்சாலையில், மிதமான வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது. அசோக்கின் கண்கள் சாலையில் பதிந்திருக்க, அவனது தலைகவச வார்ப்பட்டை காதோரமாய் தடதடத்துக் கொண்டிருந்தது. பில்லியனில் அமர்ந்திருந்த மீராவின் கை அசோக்கின் தோளில் படர்ந்திருக்க, அவளது கூந்தல் குளிர்காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அசோக்கின் உதடுகள் ஒரு புன்னகையை பூசியிருக்க, மீராவின் முகமோ ஒருவித குழப்பத்தில் குளித்திருந்தது.

"ப்ளீஸ் அசோக்.. எங்க போறோம்னு சொல்லு..!!"

"நோ.. இட்ஸ் சர்ப்ரைஸ்..!!"

"ப்ச்.. ப்ளீஸ் அசோக்..!!"

"ம்ஹூம்.. எத்தனை நாள் நீ இந்த மாதிரி என்னை மண்டை காய வச்சிருப்ப..?? இன்னைக்கு உன் மண்டை கொஞ்ச நேரம் காயட்டும்.. நான் சொல்ல மாட்டேன்..!!"

"இ..இங்க பாரு அசோக்.. மூவின்னா ஐ'ம் ரியல்லி ஸாரி.. மூவி பாக்குறதுக்குலாம் எனக்கு இப்போ சுத்தமா மூட் இல்ல.. ஓகே..??"

"மூவிலாம் இல்ல..!!"

"அப்புறம்..?? வே..வேற எங்கதான் போற..?? இந்தப்பக்கம் நல்ல ரெஸ்டாரன்ட் கூட இல்ல..??"

"நீயே கெஸ் பண்ணு..!!"

"ப்ளீஸ் அசோக்..!!"

"ம்ஹூம்..!!" அசோக் பிடிவாதமாக இருக்க, மீரா இப்போது பொறுமை இழந்தாள்.

"ப்ச்..!! இப்போ நீ சொல்லப் போறியா.. இல்ல நான் பைக்ல இருந்து குதிக்கட்டுமா.?? ஐ'ம் சீரியஸ்..!!" என்றவாறே அவள் எழ முயல, அசோக்கிடம் உடனடியாய் ஒரு பதற்றம்.

"ஹேய்ய்ய்.. இரு இரு.. சொல்றேன்.. நீ பாட்டுக்கு குதிச்சாலும் குதிச்சிடப் போற..!!"

"அப்போ சொல்லு..!! எங்க போயிட்டு இருக்குறோம்..??"

"ஹ்ம்ம்.. எப்படி சொல்றது.. இந்த ஸ்பெஷல் டே'யை செலிப்ரேட் பண்ண போயிட்டு இருக்குறோம்..??" அசோக் உற்சாகமாக சொல்ல, மீராவுக்கு நெற்றி சுருங்கியது.

"ஸ்பெஷல் டே'யா..?? எ..என்ன ஸ்பெஷல் இன்னைக்கு..??"

"ஹேய்.. கமான்.. நடிக்காத..!! இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இல்ல..??"

"ம்ஹூம்.. இல்ல..!!"

"ஹேய் மீரா.. இன்னைக்கு பிப்ரவரி - 14.. வேலண்டைன்ஸ் டே..!!"

"ஓ..!!" அசோக்கின் குரலில் இருந்த குதுகலம், மீராவிடம் துளியும் இல்லை.

"அது மட்டும் இல்ல.. யு நோ ஒன்திங்.. நாம ரெண்டு பேரும் ஐ லவ் யூ சொல்லிக்கிட்டு.. இன்னைக்கோட நூறு நாள் ஆகிப் போச்சு..!! என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்.. இல்ல..??"

"ஹ்ம்ம்..!!"

"இப்போ சொல்லு.. இன்னைக்கு ஸ்பெஷல் டே'யா.. இல்லையா..??"

"ம்ம்.. ஸ்பெஷல்தான்..!!"

"ஆர்டினரி ஸ்பெஷல் இல்ல மீரா.. இட்ஸ் அல்ட்ரா ஸ்பெஷல்.. ஹாஹா..!!"

"அதுசரி.. அதுக்கு இப்போ.. என்னை எங்க கூட்டிட்டு போயிட்டு இருக்குற..??"

"அது சர்ப்ரைஸ்..!! சொல்ல மாட்டேன்..!!"

"ப்ளீஸ் அசோக்.. சொல்லு..!!"

"ப்ச்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல உனக்கே தெரிஞ்சிடும் மீரா.. கொஞ்ச நேரம் பல்லை கடிச்சுட்டு உக்காந்திரு..!!"

மீரா அதன்பிறகு அசோக்கை தொல்லை செய்யவில்லை. அமைதியாகிப் போனாள். அசோக் உற்சாகமாய் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க, மீரா தீவிரமாய் எதையோ யோசித்துக் கொண்டே வந்தாள்.

கேசவர்த்தினி பஸ் நிறுத்தத்தை தாண்டியதும், அசோக் பைக்கை இடது புறம் திருப்பினான். மேலும் ஐந்து நிமிட பயணம்..!! சௌத்ரி நகரை கடந்து, புதிதாக போடப்பட்டிருந்த அந்த தார்ச்சாலையில் வண்டி பயணித்தது. காலி மனையிடங்கள் அதிகமாகவும், ஆங்காங்கே முளைத்திருந்த பெரிய பெரிய வீடுகளுமாக அமைதியான சாலை. அந்த சாலையின் இறுதியில், இளம் பச்சை நிற பூச்சுடன் நின்றிருந்தது அந்த வீடு. காம்பவுண்டுக்குள் வண்டியை செலுத்தி, ஓரமாக ப்ரேக்கிட்டு நிறுத்தினான் அசோக். தயக்கத்துடனே கீழிறங்கிய மீரா, அந்த வீட்டை குழப்பமாக பார்த்தவாறே அசோக்கிடம் கேட்டாள்.


"எ..எங்க வந்திருக்குறோம்..?? இ..இது யார் வீடு..??"

"ம்ம்.. நம்ம வீடு மீரா.. கல்யாணத்துக்கு அப்புறம் நாம வாழப்போற வீடு..!!"

பைக்கில் இருந்து இறங்கிய அசோக் புன்னகையுடன் சொல்ல, மீராவிடம் உடனடியாய் ஒரு திகைப்பு.

"வாட்..????"

"யெஸ்.. இதுதான் அந்த சர்ப்ரைஸ்..!! எப்டி..??"

"எ..என்ன அசோக் இது.. என்னை எதுக்கு இங்க..??" மீரா தடுமாற்றமாய் கேட்டாள்.

"ஹேய் ரிலாக்ஸ்.. என்னாச்சு இப்போ.. ம்ம்..?? இங்க பாரு.. நீ ஏன் இப்படி ஷாக் ஆகுறேன்னு எனக்கு புரியுது..!! வேலண்டைன்ஸ் டே'ன்னா.. எல்லாரும் வீட்ல இருந்து எஸ்கேப் ஆகி ஊர் சுத்துவாங்க.. இவன் என்னடான்னா வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்கானேன்னு பாக்குற.. அதான..?? ஹ்ம்ம்.. நான் ஒன்னு சொல்லவா..??"

"எ..என்ன..??"

"இந்த உலகத்துலேயே எங்க வீடு மாதிரி.. வேலண்டைன்ஸ் டே'யை செலப்ரேட் பண்றதுக்கு, வேற பெஸ்ட் ப்ளேஸே கெடையாது..!! தீபாவளி, பொங்கல்லாம் விட.. வேலண்டைன்ஸ் டே'யை ரொம்ப ஸ்பெஷலா செலப்ரேட் பண்ணுவோம்.. தெரியுமா..??"

"ஐயோ நான் அதுக்கு சொல்லல அசோக்.. இப்படி திடீர்னு.."

"ப்ச்.. அதுலாம் ஒன்னுல்ல மீரா..!! உன்னை கூட்டிட்டு வர்றேன்னு, நான் நேத்தே வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டேன்.. எல்லாரும் உனக்காக ஆசையா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..!! வா.. வந்து எங்க ஆளுங்களை பாரு.. கமான்..!!"

சொல்லிவிட்டு அசோக் முன்னால் நடந்தான். மீரா ஒருவித தயக்கத்துடனே அவனை பின்தொடர்ந்தாள். அதற்குள்ளாகவே பைக் சத்தம் கேட்டு, வீட்டுக்கதவு திறந்து கொண்டது. அசோக்கின் குடும்பத்தினர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வெளிப்பட்டு, வாசலை நிறைத்தனர். பாட்டி.. தாத்தா.. பாரதி.. மணிபாரதி.. சங்கீதா.. இவர்களுடன் கிஷோரும் தலை காட்டினான்..!! அனைவருடைய முகத்திலுமே, அப்படி ஒரு அளவிட முடியாத ஒரு பூரிப்பும், மலர்ச்சியும்..!! இன்னும் சிறிது நாட்களில் முறைப்படி வீட்டுக்கு வரப்போகிற மருமகளை வரவேற்க, வீட்டு வாசலுக்கே எல்லோரும் வந்திருந்தனர்.

அனைவரும் வாசலிலேயே காத்திருக்க, அவர்களது கால்களுக்கு இடையே தலை நீட்டி எட்டிப்பார்த்த நாய்க்குட்டிகள் இரண்டும், பிறகு சந்தோஷமாக குறைத்துக்கொண்டே இவர்களை நோக்கி ஓடிவந்தன. அருகில் நெருங்கி இருவரையும் ஸ்னேஹமாக முகர்ந்து பார்த்தவைகள், அப்புறம் ஆளுக்கொரு பக்கமாய் இவர்களுடன் வாசலை நோக்கி நடந்தன.

மீரா நூறு சதவீதம் திகைப்பின் பிடியில் சிக்கியிருந்தாள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு அசோக் தன்னை உள்ளாக்குவான் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த திகைப்பு அவளுடைய முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. ஒருவித மிரட்சிப் பார்வையுடனே, அசோக்குடன் நடந்தாள்.

"ரெண்டு பேரும் எந்தக்குறையும் இல்லாம.. நூறு வருஷம் சந்தோஷமா வாழனும் கண்ணுகளா..!!" ஆரத்தி எடுத்த பாட்டி, அசோக்குக்கும் மீராவுக்கும் நெற்றியில் திலகமிட்டாள்.

"நீ வாழப்போற வீடும்மா.. வலது காலை எடுத்து வச்சு உள்ள வா..!!" கனிவாக சொன்ன பாரதி, மீரா உள்ளே நுழைந்ததும் அவளுடைய கன்னத்தை அன்பாக வருடினாள்.

"நான் அசோக்கோட அப்பா பிச்சுமணி.. எழுத்தாளர் மணிபாரதின்னு கேள்விப்பட்டிருக்கியா.. அது சாட்சாத் நானேதான்.. ஹாஹா..!!" புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் மணிபாரதி.

"ஹாய் அண்ணி..!! அண்ணாவும் கிஷோரும் உங்களை பத்தி நெறைய்ய்ய்ய சொல்லிருக்காங்க..!! நீங்க அழகா இருப்பீங்கன்னு தெரியும்.. ஆனா.. இவ்வ்வ்வளவு அழகா இருப்பீங்கன்னு நான் நெனச்சே பாக்கல..!! ஹையோ... சூப்ப்ப்பரா இருக்கீங்க..!!" மீராவின் விரல்களுடன் தனது விரல்களை கோர்த்துக் கொண்டு, விட மறுத்தாள் சங்கீதா.

"இதுதான் நாம ரெண்டு பேரும் வாக்கப்படப்போற வீடு ஸிஸ்டர்.. நல்லா பாத்துக்கங்க.. உலகத்துல எங்க தேடுனாலும், இந்த மாதிரி கேரக்டர்ஸ்கள ஒரே வீட்ல பாக்க முடியாது.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு டைப்பு..!!" சன்னமான குரலில் அசோக்கின் குடும்பத்தை கிண்டலடித்தான் கிஷோர்.

"வெளில ரொம்ப வெயிலாம்மா..?? இப்படி களைச்சு போய் வந்திருக்கிறியே..?? ஏம்மா பாரதி.. பாப்பாக்கு குடிக்கிறதுக்கு ஏதாவது குடு..!!" மீராவின் மீதான அக்கறையை, மருமகளுக்கு உத்தரவு போடுவதில் காட்டினார் தாத்தா.

மீராவை உள்ளறைக்கு அழைத்து சென்று.. சோபாவில் அமரவைத்து.. அவளை சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டனர்..!! பாரதி கொண்டு வந்த பாதாம் கீரை.. மீரா கொஞ்சம் கொஞ்சமாய் அருந்த.. மற்றவர்கள் அத்தனை நாளாய் மீராவிடம் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம்.. இப்போது சராமரியாக கேட்டு தள்ளினர்..!! மீராவும் அவர்களது கேள்விகளுக்கெல்லாம்.. முகத்தில் ஒரு மிரட்சியும்.. கண்களில் ஒரு மருட்சியுமாய்.. தயங்கி தயங்கி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..!! அசோக் எதுவுமே பேசவில்லை.. அவனது உள்ளம் கவர்ந்த திருடியிடம்.. தனது குடும்பத்தினர் குறுக்கு விசாரணை செய்கிற காட்சியை.. உதட்டில் ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!!


மீரா ஆரம்பத்தில் அவஸ்தையாக நெளிந்தாள்.. அசௌகரியமாக உணர்ந்தாள்.. இப்படி ஒரு சூழ்நிலைக்கு அவள் கொஞ்சமும் தயாரில்லாமல் இருந்ததுதான் அதன் காரணம்..!! ஆனால் அசோக்கின் குடும்பத்தினர்.. அவள் மீது காட்டிய பரிவும் பிரியமும்.. சீக்கிரமே அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தன..!!

சகஜ நிலைக்கு திரும்பினாலும்.. அவளுடைய மனதில் ஏற்பட்டிருந்த அந்த வியப்பு நிலை.. அப்படியேதான் இருந்தது..!! இன்னும் சொல்லப் போனால்.. நேரம் ஆக ஆக.. அந்த வியப்பு அதிகரித்துக் கொண்டேதான் சென்றது..!! அப்படி என்ன வியப்பு என்கிறீர்களா..?? இரண்டு வகையான வியப்பு அவளுக்கு.. ஒன்று.. அசோக்கின் குடும்பத்தினர் அவளிடம் காட்டிய அபரிமிதமான அன்பு.. இரண்டு.. மூன்று தலைமுறையினர் வாழ்கிற அந்த குடும்பத்தில்.. ஒருவருக்கொருவர் இடையில் இருந்த அந்த அன்னியோன்யம்..!! இரண்டையுமே அவள் சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை..!!

தங்களுடைய காதல் விஷயத்தை, தன் குடும்பத்திடம் தெரிவித்திருப்பதாக அசோக் மீராவிடம் சொல்லியிருக்கிறான். ஆனால், வரப்போகிற மருமகள் மீது அவர்கள் இப்போதே இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டிருப்பார்கள் என்று மீரா நினைத்திருக்கவில்லை. தங்கள் குடும்பத்தில் அனைவருக்குமே காதல் திருமணம்தான் என்பதையும் அசோக் அவளுக்கு சொல்லியிருக்கிறான். ஆனால் இந்த அளவுக்கு காதலும், மகிழ்ச்சியும் கொஞ்சி விளையாடுகிற குடும்பம் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.

முதலில் அவளை சூழ்ந்து கொண்டு மொத்தமாக அன்பை பொழிந்தவர்கள்.. அப்புறம் அவளை கைப்பிடித்து அவரவர் அறைக்கு அழைத்துச் சென்று.. தனித்தனியாக அவளிடம் மனம் விட்டு பேசி.. தங்கள் ப்ரியத்தை காட்டினர்..!!

மணிபாரதியின் அறை..

"அப்பா எப்படிமா இருக்காரு..??" சம்பிரதாயமாகவே ஆரம்பித்தார் மணிபாரதி.

"ம்ம்.. ந..நல்லா இருக்காரு அங்கிள்..!!" மீராவின் குரலில் இன்னுமே தயக்கம்.

"அப்பா பேரு சந்தானம்தான.??"

"ஆ..ஆமாம்..!!"

"அசோக் ஒருதடவைதான் சொன்னான்.. எப்டி ஞாபகம் வச்சிருக்கேன் பாத்தியா..?? அங்கிள்க்கு ஞாபக சக்தி கொஞ்சம் ஜாஸ்தி..!!"

"ஓ..!!"

"ஹ்ஹ்ம்ம்ம்.. அப்பா பத்தி அசோக் எல்லாம் சொல்லிருக்கான்மா.. இந்தக்காலத்துலயும் இப்படிலாம் இருக்காங்களான்னு ரொம்ப ஆச்சரியமா இருந்தது..!! ஆனா.. நீ அதெல்லாம் எதுவும் நெனைச்சு கவலைப்பட்டுக்க வேணாம்மா மீரா.. 'அப்பா சம்மதிப்பாரா.. இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்குமா..' அப்டின்லாம் எந்த கவலையும் உனக்கு வேணாம்.. தெரிஞ்சதா..?? நீ எங்க வீட்டு பொண்ணும்மா.. நாங்கல்லாம் இருக்கோம் உனக்கு..!! உன் அப்பா கைல கால்ல விழுந்தாவது.. இந்த கல்யாணத்துக்கு அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு.. ஹாஹா.. சரியா..??" மணிபாரதி சிரிப்புடன் சொன்னாலும், அவருடைய பேச்சில் ஒரு அழுத்தமான நம்பிக்கை தெரிந்தது.

"ச..சரி அங்கிள்..!!" மீராவின் குரல்தான் ஏனோ பிசிறடித்தது.

"ம்ம்.. என்னோட நாவல்லாம் படிச்சிருக்கியாமா..??" மணிபாரதி திடீரென அப்படி கேட்டார்.

"இ..இல்ல அங்கிள்.. ஆனா உங்க பேரை கேள்விப் பட்ருக்கேன்..!!"

"ஹஹா.. பரவால பரவால..!! எதுக்கு கேட்டேன்னா.. பதினஞ்சு வருஷம் முன்னாடி.. 'காதலை வாழ விடுங்கள்' அப்டின்னு நான் ஒரு நாவல் எழுதினேன்.. எனக்கு ரொம்ப பேர் வாங்கி தந்த நாவல்..!! அதுலயும் இப்படித்தான்.. உன் அப்பா மாதிரியே ஒரு அப்பா கேரக்டர்.. அவருக்கும் உன்னை மாதிரியே ஒரு பொண்ணு..!! அந்தப் பொண்ணு என்ன ஒரு கேரக்டர் தெரியுமா.. நான் இதுவரை உருவாக்குனதுலயே அந்த பொண்ணு கேரக்டர்தான்.." மணிபாரதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவரை செல்லமாக கடிந்து கொண்டே பாரதி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

"ஐயயயே.. என்னங்க இது.. புள்ளையை சாப்பிடவிடாம.. நாவலு.. கேரக்டருனுட்டு.." என்றவாறே உள்ளே வந்தவள், மீராவுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டு,

"இவர் எப்போவும் இப்படித்தான்மா.. எந்த நேரமும் எழுத்து நெனைப்பாவே இருப்பாரு.. இப்போ உன்கிட்ட அஞ்சு நிமிஷம் பேசுனார்ல.. இதை வச்சு கூட ஏதாவது கதை எழுதலாமான்னு யோசிப்பாரு..!!" என்று கணவனை கிண்டல் செய்தாள்.

"ஹாஹா.. அப்படிலாம் எதுவும் இல்லம்மா மீரா.. வெளையாட்டுக்கு சொல்றா.. அவளை நம்பாத..!!" மணிபாரதி மீராவிடம் சமாளிப்பாக சொன்னார்.

"ம்க்கும்.. உங்க கூட இருபத்தஞ்சு வருஷமா வாழ்ந்திருக்கேன்.. எனக்கு தெரியாதா நீங்க என்ன நெனைப்பீங்கன்னு..??" சொன்ன பாரதி, பிறகு மீராவிடம் திரும்பி,

"அவர் கெடக்குறாரு விடும்மா.. நீ நல்லா சாப்பிடு.. இந்தா.." என்றவாறு தட்டில் இருந்த ஒரு பிஸ்கட்டை எடுத்து மீராவின் வாய்க்கருகே கொண்டு சென்றாள்.

"இ..இருக்கட்டும் ஆன்ட்டி.. நான் சாப்பிட்டுக்.."

"பரவாலமா.. இப்போ என்ன.. என் மருமகளுக்கு நான் ஊட்டி விடக் கூடாதா..?? ம்ம்..?? இந்தா.. சாப்பிடு..!!" பாரதி ஊட்டிவிட, மீரா பிஸ்கட்டை ஒரு கடி கடித்தாள்.

"உனக்கு காரந்தான் புடிக்கும்னு.. ஆண்ட்டி உனக்காகவே ஸ்பெஷலா இந்த சில்லி பிஸ்கட் செஞ்சேன்.. எப்டி இருக்கு..??"

"ம்ம்.. நல்லா இருக்கு ஆன்ட்டி..!!"

"மதியத்துக்கு.. ஹைதராபாத்தி ஸ்டைல்ல சிக்கன் செஞ்சுட்டு இருக்கேன்..!! இவங்க யாருக்கும் காரமே பிடிக்காது.. ஆண்ட்டி உனக்கு மட்டும் கொஞ்சம் தனியா.. காரசாரமா பண்ணிடுறேன்.. என்ன..??"

"ஐயோ.. எதுக்கு ஆண்ட்டி அதெல்லாம்.. தேவை இல்லாம உங்களுக்கு கஷ்டம்..??"

"அட.. இதுல என்னம்மா கஷ்டம் இருக்கு..?? ஆண்ட்டிக்கு பிடிச்ச வேலையே சமைக்கிறதுதான் தெரியுமா..?? உனக்கு சமையல் தெரியாதுன்னு அசோக் சொல்லிருக்குறான்.. ஒன்னும் கவலைப்படாத.. ஆண்ட்டி இருக்கேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் நானே பாத்துக்குறேன்..!!"

"ம்ம்.."

"மதியம் சாப்பிட்டுட்டு.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு.. அப்புறம் சாயந்திரம் எல்லாரும் கபாலீஸ்வரர் கோயில் போயிட்டு.. அப்படியே பீச்சுக்கும் போயிட்டு வரலாம்..!! சரியா..??"

"ம்ம்.."

"இந்தா.. சாப்பிடு.. எல்லாம் உனக்காக செஞ்சதுதான்..!!" பாரதி மீண்டும் ஒரு பிஸ்கட் எடுத்து, மீராவுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.

பாரதியின் அறையில் இருந்த மீராவை, பிறகு கோமளவல்லி வந்து தங்கள் அறைக்கு அழைத்து சென்றாள். மீராவும் கோமளவல்லியும் மெத்தையில் அமர்ந்திருக்க, நாராயணசாமி அந்தக்கால தனது மேடை நடிப்பின் சாம்பிள் ஒன்றை, மீராவுக்கு நடித்து காட்டினர். அவளும் 'வாவ்..' என்று கைதட்டி ரசித்தாள்.

"அந்தக் காலத்துல நான் மேடையேறினதும்.. 'தேசமெல்லாம் வென்று முடிக்க.. தேசிங்கு ராசா வந்தேனே..'ன்னு கணீர் குரல்ல பாடிக்கிட்டு.. நெஞ்சை நிமித்தி கம்பீரமா ஆடிக்கிட்டே.. வாளை இப்படி எடுத்து.. அப்படி ஒரு சொழட்டு சொழட்டி இழுத்தேன்னு வச்சுக்கோ.. முன்னாடி உக்காந்திருக்குற அத்தனை பொட்டைப் புள்ளைக மனசும்.. அந்த வாளோட சேர்ந்து வந்துரும்.. அதை அப்படியே மொத்தமா என் இடுப்புல சொருகிப்பேன்..!!"

"ஹாஹாஹாஹா..!!" தாத்தாவின் பேச்சு ஸ்லாங்கும், பாடி லாங்குவேஜும் மீராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எளிறுகள் தெரிய அழகாக சிரித்தாள்.

"எத்தனை புள்ளைக.. எவ்வளவு ஸ்னேஹிதம்.. அது ஒரு காலம்..!! ஊருக்கு ஒரு பத்து சிட்டுகளாவது.. என்னோட சோடி சேர்ந்து பறக்க ரெடியா இருந்தாளுக.. தெரியுமா..??"

"க்ரேட்..!!" மீரா தாத்தாவை பாராட்ட, கோமளவல்லிக்கு ஏனோ இப்போது மனதுக்குள் ஒரு புகைச்சல்.

"ம்க்கும்.. உங்க பழைய பெருமையை பேசலைன்னா.. தூக்கம் வராதே உங்களுக்கு ..??" என்று முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் இடித்துக் கொண்டாள்.

"ஹாஹா.. பாத்தியா.. உன் பாட்டிக்கு கோவத்த..?? இது தாத்தாவை புரிஞ்சுக்காம வர்ற கோவம் இல்லம்மா மீராக்கண்ணு.. தாத்தா மேல இருக்குற பிரியத்தால வர்ற கோவம்..!! இந்த பிரியந்தான்.. கள்ளம் கபடம் இல்லாத இந்த பாசந்தான்.. ஏதோ பொறக்குறப்போவே 'இவன்தான் என் புருஷன்'னு சாமிகிட்ட வரம் வாங்கிட்டு வந்தவ மாதிரி.. இவ எங்கிட்ட பழகுன விதந்தான்.. அத்தனை பொட்டைப் புள்ளைகளையும் விட்டுப்புட்டு.. இந்த மகராணி காலடில விழுந்துபுட்டேன்..!! ஹாஹா..!!"

நாராயணசாமி சிரிப்புடன் சொல்ல, இப்போது கோமளவல்லி வெட்கத்தில் முகம் சிவந்துபோய் தலையை குனிந்து கொண்டாள். அவர்கள் இருவரையுமே மீரா ஒரு மரியாதை கலந்த பெருமிதத்துடன் பார்த்தாள். நாராயணசாமி இப்போது மெல்ல நடந்து வந்து மீராவுக்கு அருகே அமர்ந்து கொண்டார். அவளுடைய கையை எடுத்து வாஞ்சையாக தடவிக் கொடுத்தவர், பிறகு மெல்லிய குரலில் கேட்டார்.

"நான் எதுக்கு இவ்வளவு நேரம் என்னைப் பத்தி சொன்னேன் தெரியுமா மீராக்கண்ணு..??"

"இ..இல்ல.. தெரியல.. எ..எதுக்கு..??"

"நான்தான் இந்த மாதிரிலாம்.. நெறைய பொட்டைப் புள்ளைக ஸ்னேஹிதம்..!! என் பேரன் அப்படி இல்லைம்மா.. அதை சொல்றதுக்குத்தான்..!!" நாராயணசாமி சொல்ல, மீரா அவரை சற்றே திகைப்பாக பார்த்தாள்.

"ஓ..!!"

"இதுவரை எந்த பொண்ணு கூடவும் அவன் பழகினது கெடையாது.. இத்தனை வருஷத்துல 'என் பிரண்டு'ன்னு சொல்லிட்டு, எந்தப் பொண்ணையும் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது கெடையாது..!! ஆனா.. அவன் அப்படி யாரையாவது கூட்டிட்டு வர மாட்டானான்னு இந்த குடும்பம் ரொம்ப ஏங்கி கெடந்தது..!! இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும்.. அல்லி ராணியும், அர்ஜுனனும் மாதிரி நடை நடந்து இந்த வீட்டுக்கு வந்தப்போ.. எங்க மனசே அப்படியே நெறைஞ்சு போச்சம்மா..!!"

"ம்ம்.."

"என் அளவுக்குலாம் என் பேரனுக்கு வெவரம் பத்தாது.. சூதுவாது தெரியாத பய..!! கொஞ்சம் வெளையாட்டு புத்தி.. ஆனா ரொம்ப ரொம்ப நல்லவன்மா.. அவனை கட்டிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்மா..!!" பெருமிதமாக சொன்ன நாராயணாசாமி, பிறகு மனைவியிடம் திரும்பி,

"என்ன கோமளா.. நான் சொல்றது சரிதான..??" என்று அபிப்ராயம் கேட்டார்.

"ரொம்ப சரியா சொன்னீங்க..!!" கோமளவல்லி மலர்ந்த முகத்துடன் புன்னகைத்தாள்.

மீராவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவித திகைப்புடன், அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். இப்போது கோமளவல்லி மீராவை நெருங்கி அமர்ந்தாள்.

"பெரிய ஜமீன் குடும்பம்மா என்னோடது.. கட்டுன பொடவையோடதான் இவர் என்னை வர சொன்னாரு.. ஆனா இது கூடவே ஒட்டிக்கிட்டு வந்துடுச்சு.."

சொல்லிக்கொண்டே தன் கைவிரலில் போட்டிருந்த மோதிரத்தை கோமளவல்லி கழட்டினாள். எதுவும் புரியாமல் மீரா பார்த்துக் கொண்டிருக்கையிலேயே,

"பரம்பரை மோதிரம்.. வெலை மதிப்பில்லாதது.. இத்தனை நாளா நான் போட்டுக்கிட்டேன்.. இனிமே நீ போட்டுக்கோ கண்ணு..!!" என்றவாறு மீராவின் விரலில் அணிவிக்க முயன்றாள் கோமளவல்லி. மீரா பதறிப் போனாள்.

"ஹையோ.. எ..என்ன பாட்டி இது.. ப்ளீஸ்.. வேணா.."

"இல்ல இல்ல.. அப்படிலாம் சொல்லக் கூடாது.. மொத மொறையா வீட்டுக்கு வந்திருக்குற.. உனக்கு ஏதாவது கொடுக்கணும்னு பாட்டிக்கு ஆசை இருக்காதா..?? ம்ம்..??"

"பாட்டி ரொம்ப ஆசைப்பட்டு தர்றா.. வேணான்னு சொல்லக்கூடாது மீராக்கண்ணு.. போட்டுக்கோ..!!"

கோமளவல்லியோடு சேர்ந்து நாராயணசாமியும் மீராவை வற்புறுத்த, வேறு வழி இல்லாமல் மீரா அந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டி இருந்தது. பளிச்சிடுகிற சிறுசிறு வெண்ணிற கற்கள் பாதிக்கப்பட்டு.. பளபளத்த அந்த மோதிரத்தை.. பார்த்துக்கொண்டே இருந்த மீராவுக்கு.. அவளையும் அறியாமல் கண்கள் பனித்துக் கொண்டன..!!

கொஞ்ச நேரத்திலேயே சங்கீதா பாட்டியின் அறைக்குள் கடுகடுத்த முகத்துடன் நுழைந்தாள்.

"போதும் போதும்.. ஆளாளுக்கு பேசி அண்ணியை மொக்கை மேல மொக்கை போட்டது..!! இன்னும் ஒரு மணி நேரத்துக்கு என்னோட கோட்டா.. அண்ணியை என் ரூமுக்கு கூட்டிட்டு போறேன்.. யாரும் எங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது சொல்லிட்டேன்..!!" என்றவாறே உள்ளே வந்தவள், மீராவை நெருங்கி உரிமையாக அவளுடைய கையை பிடித்து எழுப்பினாள்.

"வாங்க அண்ணி.. என் ரூமுக்கு போகலாம்..!! உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு எக்கச்சக்கமான மேட்டர் இருக்குது..!!"

மீரா சங்கீதாவுடன் அவளுடைய அறைக்கு நடந்தாள். 'பேசுறதுக்கு' என்று சங்கீதா சொன்னது தவறு.. 'பாடுறதுக்கு' என்று சொல்லியிருக்க வேண்டும்..!! தன்னுடைய லேப்டாப் திறந்து.. தான் தயாரித்து வைத்திருந்த வாய்ஸ் ஆல்பத்தை.. மீராவுக்கு போட்டுக் காட்டினாள்..!!


"ஹெட்ஃபோன் போட்டுக்கங்க அண்ணி.. அப்போத்தான் க்ளியரா இருக்கும்..!!"

சங்கீதாவே மீராவுக்கு ஹெட்ஃபோன் மாட்டி விட்டாள். Folk, Hindustani, Carnatic, Western என.. விதவிதமாய் தனது குரல் திறமையை கொட்டி.. இசையுடன் சேர்த்து பாடி வைத்த பாடல்களை எல்லாம்.. ஒவ்வொன்றாக ஓடவிட்டாள்..!! சங்கீதாவின் அறையில் மீரா இருந்த முக்கால்வாசி நேரம்.. அவளுடைய பாடலைக் கேட்பதிலேயே கழிந்து போனது..!!

"இதை கேளுங்க அண்ணி.. இது ரொம்ப நல்லா இருக்கும்..!! பாட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு ஆலாபனை பண்ணிருப்பேன்.. அதுதான் ரொம்ப ஸ்பெஷல்.. கேட்டுப்பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..!!"

ஹெட்ஃபோனில் கசிகிற சங்கீதாவின் குரலை மீரா ரசிக்க.. தனது குரலை ரசிக்கிற அண்ணியின் முகபாவனையையே சங்கீதா ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! பாடலை கேட்டு முடிந்ததும்..

"எப்படி அண்ணி இருக்கு..??" சங்கீதா ஆர்வமாக கேட்க,

"சான்ஸே இல்ல.. லவ்லி வாய்ஸ் உனக்கு..!!" மீரா மனம் திறந்து பாராட்டினாள்.

"ரியல்லி..?? பிடிச்சிருக்கா உங்களுக்கு..??" சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

"ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. க்ரேட்..!!!"

"தேங்க்யூ அண்ணி.. தேங்க்யூ ஸோ மச்..!!"

"ஹ்ம்ம்.. நீ இவ்வளவு நல்லா பாடுற.. அசோக் உன் வாய்ஸ் பத்தி என்னல்லாம் சொல்லிருக்கான் தெரியுமா..?? அவனுக்கு ரசனையே இல்ல சங்கி.. சுத்த வேஸ்ட்டு..!!"

"ஹஹ.. இல்ல அண்ணி.. அப்படி சொல்லாதிங்க..!! ரசனை இல்லாமலா உங்கள லைஃப் பார்ட்னரா சூஸ் பண்ணிருக்கான்..?? உங்க கூட பேசின மொதநாளே உங்களை ஐ லவ் யூ சொல்ல வச்சானே.. அவனா சுத்த வேஸ்ட்டு..??"

சங்கீதா திடீரென அந்தமாதிரி சீரியஸான குரலில் சொல்ல, மீரா இப்போது பதில் பேச முடியாமல் வாயடைத்துப் போனாள். ஒருவித திகைப்புடன் சங்கீதாவையே பார்க்க, அவளோ இவளுடைய முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் சற்றே மென்மையான குரலில் சொன்னாள்.

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா அண்ணி..??"

"என்ன..??"

"எல்லாரும்.. அண்ணன்தான் உங்களை இந்த வீட்டுக்கு கொண்டுவந்ததா நெனைக்கிறாங்க.. ஆனா அவன் இல்லைன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும்..!!" சங்கீதா சொல்ல, இப்போது மீராவின் முகத்தில் ஒரு ஆச்சரிய சுருக்கம்.

"அ..அசோக் இல்லையா.. அப்புறம் யாரு..??"

"அந்த ஆண்டவன்..!!" சங்கீதா அழுத்தம் திருத்தமாக சொல்ல, மீராவின் ஆச்சரியம் மேலும் அதிகரித்தது.

"எ..என்ன சொல்ற நீ.. எனக்கு புரியல..!!"

"சொல்றேன்..!! அண்ணனும் நானும் அடிக்கடி சண்டை போடுவோம் அண்ணி.. ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ரொம்ப ப்ரியம் இருந்தாலும்.. அதை வெளிய காட்டிக்காம.. எந்த நேரமும் சண்டை போட்டுட்டே இருப்போம்..!!"

"ம்ம்..!!"

"ஒருநாள் அந்த மாதிரி சண்டை போடுறப்போ.. கோவத்துல.. கொஞ்சம் கூட அறிவே இல்லாம.. அண்ணனை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்..!! 'உனக்குலாம் லவ் மேரேஜ் நடக்காது.. உன் மூஞ்சியலாம் எவளுக்கும் பிடிக்காது.. எவளும் உன்னை லவ் பண்ணமாட்டா..' அப்டின்னு.. கோவத்துல ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன்..!!"

"ஓ..!!"

"ஆரம்பத்துல என் மேல இருந்த தப்பு எனக்கு புரியல..!! ஆனா அப்புறம்.. பொறுமையா யோசிச்சு பாக்குறப்போ.. நான் பேசினதைக் கேட்டு அண்ணன் எப்படி துடிச்சு போயிருப்பான்னு எனக்கு புரிஞ்சது.. ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணேன்..!!"

"ம்ம்..!!"

"அடுத்த நாள் அண்ணன்ட்ட ஸாரி கேட்டும் எனக்கு மனசு ஆறல..!! என்ன பண்றதுன்னு தெரியாம.. கோயிலுக்கு கெளம்பி போயிட்டேன்.. நான் செஞ்ச தப்புக்கு சாமிகிட்ட மன்னிப்பு கேட்டேன்.. 'கூடிய சீக்கிரம் அண்ணனுக்கு காதல் வரம் குடுத்து.. என் மூஞ்சில கரியை பூசு சாமி..'ன்னு.. மனசார வேண்டிக்கிட்டேன்..!! நான் வேண்டிக்கிட்ட அடுத்த நாளே.. தேவதை மாதிரி ஒரு பொண்ணு அவன்கிட்ட வந்து ஐ லவ் யூ சொன்னா தெரியுமா..??" சங்கீதா சொன்னது புரியாமல் மீரா விழிக்க, அவள் இப்போது சிரித்தாள்.

"ஹாஹா.. நீங்கதான் அண்ணி அது..!! நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்ட அடுத்த நாள்தான்.. நீங்க அண்ணன்கிட்ட ஐ லவ் யூ சொன்னது..!! ஹ்ம்ம்.. இப்போ சொல்லுங்க.. அந்தக் கடவுள்தான உங்களை எங்க குடும்பத்துக்காக அனுப்பி வச்சிருக்காரு..??"

சங்கீதா சிரிப்புடன்தான் கேட்டாள். ஆனால் மீரா ஒருவித உணர்ச்சி அழுத்தத்துக்கு உள்ளாகி, என்ன சொல்வது என்று புரியாமல், விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள். அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு, சங்கீதாவே இதமான குரலில் தொடர்ந்தாள்.

"முன்னாடிலாம் அவனுக்கு ஒரு ஏக்கம் உண்டு அண்ணி.. நமக்குன்னு ஒரு பொண்ணு இல்லையேன்னு..!! வெளில காட்டிக்க மாட்டான்.. பட்.. மனசுக்குள்ள இருக்கும்..!! ஆனா.. ஆனா இப்போ.. நீங்க அவன்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்புறம்.. இந்த கொஞ்ச நாளா அவன் எவ்வளவு ஹேப்பியா இருக்கான் தெரியுமா..?? அவன் இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பாத்ததே இல்ல அண்ணி.. அவன் சந்தோஷத்தை பாத்து.. எங்க எல்லாருக்குமே எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..!! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணி.. என் அண்ணனுக்கும், இந்த குடும்பத்துக்கும் இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததுக்கு..!!"

சங்கீதா உணர்ச்சிவசப்பட்டு போய் சொல்ல, மீரா அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். அவளுடைய கண்களில் முணுக்கென்று கண்ணீர் அரும்பியது. அதை அவசரமாய் துடைத்துக் கொண்டாள். ஆனால் அதற்குள்ளாகவே அந்த கண்ணீரை கவனித்துவிட்ட சங்கீதா,

"ஐயோ.. என்னாச்சு அண்ணி.. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா..??" என பதறிப்போய் கேட்டாள்.

மீரா அவளுக்கு வாய் திறந்து பதில் சொல்லவில்லை.. உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டு.. 'இல்லை..' என்பது போல தலையைத்தான் மெல்ல அசைத்தாள்..!! அப்போதுதான் அசோக் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

"ஹேய் மீரா.. இங்கயா இருக்குற.. எங்கல்லாம் தேடுறது உன்ன..??"

"என்னாச்சு அசோக்.." மீரா திரும்பி பார்த்து கேட்டாள்.

"எந்திரிச்சு வா.. உனக்கு ஒன்னு காட்டனும்..!!" அசோக் அவ்வாறு சொல்ல, சங்கீதா இப்போது திடீரென டென்ஷன் ஆனாள்.

"ஏய் போடா.. அண்ணியலாம் அனுப்ப முடியாது.. அவங்க இங்கதான் இருப்பாங்க..!!" என்று அசோக்கிடம் சீறினாள்.

"ஏன்.. நெக்ஸ்ட் டைம் இவ நம்ம வீட்டுக்கு வர்றத பத்தி நெனச்சே பாக்கக் கூடாதுன்னு எதுவும் ப்ளானா..?? பாட்டுலாம் போட்டு காட்டிருப்பியே.. பாவம் சங்கு அவ.. அவ காது நல்லாருக்குறது உனக்கு பிடிக்கலையா.. விடு.. பொழைச்சு போகட்டும்..!!"

"ஹலோ.. உனக்கு பிடிக்காட்டி போ.. அண்ணிக்கு என் வாய்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு.. எனக்கு அது போதும்..!!"

"ஹாஹா.. 'உண்மையை சொன்னா சங்கிக்கு ரொம்ப கோவம் வரும் மீரா..'னு வர்றப்போ நான்தான் சொல்லிட்டு வந்தேன்.. அதான் பிடிச்சிருக்குன்னு பொய் சொல்லிருப்பா.. இல்ல மீரா..??" அசோக் கிண்டலாக சொல்ல, சங்கீதா உடனே முகத்தை சுருக்கிக்கொண்டு சிணுங்கினாள்.

"ஹ்ம் ஹ்ம் ஹ்ம்.. பாருங்க அண்ணி.. இவன் எப்போவுமே இப்படித்தான்.. சும்மா சும்மா வம்பு இழுப்பான்..!!" என்றவள் அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

"ஏய்.. எங்களை டிஸ்டர்ப் பண்ணாம போடா.. அண்ணி உன்கூட வரமாட்டாங்க..!! அதான் உன் ரூம்ல ஒரு கொரங்கு பொம்மை வச்சிருக்கேல.. அதையே போய் கொஞ்சிட்டு கெட போ..!!" சங்கீதா கேஷுவலாக அவ்வாறு சொல்லிவிட, அவ்வளவு நேரம் அண்ணன்-தங்கையின் செல்ல சண்டையை ரசித்துக் கொண்டிருந்த மீரா,

"எ..என்னது.. கொ..கொரங்கு பொம்மையா..??"

என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டாள். உடனே அண்ணனின் விசித்திர வழக்கத்தை, சங்கீதா உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தாள். அசோக் இப்போது அவஸ்தையாக நெளிந்தான்.

அப்புறம் ஒருவழியாக சங்கீதாவை சமாளித்து.. 'அம்மா உன்னை கூப்டறாங்க. என்னன்னு போய் கேளு..' என்று பொய் எல்லாம் சொல்லி.. அசோக் மீராவை தனியாக கிளப்பிக்கொண்டு சென்றான்..!!

"வா மீரா.. உனக்கு ஒன்னு காட்டனும்..!!"

"என்ன..??"

"உனக்கு ரொம்ப பிடிக்கும்..!!"

"என்னன்னு கேக்குறேன்ல..??"

"ப்ச்.. வந்து பாரு.. இட்ஸ் சர்ப்ரைஸ்..!!"

அவளுடைய கையை பிடித்து உற்சாகத்துடன் இழுத்து சென்றவன்.. வீட்டுக்கு பின்புறம் இருந்த அந்த கார்டனுக்கு அழைத்து சென்றான்..!! மீரா முன்பொருமுறை தனக்கு பிடிக்கும் என்று சொல்லியிருந்த மஞ்சள் ரோஜா செடிகள்.. அந்த தோட்டமெங்கும் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன..!!

"ம்ம்.. இதைத்தான் சொன்னேன்.. எப்படி..??" அசோக் பெருமையாக கேட்டான்.

அந்த ரோஜாக்களை பார்த்த கணத்திலேயே.. மீரா ஒரு குழந்தையென மாறிப் போனாள்..!! 'வாவ்' என்று குதுகலித்தவள், ஆசையாக அந்த பூக்களை அணைத்துக்கொண்டு கொஞ்சினாள்..!! அவளுடைய சந்தோஷத்தை கண்டு.. அசோக்கும் அப்படியே பூரித்து போனான்..!!


"பிடிச்சிருக்கா மீரா..??"

"இட்ஸ் ஸோ லவ்லி..!! ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அசோக்.. எ..எனக்கு.. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல..!!"

"எல்லாம் உனக்கு பிடிக்கும்னுதான் மீரா..!!"

அசோக் புன்னகையுடன் சொல்ல, மீரா அவனுடைய முகத்தையே சில வினாடிகள் சலனமில்லாமல் பார்த்தாள். பிறகு..

"தேங்க்ஸ் அசோக்..!!" என்றாள் சற்றே தழதழத்த குரலில்.

அசோக் அவளை நெருங்கி அவளது கைவிரல்களை ஆதரவாக பற்றிக் கொண்டான். மேலும் சிறிது நேரம் தோட்டத்தில் கழித்துவிட்டு, இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். வீட்டுக்கு பக்கவாட்டில் இருக்கிற படிக்கட்டில் ஏறி மாடிக்கு சென்றார்கள். மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்ட அசோக், தன் அறைக்கு அவளை அவசரமாக அழைத்து சென்றான். கதவை திறந்து உள்ளே தள்ளி விட்டவன், மீராவிடம் திரும்பி..

"உள்ள போ மீரா.. உள்ள உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு..!!" என்றான்.

என்னவென்று புரியாமலே, மீரா தயக்கமாக அந்த அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தவுடனே அவள் கண்ட காட்சியில் ஒரு கணம் அப்படியே திகைத்துப் போனாள். அசோக்குடைய அறையின் ஒரு பக்க சுவர் முழுவதும்.. ஒரு பிரம்மாண்ட அளவிலான புகைப்படம்.. வால் பேப்பராக ஒட்டி வைக்கப் பட்டிருந்தது..!! மீராவின் புகைப்படம் அது.. கருப்பு வெள்ளை என இரண்டு வண்ணங்களால் மட்டுமே ஆனது.. மீராவின் முகம் முழுமையாக அந்தப்படத்தில் தெரியவில்லை.. க்ளிக் செய்யும்போது குறுக்கே வந்திருந்த அவளுடைய கையொன்று.. முக்கால்வாசி முகத்தை மறைத்திருக்க.. அவளுடைய ஒளி வீசும் கண்கள் மட்டும் பளிச்சென்று தெரிந்தன..!!

அந்த புகைப்படத்தை பார்த்த மீராவின் இதயம்.. ஒருவித உணர்ச்சி மோதலுக்கு உள்ளானது..!! அசோக் அவள் மீது எந்த அளவிற்கு பித்து பிடித்தவனாய் இருக்கிறான் என்பதை.. அவளுக்கு அழுத்தமாக உணர வைப்பதாக இருந்தது அந்த புகைப்படம்..!! ஒரு இனம்புரியாத உணர்வொன்று.. அவளுடைய மேனியின் நாடி நரம்புகளை எல்லாம்.. வீணையின் தந்திகள் என மீட்டி செல்ல.. சிலுசிலுவென பல அதிர்வலைகள்.. மீராவின் தேகம் மொத்தமும்..!! அசையக்கூட தோன்றாதவளாய்.. அப்படியே அமைதியாக நின்றபடி.. அந்த புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

"என்ன மீரா.. அப்படியே ஷாக் ஆயிட்ட..??"

"ஒ..ஒன்னுல்ல..!!"

"ஹ்ம்ம்.. நாமதான் இவனை ஃபோட்டோவே எடுக்க விட்டது இல்லையே.. இந்த ஃபோட்டோ எப்படி இவனுக்கு கெடைச்சதுன்னுதான பாக்குற..??"

"ம்ம்..!!"

"என்ன பண்றது.. உன்கிட்ட கேட்டா நீ ஏதாவது தத்துவம்லாம் சொல்லுவ.. 'எனக்கு ஃபோட்டோ எடுத்துக்குறதுல இன்ட்ரஸ்ட்டே இல்ல.. இதுதான் நாமன்னு ஒரு ஃப்ரேம்க்குள்ள போட்டு, நம்மள நாமே அடைச்சு வச்சுக்க கூடாது.. எப்போவும் எந்த கட்டுப்பாட்டுக்குள்ளயும் நாம சிக்க கூடாது.. சுதந்திரமா இருக்கணும்.. அப்படி இப்படி..'ன்னு..!! ஆனா.. உன் ஃபோட்டோ ஒன்னு வச்சுக்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா..?? அதான்.. ஒரு நாள் உனக்கே தெரியாம இதை எடுத்தேன்.. பட்.. என் பேட் லக்.. அந்த நேரம் பார்த்து, நீ உன் கையை குறுக்க கொண்டு வந்துட்ட..!! ஹாஹா..!!!"

"................"

"ஆனா.. அந்த மிஸ்-க்ளிக் கூட.. எவ்வளவு அழகு தெரியுமா.. என்ன ஒரு க்யூட் தெரியுமா..?? ரொம்ப எக்ஸ்ட்ரார்டினரி ஸ்னாப்'ன்னு எனக்கு தோனுச்சு.. ரொம்ப நாள் மொபைல்லயே வச்சு பாத்து ரசிச்சுட்டு இருந்தேன்..!! அப்புறம்.. அன்னைக்கு நீ சொன்னேல.. காலைல எந்திரிச்சதும் என் மூவியோட அட்வர்டைஸ்மண்ட் போர்ட்ல கண்ணு முழிக்கனும்னு.. அன்னைக்குத்தான் எனக்கு திடீர்னு இந்த யோசனை.. உடனே அந்த ஃபோட்டோவை என்லார்ஜ் பண்ணி.. இங்க ஒட்டி வச்சுட்டேன்.. இப்போ.. எப்போவும் என்கூடவே நீ இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்..!! எப்படி இருக்கு..??"

"ம்ம்.. நைஸ்..!!" மீரா இப்போதுதான் சற்றே இறுக்கம் தளர்ந்து, இலகுவான குரலில் சொன்னாள்.


அப்புறம் சிறிது நேரம்.. இருவரும் எதுவும் பேசாமலே.. சுவற்றில் ஜொலித்த அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்..!! பிறகு அசோக்தான் குரலில் காதலை குழைத்துக்கொண்டவாறே சொன்னான்.

"எனக்கு இந்த ஃபோட்டோவ ரொம்ப பிடிக்கும் மீரா.. தெரியுமா..?? உன் கண்ணுல தெரியுது பாரு அந்த எமோஷன்.. அதுக்கு என்ன அர்த்தம்னே என்னால கண்டுபிடிக்க முடியாது..!! அந்த பார்வைக்கு அர்த்தம்.. சந்தோஷமா.. சோகமா.. பயமா.. கோவமா.. ஆசையா.. வெறுப்பா.. கருணையா.. காதலா.. எதுவுமே எனக்கு புரியாது..!! ஆனா.. பாத்துக்கிட்டே இருக்கணும்னு மட்டும் தோணும்.. அது ஏன் மீரா..??"

".................." மீரா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.

"இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு யோசிச்சா.. எனக்கு ஒவ்வொரு நேரமும் ஒன்னொன்னு தோணும்.. அந்தந்த நேரத்துல என் மூடுக்கு தகுந்த மாதிரி..!! நான் சிரிச்சா அந்த கண்ணும் சிரிக்கிற மாதிரி இருக்கும்.. நான் அழுதா அதுவும் என் கூட அழும்.. எப்படி மீரா அது..??"

".................."

"தெனமும் காலைல எந்திரிச்சதும்.. கொஞ்ச நேரம் உன் கண்ணையே பாத்துட்டு உக்காந்திருப்பேன்.. அப்போ எப்படி இருக்கும் தெரியுமா..?? எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ஆனா.. அந்த மாதிரி ஒரு உணர்ச்சியை நான் அனுபவிச்சதே கெடையாது மீரா.. அது மட்டும் உண்மை..!!"

".................."

"கொஞ்ச நேரம் பாத்தா போதும்.. அவ்வளவு எனர்ஜடிக்கா இருக்கும்.. அப்புறம் அன்னைக்கு பூரா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்..!!"

பேச்செல்லாம் பெருமிதமாய் அசோக் அவ்வாறு சொல்ல, மீரா பதில் ஏதும் சொல்லாமல் அவனுடைய கண்களையே ஆழமாக பார்த்தாள். அப்புறம் பார்வையை விலக்கிக்கொண்டு, மெல்ல நடை போட்டாள். அவளுடைய நெஞ்சமெல்லாம் ஒரு புதுவித உணர்ச்சி கொந்தளிப்பு. நடந்து சென்று கட்டிலை நெருங்கினாள். தலையணையில் தலை சாய்த்திருந்த அந்த குரங்கு பொம்மை, அவளுடைய கண்ணில் பட்டது. ஆயிரம் ரூபாய்க்கான அநாதை விடுதி டிக்கெட்டுகளை, அசோக் ஒற்றை ஆளாக வாங்கிக் கொண்டதற்காக, மீராவே அவனுக்கு பரிசளித்த பொம்மை...!!

சிறிது நேரத்திற்கு முன்பு.. 'அசோக் எந்த நேரமும் அந்த பொம்மைக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பான்' என்று சங்கீதா சொன்னது நினைவில் வர.. மீராவின் உதட்டில் ஒரு உலர்ந்த புன்னகை..!! அந்த குரங்கு பொம்மையின் சிவந்த மூக்கினை.. மெல்ல தடவிப் பார்த்தாள்..!! பிறகு அவளுடைய கைகள் மெல்ல மேல் நோக்கி நகர்ந்தன..!!

கட்டிலை ஒட்டியிருந்த குட்டி அலமாரியில்.. அடுக்கி வைக்கப்பட்டிருந்தன அந்த புத்தகங்கள்..!! அசோக்கின் அப்பா மணிபாரதி எழுதிய காதல் காவியங்கள்..!! எல்லா புத்தகங்களுக்கும் சிகரமாய் வீற்றிருந்தது அந்த புத்தகம்.. அதன் முகப்பில்..

"காதல் பூக்கும் தருணம்..!!"

என்ற கதைத்தலைப்பு தங்க நிறத்தில் தகதகத்தது..!! மீரா தனது தளிர் விரல்களால்.. அந்த எழுத்துக்களை மென்மையாக வருடினாள்..!! அவளுடைய உள்ளத்தில் ஒருவித உணர்ச்சி வெள்ளம்.. இப்போது உடைப்பெடுத்து ஓடியது..!! பிறகு என்ன நினைத்தாளோ.. சரக்கென திரும்பியவள்.. அசோக்கை ஏறிட்டு திடீரென சொன்னாள்..!!

"It's unbelievable ashok.. It's really unbelievable..!!"

"எ..என்ன மீரா.. என்ன unbelievable..??" அசோக் குழப்பமாக கேட்டான்.

"Everything..!!!! நீ.. உன்னோட லவ்.. இந்த வீடு.. இந்த குடும்பம்.. இந்த குடும்பத்துல இருக்குற ஒவ்வொரு மனுஷங்க.. அவங்க மனசுல இருக்குற கள்ளம் கபடம் இல்லாத அந்த அன்பு.. இந்த ஃபோட்டோ.. இந்த பொம்மை.. Everything..!!!! Everything is unbelievable to me..!!!! சத்தியமா சொல்றேன் அசோக்.. என மனசார சொல்றேன்.. இந்த வீட்டுக்கு வரப்போறவ, ஏழேழு ஜென்மத்துக்கும் புண்ணியம் பண்ணிருக்கணும்..!!" மீரா அந்த மாதிரி உணர்ச்சிவசப்பட்டு போனவளாய் சொல்ல, அசோக் சற்றே வியப்புற்றான்.

"ஹேய்.. என்ன நீ.. 'இந்த வீட்டுக்கு வரப்போறவ'ன்னு யாரையோ சொல்ற மாதிரி சொல்ற.." என்றவாறே அவசரமாய் அவளை நெருங்கியவன்,

"நீதான் மீரா அது.. நீதான் இந்த வீட்டுக்கு வரப்போறவ..!!"

என்றவாறே தனது இரண்டு கைகளாலும், அவளது கன்னங்களை மென்மையாக தாங்கி பிடித்தான். பிறகு அவளுடைய முகத்தை ஆசையும் காதலுமாய் பார்த்தவாறே சொன்னான்.

"நீ சொன்னதுல ஒரு சின்ன திருத்தம் மீரா..!! நீ மருமகளா வர்றதுக்குத்தான்.. இந்த வீடு புண்ணியம் பண்ணிருக்கணும்..!! இதை நான் சொல்லல.. என் அம்மா சொன்னாங்க.. இப்போ இல்ல.. உன்கிட்ட நான் பேசுறதுக்கு முன்னாடியே.. உன்னோட குணத்தை பத்தி அவங்கட்ட சொன்னப்போ.. என் அம்மா அப்படி அவங்க மனசார சொன்னாங்க.. 'உன்னால முடிஞ்சா அவளை இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வாடா'ன்னு சொன்னாங்க..!! இன்னைக்கு நான் கூட்டிட்டு வந்திருக்குறேன்.. எங்களுக்குலாம் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா மீரா..??"

மனம் முழுதும் மத்தாப்பு கொளுத்திப் போட்ட மாதிரியான ஒரு பூரிப்புடன் அசோக் அவ்வாறு சொல்ல, மீரா அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. தனது கன்னத்து கதுப்புகள் ரெண்டும் அவனது கைப்பிடிக்குள் அடங்கியிருக்க, கண்களை மட்டும் அகலமாய் திறந்து, அசோக்கின் முகத்தையே ஒரு சலனமற்ற பார்வை பார்த்தாள். அந்தப் பார்வை அசோக்கின் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சியை கிளறிவிட்டது. முகமெல்லாம் திகைப்பாக மாறிப்போக, தடுமாற்றமான குரலில் சொன்னான்.

"இ..இது.. இதுதான் மீரா.. இந்த பார்வையைத்தான் சொன்னேன்.. இ..இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் மீரா..??"

அசோக்கின் கேள்விக்கு மீரா பதில் சொல்லவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தாள்.

"அ..அர்த்தம் என்னன்னு புரியாட்டாலும்.. அப்படியே பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கே.. ஏன் மீரா..??"

மீரா அமைதியாகவே இருந்தாள். அசோக்கின் கண்களை கூர்மையாக, ஆழமாக பார்த்தாள். அசோக்கையும் அந்த பார்வை காந்தம் போல ஈர்க்க, இமைக்க மறந்து அந்த ஈரவிழிகளையே பார்த்தான். அவர்களுடைய உள்ளத்தில் இருந்த உணர்வுகள் அத்தனையும்.. கருவிழியின் மையத்தில் குவிந்து.. ஓருடல் விட்டு அடுத்ததொரு உடலுக்கு இடம் பெயர துடித்தன..!! எவ்வளவு நேரம் அந்த மாதிரி.. உலகை மறந்து போய்.. உணர்வற்ற உருவங்கள் போல.. இருவரும் ஒருவர் கண்களை மற்றொருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்களோ..?? இருவருக்குமே கண்ணிமைக்க தோன்றவில்லை.. அதன் காரணமும் புரியவில்லை..!!

பிறகு மீராதான் முதலில் இமைகள் சோர்ந்து போய், விழிகளை மெல்ல மூடிக்கொண்டாள். கண்களில் தேக்கி வைத்த உணர்சிகள், இப்போது அவளது முகத்தில் கொப்பளித்தன. என்னவென்று இனம் காண முடியாத ஒரு துடிப்பு அவளுடைய முகமெங்கிலும். பற்கள் படபடவென தந்தியடிக்க.. உதடுகள் வெடவெடவென தவித்து துடித்தன..!! அத்தனை நேரம் அவளுடைய கண்களில் பதிந்திருந்த அசோக்கின் பார்வை.. இப்போது அவளுடைய உதடுகளுக்கு இடம் மாறியது..!!


சற்றுமுன் பார்த்த ரோஜா மலரிதழ்களின் அழகை வாங்கியிருந்த அந்த வடிவம்.. பவளத் துண்டங்களை மெருகேற்றி ஒட்டி வைத்த மாதிரி தகதகக்கிற அந்த செந்நிறம்.. பலநாட்களாய் தேனில் ஊறித்திளைத்த மாதிரி மினுமினுக்கிற அந்த ஈரம்..!! புத்தி பேதலித்துப் போனது அசோக்கிற்கு..!! அவனையும் அறியாமல் அவனது உதடுகள்.. மீராவின் உதடுகளை நோக்கி முன்னேறின..!!

இருவரது உதடுகளுக்கும் இடையில்.. இப்போது இரண்டு மூன்று மில்லி மீட்டர் இடைவெளிதான்..!! இருவருடைய மூச்சுக் காற்றும்.. இப்போது ஒன்றோடொன்று மோதி சண்டையிட்டன..!! ஆசை உந்தித்தள்ள.. அசோக் அவனது உதடுகளை மீராவின் உதடுகளுடன் இணைத்தான்.. மெல்ல உரசினான்..!! வண்டு வந்து அமர்ந்ததுமே.. வாசல் திறக்கிற பூவிதழ் போல.. அத்தனை நேரம் சேர்ந்திருந்த மீராவின் உதடுகள்.. இப்போது படக்கென பிரிந்தன.. அசோக்கிற்கு வசதியாக பிளந்து கொண்டன..!!

மீராவிடம் எதிர்ப்பில்லை என்று தெரிந்ததும்.. அசோக்கிடம் ஒரு துணிச்சல்.. அந்த துணிச்சல் அவனுடைய உதடுகள் மூலம் வெளிப்பட்டது.. மெல்ல நகர்ந்த அசோக்கின் உதடுகள், மீராவின் மேலுதட்டை கவ்விக்கொண்டன..!! உடனே மீராவும்.. திறந்திருந்த உதட்டு வாசலை இறுக்க மூடினாள்.. அசோக்கின் கீழுதட்டை கவ்விக் கொண்டாள்..!! இருவருடைய கண்களும் இமைப்போர்வை போர்த்திக்கொள்ள.. ஒருவரது இதழ் இனிப்பை அடுத்தவர் சுவை பார்த்தனர்..!!

ஒரு சில வினாடிகள்.. பிறகு படக்கென உதடுகள் மாற்றிக் கொண்டார்கள்..!! மீராவின் கீழுதடு இப்போது அசோக்கிடம்.. அவனது மேலுதடு மீராவின் வசம்.. அவர்களது உதடு உறிஞ்சும் வேகம் மட்டும் இப்போது அதிகரித்திருந்தது..!! அசோக்கின் கைகள் மீராவின் கன்னங்களை வலுவாக தாங்கிப் பிடித்திருந்தன..!! மீராவின் இடது கை இப்போது அசோக்கின் இடுப்பை வளைத்தது.. அவளது வலது கை மேலேறி, அவனது பிடரியை பற்றியது.. அவனது முகத்தை முன்னோக்கி அழுத்தியது..!!

இருவரும் இதழமுது அருந்திக்கொண்டே இருந்தனர்.. உமிழ்நீர் உணவு உண்டு கொண்டே இருந்தனர்..!! நேரம் கூட கூட.. அவர்களது வேகமும் கூடிக்கொண்டே சென்றது.. ஆவேசம் அதிகரித்துக் கொண்டே சென்றது.. ஒருவர் உதட்டை அடுத்தவர், முரட்டுத்தனமாய் சுவைத்து உறிஞ்சினர்..!! முத்தப்போரை எப்போது நிறுத்தலாம் என்ற எண்ணமே இல்லாமல்.. செயல்பட்டுக் கொண்டிருந்தனர்..!! ஒருவர் முதுகை அடுத்தவர் பற்றி பிசைந்தனர்.. உதடுகளுக்கு போட்டியாக உடல்களையும் நெருக்கி இறுக்கினர்.. இரண்டு உடல்களும் ஒன்றோடொன்று ஒட்டி.. இணைந்து.. ஓருடல் ஆகிவிடாதா என்று ஏங்கினர்..!!

எவ்வளவு நேரம் என்று இருவருக்கும் நினைவில்லை..!! மீரா களைத்துப்போய் உதடுகளை விலக்கிக்கொள்ளும்போது.. அசோக் பாய்ந்து சென்று அந்த உதடுகளை கவ்வி.. மீண்டும் ஆரம்பிப்பான்..!! பிறகு.. போதுமென்று நினைத்து அசோக் விலகுகையில்.. மீரா அனுமதிக்க மாட்டாள்.. இன்னும் ஏதோ இன்பம் அவனது உதட்டில் மிச்சமிருக்கிறது என்பது போல.. தனது உதடுகளாலேயே தேட ஆரம்பிப்பாள்..!!

உதடுகள் வழியாகவே உயிர்ப்பரிமாற்றம் செய்துகொள்ள முனைந்தார்கள் இருவரும்..!! முத்தத்துக்கு இடையில் மூச்சு விடுதல் கூட அவர்களுக்கு ஒரு தொல்லையாக இருந்தது..!! உயிர் பிரிந்தால், இந்த உதட்டுச்சுவை இல்லையே என்று நினைத்தார்களோ என்னவோ.. அவ்வப்போது அந்த ஆவேச முத்தத்துக்கு நடுவில்.. மூச்சும் சிறிது விட்டுக் கொண்டார்கள்..!!

நெடுநேரமாய் ஒட்டி உறவாடி.. முட்டி மோதி.. கடித்து சுவைத்து.. உறிஞ்சி இழுத்து.. களைத்து சோர்ந்து போனவர்கள்.. பிறகு மெல்ல மெல்ல அந்த முத்தகாவியத்துக்கு முடிவுரை எழுத சம்மதித்தனர்..!! மீரா தனது முகத்தை சாய்த்து.. அசோக்கின் மார்பில் புதைந்து கொண்டாள்.. அவளுடைய கைகள் அசோக்கை இறுக்கமாக அணைத்திருந்தன..!! முயல்குட்டி போல தன் மார்பில் பதுங்கியிருக்கிற காதலியை.. அசோக்குமே ஆரத்தழுவிக் கொண்டான்.. அவளுடைய முதுகை இதமாக வருடிக் கொடுத்தான்..!!

இருவருக்கும் 'ஹ்ஹா.. ஹ்ஹா..' என மூச்சிரைத்தது.. ஒருவருடைய மூச்சுக்காற்று அடுத்தவரின் நாசிக்குள் புக.. அதுவேறு புது கிறக்கத்தை கிளப்பிவிட்டது..!! மீராவின் மார்புப்பந்துகள் மூச்சிரைப்பின் காரணமாக.. சர் சர்ரென மேலும் கீழும் ஏறி இறங்கின.. அசோக்கின் பரந்த மார்பில் பட்டு.. உரசி.. தவழ்ந்து.. சுழன்று.. மெல்ல மெல்ல ஆசுவாசம் கொள்ள ஆரம்பித்தன..!! அசோக் தனது மூக்கை மீராவின் கூந்தலுக்குள் நுழைத்து வாசம் பிடித்தான்..!! பிறகு அவளது ஒருபக்க காதுமடலுக்கு.. மெலிதான ஒரு முத்தத்தை கொடுத்தான்..!! தனது உதடுகளை அந்த காது மடலில் வைத்து மென்மையாக உரசியவாறே.. போதையேறிப் போன குரலில் சொன்னான்..!!

"Thanks for the valentine's gift.. meera..!!"

"ம்ம்..!!"

மெலிதான முனகலை வெளிப்படுத்திய மீரா, மேலும் அவனை இறுக்கிக் கொண்டாள். அசோக்கும் நெருக்கமாக அணைத்துக்கொண்டே, அவளுடைய காதோரமாய் கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

"எப்போவுமே ஃபர்ஸ்ட் கிஸ் ரொம்ப ஸ்பெஷல்தான்.. இல்ல..??"

அவ்வளவுதான்..!! மீராவுக்கு சுரீர் என்று இருந்தது..!! மயக்கத்தில் செருகியிருந்த அவளது விழிகள் ரெண்டும்.. இப்போது படக்கென்று இமைகள் திறந்தன..!! அசோக்கின் மார்மீது இரண்டு கைகளையும் வைத்து.. அவனை சரக்கென்று தள்ளிவிட்டாள்..!! முகமெல்லாம் அவளுக்கு வெளிறிப் போயிருக்க.. கண்கள் ஒரு மிரட்சியுடன் அகலமாய் விரிந்திருந்தன.. முத்தமிட்டு களைத்திருந்த உதடுகள் இப்போது வெடவெடத்தன.. மார்புகள் குபுக் குபுக்கென சுருங்கி விரிந்தன..!! எதையோ பார்த்து பயந்துவிட்டவள் மாதிரியான ஒரு முகபாவம்..!! அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!!

"ஹேய்.. மீரா.. என்னாச்சு..??"

மீரா பதில் ஏதும் பேசவில்லை. அசோக்கின் முகத்தையே மலங்க மலங்க பரிதாபமாக பார்த்தாள்..!! முணுக்கென்று அவளுடைய கண்களில் நீர் பூத்தது.. சர்ரென்று அவளது கன்னங்கள் நனைத்து ஓடியது..!! அசோக் பதறிப் போனான்..!!

"ஐயோ.. மீரா.. என்னம்மா.. என்னாச்சு..??"

என்றவாறே அவளுடைய கன்னத்தை பற்றினான். மீரா அவனது கையை வெடுக்கென தட்டிவிட்டாள். இப்போது அசோக்கின் இதயம் துடிதுடித்து போனது.

"என்னடா.. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா..??"

"........"

"நா..நான்.. நான் கிஸ் பண்ணது தப்பா..??" அசோக்கின் ஏக்கமான கேள்விக்கு, மீரா இப்போது பதில் சொன்னாள்.

"இல்ல.. நான் கிஸ் பண்ணது தப்பு..!!"

"எ..என்ன.. என்ன சொல்ற நீ..?? எனக்கு புரியல..!! ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்..??"

அசோக் புரியாமல் கேட்க, மீரா அவனுக்கு பதில் சொல்லவில்லை. ஏதோ ஒரு முடிவு எடுத்தவளாய்.. அவசரமாக அவளது விழிநீரை துடைத்துக் கொண்டாள்..!! மூக்கை மெல்ல விசும்பிக்கொண்டு.. அசோக்கின் முகத்தை ஏறிட்டாள்..!! மிகவும் கஷ்டப்பட்டு.. ஒரு புன்னகையை சிந்த முயன்றாள்..!! பிறகு உடைந்து போன குரலில்..

"நா..நான் கெளம்புறேன் அசோக்.. எ..எனக்கு வேலை இருக்கு.. நாளைக்கு பாக்கலாம்..!!" என்றவள்,

அசோக்கின் பதிலை கூட எதிர்பாராமல், திரும்பி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அசோக் எதுவுமே புரியாமல்.. அவள் அறையை விட்டு வெளியேறுவதையே பார்த்தவாறு.. உறைந்து போய் நின்றிருந்தான்..!!


No comments:

Post a Comment